வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

மண்ணில் இந்த....




பொல்லாத
பேரழகி..
அழகென்றேன்
பொய்யென்றாள்..
கவிதை
சொன்னேன்
யாருக்கென்றாள்..
நிலவென்றேன்
தேயவோ
என்கிறாள்..
சிலையே
என்கிறேன்
திருடவோ
என்கிறாள்..
முத்தே
என்கிறேன்...
நீ
மூச்சடைக்க
பாரேன்
என்கிறாள்..
நிழல்
நீ
என்றால்
சுடும் கால்கள்
படுவதற்கோ
நானென்றாள்.
குயிலென்றேன்
நிறம்
ஒப்பிட்டு
கரைகிறாள்.
வானமென்றேன்
தூரத்தில்
வைப்பதாய்
தூற்றுகிறாள்..
புயலாய்
இருக்கும்
உன்
மொழியென்றேன்
கயல்விழி
கசிய
பேரழிவோ
என்னால்
என்றாள்.
இதயம்
இருக்குமிடம்
நானென்றேன்
மற்றதெல்லாம்
யாருக்கென
போருக்கு
கிளம்புகிறாள்..
விடிவிளக்கே
வாயென்றேன்
ஊதி
அணைக்கவோ
என
எரிந்து
விழுகிறாள்.
நட்சத்திரம்
நீ யென்கிறேன்
எண்ணிக்கை
தெரியாததில்
நானுமொன்றோ
அழுகிறாள்.
வெட்கம்
அழகென்றேன்..

மற்றவற்றில்
பேயாவென
பதறுகிறாள்.
என்ன
சொல்லினும்
இப்படிச்சொன்னால்
என்ன
செய்வேன் நான்
போடி
என்றேன்...
ஓடிவந்து
ஒட்டிக்கொண்டாள்..

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

ஒலிம்பிக்....

அன்பின் சக்திக்கு,

ஆற்றின் வழியெல்லாம் மணற்கொள்ளை நடத்திவிட்டு ஆகாயத்தாமரைகளும் ,
சீமைக்கருவேல் மரங்களும் அடைந்திருக்க ஆற்றுநீர் வரவில்லை என புலம்புவதற்கும்
ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கவில்லை என்பதற்கும் வேறுபாடில்லை.

கிரிக்கெட்டின் தாய்வீடு இங்கிலாந்தென்றால் பாட்டி வீடு நம் பாரதம்.
சதுரங்கம்,சடுகுடு என பல விளையாட்டுகளின் விதை இங்கே விளைந்தது தான்..

120 கோடி தாண்டிய மக்கள் பேறு..
அத்தனை மொழிகள்.
வெவ்வேறு கலாச்ச்சாரங்கள்..
வேற்றுமையில் ஒற்றுமை..

நான்காண்டுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் பெறவில்லை என்பதற்காக படும் பரிகாசங்கள் பதைக்க வைக்கிறது.

இத்தனை மனிதர்களில் வீரர்களில்லையா?
ஊழல் நிறைந்ததாய் போய்விட்டது விளையாட்டுத்துறை?

சின்னச்சின்ன நாடெல்லாம் பதக்கப்பட்டியலில் இருக்கும் போது வெங்கலத்திற்கும் விளங்காமல் போனேமே என்னும் போது வலிக்கத்தான் செய்கிறது..

சரி சக்தி...
நோயெல்லாம் முற்ற விட்டுவிட்டு மருத்துவமனையினை திட்டுவதால் என்ன பயன்.

பதக்கங்கள் பெறாமல் திரும்புவது நமக்குப் புதிதல்லவே..

புரிதல் இன்னும் இல்லாமல் இருப்பதே ஆதங்கம்.

விளையாட்டென்பது தொடர் பயிற்சியால் விளைவது.. பதக்கக்கனவுகள் இளமையிலேயே ஊட்டப்படவேண்டும்.

மண்ணில் புரண்டு விளையாடவேண்டிய வயதில் புத்தகமூட்டை சுமக்கவைத்து வேன்களுக்குள் அடைத்துவிட்டு பதக்கங்கள் வேண்டுமெனில் பறித்துக்கொண்டா வரமுடியும்.

வல்லரசு நாடுகளின் கல்விமுறையில் விளையாட்டுக்கென செய்யப்படும் வசதிகளை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.

