திங்கள், 29 பிப்ரவரி, 2016

எனக்குப் பிடித்தவை...


1 )அற்புதமான எழுத்தாளுமை...

                     http://netkoluvan.blogspot.in/2016/02/blog-post_21.html
                    நெற்கொழுவன்




2 )இயல்பான தமிழ்...

         http://alpsnisha.blogspot.in/2016/02/blog-post_27.html
        நிஷா 
 

3 )  நம்ம கில்லர்ஜி தான்   ..ஆனால்...


        http://killergee.blogspot.in/2016/02/blog-post_17.html

            killergee

4 )   உத்திகளின் பத்திகள்...இது நெகிழ்வு...

       
      http://rajamelaiyur.blogspot.com/2015/12/blog-post.html


5 )   படியுங்கள் வாசம் வரும் ..

         http://ulaipali.blogspot.in/2016/02/blog-post_29.html


6 )   இவர் நம் தோழர் 

                      http://ramaniecuvellore.blogspot.in/2016/02/blog-post_28.html


  7 )  எல்லாம் எழுதுவார்              
          
                        https://vimarisanam.wordpress.com/

8 )   இவரை கொஞ்சம் கவனியுங்கள் 


                  http://www.islamiyapenmani.com/2016/02/blog-post_13.html

9 )   என் அபிமானத்துக்குறிய ....
               

              http://thillaiakathuchronicles.blogspot.com/2016/02/Auto-Drivers-Tourism-Dr-V-Iraianbu.html


10 ) இயற்கையின் காதலி 
                   

               http://kaagidhapookal.blogspot.com/2016/02/loud-speaker-37.html






இவர்களே ..தொடர வேண்டுகிறேன் ...








சனி, 27 பிப்ரவரி, 2016

பாதுஷா கான்..காந்தியின் காந்திகள் 3

அன்பின் சக்திக்கு,

ஒரு மனிதன் நாட்டின் விடுதலைக்காய் துடிப்புடன் போராடுகிறான்.
அவன் நினைத்த விடுதலை வருகிறது.
ஆனால் அவன் நினைக்காத பிரிவினையும் வருகிறது.

உணர்ச்சியற்ற மனிதனாய் பிரிந்த பகுதிக்கு சென்றேயாக
வேண்டியவனாய் இருக்கிறான்.

சுதந்திரத்திற்காய் போராடிய மாவீரன் விடுதலைபெற்ற பின் சிறையிருந்த நாள்கள்...
பதினைந்து வருடங்கள்....

பெஷாவரின் உத்மான்ஜாய் கிராமத்தில் பிறந்து குரானை முற்றும் படித்து முடித்த மிகச்சிறந்த கல்வியாளர்.

மென்பஞ்சென மனது.

கல்வி மட்டுமே கரைசேர்க்கும் கருவி என்ற வித்தை தெரிந்த மனிதர்.

1912 களில் பள்ளிகளை நிறுவி கல்விக்கண் திறந்தவர்.

தியாகங்களாலும்,தொண்டினாலும் மக்களால் முடிசூடா மன்னன் என அழைக்கப்பெற்றவர்.

சிறைகளின் காதலன்.
சிறைக்கூடங்கள் இவரை வாசிக்கவைத்தன..
கீதை,கிரந்தம்,பைபிளென...

"இறைவனின் தொண்டர்கள்" என தனி மக்கள் இயக்கம் நடத்தியவர்.

இன்றைய நாட்களில் தான் எத்தனை தளபதிகளை பார்க்கிறோம்..

1934 கொல்கத்தாவில் "எல்லை காந்தி" என இவரை அழைத்தபோது..படையின் ஒரே தளபதி காந்தி என ஏற்க மறுத்தவர்.

வடமேற்கு எல்லை மாகாணம் முழுவதும் சுதந்திரத்தீயை மூட்டிய வர்.

ஒருமுறையல்ல..
மூன்றுமுறை காங்கிரஸ் தலைமைப்பதவியை ஏற்க மறுத்தவர்.

