ஞாயிறு, 27 டிசம்பர், 2015

பேருந்தில் வந்த கவிதை...


முக்கால்வாசி
இரவை விழுங்கும்
சொந்த ஊர்
பயணம்.

ஒவ்வொரு தடவையும்
ஏதேனும்
ஓரிடத்தில்
விசிறிப்போகிறது
மழை.

கனத்த ஒலிப்பான்களுக்கிடையே
80 களின் பாடல்கள்.

ஒரு பயணியிடம்
சத்தமிடும்
நடத்துனர்.

குறந்தபட்சம்
ஒரு
கெட்டவார்த்தையேனும்
உதிர்த்துவிடும்
ஓட்டுனர்.

சாலையைவிட்டு
கவிழ்ந்துகிடக்கும்
ஓர் வாகனம்.

சாலையிலேயே
அரைந்துகொண்டிருக்கும்
ஒரு நாயின்
கோர மரணம்.

ஊர்களின்
தொடக்கத்தில்
கண்ணீரஞ்சலிப்
பதாகைகள்.

சூலமும் வேலும்
மாறிமாறி
ஒளிக்கும்
சீரியல் விளக்கு
அம்மன்கள்.

திடீரென
முளைக்கும்
உணவகங்கள்.

சுங்கச்சாவடிகளின்
காத்திருப்பில்
கண்ணாடியூடே
நுழையும்
வளையல்
அணிந்தவர்களின்
வசூல்.

பேசிக்கொண்டேயிருக்கும்
இரண்டு பெண்கள்.

பெருநோய் விரல்களென
முன்னிருக்கை
பெண்ணின்
முதுகு சுரண்ட
மடங்கியிருக்கும்
மத்தியவயது 
மனிதனின்
பொய்த்தவம்.

சோர்ந்துபோனதாய்
மடியில்
படுத்துறங்கும்
புதுக்கணவன்.

விடிந்துவிடும்
விரைவிலென்றாலும்
வீடுவந்து
புரளும் வேளை..

வந்துவிடுகிறது..
கவிதை.

சனி, 26 டிசம்பர், 2015

எங்கள் தோழரை விட்டுவிடுங்கள்....

அன்பின் சக்திக்கு,

உன் சமீப பதிவுகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்தை சுற்றியே சுழல்வதை பார்க்கிறேன்.

வட்டத்தை தாண்டி சமூக உணர்வோடு எழுதும் எழுத்துக்கள் உன்னை இன்னும் உயிர்ப்போடு இருக்கச்செய்யும் என்பது என் கருத்து.

சக்தி...
இன்று ஒரு மனிதனின் பிறந்தநாள்.
வாழும்நாளெல்லாமிந்த சமூகத்திற்காய் போராடி,போராடி மெருகேறி ஒளிவீசும் ஒரு கருப்புவைரம் வந்துதித்த நாள்.

எதிரிகளாலும் மதிக்கப்படும் ஒரு ஏழைத்தோழரின் பிறந்தநாள்.

ஆனால் சக்தி,

கடந்த நாட்களில் ஊடகங்களில் தோழரை ஏன் முதல்வராக முன்மொழியக்கூடாதெனஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.

ஏன் வந்தது இந்த ஞானோதயம்?

அரைநூற்றாண்டுக்கும் மேலாய்களப்பணி,
மரணதண்டனைக்கைதியாய் சிறைக்கோட்டத்தில்,
இழந்த உறவுகள் எத்தனை?
தேர்ந்தவாசிப்பாளர்,
மிகச்சிறந்த ஜனநாயகவாதி.

இத்தனை நாட்களாய் எங்கே போயிருந்தீர்கள் ஊடகங்களே?கட்டுரையாளர்களே?

உங்கள் ஊடகங்களில் இவரை நல்லவர்,வாழும் காமராஜர் என்று எழுதினீர்களே அன்றி...முதல்வராக ஒருபோதும் முணுமுணுத்ததுகூட இல்லையே முன்பெல்லாம்.

கம்யூனிச இயக்கம் ஒன்றும் உங்கள் உரசிப்பார்த்தலில் மயங்கிப்போகாது.

