வியாழன், 23 ஜூன், 2016

ஸ்டிக்கர் கோலம்

ஆறுபுள்ளி
ஆறுவரிசை..
அழகழகாய்
யானைகள்..
நடைபழகும்
நான்கு அன்னங்கள்.
இலையோடு
தலைநிமிர்ந்த
தாமரைகள்..
புத்தாண்டு..
பொங்கல் பானை..
யேசு பிறந்ததற்கும்
உண்டு...

அத்தனை
நேர்த்தியாய்
அலங்கரிப்பாள்
வாசலை..

அட்டைபோட்ட
நோட்டு முழுதும்
அக்காவின்
கோலங்கள்.

கட்டில்
மெத்தையென
சீர் செனத்தி
சாமானோடு
மடியேறிப்
போனது..

சென்றவாரம்
திருவிழா
வந்தவள்..

தேடிப்
பொறுக்குகிறாள்..

வெல்கம்
போட்ட
ஸ்டிக்கர் கோலம்.

ஞாயிறு, 12 ஜூன், 2016

புத்தகக்கண்காட்சி தேவையா?

அன்பின் சக்திக்கு,
உன்னைப்பார்க்கவேண்டிய ஆசை இருந்ததென்றாலும்,
புத்தகக்கண்காட்சி என்னும் ஆவலும் இந்த முறை எனக்கு சென்னைப்பயணத்தின் நோக்கமாய் இருந்தது.

வாசிப்பவர் யாவருக்கும் புத்தகக்கண்காட்சிப்பயணம் என்பது புனிதப்பயணம் தான்..

புத்தகக்குழந்தைகள் அடுக்கிவைத்திருக்கும் அழகும்,வாங்கவேண்டும் என வருடமெல்லாம் நினைத்திருந்த புத்தகத்தை காணும் போது ஓடிச்சென்று அணைத்துக்கொள்ளும் ஆவலும், நமக்கு தெரிந்த எழுத்தாளர் ஒருவரிடம் சென்று சுய அறிமுகம் செய்துகொள்ளும் வாய்ப்பும் அலாதியானது தான்.

இந்த முறையும் கனவுகள் சுமந்தே கிளம்பினேன். பேருந்தின் ஒருமணிநேரப்பயணம்... கடற்கரைச்சாலை கடந்து கூவத்து வாடைகொஞ்சும் ஒரு சாலையில் இறங்கினேன்.

குல்பி ஐஸ்,மசாலா பொரி விற்கும் கூட்டம் தாண்டி நுழைவுச்சீட்டுடன் அரங்கம் நுழையும் போது அனல்காற்று முகத்தில் அடித்தது.

ஆவல் மேலிட பார்வைகள் பறந்தன.
சுற்றிய களைப்பில் ஆங்காங்கே தரையில் உட்கார்ந்திருந்த மக்கள்.

கடைகளின் தந்திரமா அல்லது இன்னும் மக்கள் தாண்டிவரவில்லையா..
பொன்னியின் செல்வன்,
அலை ஓசை என கல்கியே இருக்கிறார் எல்லா இடங்களிலும்.

வார இதழ்களும்,நாளிதழ்களும் வசதியாக பிடித்துக்கொண்ட கடைகள் தவிர தமிழக பதிப்பாளர்களின் கடைகள் இருக்கின்றன.
புத்தகங்களை குறித்துக்கொண்டு போகாதவர்கள் சுற்றித்தான் ஆகவேண்டும்.
சுயமுன்னேற்ற நூல்கள்,சமையல் குறிப்புகள் தாண்டி இந்தமுறை குழந்தைகளுக்கான நூலகள் அதிகம் கிடைத்தன..

சினிமாவாகட்டும்,மருத்துவமாகட்டும், கல்வியாகட்டும் குழந்தைகளை முன்வைத்து செய்வது தோற்பதில்லை...
இந்த முறை புத்தகங்களும்.

