வியாழன், 15 மார்ச், 2018

இடைத்தேர்தலில் மோடிக்கு வெற்றி...

அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில்

மனக்குரங்கு பல சந்தேகங்களை கீறுகிறது...

நம்ப மறுத்தாலும் ஆளும் கட்சி இன்றைய இந்தியாவின் மற்ற கட்சிகளை விட கட்டமைப்பும்,
சரியோ தவறோ ஒரு இலக்கை நோக்கி சீரான செயல்களை செய்வதில் வல்லமை மிக்கது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்...

ஒருமுறை ஆளூர் ஷாநவாஸ் சொன்னதுபோல் நாம் நமக்குள் விவாதங்கள் செய்துகொண்டிருந்த போது அவர்கள் சமூகத்துள் ஊடோடி விட்டார்கள்...
மக்களோடு மிக இயல்பாக கலந்துவிட முடிவு செய்துவிட்டார்கள்.

எடுத்துக்கொண்ட லட்சியத்துக்காக எந்தவித சமரசமும் செய்யாமல் எல்லாவித முயற்சிகளையும் செய்வதை நாம் பலமுறை பார்த்தும் இருக்கிறோம்.
மூன்றாமிடத்தில் இருக்கும் மாநிலங்களில் கூட ஆட்சி அமைப்பதை விடவா சாதுர்யம் இருக்கப்போகிறது?

பலவருடங்களில் வாக்கு சதவீதம் புள்ளிகளின் அளவே இல்லாத திரிபுராவையும் வென்றெடுக்க வெறும் அமைதியான ஜனநாயக முறையிலான தேர்தல் என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்கள் எனில் இந்த பதிவை இந்த இடத்திலேயே நீங்கள் மூடிவிடலாம்..

வாக்காளர்களின் மூளை நரம்புகளைக்கூட கணிக்கும் அளவிற்கு சாத்தியக்கூறுகள் அவர்களிடம் உண்டு.
எந்த பிரச்சனையை எதைக்கிளப்பி மறைக்கலாம் என்பதை நம்மிலும் அவர்கள் அறிவார்கள்...

ஒற்றை தேசம் ஒற்றை மதம் என்ற நெ(கொ)டுங்கனவில் இருக்கும் அவர்கள் மிக எளிதாக தோற்றுவிட மாட்டார்கள்.
மாநிலத்தேர்தல்களில் எப்படியேனும் வென்றுவிடும் அவர்கள் இடைத்தேர்தல்களில் தோற்பதிலும்..
நம்புங்கள்.. திட்டங்கள் இருக்கும்.
சில நாள்களின் முன் பார்த்த மோடி அத்வானி சம்பத்தப்பட்ட காணொளி ஒன்று போதாதா அவர்களின் அரசியல் புரிய?
ராணா அய்யூப் எழுதிய குஜராத் பற்றிய நூலிலேயே தொடங்கிவிடுகிறது அவர்களின் திட்டங்கள்.
ஏகப்பட்ட செலவுகளாலும் கனவுகளாலும் கட்டப்பட்டது அவரின் தலைமைத்திட்டங்கள்.
ஏற்றிய ஏணியை மறக்கும் அவர் எதிர்காலப்போட்டி என கருதும் அல்லது முன்னெடுக்கப்படும் இன்னொருவரை எப்படி வளரவிடுவார்.?
ராணா அய்யூப்பில் படித்த நினைவு..
என்றோ ஒருநாள் அவரிடம் நாட்டின் தலைமை வேண்டுமா அல்லது உங்கள் கொள்கை வேண்டுமா என்றால் மிக நேர்மையாக அவர் தலைமையை தேர்ந்தெடுப்பார்..

ஆக...இந்த தோல்வி பா.ஜ.க வின் தோல்வி என நாம் மகிழ்ந்தாலும் அது மோடியின் வெற்றி தான்..
சாதாரண இந்த இடைத்தேர்தலின் தோல்வி யோகிக்குதான் பாவம்..மாநிலம் தாண்டி முயற்சிக்க முடியாத அயற்சியை கொடுத்திருக்கும்..