சந்து பொந்துகளில் பள்ளிகளை கட்டிவிட்டு..
பள்ளியின் ஆரம்பக்காலங்களில் விளையாட்டு மைதானமாய் இருக்கும் திடல்களில் முளைத்துவிடுகிறது கட்டடங்கள்..

பள்ளிகளை விட்டுவிடலாம்..

வீட்டுமனைப்பிரிவுகளுக்கான ஒப்புதல் பெறும்போது விளையாட்டு மைதானம் ,
வழிபாட்டிற்கான இடமென விட்டால் தான் கிடைக்கும்..

மனசாட்சியுடன் சொல்லுங்கள்  வழிபாட்டு இடத்தில் ஆலயம் கட்டிய நாம் விளையாட்டு மைதானங்களை விட்டுவைத்தோமா?

பதக்கங்கள் ஒன்றும் நம்மை நிமிர்த்திவிடப்போவதில்லை.

அவர்கள் பதக்கம் பெறக்கூடாதென்பதும் என் தனிப்பட்ட ஆசைகூட.

உலகமெங்கும் பறந்து முகம்காட்டும் தலைமைக்கு இதைவிட பரிசளித்துவிட முடியும்.?

சஞ்சீவி மூலிகை தேடுவதும், ராமர் பாலத்தை போற்றுவதும் இருக்கட்டும். விளையாட்டுக்கும் கொஞ்சம் மனம் திரும்பட்டும்.

கணக்கற்ற மக்கள் கூட்டத்தில் ஊழல் நடப்பதும்,பரிந்துரைகள் நடப்பதும்,குழிபறிப்பதும் நினைத்தாலும் தவிர்க்க முடியாததாய் இருக்கிறது...

ஏமாற்றம் தவிர்க்க என்ன செய்யலாம்.?

மேற்படிப்புக்கு செல்லவேண்டுமெனில் கட்டாயமாய் ஒரு விளையாட்டில் சிறப்படைந்திருக்க
வேண்டுமென்ற விதிவைக்கலாம்.
சர்வதேச விதிகளை பின்பற்றலாம்.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் சென்று தலையை தொங்கப்போட்டு வரும் முன்பே ..

அந்தப்பிரிவுகளில் மற்ற தேசத்து வீரர்களின் தரம் ,மற்றும் கால அளவுகளின் பக்கத்திலேனும் வருபவர்களை மட்டுமே அனுப்பலாம்.

பத்துபேர் கலந்துகொள்ளும் போட்டியில் பத்தாவதாய் வரும் தகுதிமட்டுமே கொண்டவர்களை இங்கேயே இருந்து தொலைகாட்சியில் ஒலிம்பிக் பார்க்க சொல்லலாம்..

ஆகச்சிறந்த மாற்று யோசனையாய்..

அடுத்தமுறை ஒலிம்பிக்கிற்கு வீரர்களை அனுப்புவதற்குப் பதிலாய் நம் அரசியல்வாதிகளையும், விளையாட்டுத்துறை பெரியவர்களையும் மட்டும் அனுப்பலாம்...
கண்டிப்பாய் பலன் இருக்கும்..

ஒன்று விளையாட்டை மேம்படுத்த ஒருவழி...
அல்லது வேறெப்படி பயனடயலாம் என...

விடு சக்தி...

ஒலிம்பிக் சென்ற நம் வீரர்கள் பிரேசிலின் அழகினை கண்களில் நிரப்பி பத்திரமாக ஊர்வந்து சேரட்டும்...

அன்புடன்.
செல்வக்குமார்.

பால்....

பால்கார
வீடென அறியப்படும்..

மத்துகள் சுழல
மாடுகள்
உரச
குழலூதும்
கண்ணன்
பானையுருட்டி
படத்திலிருப்பான்
ஊதுபத்தி புகையில்.

சீம்பால்
கிடைக்குமென
சிறுவர்கள்
கூட்டமே
காத்திருக்கும்.

எப்போதும்
நெய்யுருக்கும்
முறுகலில்
காற்றும்
கனிந்திருக்கும்..

தலைமுறைகள்
மாற்றத்தில்
மாடுகளும்
மனிதர்களும்
வெளியேறிப்போனார்கள்.

இழுத்துக்கிடந்த
கிழவி
புதைத்து
இரண்டாம் நாள்..
பத்திரமாய்
எடுத்து
வைக்கிறார்கள்
பாக்கெட் பால்.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

பட்டிமன்ற தேவதைகள்..