எல்லாம் சரி..
புத்தககண்காட்சிக்கு எதற்கு நுழைவுக்கட்டணம்?
அடித்த வெயிலில் வடித்த வியர்வைக்கு அவர்கள் அல்லவா கட்டணம் தந்திருக்க வேண்டும்.

அனல்காற்றடிக்கும் அரங்கங்கள், புத்தகங்கள் தாண்டி நான் பார்த்தது காய்கறி வெட்டும் சிறுகத்தி விற்றவர்கள்,தியானம் சொல்லித்தந்தவர்கள்,
சின்ன கப்பில் 20 ரூபாய்க்கு காப்பி விற்றவர்கள்..

பொதுவாய் புத்தகங்கள் என்பதை எனக்குத்தெரிந்து எவரும் மட்டமாய் சொன்னதில்லை..
அப்படிப்பட்ட புத்தகத்தை வாங்கும் சூழல் எப்படியிருக்கவேண்டும்? அமைதியான, பொறுமையான,யாரும் நம்மை இடித்துக்கொண்டு நகராத சூழல் வேண்டாமா?
அது அங்கே கிடைத்ததென யாரும் சொல்ல முடியாது...

டெல்லி அப்பளங்களும், வங்கியின்  ஏ.டி.எம் களும் சூழ்ந்த வெளியில் தின்றுதீர்க்க அத்தனையும் கிடைக்கிறது கொள்ளை விலைகளில்.

மொட்டைவெயிலில் புத்தகவெளியீட்டு விழா நடக்கிறது...32 எழுத்தாளர்களின் நூலை வெளியிடுகிறார்கள்..
அநேகமாய் எனக்கு ஒரு பெயரும் நினைவிலில்லை..
ஏற்புரையும்,வாழ்த்துரைகளும் சொல்லமுடியவில்லை..
ஆனால் அது மனம்கவரும் விழாவாக இல்லை...

மொத்தத்தில் அங்கே போகும்போது இருந்த மகிழ்ச்சி வரும்போது இல்லவே இல்லை.

முன்தினம் கணினிக்காய் ஒரு பாகம் வாங்க ஒரு பிரதான கடைவீதி சென்றிருந்தேன்.
எலக்ட்ரானிக்ஸ் சம்பத்தப்பட்ட சின்ன ஸ்குரூவிலிருந்து முந்தினம் வந்த கருவிவரை கிடைக்கிறது வருடம் முழுவதும்..
மாநிலத்தின் எல்லாப்பகுதியிலிருந்தும் அந்தவீதியின் அடையாளம் தெரிந்து வந்து போகிறார்கள்..

புத்தகங்களை விட கணினிப்பொருட்கள் உயர்ந்தவை அல்ல..
ஆனால் சென்னையில் புத்தகங்களுக்கென ஒரு வீதியில்லை..

வருடத்தின் ஒருசில நாட்களில் மட்டும் சாக்கடை நாற்றத்தில், வெந்து ,வியர்த்து, புத்தகம் விற்றுவிட்டு போனால் போதுமா?
புத்தக விற்பனையாளர்கள் எல்லாரும் பரமஏழைகள் கிடையாது..

வருடத்துக்கு ஒரு இடமென அரசிடம் வேண்டி காட்சிநடத்தும் நீங்கள் ஏன்
உங்களுக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக கொண்டு நல்ல காற்றோட்டமான வசதியுடன் புத்தக விற்பனையை செய்யக்கூடாது?

சிலநாள் கூத்துக்கு நீங்கள் செய்யும் செலவுகளைத்தாண்டி 10% தள்ளுபடி தரமுடியும் உங்களால் ,
நிரந்தரமான இடமெனில் இன்னும் அதிகமான தள்ளுபடி கொடுக்கமுடியுமே?

மொத்தத்தில் புத்தககண்காட்சி என்பது நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் ஒரு இடமாகவும்,செல்பி எடுத்து முகநூலில் போட்டு நானும் போய்வந்தேன் எனச் சொல்லி அடையாளம் தேடும் இடமாக மட்டுமில்லாது..