காய்ச்சல் தனக்கிருந்த போதும் காந்தியின் கால்கள் பிடித்துவிடுவதே மருந்தென கண்ட மகான்.

சுதந்திர பாகிஸ்தானில் நரிகளிடம் சிக்கிய தனியாளாய் சிறைக்கொட்டடிகளில் வாழ்வின் முக்கால் வாசி வசித்தவர்...

கிகிச்சைக்காக பலத்த போராட்டங்களிடையில் ஆப்கானில் அனுமதிக்கப்படுகிறார்.

இந்தியா என்ன செய்தது?

எல்லைகாந்தி என புகழ்ந்தது..

கடிதங்களின் வழி கவலைப்பட்டுக்கொண்டது..

இது விளம்பரங்களின் தேசம் சக்தி!.

மதவெறியற்ற முஸ்லீம் சமயத்தவராகவும்,கொடூரமற்ற போர்வீரராகவும்,
காழ்ப்புணர்ச்சியற்ற பகைவராகவும்,
அணுவளவேனும் நம்பிக்கை துரோகமற்ற நண்பராகவும் விளங்கக்கூடிய ஒருவரை கற்பனை செய்தால் அவர் "கான் அப்துல் கபார் கான்" ஆக இருப்பார்.

காந்தி என்னும் ஒற்றைமனிதனின் மீது கொண்ட பக்தியால் தன்னை இழந்த பலர் இருக்கிறார்கள் வெளியில் தெரியாமல்...

ஒரு கோரிக்கைக்காக போராடி,வென்ற பின்னும் அந்த சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாமல் போன அந்த மனிதரை நாமும் சரியாக கவனிக்கவில்லை என்ற வருத்தம் எனக்கும் உண்டுதான்...

விநோபா பாவே சொல்வது போலவே

"நம்முடைய சுதந்திரப்போராட்டத்தில் உங்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுவிட்டது.
நம்முடைய நண்பர்களால் நீங்கள் கை இடப்பட்டுவிட்டீர்கள் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்"

நாமென்ன ஒப்புக்கொள்வது சக்தி..

வடமேற்கு எல்லை மாகாணத்தை தழுவும்  காற்றும்,
காலமும் ,என்றென்றும் எல்லைகாந்தியின் தியாகத்தை சொல்லிக்கொண்டேதான் இருக்கும்.

அன்புடன்.
செல்வக்குமார்.

புதன், 24 பிப்ரவரி, 2016

மீரா பென்.. காந்தியின் காந்திகள் 2

அன்பின் சக்தி,

இதுவும் ஒரு அன்பின் சக்திதான்.

பருவம் மிளிரும் பாரிஸ் நகரத்துப்பெண் மெடலின்.
1892- பிறந்த யுவதி.

முத்தங்களின் பூமியில் கடற்படையில் பணிபுரியும் தந்தை,நிலச்சுவாந்தாராய் தாத்தா..

இயற்கையின் காதலியாய்,இசையின் ரசிகையாய் இறக்கையடித்துப்பறக்கும் நாட்களில்,இசை பற்றி மேலுமறிய ரோமென் ரோலண்ட்டை சந்திக்கிறார்.

ரோலண்ட் தானே எழுதிய "மகாத்மா காந்தி" என்னும் சிறுநூலை அளிக்கிறார்.
வாசிக்கிறாள்.
இன்னொரு ஏசுவாய் காந்தியை வரிக்கிறாள்.

இலக்கின்றி பறந்த பறவை இந்தியாவை நேசிக்க ஆரம்பித்துவிடுகிறாள்.

இந்த பறவை வருடமொருமுறை வந்துபோகவில்லை.
34 ஆண்டுகள் இந்தியாவிலேயே தவம் செய்த சாதகப்பறவை.

காந்தியின் உண்ணாவிரதங்களுக்கு அவள் மெலிகிறாள்.

ராட்டைகற்கிறாள்.
சைவத்துக்கு மாறுகிறாள்.
மதுபானம் மறுக்கிறாள்.
மொழி கற்கிறாள்.
சம்மணம் இட்டு அமர்ந்து பழகுகிறாள்.
வெறுந்தரை துயில் கொள்கிறாள்.