நீங்கள்
பட்டிமன்றம்
முடிந்ததும்
கிளம்பிவிடுவீர்கள்..
அல்லது
பாதியில்
கிளம்பவும்
வாய்ப்பிருக்கிறது..

நேற்றைய
வடமாவட்ட
குக்கிராமமொன்றின்
கூழூற்றும்
நாளின்
இரவில்
பழையபாடலா?
புதியபாடலா?
தலைப்பில்
பேசிவிட்டு..

மோட்டலின்
ஒற்றைதோசையுடன்..
என்
வீட்டுவழி
கடந்த
பேருந்தில்...

வாசல்கொடியில்
காயவைத்த
உள்பாவாடை
சுருண்டு காய்கிறது..

இரவு
ஏழுமணிக்குள்
தூத்துக்குடி
அருகில்
கொடைவிழா...

வீட்டின்
முன்னேற்றம்
ஆண்களாலா?
பெண்களாலா?
பேசித்
தீர்க்கவேண்டும்
நேரத்தை...

தூக்கம் மறைத்து
உட்கார வேண்டும்
பிளாஸ்டிக்
சேரில்
தீர்ப்பு வரும்வரை..

ஆணெனப்படுபவர்
மூன்று முறை
தம்மடித்து
தாகம்
தீர்த்து வருவர்..

வாய்பிளக்கும்
கொட்டாவி
அடக்கி..

மாலையில்
வைத்த
மல்லிகை
சிதறாமல்
எதிரணி
கவனித்து..

சேலை
பறக்காமல்..

சீட்டியடிக்கும்
குடிமகன்
சிரிக்கவைத்து..

புரியாத
பாடல் சிலவும்,

புளித்துப்போன
நகைச்சுவையும் சொல்லி...

நடுவரைக்
கெஞ்சி,
நடத்துனரை
வாழ்த்தி

நள்ளிரவு நகர...
கைவரும்
கவர்பிரித்து
பேருந்துக்கென
பிரித்தது போக
பத்திரப்படுத்தி...

கூட்டமாய்
பஸ்ஸுக்கு
நிற்கையில்
கோழி
எழுந்துவிடும்...

பிள்ளையின்
படிப்பு
எப்படியிருக்கிறது?
அவர்
என்ன உண்டார்?

அரிசியுண்டா?
காயிருக்கிறதா?
பிள்ளை கேட்ட
பிரியாணி
இன்றேனும்
வாய்க்குமா?
மருத்துவர்
பார்க்கலாமா?

தூக்கம்
தொலைத்த
பரிசெனக்கிடைத்த
கண்களின்
கருப்புக்கு
என்ன செய்ய?

அலைபேசி
வழியே நடக்கும்
வாழ்க்கை..

அத்தியாய்
பூக்கும்
நட்புக்கள்..

கோடிகள்
புழங்கும்
நட்சத்திர
வாழ்க்கையில்லை...

முந்நூறில்
தொடங்கி
மூவாயிரம் செல்லும்
வாழ்வில்..
கிசுகிசுக்கள்
கொஞ்சமில்லை...

ஆள் அழகில்லை...
பாடும்போது
ஆடவில்லை...
சரியாவே
பேசவில்லை.
அவனோடு மட்டும்
பேசுகிறாய்...
இலக்கிய செறிவில்லை..
இன்னும்
எத்தனையோ..

சொல்லிவிட்டுப்
போங்கள்...
எங்கள்
கவலை
எங்களுக்கு..

பட்டிமன்ற
கலாரசிகப்
பெருமக்களே..

தலைப்புகள்,
நடுவர்கள்
மேடைகள்
மாறி
என்னவாகிப்
போகிறது..

மாறாதிருக்கும்
எங்கள்
வாழ்க்கை
வரமா?
சாபமா?

தீர்ப்பு சொல்லுங்கள்
தூக்கம் வருகிறது.












புதன், 3 ஆகஸ்ட், 2016

தடம் புரள்கிறதா தடம்?

அன்பின் சக்திக்கு,

எப்படியேனும் தமிழ்ச்சமூகத்தை நிமிர்த்திவிட விகடன் ஆரம்பித்திருக்கும் தடம் என்னும் இதழை நானும் தொடர்ந்து வாசிக்கிறேன்.