புத்தகம் வாங்குவதென்பது ,கோவிலுக்குச்செல்வதிலும் எந்தவகைக்கும் குறைந்ததில்லை என்னும் வகையில் அமைதியாகவும், மகிழ்வாகவும் அமையவேண்டும் என்பதே...என் ஆசை..

அன்புடன்,
செல்வக்குமார்.

ஞாயிறு, 22 மே, 2016

மானுடம் வென்றதாம்...

வீட்டுக்குள்
நான்கு
மனைவிகள்..
தப்பில்லை...

காட்டுக்கும்
பெண்ணை
அழைத்துப்போனான்
தப்பில்லை..

விட்டுவிட்டு
வேட்டைக்குப்
போனான்
தப்பில்லை..

வாலில்
தீ கட்டி
தீவெல்லாம்
சுட்டுவைத்தான்
தப்பில்லை..

அண்ணன் விட்டு
தம்பியைத்
தழுவிக்கொண்டான்
தப்பில்லை.

தீக்குள்
தள்ளி
கற்பளவு
சோதித்தான்
தப்பில்லை..

செருப்பாட்சி
நடந்ததும்...
குரங்காட்சி
கொன்றதும்
தப்பேயில்லை...

மானுடம்
வென்றதாம்

சரியா....?

தெரியவில்லை





எரியுதே....

ஒற்றைச்சிலம்பை
விற்கக்
கொடுத்துவிட்டு..

அப்படியென்ன
ஆவேசம்
அவளுக்கு...

உடைத்துவிற்காமல்
மூடியே
விலைசொன்னது
எப்படி
நல்ல வியாபாரம்?

அவளுக்கும்
கொஞ்சம்
ஆசை
இருந்திருக்கிறது...

அவன்
மீசைக்குள்ளும்
வேசமிருந்திருக்கிறது..

கணக்கு
தப்பானதால்
செத்தவனுக்கு
வாழவும்
தெரியவில்லை...

என்னடா
செஞ்சோம்.

நீங்கள்
வைத்த
தீ
மட்டும்
இன்னும்
எரிகிறது...







வெள்ளி, 20 மே, 2016

எங்களையே சொல்றீங்களே....

உங்கள்
பட்டாசுகளென
சிதறி
எம்
வாக்குகள்.

உம்
தலைவர் சிலை
மாலைகளென
காயத்தொடங்குகிறது
எம்
கனவுகள்.

ஆரவாரக்கூச்சல்களில்
அழுந்திக்கிடக்கிறது
அழுகை.

தேடித்தேடிச்
சொல்லும்
காரணங்களில்
எம்மையே
குறை சொல்வீர்..

பணத்துக்கு
விலைபோனதாய்
பதறுகிறீர்கள்..
நீங்கள்
தியாகத்
திருவுருவங்கள்?

மாறவே போவதில்லை
நாங்களென
உங்கள்
சர்ப்ப சாபங்கள்
கொத்தித்தீர்க்கிறது
எங்களை.

நீங்கள்
முற்றிலும்
மாறிவிட்டவர்கள்?

உங்கள்
மாற்றங்கள்
பற்றிய
கனவுகளை
உள்வாங்க
வில்லையென
உருகுகின்றீர்கள்..

தலைசிதறிய
தண்டவாளங்களை,
எரிந்துபோன
குடிசைகளை

மறக்கவும்
மாற்றவும்
முடியவில்லையே
இன்னும்..

உங்களுக்குத்தான்
பதவி
தேர்தல்
கூட்டணி
எல்லாம்..

எமக்கு
எப்போதும்
பிரிவதில்லை
பட்டினி
வயிறு.

சரி தலைவர்களே!
நீங்கள்
நன்றாக
கழுவக்
கற்றுக்கொண்டு
வாருங்கள்..

எங்கள்
கண்ணீர் துடைக்க...



செவ்வாய், 17 மே, 2016

வாழ்த்துகளுடன்,சில வேண்டுதல்கள்..