இசையின் ரசிகை தன் பியானோ விற்கிறாள்.

தாத்தா பரிசளித்த வைர ஊசி விலை செய்து காந்திக்கு காணிக்கை அனுப்புகிறாள்.

யங் இந்தியாவை சந்தா கட்டி படிக்கிறாள்.

காந்தியின் ஆணைக்காய் கப்பலேறக்காத்திருக்கிறாள்.

அந்த நாளும் வருகிறது.

பாரீஸிலிருந்து லண்டனுக்கு.

லண்டனிலிருந்து அவள் தேவதையாய் 1925 நவம்பர் 7  ஆசிரமத்தில் அடிவைக்கிறாள்.

மகாத்மாவின் மகளாகிறாள்.

நூற்றல்,சமைத்தல்,சுத்தம் செய்தல் என அந்த தேவதை தெய்வமாகிறாள்.

காந்தியின் கனவுகள் ஆசிரமத்திலிருந்து ஆரம்பமாவதை அறிகிறாள்.

அவளுக்கும் ஒரு காதல் வருகிறது..சர்தார் பிருத்வி சிங்கிடம்...

காலம் வெல்லும் கருணை தேவதையை காதலா வெல்லும்?

வெள்ளையாடை பூணுகிறாள்.
தலைமுடி குறைக்கிறாள்.
கன்னியாகவே வாழ்கிறாள்.

தந்தை இறந்ததாய் தந்தி வருகிறது..
தமக்கை மரிக்கிறாள்.
தாய் காலமாகிறாள்.
இவள் இந்தியத்தாயின் மடியில் காந்தியென்னும் ஞானத்தகப்பன் அரவணைப்பில் இருந்துகொள்கிறாள் போகாமலே.

மொழிகற்று மக்களோடு மக்களாய் வாழப்பழகுகிறாள்..

அண்ணலின் அத்தனை போராட்டங்களையும் காணும் கண்கள் பெறுகிறாள்.

சைமன் கமிஷன் எதிர்ப்பு,
தண்டி யாத்திரை,
காந்தி-இர்வின் ஒப்பந்தம்

1931 வட்டமேசை மாநாட்டுக்காய் அண்ணலுடன் லண்டன் செல்கிறாள்.
கார் இவள் இளமைக்கால வீட்டின் வழி செல்கிறது.
கண்களின் வழிமட்டும் நடந்துபோகிறாள் இறங்கவே இல்லை..

நூற்றல் மட்டுமல்ல.
நூற்றுக்கணக்கான கட்டுரைகள்.

ஆர்தர்ரோடு சிறை,
சபர்மதி சிறை என சட்டம் இவளை சிறை வைக்கிறது.
பீனிக்ஸ் பறவையாய் இவள் காந்தி நோக்கியே பறக்கிறாள்.

ஒரு தாயாய்,தாதியாய் காந்திக்கு மாறிப்போகிறாள்.

காந்தியின் சாந்தியை சுமந்துகொண்டு சமதானப்புறாவாய் பறக்கிறாள் பல இடங்களுக்கு.

தபஸ்வியாகிறாள்,
ஓராண்டு மவுனதவம் செய்கிறாள்.
ரிஷிகேஷில் இவள் இருந்த போது காந்தி கொல்லப்படுகிறார்.

இவள் காந்திக்கு மரணமில்லை என போகவில்லை அவர் உடல் பார்க்க.

கூடிழந்த பறவையாய்
மீண்டும் படிக்கிறாள்.

உள்ளம் விரும்பும் இசைக்கு இசைவாய்1959இந்தியாவை விட்டு வியன்னா செல்கிறாள்.

இசை மட்டும் அருந்தி அமைதியாய் வாழ்கிறாள்.

1968 இங்கிலாந்தில் நடந்த அண்ணலின் நூற்றாண்டு விழாவில் அரங்கம் நிறைந்த மேடையில் பேசுகிறாள்...கண்ணீர் நிறைகிறது..