என்னடா..இவன் நமது மகிழ்ச்சியை கெடுக்கின்றானே..
இவனுக்கு இதில் ஒரு சந்தோஷமும் இல்லையா எனக் கேட்டால் ..எனக்கும் இருக்கிறது..
எதிரும் புதிருமான மாநிலக்கட்சிகளை கொஞ்சமேனும் இணக்கமாய்ப் போக வைத்திருக்கிறது..
இங்கேயே பாருங்களேன் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது...
தொலைபேசியில் பேசிக்கொள்கிறார்கள்..
சந்தித்துக்கொள்கிறார்கள்..
பேருந்துக்கட்டண உயர்வுபற்றிய போராட்டத்தை மறந்திருக்கிறார்கள்..
இதற்காகவேணும் மகிழ்ச்சி அடையத்தான் வேண்டும்..ம்ம்ம்



வெள்ளி, 9 மார்ச், 2018

ரசம்...


ஒற்றைத்தக்காளி
ஒரு சட்டி நிரம்பும்
ஆதி நாள்களில்
ரசமென்ற
பெயரில்..

குன்னிய
சேவலொன்று
கொதிக்கையில்
ரசமே
சூப்பென
உருக்கொள்ளும்..

சட்டியோ
பானையோ
நிரம்பாத
சமையல்
அம்மாவுக்கு
தெரியாது..

புழு நீக்கிய
கூறுகளின் காயோ...
பூச்சியடித்து ஒடித்த
மரத்தின் கீரையோ
எண்மரின்
வயிறுகள்
நிரம்பியாக கட்டாயம்.

அகப்பைகளில்
அமைந்த கண்கள்
கரண்டிகளில்
காணக்கிடைப்பதில்லை..

மேசைக்கரண்டிகள்..
சோற்றுக்கும்
கறிக்கும்
குடிமாறிய
குக்கர் யுகத்தில்,

சூடுசெய்த
சிறுகுவளை ரசத்தின்
ஆழத்தில்
தெரிகிறது...

வாழ்க்கைச் சக்கைகள்..













வியாழன், 8 மார்ச், 2018

நீ நதிபோல ஓடிக்கொண்டிரு...

விண்மீன்களின்
பள்ளிக்கூடத்தில்
இப்படித்தான்
சொல்லிக்கொடுப்பார்கள்..
பூமியின்
பரப்பில்
பகலிலும்
மின்னுவது
பெண்கள் ..

நதிகளின்
மாநாட்டில்
நன்றித்தீர்மானம்..
அவைகளுக்கு
பெண்களின்
பெயர்
சூட்டியமைக்கு..

கடவுள்கள்
கவலைப்படுவார்கள்
அம்மாக்களை
படைத்த
பின்னே
மனிதன்
கண்டுகொள்வதில்லை..

பூக்களின்
சபையில்
பெருத்த
சந்தேகம்...
வாசம்
வந்தது
பூவையர்
தொட்டதாலா..
பூஜையில்
வைப்பதாலா?

உலகின்
உன்னதம்
என்னென்ன
இருப்பினும்
பெண்ணுக்குப்
பின் தான்
வரிசையில்
நிற்கும்...

பெண்களின்
தினத்தில்
நான்
சொல்லும்
வாழ்த்துகள்
முன்னிலை
வகிக்கும்..




























திங்கள், 5 மார்ச், 2018

கவிஞன் யானோர்...

இலக்கிய
அமைப்பொன்று
நடாத்தும்
கவிதைப்போட்டியின்
முதல்பரிசு
ஆயிரம்
உரூபாயாம்.

முகநூல்
குழுமமொன்று
முடிவுசொல்லுமுன்
போடக்கூடாதென
இறுபத்து ஐந்து
வரிகளில்
மரபோ
புதுசோ
கவிதையை
நள்ளிரவுக்குள்
அனுப்பி
தேர்வானால்...
போட்டோஷாப்பில்
புகைப்படத்துடன்
வாழ்த்துமாம்..

செத்துப்போன
படைப்பாளியின்
சீமையிலிருக்கும்
பிள்ளைகள்
கருமாதிச் செலவை
கவிதைப்போட்டி
நடத்தி
கழிப்பதுமுண்டு..