இயக்கத்தின் களப்பணிகளில்,சில தோழர்களின் செயல்பாடுகளில் கருத்துவேறுபாடு இருக்கலாம்.

ஆனால் இயக்கம் காக்கும் விதிகளிலும்,கட்டுப்பாடுகளிலும் எந்த மாச்சர்யங்களும் இருக்க முடியாது.

தோழரை இயக்கம் கண்ணுக்குள் வைத்து காக்கிறது..தோழரும் இயக்கத்தை கண்ணாகவே பார்க்கிறார்.

இத்தனை வயதிலும் ஒரு முழுமையான இயக்கவாதியாக இருப்பவர்..

வெள்ளகாலங்களில் எல்லாரையும் காப்பாற்றிவிட்டு என்னைக்காப்பாறுங்கள் என்றதாய் எழுதி ஈரம் வரவைக்கப்பார்க்கின்றீர்கள்..

ஒற்றைவேட்டியுடன் வாழ்ந்த பேராசான் ஜீவாவின் இயக்கத்தில் வந்தவர் அப்படித்தான் இருப்பார்.

போதும்.. உங்கள் ஊடக
அரசியலை சிம்புவுடனும்,இளையராஜாவுடனும் நிறுத்திக்கொள்ளுங்கள்.

எங்கள் தோழர் முதல்வராக வந்துதான் மக்கள்பணி ஆற்றவேண்டுமென்பதில்லை.
எப்போதும் இயங்குபவர்...

கால்களே சக்கரம்...சக்கர நாற்காலி எப்போதும் வேண்டாம்.

உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி..

கம்யூனிச இயக்கம் ஒன்றும் குடும்பக்கட்சியல்ல..
என்ன,எப்போது செய்யவேண்டும் என்பதை அவர்கள் தீர்க்கமாகச் செய்வார்கள்.

மக்களோடு மக்களாய் பயணிப்பவரை முதல்வர் என்ற மாயக்கோடிழுத்து இடைவெளி ஏற்படுத்தப்பார்க்காதீர்கள்.

அவர் எங்கள் தோழர்..
எங்களுடன் இருக்கட்டும்.

நீங்கள் வேறு ஆளைப்பாருங்கள்.

இன்னும் பல்லாண்டு வாழட்டும் எங்கள் தோழர்.

அன்புடன்,
செல்வக்குமார்.

வெள்ளி, 25 டிசம்பர், 2015

எமனின் அவுட் சோர்ஸிங்...

அன்பின் சக்திக்கு,
               கடந்த வாரம் முழுவதும் உங்களுடன் இருந்ததால் நல விசாரிப்பை தள்ளிவைத்துவிடலாம்.

கருணையில்லா மழை ,கருணை இல்லத்தை புரட்டிப்போட்டதையும்,
பெருமழை தந்த வாழ்க்கைப் பாடத்துக்கான கேள்வியை "சாய்ஸ்-ல்" விட்டுவிட்ட மாநகர மக்களையும் பார்த்துவிட்டு வந்த என்னை நீதான் நலம் விசாரிக்க வேண்டும்.

உன்னை ஒத்தோரெல்லாம் முகநூலிலும் ,பிற சமூக தளங்களிலும் மூழ்கிக்கிடந்து முத்தெடுப்பதாய் நினைத்து மூச்சடக்கி கிடப்பத்தை காண்கையில் என்னைப்போன்றோர்க்கு கொஞ்சம் வருத்தம் தான்.

தேடல் என்னும் ஆவலில் புல்மேய வரும் எங்களுக்கு முட்களின் கூட்டம் தான் அதிகம் தெரிகிறது.

முகநூல் என்பது தகவல் பரிமாற்றத்திற்காகவும்,எண்ணங்களின் இடம் பெயரலுக்கும் வியாபாரி கண்டுபிடித்த அறிவியல்.

ஆனால் முகநூலில் பகிரப்படும் செய்திகளின் கூட்டத்தைப்பார்க்கும் போது பதற்றம் வந்துவிடுகிறது.

அற்புதமான தளம் அபத்தங்களால் நிரம்பிக்கிடக்கிறது.

காப்பி&பேஸ்ட் வசதி மட்டும் இல்லையெனில் முகநூல் பாரம் அதிகம் குறையும்.