பக்தமீரா கொண்ட காதல் இறைக்காதல் என்றால்..
மீரா பென் கொண்டது தந்தையாய் வரித்து தன்னையும் கரைத்த தனிக்காதல்..

தம் நாட்டிற்காக போராடுதல்,சிறைப்படல்,
சாகுதல் இயற்கை..

எங்கோ பிறந்து இங்கே வந்து தன்னை உருக்கி மெழுகாய் எரிந்துவிட்டுப்போன மீராவை எப்படி மறப்பது?

அன்புக்கும்,
தியாகத்துக்கும்மொழி,இன,இட பேதம் கிடையாது.

1982 ஜூலை 20 இல் அவள் மரணித்திருக்கலாம்..
காலம் அவளை மறக்காது.

அன்புடன்,
செல்வக்குமார்.

திங்கள், 22 பிப்ரவரி, 2016

காந்தியின் காந்திகள்...1


அன்பின் சக்திக்கு, 

காந்தி என்னும் ஒற்றை மனிதன் இந்த தேசத்தின் அடையாளமாய் காணப்படுகிறார். 

அந்த அரையாடை மனிதரின் கொள்கைகளில் 

நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் அவரின் கொள்கைகளின்பால் அவர் கொண்ட உறுதி போற்றப்படவேண்டியது.. 

நான் காந்தியைப்பற்றி உனக்கு சொல்லப்போவதில்லை. 

அவரின் சாதனைத்தேருக்கு ஆரங்களாக. 

சரித்திர வெளிச்சம் சரிவர பாய்ச்சப்படாமல்.. 

தியாக வேள்விக்குள் மறைந்தே போன பலரும் குறிப்புகளாகவே வரலாற்றுக்குள் தங்கிப்போனார்கள் 

அபூர்வமாய் ஒரு நூல் 12 சீடர்களை சொல்கிறது... 

ஏசுவின் சீடர்களை விடவும் குறைந்தவர்களல்ல இவர்கள். 

சின்ன சின்ன செய்திகள்.. 

தேவைப்படுமாயின் சில தேதிகள். 

இந்த கடிதம் உன்னை இன்றைய பலரோடு ஒப்பிடவைத்து.உனக்குள் சிறு அதிர்வை ஏற்படுத்தினாலும் எனக்கு மகிழ்வே.. 

ஜே.சி.குமரப்பா 

1892 ஜனவரி 4 இல் தஞ்சையில் ஒரு கிருஸ்தவ குடும்பத்தில் பிறப்பு.. 

1913- லண்டனில் நிறுவனத்தணிக்கை படிப்பு. 

1924-மும்பையில் தனி நிறுவனம். 

பின் அமெரிக்காவில் வணிக நிர்வாகப்பட்டம். 

பிறந்தது முதலே நகர்மய வாழ்க்கை. 

தாய் எஸ்தர் தந்த அறம் சார்ந்த வாழ்க்கை. 

எந்தப்பணியை ஒருவன் செய்தாலும் தன்னுடைய செயலால் ஏற்படக்கூடிய சமூக விளைவை எண்ணிப்பார்க்க வேண்டும். 

இந்திய மண்ணில் ஆங்கிலேயச்சுரண்டலில் பதறும் மனம். 

நண்பர் ஒருவரின் தூண்டுதலால் காந்தியை சபர்மதி ஆசிரமத்தில் சந்திக்கிறார். 

ஒரு மரத்தின் கீழ் நூற்றுக்கொண்டிருந்த ஞான ஒளியில் தன்னை இழக்கிறார். 

காந்தியும் சாதாரண ஆளில்லை..மனிதனின் திறன் அறிவதில் வல்லவர்.. 

பின்னொரு நாளில் எழுதுகிறார்"குமரப்பா பண்படுவதற்காக என்னிடம் வரவில்லை...பக்குவப்பட்ட பின் தான் என்னிடம் வந்திருக்கிறார்" 

யங் இந்தியாவில் பல கட்டுரைகளாய் விரிகிறது குமரப்பாவின் கனவுகள்.. 