சித்திரை
தொடங்கி
பங்குனி
வரைக்கும்
தமிழாய்ந்த
அமைப்புகளின்
பெயர்கள்
இரண்டு
படிகளோடு
மார்பளவு
புகைப்படமும்
அனுப்பச்சொல்கிறது..

பி.டி.எப்
அமைப்பில்
எழுத்துருப்
பெயரோடு
போட்டிக்கழைப்பார்கள்
இணையம்
சார்ந்த
பாரிவள்ளல்கள்...

பணமும்
பதிவும்
போடும்
பத்திரிக்கைகளில்
எடிட்டரின்
சொந்த
மின்னஞ்சல்
முகவரி
எல்லோருக்கும்
கிடைப்பதில்லை..

சிற்றிதழ்
தொடங்கி
சிங்கை,
இலங்கை
மலேய
நாடுவரை
அறிவிக்கும்..
போட்டிகளை
அவதானிக்க
வேண்டும்..

தொகுப்பென்று
ஒன்றுபோட
கவிதையைக்காட்டிலும்
தலைப்பிற்குத்தான்
தகறாறுகள்.

செருப்புகள்
தேய்ந்தாலும்
தேறாது,
வாழ்த்துரைக்கென
வல்லிய
கவிஞனுக்கு
வைத்திட்ட
வந்தனங்கள்..

கண்ணீர் அஞ்சலி
மட்டும் போடும்
பத்திரிக்கை முதலாய்..
கையெழுத்தில் வரும்
ஈறாய்
இரண்டிரண்டு
அனுப்பினாலும்..
இதழின்
கடைசி
மூலையில்
வந்து சேர்ந்தது
என்ற
வார்த்தையும்
வருடம் தாண்டி
வந்தால் நிச்சயம்..

சிறப்புப்பரிசென்ற
பரிசு
வாங்க
சீக்கிரமே
கிளம்பிப்போனால்
கிடைப்பதெல்லாம்
முனை நீட்டிய
ஷீல்டொன்றும்
மினுமினுவென
சால்வையொன்றும்..

அச்சச்சோ
கவிஞனென
அச்சத்தால்
கடப்பார்கள்...

கவிதை எழுதி
தகுதியேதும்
உயரவில்லை
வீட்டுக்குள்..
வீதியன்றி
என்ன வழி...
விழி பிதுங்கித்
திரிகின்றோம்..
தெரியுமோ

எங்கள் வலி??










































திங்கள், 19 பிப்ரவரி, 2018

மூக்குத்தி காசி-(மனிதம்)

அந்த மீசைக்காரரை பார்க்கும்போதெல்லாம் நான் பின்வாங்கிவிடுவேன்..
அது அச்சமோ அல்லது கூச்சமோ காரணமாய் இருக்கலாம்..
ஸ்வர்ணலதாவின் மரணத்திற்காய் அழுத கதையை ஸ்டாலின் சரவணன் வழி கேள்விப்பட்டபோது மனசு கொஞ்சம் இளக்கமானது..

தன் படைப்பொன்றிற்காய் சொந்த ஊரிலிருந்து குடிபெயர்ந்து  வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சக மனிதனின் சோகம் இத்தனை வலியானதாய் இருக்குமென்பதை நான் இப்போதுதான் உணர்கிறேன்...

மூக்குத்தி காசி(முப்பாலி) என்னும் இந்த நூலையும் அவரிடம் கடனுக்காய் நேற்று முன்னிரவில் பெற்றதில் இருந்து பேருந்திலும் இதோ வாசித்து முடித்த இந்த நிமிடம் வரை என்னை ஆட்டுவிக்கும் வார்த்தைகளை நான் இப்படி இறக்கிவைக்கவில்லை எனில் ஒருவேளை எனக்கும் பால் கட்டிப்போகும் அவஸ்தை நேரிடலாம்...

சின்ன சின்ன கதைகளா?
நாவலா?
இல்லை.. முருகேசன் அவரின் கனவின் அவாக்களை எழுத்தின் வழி சூடாற்றுகிறாரா?
56" இஞ்ச் அகலங்களால் படும் அவலங்களை ...டயர் நக்கி மங்குனிகளை கிழித்தெறிந்து விடத்துடிக்கும் சாதாரண இயலாத ஒரு மனிதனின் மனக்குமுறல்களை மனம்கடத்தி இருக்கிறாரா?
எல்லாக்கேள்விகளுக்கும் பதிலாய் ஆம் எனில்..இதனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்...

