அன்பின் சக்திக்கு,
உனக்கான கடிதங்களின் வீச்சு..நம்மைத் தாண்டியும் பல உள்ளங்களுக்குள் ஊடுருவுவதை பின்னூட்டங்களும்,பக்கப்பார்வைகளும் காட்டுவதில் மகிழ்வு.
வலைப்பதிவு உலகில் ஒரு சிறுவனின் கீற்றல்களுக்கு வரும் குரல் ஆதரவுகளும் குதூகலிக்க வைக்கிறது.
சிலரை அறிமுகப்படுத்தும் போது உள்ளம் எதையோ சாதித்ததாய் பீடு கொள்கிறது.
பீப் பாட்டுகளின் மத்தியில் பல மவுனராகங்களை கேட்காமலே போய்விடுகிறது காதுகளும்,காலமும்.
மனிதத்தன்மையும்,இரக்கமுமற்ற பல நிகழ்வுகளின் கோர்வையில் சமூகத்துக்காய் வியர்வை சிந்தும் பலர் அறியப்படாமலே போகின்றார்கள்.
எனக்கான சென்னையின் புனிதத்தலமாய் ஒரு இடம் இருந்தது..
நீர்மூலம் அது நிர்மூலமாகியிருக்கிறது.
ஆயிரம் அடித்துப்போன வெள்ளத்தின் மேல் சிறு அருவெறுப்பு தோன்றிய இடம் அதுவே.
சைதாப்பேட்டையின் ஒரு சாலையில் உயிரோடு இருந்த இல்லம்...
ஆண் பெண்ணென நாற்பது குழந்தைகள்...
சாதாரணக்குழந்தைகள் அல்ல...
பெற்றோரும் கவனிக்க சிரமப்படும் "ஆட்டிஸம்" எனும் பாதிப்பில் வளர்ந்த குழந்தைகள்.
படிப்பறையும் கழிப்பறையாக்கும் கள்ளமில்லா சிரிப்புச்செல்வங்கள்..
தாயினும் மேலாய்,தாதியாய் போதிக்கும் சிறப்பு ஆசியர்கள்..
கேள் சக்தி..
எந்த தன்னலமும் இல்லை..
அரசின் ஒரு பைசாவும் கிடைப்பதில்லை.
முழுக்க முழுக்க உதவும் மனிதர்களின் சின்ன சின்ன உதவிகளால் உருண்ட பெருந்தேர்...
இருவேளையும் தரமான உணவுக்காய் அவர்கள் அலையும் அலைச்சல்கள்..
தரத்தயாராய் இருப்போரின் பட்டியல் பார்த்து அழைக்கும் பாங்கு..
உதவும் உள்ளங்கள் அள்ளித்தந்தாலும்,கிள்ளித்தந்தாலும் ஒரு புன்னகையில் சொல்லும் பிள்ளைகளின் நன்றிப்பாட்டு...
காணக்கண் கோடி வேண்டும்.
திறந்துவிட்ட வெள்ளம்
சூறையாடிப்போயிருக்கிறது...
வீதியிலிருந்த வி.ஜி.சந்தோசம் வெளியேறிப்போனார்...
இவர்கள்....?
சுய அறிவில்லாத பிள்ளைகளை இறுக்கிப்பிடித்துக்கொண்டு ...
அடித்துக்கொண்டு போகும் உணவுப்பொருட்களையும்,சான்றிதழ்களையும்,சில்லறை சேர்ந்திருந்த உண்டியல்களையும்,பிள்ளைகள் சுமந்த வாகனம் புரண்டு போவதையும் ,,கண்ட அவர்களின் கண்ணீர் இன்னும் நின்றபாடில்லை.
எத்தனை உன்னதமான பிறவிகள்?
பொல்லாப்பெருமழை இந்த நல்லோர்களுக்காகவும் பெய்து தொலைத்திருக்குமோ?
பிறந்தநாளுக்காய் கேக் வாங்கும் உன் தோழமைகளிடம் சொல்..அதில் 10 பிள்ளைகள் சாப்பிடலாமென..
அந்த அன்பின் ஊற்றுக்குள் கண்ணீர் சுரப்பது ஆகாது சக்தி..
உங்களில் யாரேனும் உதவுவீர்கள் சிதுதுளியெனினும்,
உங்கள் பாதங்களில் படர நான் தயாராய் இருக்கிறேன்.
ஒரு துளி உப்பிலிருந்தும்,கழிவறைக் கோபையிலிருந்தும் தொடங்க வேண்டியிருக்கிறார்கள்.
உதவிகளுக்கான வேண்டுதல்கள் கூட வைக்கமுடியாதவர்களாய்
சுருண்டிருக்கிறார்கள்.
நம் குடும்பமும்,காலமும் என்னை அனுமதிக்குமாயின் அவர்கள் கூடவே இருக்க ஆசைப்படுகிறேன்.
இயன்றதைச் செய்வோம் சக்தி...
இங்கு ஸ்டிக்கர்கள் ஒட்டமாட்டார்கள்..
சாப்பாடுக்கணக்கு எழுத மாட்டார்கள்..
உன் உதவிக்கான புண்ணியக்கணக்கின் வரவை அந்தப்பிள்ளைகளின் புன்னகையில் சொல்லவைப்பார்கள்...
நல்ல பாட்டுதான்...
கடவுள் உள்ளமே..
கருணை இல்லமே..
திரு.B.இராதாகிருஷ்ணன்.
கருணை டிரஸ்ட்.
7200012973,
9841359935.
அன்புடன்
செல்வக்குமார்.