1931- முதல் சிறைவாசம்.. 

கிராமங்களின் முன்னேற்றத்திற்காய் பல முன்னெடுப்புகள். 

தேவைப்படும் பல இடங்களுக்கும் செல்லும் உதவி.. 

கணக்குகளில் காட்டும் கண்டிப்பு..

1934-பீகார் பூகம்ப துயர்துடைப்புப்பணி. 

ஒரு பணியாளருக்கு நாளொன்றுக்கு மூன்று அணாக்கள். 

காந்தி பரிவாரத்துடன் வருகிறார்... 

அனுமதிக்கப்பட்ட தொகைக்குமேல் முடியாது. 

காந்தி அவர்களே  அவர்களின் காருக்கான பெட்ரோல் செலவை ஏற்க வேண்டும்.. 

ஏன் என்கிறார் காந்தி.. 

"இது துயர் துடைப்புக்கான மக்கள் பணம்" 

காந்தி சிரித்தபடி ஒத்துக்கொள்கிறார். 

மற்றொருநாள்.. 

கணக்கில் சில அணாக்கள் வித்தி்யாசம் வர அறையை சாத்திக்கொண்டு அலசிக்கொண்டிருக்கிறார். 

காந்தி வெளியே காத்துக்கொண்டிருக்கிறார். 

ராஜேந்திர பிரசாத் சொல்கிறார் 

" காந்திஜீ! குமரப்பா பணியி இருக்கும் போது சிங்கம் போலிருப்பார்..பார்க்கமாட்டார் யாரையும்.." 

இரவு தங்கி காலையில் காந்தி குமரப்பாவிடம் பேச வருகிறார். 

"ஆண்டுக்கூட்டதின் பணியில் இருப்பதால் பேசமுடியாது" 

"நான் வாரணாசியிலிருந்து வருகிறேன் ..இன்றிரவு சபர்மதி செல்ல வேண்டும்" 

"இப்போது முடியாது.." 

காந்திக்கு கோபம் வரவில்லை..காகிதங்களை மகாதேவதேசாய் மூலம் குமரப்பாவிடம் கொடுத்துவிட்டு கிளம்புகிறார் 

என்ன துணிவு சக்தி.. 

எப்படிப்பட்ட நேர்மை.. 

எத்தனை பொறுமையான தலைமை.. 

கிராம சேவைக்காக மந்திரிபதவியை வேண்டாம் என்றிருக்கிறார் 

தனக்கென வாழாமல் நாட்டுக்கென வாழ்ந்த தியாகம். 

1948-காந்தி சுடப்பட்ட செய்தி கிடைத்த அதிர்ச்சியில் இரண்டுநாள்கள் பார்வை இழந்து மீண்டிருக்கிறார்.. 

காந்தி நிதி சேர்ப்புக்கு அவர் சொல்லியிருக்கும் வரிகள்.. 

அற்புதமானவை. 

நிதி என்பது பணமல்ல..ஆன்மாக்களை சேருங்களென. 

அந்திச்சூரியன் மதுரை காந்தி நிகேதனில் ஓய்வெடுக்கிறது.. 

குன்றிய உடல் நலம். 

1960 ஜனவரி 30 

காலையில் ஒரு பெண்.இன்று காந்தியின் நினைவுக்கூட்டம் என்கிறார்.. 

கட்டாயம் கலந்துகொள்வேன் என்கிறார். 

நடக்கமுடியாத இவரால் எப்படி? 

குழப்பத்தில் போகிறார் அந்தப்பெண்மணி.. 

ஆனால்.. 

இவர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டார் 

காற்றோடும்..காந்தியோடும்.. 

இன்றைய தலைவர்கள் யாரோடேனும் ஒப்பிட முடிகிறதா சக்தி... 

இன்னும் சிலரை இனி பார்க்கலாம்.. 

அன்புடன் 

செல்வக்குமார். 

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

அவர் தனித்து நிற்கட்டும்..

மக்களே....
உங்கள் தலைகளில் நீங்களே அடித்துக்கொள்ளுங்கள்.