ஆதவன் தீட்சண்யாவின் அட்டகாசமான முன்னுரை..
நூலின் பிரதான வாசலாய் முருகேசனின் தன்னுரை..
புலம்பெயர் மனிதனின்- மீன்முள் மாட்டிய தொண்டையாய் நினைவு இடறல்கள்....

பாத்திரங்களின் பெயர்கள் அத்தனைப் பொருத்தமெனில்...
வார்த்திருக்கும் வேலை தேனீர்க்கடை!!..உங்களுக்கு தேனீர்க்கடைகள் அவ்வளவாய் மறக்கவியலா நாள்களில் அதனையே எடுத்திருப்பதில் உள்குத்து இருக்க வாய்ப்பில்லை..எல்லாம் முகத்துக்கு நேரான வெளிக்குத்துகள் தான்...

நிந்தையூரின் தேனீர்க்கடையில் எச்சில் கிளாஸ் கழுவியும் , டீ போட்டும் வாழும் எளிய மனிதன் சின்னதாய் ஒரு கூலி உயர்வுக்காய் அவமானப்படுவதும்,தன் அறச்சீற்றத்தை கற்களாய் மாற்றி எறிவதும்..சாதியம் தலைவிரித்தாடும் இயல்பான கிராமங்களின் தோற்றத்தை அப்படியே வரைந்து காட்டியிருப்பதும்..

கரகமாட வந்த திலகவதி தெய்வமாய் தெரிவதாய் முடியும் முதல் அத்தியாயம்..
காசி என்னும் நாயகனின் பார்வையை நமக்குள்ளும் நகர்த்தும் லாவகம்..

பக்கங்கள் நகர்வது தெரியாத அழகில் நவீனக்கவிஞனொருவனிடம் நாயகன் படும் அவஸ்தைகள் அத்தனை பகடி..
வளர்ப்பு நாயின் உணவுக்காய் வங்கிக்கணக்கு என்னோடு இணையத்தில் பிச்சை எடுத்த எவனோ ஒருவனின் முகம் எனக்கு வந்தது...நீங்கள் வாசிப்பீர்களெனில் உங்களுக்கும் வரலாம்...

எளிய வாசகனின் அன்பை ஆராதிக்கத்தெரியாத மூடன் எப்படி எழுத்தாளனாய் மிளிரக்கூடும்?

ஒருநாள் முதல்வன் போல்..
காசி, ஒருநாள் நீதிபதியாகி பகைமுடிக்கும் பகுதியில் ஓடிப்போய் அணைத்துக்கொள்ளத்தூண்டும் அன்பு..

இரந்து குடிக்கும் நாய்கள் இரண்டு..அன்பில் சுரக்கும் முலைக்காம்போடு கசக்கி தொடைகளில் உதிரம் வழிய நீதி கேட்டு போகுமிடங்களில் எல்லாம் மிதி வாங்குகையில் வாசிக்கும் எல்லோரும் வலிதான்....

மூக்குத்திக்காசி யாரென நீங்கள் அலைந்து தேடவேண்டிய அவசியமிருக்காது..
கேள்வி கேட்கத்தெரிந்த,
கொஞ்சமாய் ,
சுயமாய் சிந்திக்கத்தெரிந்த,
உள்ளொன்று வைக்கத்தெரியாமல் முகத்துக்கு நேரே துப்பி விடுகின்ற ஆண்மையுள்ள எல்லோரும் மூக்குத்திக்காசிதான்..

தாயே தாயே என அழுது பாடிய பட்டினத்தார்...
பெண்ணையும்,அவள் அவயங்களை புண்ணையும் விட விடக் கேவலமாய்ப் பாடியதை வார்த்தைச்சவுக்குகளால் வீசும்போது கழன்று விழுகிறது பட்டினத்தானின் ஒட்டுக்கோவணமும்..ஒட்டிக்கொண்டிருந்த அவர்மீதான  அனுதாபமும்..
பட்டினத்தார் மட்டுமல்ல நண்பர்களே!
விவேகானந்தரையும் விட்டுவைக்கவில்லை..
மூக்குத்திக்காசி அதனை நியாயப்படுத்தி இருப்பதை என்னால் மறுக்கவும் முடியவில்லை...