காலை எழுந்ததும் குட்மார்னிங்...தின்ற இட்லிகளின் எண்ணிக்கை...அந்த பதிவுக்கான விருப்பங்களின் எண்ணிக்கை..
தன்னுடைய பதிவை விரும்பச்சொல்லியும்,பகிரச்சொல்லியும் அத்தனை கெஞ்சல்கள்.
தெரிந்தவர் என்ன செய்திருந்தாலும் Like..
பிடித்தவர் செய்திருந்தால் பகிரல்...

நடிகர்களுக்கு கச்சைகட்டி போடும் சண்டைகள்..
நாளுக்குநாள் புகைப்பட மாற்றங்கள்.
அடுத்தவன் எழுதியதை தன் பெயருக்கு மாற்றிக்கொள்தல்...

மனிதனின் மனசுக்குள் எத்தனை கோணங்கள் உண்டோ ...அத்தனையும் காணக்கிடைக்கிறது..

ஒரு சமூகத்தின் கூரிய பார்வையை திசைதிருப்ப ஒரு பதிவு மட்டுமே போதுமென்றாகிப்போகிறது.

பெருமழை சூழ்ந்த நாட்களில் இந்த முகநூல் தந்த பங்களிப்பு அபாரமானதுதான்.
கொட்டிய தகவல்கள்,ஒருங்கிணைத்த கைகள்..உதவி கேட்போர் பட்டியல்,மீட்போர் படங்கள்,மீண்டோர் கதறல்கள்..

முகநூல் ஒரு தேவ தூதனாய் தெரிந்தது.

ஆனாலும் சக்தி..
அளவுக்கு அதிகமாய் இந்த ஊடகம் மக்களை பதட்டப்படுத்தியதாகவே தோன்றியது.

உண்மையின் பக்கத்தை உரச சோம்பேறிப்பட்டு கேள்விப்பட்டதை காது,மூக்கு வைத்து உலவவிட்டதாய் நான் உணர்கிறேன்.

தெரியவேண்டிய பல உண்மைகள் புதைந்துதான் கிடக்கிறது..

யோசி சக்தி...
வந்த படகுகளும்,நடிகர்களும்,தலைவர்களும் படங்களாகவும் செய்திகளாகவும் பதிவாகி இருக்கிறார்கள்.

செத்தவர்களின் கணக்கை யாராலும் எழுத முடிகிறதா துல்லியமாய்.?

அவர் வரவேண்டும்..இவர் ஆளவேண்டும்...
எல்லாம் சரி ...நீங்கள் எப்போது வரப்போகிறீர்கள்...

புத்தாடை அணிவதையும்,புதுக்காதல் கொண்டதையும்,அம்மாவுக்கு ஒரு கவிதையும்,ஆங்காங்கே எடுத்த செல்பியும் பதிவுசெய்யத்தான் முகநூலெனில் ..
ஒருபோதும் உங்கள் கடவுள் அதற்கு லைக் போடமாட்டார்.

ஒரு கற்பனை கேளேன்..

எமனின் அலுவலகத்தில் கோப்புகள் நிறைந்து கிடந்தன..சித்திரகுப்தன் பார்த்துதீரவில்லை பாவ புண்ணிய கணக்குகளை.

எமன் அமெரிக்கா உட்பட அனைவரிடமும் கலந்துபேசி முடிவுக்கு வந்தான்..

அவுட் சோர்ஸிங் முறையில் வேலையை முகநூலுக்கு கொடுக்கிறான்..

இப்போது அங்கே கோப்புகள் கிடையாது..
சித்திரகுப்தன் கணினியோடு இருக்கிறான்.
அவரவர் வரும்போது...அவர்களின் முகநூல் பக்கங்களை திறந்துபார்த்து சிரிக்கிறான்.

அவர்களின் கணக்கை அவர்களே கைப்பட பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள்...

புரிகிறதா சக்தி..
எண்ணங்களை பதிவுசெய்யும் தளத்திற்கு மனநூல் என்றுதானே பெயர்வைத்திருக்கவேண்டும்...எதற்காக முகநூல் என பெயர் வைத்தார்கள் என்று..