யாரெல்லாம் கிங்காக வாய்ப்புக்கொடுத்திருப்பதாய் நினைக்கவைத்திருக்கிறோம்.

என்ன சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்..

அரசியல் எத்தனை கேவலமாக..

அய்யா...சமூக நலக்கூட்டணிகளே.

இனியும்..இவரின் பின்னே அலையாதீர்கள்..
இந்த தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை..அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்..

அவர் தனித்தே நிற்கட்டும்.தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவராகவும்,
கிங்மேக்கராகக்கூட இல்லாமல் கிங்காகவே நினைத்துக்கொண்டிருக்கும் இவர்கள் போன்றவர்கள் தான் முதலில் களையெடுக்கப்
படவேண்டியவர்கள்.

அரசியலில் அரைநூற்றாண்டுக்கும் மேலே அனுபவம் பெற்றவர்களே இனியும் நீங்கள் இவர்வீட்டில் காத்துக்கிடப்பது உங்கள் வரலாற்றின் கருப்பான பக்கங்களாய்தான் இருக்கும்.

தவளை தன் வாயாலே கெட்டிருக்கிறது...அப்படியே விட்டுவிடுங்கள்..
அரசியல் பேரங்களுக்காக ,பல வசதிக்காக சொல்லியிருக்கலாம்..எப்படியிருந்தாலும் விட்டுவிடுங்கள்...

ஒருவேளை அப்படி கிங் ஆனால்.
விடுங்கள்
தமிழகத்தின் தலைவிதி..

தலைவிதி அப்படியிருக்குமானால் மக்களே உங்களுக்கு என் ஆழ்ந்த நன்றிகள்..

வியாழன், 18 பிப்ரவரி, 2016

மக்களுக்காகவும் போராடுங்க ..ஆபீஸர்ஸ்...

அன்பின் சக்திக்கு,

கடந்த சில நாட்களாக நகரமெங்கும் போராட்டங்களின் அணிவகுப்பைப்பார்க்கிறோம்.

15 அம்ச கோரிக்கை என்று ஆசிரிய சங்கங்கள் போராட்டம் ஒன்றை நடத்தி ஒரு நாள் பள்ளிகளையும் அடைத்தார்கள்.

இப்போது அரசு ஊழியர்களின் சங்கங்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது..

சரி சக்தி...
ஏனிந்த போராட்டங்கள்?
தகவல் தொடர்பு சரிவர இல்லாத காலங்களில் நடந்த போராட்டங்களின் வடிவத்திற்கும் இந்த காலப்போராட்டத்திற்கும் எத்தனை வித்தியாசங்கள்?

1980 களில் நடந்த ஆசிரியப்போராட்டங்களின் எழுச்சியும் உணர்ச்சியும் ஏன் இந்த போராட்ட காலத்தில் காணப்படவில்லை.

மிகச்சரியான காரணமாக நான் கருதுவது..
மக்களிடம் தங்கள் கோரிக்கைகளைப்பற்றி விளக்காமல் போனதுதான் என்பேன்.

இந்த நாட்டின் ஆசிரியர்களும், அரசு உழியர்களும் மக்களுக்கான பணி செய்பவர்கள் என்பதை ஏன் மறந்து போனார்கள்?

மக்களின் ஆதரவே இல்லாமல் ஜெயித்துவிடலாம் என்பது அதீத நம்பிக்கையின் விளைவு..

சரி!
உங்கள் போராட்டங்களுக்கான காலம் இதுதான் என்பதை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?

ஆட்சி முடியும் நேரம்..புதிய ஆட்சி வரப்போகும் நேரம்..
உங்கள் போராட்டங்களை அரசு கவனித்தே தீரும்  என்ற கணக்கு தான்,
 நீங்கள் அறிவாளிகள் என்பதை உணர்த்துகிறது.

தினம்தோறும் உயரும், கைதாகி விடுதலையாவோரின் கணக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது.

தனக்கெனப்போராடும் ஆசிரிய, அரசு ஊழியர்களே உங்கள் ஒற்றுமை உணர்வுக்கு சபாஷ்.