ஒவ்வொரு இதழிலும் வாசகனை சூடாக்கும் ஒரு காரியத்தை செய்துவிடுகின்றனர்.

ஒருவேளை இது அவர்களின் வியாபார உத்தியாகக்கூட இருக்கலாம்.

கடந்த இதழில் மனுசபுத்திரன் என்பவரை தேசியகவி ஆக்கக்கூறி அழுதிருந்தார் ஒரு  அறிவாளி.

அவர்களின் பேட்டிதான்..

ஆனால் அவர்கள் சொன்ன எல்லாவற்றையும் அப்படியே அச்சிடும் விகடனின் பார்வை புரியவில்லை.

மறுப்புகளும்,வெறுப்புகளும்,அதிகமாக தேடிப்போய் வாங்க வைத்துவிடும் விளம்பர தந்திரமாக இருக்குமோ என்ற ஐயம் வருகிறது.

இந்த இதழிலும் வழக்கம் போல ஜெயமோகனின் நேர்காணல்...

சக எழுத்தாளர்களை தன்னை நக்கீரனாய் நினைத்து...நனைத்து காயப்போட்டிருக்கிறார்.

அவர்களில் சிலர் எழுதுவது  எழுத்தே அல்லவாம்..
தமிழ்ச்செல்வன்,ஆதவன் தீட்சண்யா என சீண்டியிருக்கிறார்...

ஒரு எழுத்தாளனின் எழுத்து பிடிக்கவில்லை எனில் வார்த்தைகளில் வதைப்பது வன்முறை..

உங்கள் அளவுக்கு அவர்கள் எழுத்தாலும், திரையுலகாலும் சம்பாதித்திருக்க மாட்டார்கள் தான்...

அதுசரி...
ஜெயமோகன் அவர்களே

எழுத்தின் எண்ணிக்கையா எழுத்தாளனை கவுரவிக்கிறது?

ஒற்றை வரியில் எழுதிய

' இரவில்
வாங்கினோம்.
விடியவே இல்லை'

என
நின்று கொண்ட
அரங்கநாதனின் வேறு எந்த கவிதை நமக்குத்தெரியும்?

வெயிலோடு போய் என்ற கதை கவர்ச்சியில்லாதது தான்....கவுச்சியும் இல்லாதது அல்லவா?

ஆயிரம் மயிர்கள் காணக்கிடைத்தாலும் ஆதவன் தீட்சண்யாவின் மயிர்கள் மனசுக்குள் வளர்ந்து விட்டதே என்ன செய்ய?

நாலு பேருக்குள் கூட பேசக்கூடாத விசயமல்லவா ...நீங்கள் தடத்திற்கு அருளியது?

இந்த ஈரோட்டுக்கிழவனை இன்னும் எப்படியெல்லாம் சீரழிக்கப்போகிறார்களோ என்ற பச்சாதாபம் பிறக்கிறது.

90 தாண்டிய வயதிலும் மூத்திரப்பையோடு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பேசித்திரிந்த அந்த பெரியாரால் தான் இவ்வளவுக்கேனும் சுதந்திரம் வந்ததை மறந்துவிட்டா பேசுவது?

அவரின் நடத்தைகளில், வாழ்க்கையில் குறைகளை கண்டுபிடிக்கும் அறிவாளிகளே..கருத்துகளில் என்ன குறை கண்டீர்கள்?

வைக்கம் போராட்டம் பற்றிய வரலாற்று அறிவை ஊட்டுகிறார்.
எங்கோ ஒரு மாநிலத்தில் தானே என நில்லாமல் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு யார் போகச்சொன்னது பெரியாரை?

நீங்கள் சொல்வது போல அவர் பெரிய வீரரல்ல என்பது பாவம் காந்திக்கு புரிந்திருக்கவி்லையா?

ஈழப்போராட்டத்தை ஏதோ சிறிய கலவரம் போல் எளிதாக கடந்துபோகும் அவரின் வார்த்தைகள் வலிக்கிறது.

இலங்கையின் போராட்டம் அவர் சொல்வதுபோலவே என்றால் பதுங்கு குழிகளுக்குள் மறைந்தே போன குழந்தைகளை...மார்பகம் அறுபட்டு உயிர்க்குழிக்குள் சொருகிய துவக்குக்கட்டைகளை என்ன சொல்வது...இசைப்பிரியா என்ன செய்தார்?
பாலச்சந்திரன் செய்த பாவம் என்ன...