ஹா..ஹா..

அன்புடன்,
செல்வக்குமார்

செவ்வாய், 22 டிசம்பர், 2015

நல்லா வருவீங்க....

ஆங்காங்கே
தேங்கி நிற்கிறது
வாகனங்கள்.

நீர்க்கோடிட்ட
சுவர்களின்
உயரம்
அளக்கிறார்கள்.

எடுத்துவைத்த
காணொளி
காட்டுகிறார்கள்.

நீர்
வந்த இரவின்
பலமுகம்
படர்கிறது.

தலைக்கவச
பயமின்றி
தடதடக்கிறார்கள்.

பால்
இருநூறுக்கு
விற்றவனிடம்
இப்போதும்
பால்
வாங்குகிறார்கள்.

பணம் ..
வங்கியிலா
நேரிலா...
விசாரிக்கிறார்கள்.

நீ
சின்னபிள்ளையா
இருந்தப்போ...
கதைகளுக்கான
கரு
கிடைத்திருக்கிறது.

மீண்டும் கூவம்
காணக்கிடைக்கிறது

ஆற்றிடை
குடில்களின்
அடுப்பு
புகைகிறது.

வணிக
வளாகங்களில்
நட்சத்திரங்கள்
மின்னத்
தொடங்கிவிட்டன.

படகுகள்
கடலுக்கு
திரும்பிவிட்டன.

சென்னைக்கு
மிக அருகில்...
சீக்கிரம்
கேட்கலாம்.

திருவையாறும்
சென்னை
வந்திருக்கிறது..

குப்பையெறிந்து
போகிறது
ஒரு
கும்பல்.

இனி
வெயில் காலத்தில்
தண்ணீருக்குப்
குடங்கள்
வரிசையாய் வைத்து
போராடினால்
போதும்...

நாம்
மானாட மயிலாட
பார்க்கலாம்.









சனி, 19 டிசம்பர், 2015

ஒரு வார்த்தையுமில்லை....

இது கருணை இல்லத்தின் நிலை..

இந்த படங்களை விடவா சொல்லிவிடப்போகிறேன்...


நானும் இங்கே.....

வியாழன், 17 டிசம்பர், 2015

கடவுள் உள்ளமே....

அன்பின் சக்திக்கு,
                      உனக்கான கடிதங்களின் வீச்சு..நம்மைத் தாண்டியும் பல உள்ளங்களுக்குள் ஊடுருவுவதை பின்னூட்டங்களும்,பக்கப்பார்வைகளும் காட்டுவதில் மகிழ்வு.

வலைப்பதிவு உலகில் ஒரு சிறுவனின் கீற்றல்களுக்கு வரும் குரல் ஆதரவுகளும் குதூகலிக்க வைக்கிறது.

சிலரை அறிமுகப்படுத்தும் போது உள்ளம் எதையோ சாதித்ததாய் பீடு கொள்கிறது.

பீப் பாட்டுகளின் மத்தியில் பல மவுனராகங்களை கேட்காமலே போய்விடுகிறது காதுகளும்,காலமும்.

மனிதத்தன்மையும்,இரக்கமுமற்ற பல நிகழ்வுகளின் கோர்வையில் சமூகத்துக்காய் வியர்வை சிந்தும் பலர் அறியப்படாமலே போகின்றார்கள்.

எனக்கான சென்னையின் புனிதத்தலமாய் ஒரு இடம் இருந்தது..
நீர்மூலம் அது நிர்மூலமாகியிருக்கிறது.

ஆயிரம் அடித்துப்போன வெள்ளத்தின் மேல் சிறு அருவெறுப்பு தோன்றிய இடம்  அதுவே.

சைதாப்பேட்டையின் ஒரு சாலையில் உயிரோடு இருந்த இல்லம்...

ஆண் பெண்ணென நாற்பது குழந்தைகள்...

சாதாரணக்குழந்தைகள் அல்ல...

பெற்றோரும் கவனிக்க சிரமப்படும் "ஆட்டிஸம்" எனும் பாதிப்பில் வளர்ந்த குழந்தைகள்.

படிப்பறையும் கழிப்பறையாக்கும் கள்ளமில்லா சிரிப்புச்செல்வங்கள்..