அன்பின் சக்திக்கு,

வெல்பவருக்கு நம் வாழ்த்துகளை முன்கூட்டியே அனுப்பிவிடுவோம்.

வெல்பவர்களே!
இந்த தேர்தல்கால உத்திகள் இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்.

மனசாட்சி இல்லாத வாக்குறுதிகள்,கூட்டணிக்காய் காத்துக்கிடந்தது,வாக்கு கேட்கப்போன இடங்களில் கிடைத்த மரியாதைகள்,விழுந்தெழுந்த கால்கள்,இணையவெளிகளில் நீங்கள் விமர்சிக்கப்பட்ட விதம்.

எல்லாவற்றிலும் மேலாக இந்த வெயிலில் வாகனங்களில் நின்றுகொண்டு வாக்குகள் கேட்ட கொடூரம்.
உங்கள் எதிரிகளுக்கும் இனி வரவேண்டாம்.

நாளுக்குநாள் கிளம்பிய வதந்திகள்,காணொளிகள் யாவும் கற்காலத்திற்கு திரும்புகிறோமோ என்ற அச்சத்தை கொடுத்துவிட்டது.

ஒன்றை உணருங்கள்.
மக்கள் நீங்கள் நினைப்பதுபோல் முட்டாள்களில்லை.
மகச்சரியாக முடிவெடுப்பார்கள்.
"அன்பார்ந்த வாக்காளப்
பெருமக்களே" இனியும் எடுபடாது.

*உங்கள் வென்ற வேட்பாளர்களில் துறை தெரிந்தவர்களை அமைச்சராக்குங்கள்.

*மிக அன்புடன் அவர்களின் ஆலாசனைகளுக்கு செவிமடுங்கள்.

*தமிழ்நாடு என்றால் கேவலமாக நினைக்கும் மற்ற மாநில,வெளிநாட்டு நண்பர்களுக்கும் உங்கள் செய்கைகள் மூலம் பதில் கொடுங்கள்.

*அரசின் எல்லாச் செயல்பாடுகளையும் வெளிப்படையாக்குங்கள்.

*கல்வி சம்பந்தப்பட்ட முடிவுகளை தெளிவாகவும்,விரைவாகவும் எடுங்கள்.

*லஞ்சம் என்ற வார்த்தைக்கு முழுக்குப் போடுங்கள்.

*மீண்டுமொருமுறை பெருமழை வந்தால், என்ற பயத்துடன் தயாராகுங்கள்.

*ஊழலற்ற செயல்பாடுகளை ஆதரியுங்கள்.

*மேசை தட்டும் கலாச்சாரம் தவிர்த்து கலந்துரையாடுங்கள்.

*எதிர்க்கட்சிகள் ஒன்றும் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை,சட்டமன்றம் தாண்டியும் கைகுலுக்கிக்கொள்ளுங்கள்.

*அரசியல் என்பது புனிதமான மக்கள் பணி என்பதை மக்கள் உணரும் அளவில் இருக்கட்டும் உங்கள் சேவை.

*இலவசங்களைத் த்கவிர்க்கப்பாருங்கள்.

*விளக்குவைத்த கார்களில் ஏறிவிடுவதாலேயே உங்கள் தலையைச்சுற்றி கற்பனை செய்யும் ஒளிவட்டத்திலிருந்து மீளுங்கள்.

இதுவரை என்ன நடந்திருந்தாலும் பரவாயில்லை.
தமிழகம் எல்லாவற்றையும் தாங்கும்.

இனியேனும் வாக்களிக்கும் மக்களை மனதில் வையுங்கள்.

உங்கள் திட்டங்கள் யாவும் மக்களுக்காக மட்டும் இருக்கட்டும்.

ஊழலற்ற நிர்வாகத்தை உங்களால் தரமுடியும்.

இந்த ஆட்சிகாலத்தை மக்களுக்காகவே நடத்திவிட்டு.நெஞ்சை நிமிர்த்தி உட்கார்ந்தபடியே வாக்கு கேட்கலாம்..