வேண்டாம் அவர்களைப் புதைத்த இடங்களிலும் பாஸ்பரஸ் குண்டுகள் வீசாதீர்கள்?

பிராமண எதிர்ப்பிற்கு நீங்கள் காணும் புதிய கோணம் ...ஆச்சர்யம்..

ஆனாலும்
அறமெழுதிய மதிப்பிற்குரிய எழுத்தாளர்...

தன் மதிப்பான நேரத்தை மகாபாரதக்கதைகள் எழுதி மக்களுக்கு ஞானம் சேர்க்கலாம்..
திரைப்படங்களுக்கு அறிவான வசனம் தீட்டலாம்...
அவர் விருப்பம் போலவே நாள் கணக்கில் இசை பருகலாம்..

ஆம் சக்தி...
அவர் பேசுவதை விட எழுதுவதில் நன்மை அதிகம்....

நல்ல எழுத்தாளரின் எழுத்து மட்டும் பேசினால் போதாதா?

அன்புடன்.
செல்வக்குமார்.










ஞாயிறு, 31 ஜூலை, 2016

அப்பா....




கருவறை
தாங்கியள்
தாயெனில்
கருவறை விட்டு
நம்
விரல்பிடித்த
சாமிகள்...
அப்பாக்கள்.

அம்மாக்கள்
முத்தங்கள்,
அழுகையென
காட்டிவிடுவார்கள்
கருணையை...
அப்பாக்களால்
எப்போதும்
அது
முடியாது...

இடுப்பில்
ஏந்தி
கற்பனைக்கதை
சொல்லுவாள்
அம்மா...
அதில்
அன்பிருக்கும்...

தோள்களில்
சுமந்து
தான்
காணா
உலகையும்
கண்ணுக்குக்
காட்டுவார்
அப்பா...
அதில்
எல்லாம்
இருக்கும்...

பிஞ்சின்
பருவக்கால்கள்
எட்டி
உதைக்கும் வேளையெல்லாம்
நீவிக்கொடுத்து..
கொழுசுக்கு
ஓடுவார்
அப்பா....

விரல்கள்
பிடித்து
நடக்கையில்
தார்ச்சாலை
பூப்பூக்கும்.

அப்பாக்கள்
எப்போதும்
வெளிக்காட்டாதவர்கள்.

தூக்கும்
மூட்டைச் சுமைகளில்,
இழுக்கும்
வண்டியின்
சக்கரச்
சுற்றுகளில்..
அடிமையாய்..
ஊழியனாய்..
நகரும்
அவன் நாட்களில்
ஒளிர்வதெல்லாம்
பிள்ளைகளின்
எதிர்காலம்..

பிள்ளையோ
பையனோ..
வயிறுகிழித்து
பெற்றுப்போட்டதில்
தொடங்கும்
சோதனை...

சுணங்கும்
குழந்தைக்குப்
பதறி...
சொட்டு
மருந்து
தொடங்கி..
விட்டுவரும்
காய்ச்சலுக்கு
கலங்கி..

பள்ளியென..
கல்வியென..
எல்லாம்
முடிந்த பின்..
அம்மாக்கள்
படமாகிறார்கள்..
அப்பாக்கள்
பாடமாகிறார்கள்..

ஆரம்பத்தில்
பிடிக்கும்
அப்பாக்கள்..
பருவத்தில்
பிடிக்காமல்
போவார்கள்.
செத்துப்போனபின்
புரியும்
தெய்வங்கள்.

அப்பாக்களிடம்
அடிவாங்கியவர்கள்
ஆசீர்வதிக்கப்
பட்டவர்கள்..
தெய்வத்தின்
தீண்டலது...

அடிவாங்கி
அழுத பிள்ளை ஓயும்..
அப்பாக்களின்
அழுகை
ஒருபோதும்
ஓய்வதில்லை...

தாயிற் சிறந்த
கோவிலில்லை
தான்...
அப்பாவெனும்
ஆண்டவன்
உறைந்தால் தான்
அது
ஆலயம்..

பெற்ற பெண்
மணமுடித்து
போகும்
நேரம்
அழுகாத
அப்பாக்கள்
எங்குமில்லை.

அப்பாக்கள்
இல்லையெனில்
ஆயிரம்
தொல்லை..