ஆனால்.
எத்தனை பொதுப்பிரச்சனைகளுக்காக கூடியிருக்கிறீர்கள்?

மீத்தேன் பிரச்சனைக்கு உங்கள் சங்கங்களின் கருத்து என்ன?

கெயில் குழாய் பதிக்கப்போகிறதே..தெரியுமா உங்களுக்கு?

இதே ஒற்றுமையுடன் போராடியிருந்தீர்கள் என்றால் தனியார் பள்ளிகள் வளர்ந்திருக்காதே...

இந்திய தேசத்தின் மாணவர்களின் கல்வித்தகுதியில் தமிழ் மாணவர்களின் கல்வித்தகுதி தரைமட்டத்திற்கு போனதே ..தெரியுமா உங்களுக்கு...

லஞ்சமில்லா ஒரு அரசு அலுவலகம் காட்டமுடியுமா உங்களால்?

ஆர்ப்பாட்டமென்று கூறி கோஷமிட்டு போலிஸ்வண்டியிலேறி புன்னகைத்துப்பயணித்து மாலையில் விடுதலையாகும் உங்கள் போராட்டங்களால் அரசாங்கங்கள் வேண்டுமானால் கொஞ்சம் அசையலாம்..

மக்கள் மனதில் எதுவுமில்லை..

உங்கள் கோரிக்கைகள் மீது நமக்கு எந்த சந்தேகமும் இல்லை..அவை பெறப்படவேண்டியவை...
ஆயினும் உங்களின் கோரிக்கைகளை பொதுமக்களின் பார்வைக்கு சரிவர வைக்காமல்,
மக்களின் ஆதரவு சிறிதுமின்றி எப்படி வெல்வீர்கள்?
உங்கள் சங்கங்களுமா கார்ப்பரேட் கம்பெனிகளாய் மாறிப்போனது?

மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்லுங்கள்...

உங்கள் போராட்டங்கள் முடிந்ததும்  மக்களுக்காகவும் போராடுங்கள்..

மக்களும் உங்களுக்காக போராடுவார்கள்.

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள்....

ஆசிரியர்கள் தனியே...அரசு ஊழியர்கள் தனியே...

வேண்டாமே...
ஒற்றுமையுடன் போராடுங்கள்..

வாழ்த்தலாம் சக்தி.

அன்புடன்

செல்வக்குமார்.


திங்கள், 15 பிப்ரவரி, 2016

வில்லன் வரவே இல்லை...

அன்பின் சக்திக்கு,

இறுக்கமான வாசிப்பின் அடர்த்தியை கொஞ்சம் குழைவாக்க ஒரு நாவலில் மூழ்கிப்போனேன்.

அது கொடுமை கொடுமை என கோவிலுக்கு போன கதையாகிப்போனது.

பொதுவாய் நம் கேரள சகோதரர்களின் படைப்புகள் இயற்கையோடு ஒன்றி கலைநேர்த்தியுடன் இருக்கும்.

எந்த விஷயத்திலும் சமரசம் செய்துகொள்ளாத பல எழுத்து அச்சன்கள்  ஜீவித்த சேரமான் நாட்டில் "தோப்பில் முகமது மீரான்" என்னும் படைப்பாளி காலத்தை வெல்லும் தன் படைப்புகளில் கதாப்பாத்திரங்களின் வழியே வாழ்ந்துகொண்டேயிருப்பார்.

சுதந்திரத்திற்கு முந்தைய அரபிக்கடலோரம் ஒரு இஸ்லாமியமக்கள் நிறைந்த கடற்கரை கிராமத்தின் கதையைச் சொல்கிறது.
"துறைமுகம்" என்னும் நாவல்.

சித்திரையில் வரப்போகும் வல்லிய மீன்பாட்டிற்காக தயாராகும் மீனவர்கள்,ஏலமெடுத்து சம்பைக்கட்டு ஏற்றி
பணம் செய்ய நினைக்கும் சில கதாப்பாத்திரங்கள்.