மக்கள் இன்னொரு முறை காமராஜரை தோற்கடிக்க மாட்டார்கள்.

நீயென்ன சொல்வது? நாங்களென்ன கேட்பது எனில்...
நல்லது..

அடுத்தமுறை இன்னும் வெயில் அதிகமாய் இருக்கும்.விலைவாசியும் உயர்ந்திருக்கும்.

வாழ்த்துகள்.

அன்புடன்.
செல்வக்குமார்.

சனி, 14 மே, 2016

செய்வீங்களா....செய்வீங்களா

ஜாதகம் கொடுக்க வேண்டும்.
ஜாதிபலம் சொல்ல வேண்டும்..

ஒருநாள் சிறை சென்ற செய்தித்தாள்
இணைக்க வேண்டும்.

படித்ததாய் பட்டம் வேண்டும்.
படிகளுக்கும்
பணிதல் வேண்டும்.

வீதியின் ஓர் சேதிக்கும்
ஓடோடி விரைய வேண்டும்.

மாற்றுக்கட்சிக்கெல்லாம்
மறுப்பு சொல்லி
பேச வேண்டும்.

கூட்டணிக்கு போய்விடாமல்
சொந்த ஊரே கிடைக்க வேண்டும்.

மண்சோறு தின்ன வேண்டும்.
மயிர் மழித்து மகிழ வேண்டும்.

வட்டம் மாவட்டம்
மறுக்காமல் இருக்க வேண்டும்.

திட்டமிட்டு யார்கவிழ்ப்பார்
தெரிந்தாலும்
சிரிக்க வேண்டும்.

கூன் வளைந்து வணங்க வேண்டும்.
கும்பிட்டே உறங்க வேண்டும்.

தலைமைக்கும்
தனக்கும் சேர்த்து
விருப்பமனு
கொடுக்க வேண்டும்.

ஓட்டுனரோ
கூட்டுனரோ
உள்ளிருக்கும்
மனிதரென்றால்
உறவு சொல்லி பழக வேண்டும்.

ஒற்றறியும் திறனும் வேண்டும்.

செய்யாத செயலென்றால்
எதிர்க்கட்சி இழுக்க வேண்டும்.

செய்தித்தாள் திட்டிவிட்டால்
தீயிட்டுக்கொளுத்த வேண்டும்.

இணையத்தின் தொடர்பும் வேண்டும்.

முகம் சுழிக்கும் பகடிக்கும்
அகம் மகிழ்ந்து சிரிக்க வேண்டும்.

நள்ளிரவும் பேச வேண்டும்.
நாற்புறமும் பார்க்க வேண்டும்.

மாறுமொரு பட்டியலில்
பெயர் தங்கும் வரம் வேண்டும்.

நின்றுவிட்டால் அழவேண்டும்..
நிழல் கூட தொழல் வேண்டும்.

வீதிக்கட்சியையும்
விலை கொடுத்து வாங்க வேண்டும்..

வாக்கு விற்கும் விலையறிந்து பக்குவமாய் வாங்கவேண்டும்.

சாமி போகா வீதிக்கும்
சத்தியங்கள் தர வேண்டும்.

வெளியூரில் ஆளிருந்தால் விலை கொஞ்சம் அதிகமாகும்.

செத்தவர் ஓட்டுக்கும்
சிலநேரம் விலையிருக்கும்.

வாக்கெண்ணி முடியும் வரை வயிறெரியும் 
தாங்கவேண்டும்..

ஆள்வதற்கா.
எதிர்ப்பதற்கா,
மந்திரியா..

மனக்குரங்கை
கட்ட வேண்டும்.

நம்மில் ஒருவர் தான்
இத்தனையும்
செய்கிறார்.

நல்லவர்க்கு
வாக்களிக்கும்
ஒற்றை வேலை
விட்டுவிட்டு..

அழுது என்ன?

புலம்பி என்ன?