வியாபாரம்
நடக்குமெனில்
விபச்சாரத்துக்கும்
விளம்பரக்காலங்கள்..

கபாலிகர்களின்
தோட்டத்துள்
அப்பா
என்னும்
குறிஞ்சி
பூத்திருக்கிறது..

ராட்சஷர்கள்
உலவும்
திரைக்காட்டில்
ஒரு
புள்ளிமானாய்
வெளிவந்எதிர்க்கிறது
அப்பா...

அதன்
கதைகளில்
ஆக்கங்களில்
நோக்கங்களை
சொன்ன
விதங்களில்
ஆயிரம்
கருத்துக்கள்
இருக்கலாம்...
ஆனால்
அப்பா
என்னும்
தலைப்புக்கே
ஆயிரம்
முத்தங்கள்
கொடுக்கலாம்..

ஒரு
சண்டையில்லை..
துப்பாக்கிகள்
சீறவில்லை..
நாயகியின்
தொப்புள்
காணக்
கிடைக்கவில்லை...
போகாத
ஒரு நாடு
போய்
பாட்டொன்றும்
எடுக்கவில்லை..

நெய்வேலிச்
சுரங்கத்தில்
நிலக்கரி
எடுப்பார்கள்..
ஒரு
திரைப்படம்
எடுத்திருக்கிறார்
சமுத்திரக்கனி..

ஒரு
கட்டுமரம்
எடுத்துப்போன
சமுத்திரத்தில்
கப்பலளவு
மீன்
பிடித்திருக்கிறார்...
கட்டுமரம்
கரைசேர்ந்ததா
தெரியாது..
ஆயினும்
பிடித்த மீன்கள்
துடிப்பானவை..

நல்ல தமிழ்
பேசுவோர்
காமெடியானவன்
என்ற
உலகத்தில்
லட்சியங்களோடு
நடமாடுபவன்
கிறுக்கனாய்த்தான்
தெரிவார்கள்..

மிகைப்படுத்தப்பட்ட
லட்சியங்கள்..
பிள்ளைப்பேற்றுக்கு
மருத்துவமனை
போகாததை..
லட்சியம்
என்பதா?
அலட்சியம்
என்பதா..

மகனுகாய்
மனைவியை
பிரிதல்..
புரிதல்
இல்லாத
மனிதனைத்தான்
காட்டுகிறது..

எப்படியும்
பெரியாளாக
ஒருத்தரும்..
இப்படியே
இருக்கலாமென
ஒருவரும்
சமூகத்தின்
சில
சாட்சிகளாய்
உலவியிருக்கிறார்கள்..

பள்ளிகள்
சொல்லும்
பாடங்கள்..

பருவத்தில்
வரும்
கோளாறுகள்..

சாதிக்கத்தூண்டும்
ஆறுதல்கள்..
போதிக்கத்தான்
செய்கிறது..

நெஞ்சு
நிமிர்த்தி
போராடும் போது
இருக்கையின்
நுனிக்கு
வருகிறோம்..
விலை
அதிகமாய்
கொடுத்து
ஒரு
நுழவுச்சீட்டு
வாங்கியதை
எப்படி
மறப்பது..
மறுப்பது?

சினிமாத்தனங்களில்
நிரம்பித்தளும்புகிறார்
அப்பா..

பிள்ளை
காணாமல்
போவதும்..
வியர்வையும்
கண்ணீரும்
வழிய அலைவதும்
சினிமாவுக்காய்
சித்தரித்த
சிருங்காரம்.

திருநங்கை
காத்து
அழைத்துவந்தது
கருணையின்
ஸ்டிக்கர்
ஒட்டிய விளம்பரம்.

நல்ல
மாமனார்..
மோசமான
மைத்துனர்கள்
வழக்கமான பாதை.

பள்ளிப்பருவத்தில்
வரும்
பாலின
ஈர்ப்பை
இன்னும்
எளிதாய்
சமாளித்திருக்கலாம்.

பிள்ளை
கின்னஸ்
என்பதெல்லாம்
சினிமாவின்
மொழிதானன்றி
வேறில்லை..

பள்ளிகள்
பணம்
பறிப்பதும்
அடைகாத்து
மதிப்பெண்கள்
பொறிப்பதும்..
புதிதல்ல..
இன்னும்
தீ
தெறிக்காத
வருத்தம்
தான்..