சேரமான் இஸ்லாத்தை தழுவியபின் ஒரே நாளில் எழுந்த பல பள்ளிகளில் உயர்ந்ததாய் யானைகொண்டு கல்லடுக்கிக்கட்டிய பள்ளிவாசலும் ஒரு பாத்திரமாய் இருக்கிறது.

மதமெனச்சொல்லி சதிசெய்யும் நேரங்களில் எல்லாம் " தோப்பில்" பலமுறை சொல்கிறார்..
ஆனை கொண்டு கல்லடுக்கிய பள்ளி...

அடக்கொடுமையே..
என்ற சொல்லுக்கு ஈடாக தன்னிச்சையாக சொல்லிவிடுகிறார்..

முன்பின் பார்த்திராத ஒரு பிரதேசம் தான் கதைக்களம்.

நாவலின் சில பக்கங்கள் போனதும் நம்மைப்பிடித்து அந்த கடற்கரைப்பெருவெளியில் உட்காரவைத்து காட்சிகளை கண்களுக்குள் திணித்துவிடுகிறார்.

கீழேவிழும் தென்னை ஓலைக்காய் காத்துக்கிடந்து சேர்த்து.. மழைவரும் முன்னே வீடு வேய்ந்துவிடத்துடிக்கும் ஒரு குடும்பம்.

முடியிருப்பவன் முசல்மான் அல்ல என ஒரு பரிதாபமான வயசாளியை கட்டிப்போட்டு மொட்டையடிக்கும் மதக்கும்பல்.

படிப்பது பாவமென பள்ளியைவிட்டு நிறுத்தி ஒரு இளைஞனை சபிக்கும் ஊர்மக்கள்.

மரச்சீனிக்கிழங்கு விற்கும் நாடார் பெண்களிலிருந்து.

சவரக்கத்தியுடன் அலையும் வாய்நாறிய ஒரு சவரத்தொழிலாளி.

வலையில் சிதறும் மீன் பொறுக்கும் ஒரு சிறிய இறுமியின் முதுகில் விழும் அடி..ஈசன் முதுகில் பட்ட பிரம்படிக்கு சற்றும் குறைந்ததல்ல..

ஆஜ்மீரில் தவமியற்றியதாய் சொல்லும் பழைய தேங்காய்த்திருடன் ஒரு ஏழைப்பெண்ணை மணந்து இரவல் நகைகளுடன் தலைமறைவானதையும் நம்ப மறுக்கும் சமூகம் மீது அப்படி ஒரு கோபம்..

இடைடையே வந்து போகும் திவானின் இடிவண்டி என்னும் காவலர் வண்டி..

தகவல் தரும் தேவ தூதனாய் ஒரு தபால்காரர்.

ஊசிபோடவந்த அதிகாரிக்கு கிடைக்கும் அனுபவங்கள்..

நாவலின் அடிநாதமாய்..

கண்ணுக்கே தெரியாத பெயர்மட்டும் அறியும் ஒரு வில்லன்..
படிப்பறிவே இல்லாத மக்கள் அனுப்பும் சரக்கெல்லாம் நட்டமெனச்சொல்லி இருக்கும் இடத்தையும் உருவும் நயவஞ்சகம்..

இலங்கையின் ஒரு மூலையில் நரியின் மூளையுடன் இருந்துகொண்டு இங்கே குடிக்கும் மனித உயிர்கள் ..

பணக்காரர்களுக்கு துணைபோகும் மதமும்...ஊரும்..

ஒரு நாவலென்று நம்பமறுத்து..
தாண்டிவிடமுடியவில்லை.

வாசித்துமுடித்து வைக்கும்போது ஒவ்வொரு மனிதனும் மனசோடே இருந்துபோகிறார்கள்.

பு ரியாத பல இடங்கள்..
புரியாத பல வார்த்தைகள்..
புரியாத பல சம்பவங்கள்..

மேலாய்...

ஒரு நாவலுக்கு உயிர் இருக்கமுடியுமா?

இருக்கிறது..
புரிகிறது..

வாசிக்கலாம் சக்தி..

அன்புடன்,
செல்வக்குமார்.