தாயினும் மேலாய்,தாதியாய் போதிக்கும் சிறப்பு ஆசியர்கள்..

கேள் சக்தி..
எந்த தன்னலமும் இல்லை..
அரசின் ஒரு பைசாவும் கிடைப்பதில்லை.
முழுக்க முழுக்க உதவும் மனிதர்களின் சின்ன சின்ன உதவிகளால் உருண்ட பெருந்தேர்...

இருவேளையும் தரமான உணவுக்காய் அவர்கள் அலையும் அலைச்சல்கள்..
தரத்தயாராய் இருப்போரின் பட்டியல் பார்த்து அழைக்கும் பாங்கு..

உதவும் உள்ளங்கள் அள்ளித்தந்தாலும்,கிள்ளித்தந்தாலும் ஒரு புன்னகையில் சொல்லும் பிள்ளைகளின் நன்றிப்பாட்டு...
காணக்கண் கோடி வேண்டும்.

திறந்துவிட்ட வெள்ளம்
சூறையாடிப்போயிருக்கிறது...

வீதியிலிருந்த வி.ஜி.சந்தோசம் வெளியேறிப்போனார்...
இவர்கள்....?

சுய அறிவில்லாத பிள்ளைகளை இறுக்கிப்பிடித்துக்கொண்டு ...
அடித்துக்கொண்டு போகும் உணவுப்பொருட்களையும்,சான்றிதழ்களையும்,சில்லறை சேர்ந்திருந்த உண்டியல்களையும்,பிள்ளைகள் சுமந்த வாகனம் புரண்டு போவதையும் ,,கண்ட அவர்களின் கண்ணீர் இன்னும் நின்றபாடில்லை.

எத்தனை உன்னதமான பிறவிகள்?
பொல்லாப்பெருமழை இந்த நல்லோர்களுக்காகவும் பெய்து தொலைத்திருக்குமோ?

பிறந்தநாளுக்காய் கேக் வாங்கும் உன் தோழமைகளிடம் சொல்..அதில் 10 பிள்ளைகள் சாப்பிடலாமென..

அந்த அன்பின் ஊற்றுக்குள் கண்ணீர் சுரப்பது ஆகாது சக்தி..

உங்களில் யாரேனும் உதவுவீர்கள் சிதுதுளியெனினும்,
உங்கள் பாதங்களில் படர நான் தயாராய் இருக்கிறேன்.

ஒரு துளி உப்பிலிருந்தும்,கழிவறைக் கோபையிலிருந்தும் தொடங்க வேண்டியிருக்கிறார்கள்.

உதவிகளுக்கான வேண்டுதல்கள் கூட வைக்கமுடியாதவர்களாய்
சுருண்டிருக்கிறார்கள்.

நம் குடும்பமும்,காலமும் என்னை அனுமதிக்குமாயின் அவர்கள் கூடவே இருக்க ஆசைப்படுகிறேன்.

இயன்றதைச் செய்வோம் சக்தி...
இங்கு ஸ்டிக்கர்கள் ஒட்டமாட்டார்கள்..
சாப்பாடுக்கணக்கு எழுத மாட்டார்கள்..
உன் உதவிக்கான புண்ணியக்கணக்கின் வரவை அந்தப்பிள்ளைகளின் புன்னகையில் சொல்லவைப்பார்கள்...

நல்ல பாட்டுதான்...
கடவுள் உள்ளமே..
கருணை இல்லமே..

திரு.B.இராதாகிருஷ்ணன்.
கருணை டிரஸ்ட்.
7200012973,
9841359935.

அன்புடன்
செல்வக்குமார்.

புதன், 16 டிசம்பர், 2015

அப்பனின் சாபம்...

பெருமழை தீர்ந்த
பின்னிரவொன்றின்
மீதியில்

அறுந்து
கிடைத்த
இணைப்பில்

அலறுகிறாள்
சின்னவள்.

வாழும் சவமாய்
வார்த்தைகள்
கேட்கிறேன்

ஒருநாள் முழுதும்
உணவில்லை
என்கிறாள்..

எதை
அறுத்து வீச...

எரிந்து
சாம்பலாக
எல்லாம்.