பிள்ளைகள்
கூடி
கல்யாணம்
சமைப்பதும்..
வயசுக்கும்
உருவத்துக்கும்
மீறிய
செயல்களும்
அப்பாவுக்கு
அழகாயில்லை..

பாத்திரப்படைப்புகள்
நல்ல
முயற்சி...

தம்பி ராமையா
எம்பிக்குதிப்பது
ஈர்ப்பதாய்
இல்லை..

வழக்கமான
இசை...
பழக்கமான
பாதை..
அறிவியலின்
அற்புதமாய்
காட்சிப்படுத்துதலில்
புதுமை..

அப்பா
படத்தைப்பற்றிய
உங்கள்
பார்வைகளுக்கு
நான்
எதிரியில்லை..

சமுத்திரக்கனியோடு
எனக்கு
சண்டையுமில்லை.

ஆயிரத்தெட்டு
பிரச்சனைகளில்
பணத்தைத்தவிர
மூன்று
மணி
நேரத்தையும்
தொலைத்த
என்
பார்வையில்
என்ன
பட்டதோ
அதையே
பதிவு
செய்கிறேன்..

அப்பா
என்னும்
அமுதத்தை
திரைப்படமென்னும்
அரைகுறைக்கலசத்தில்
அழுத்தித்
திணித்திருக்கிறார்கள்..
அமுதமே
ஆனாலும்
அழுக்கான
பாத்திரம்
உறுத்தத்தான்
செய்கிறது..

ஒரு
ஆவணப்படமாய்
வந்திருக்க
வேண்டியது...
ஆணவக்கொலையில்
முடிந்திருக்கிறது..

நல்ல
கதை
நறுக்கென்ற
வசனங்கள்..
பிரமிக்கும்
காட்சிகள்..
பொட்டிலடிக்கும்
உண்மைகள்..
நேர்மையான
உழைப்பு..
தனித்த பார்வை.
எல்லாம்
சரிதான்..

என்ன செய்ய
எல்லாமே
வலியத்திணித்த
நடிப்பாய்
இருக்கிறதே..

இப்படியாக....
அழகாய்
இருக்கலாம்.
அறிவாய்
இருக்கலாம்.

என்
அப்பாவை
பிடித்தது போல்
எந்த
அப்பாவும்
எனக்குப்
பிடிக்கவில்லை.



































சனி, 30 ஜூலை, 2016

தேடுங்கள்...கிடைக்கலாம்..

அறுபதாயிரம்
மனைவியர்
அடைத்துக்கிடந்த
அந்தப்புரத்தை..

ஒற்றை நரைமுடி
உதிர்ந்த
கூடத்தை...

பிள்ளைப்பேறு தரும்
பாயசத்தின்
சமையற்குறிப்பை..

கூனியின்
முதுகடித்த
சிறு
கவண் கல்லை..

தடாகை
கொன்ற
தவமுனிவன்
யாகசாலையை..

அகலிகை
கல்லாய்
காத்துக்கிடந்த
கட்டாந்தரையை..

மகனுக்கு
ஆட்சி கேட்டதால்
காலமெல்லாம்
காயப்பட்ட
கைகேயி
எரித்தோ
புதைத்தோ
விடுதலையான
புனித பூமியை..

உறங்கா விழிகள்
இலக்குவனுக்கெனில்
விடியா
இரவுக்குள்
ஊர்மிளையின்
சோகத்தை..

மூக்கறுத்த
கத்தியின்
துருப்பிடித்த பாகத்தை..

வானரம்
அழித்த
மாநகரின்
மிச்சத்தை..

ஜானகி
தீக்குளித்த
நெருப்பின்
மிச்சத்தை...

இராவணன்
காத்த
காதலின்
உச்சத்தை...

காகுத்தன்
தொலைத்த
வாலியின்
வன்கொலைக்களத்தை

காலக்கதையின்
மூலத்தை
தேடும்
விஞ்ஞானப்
புலிகளே...

விமானம்
தொலைந்து
வாரங்கள்
கடந்தது...

சின்ன பாகமும்
சிக்கவில்லை
என்பீர்கள்..

முலிகை
தேடுதல்...
நல்லது மக்களுக்கு..

சேர்த்தே
தேடுங்கள்...

அந்த
செருப்புகளும்
தேவை தான்..