இந்நூலுக்காய் எடுத்துக்கொண்டிருக்கும் தரவுகள் ,சம்பவங்கள்,
சாட்சிகளின் வலிகள்,உழைப்பின் தீவிரம் ஒவ்வொரு பக்கத்திலும் பளிச்சிடுகிறது.

முகநூலில் வழியும் சாதியச்சாக்கடையின் முடைநாற்றம் அயலக கணினிப்பொறியாளனுக்குள்ளும் ஓடும் அவலம்...
அவலம் தான்...

ரூபாய் நோட்டுகளின் மதிப்பிழப்பை மூச்சுக்காற்றின் வழி சொல்லியிருப்பது விந்தை...
ஆயினும் அதில் அண்ணார் ஒருவரின் "கோட்" வரை நுழைந்திருக்கும் முருகேசனின் பேனா..அருமை...

ஹிட்லருக்கும் தனக்கும் ஒற்றுமை இருப்பதாய் பிதற்றும் ஒருவனின் கற்பனையில் கடைசி வரியில் தெறிக்கிறது..
ரகசியம்...

என்.ஜி.ஓக்களின் தந்திரங்கள்,பின்னிருக்கும் மந்திரங்கள்..இனிப்பு தடவி வரும் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் ஆலகாலங்கள் என ஏகப்பட்ட இருட்டுகளை வெளிச்சப்பொட்டிட்டு இருக்கும் பகுதிகள்...

ரயிலின் சங்கிலி பிடித்திழுத்து பாலூட்டும் ஒரு பெண்ணின் தாய்மைக்கு தரும் மனிதம்..போபாலின் கோர முகத்தை சொல்லும் வேளையில் மூச்சுமுட்டுகிறது..
சின்ன குழந்தை அக்பருக்கு பாலூட்டும் தாய்மையில் வீசும் வாசம்....ஆசம்...

நறுக்கி எறிய எத்தனை முயற்சிகள்..
ஆயத்தங்களுடனும் ,
ஆயுதங்களுடனும் காசி அறுத்த ஆண்குறி குப்பைக்குள் போவதை அத்தனை மகிழ்ச்சியுடன் வாசிக்கிறேன்..

நிந்தையூரில் தொடங்கி அந்த ஊரிலேயே ஆற்றின் மணல்வெளில் முடியும் நூலில் நான் மௌனமாய் வெளியேறுகிறேன்..

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கனவுகள் உண்டு.
ஒரு சாமான்யனாய் எனக்குள்ளும் இந்த சமூக அவலங்களை, சாதிய,அரசியல் கொள்ளைகளைக்காணும் போதெல்லாம் உறக்கம் வராமல் புரளும் வேளைகளில் எண்ணெய்ச்சட்டிகளில் புரட்டி எடுப்பதுண்டு..
ஆயினும் அவைகளை அப்படியே எழுதும் துணிச்சல் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை..
புலியூர் முருகேசனுக்கு அது இயல்பாகவே வாய்த்திருக்கிறது...

மடங்கள் செய்யும் மடத்தனத்திற்கு அதன் முதலாளிகள் ஒரு காரணமெனில் ஆட்டுமந்தைகளாய் கைகளில் பட்டைகட்டிக்கொண்டு உண்டியலில் காசைப்போடும் நாமும் ஒரு காரணம் தான் என்பதை யார் மறுக்கக்கூடும்..

எழுத்தாளன் கிடைக்கும் "சைக்கிள் கேப்" களிலெல்லாம் அடித்து துவைத்திருப்பதன் கோபம் புரிகிறது..
ஆயினும் பல இடங்களில் ஏதோ ஒரு பிரச்சார நெடி இருப்பது சிறிய உறுத்தலாகவே எனக்குப் படுகிறது..

இவை கதைகளா? சம்பவங்களின் நீட்சியா என்ற எந்த ஒரு வாய்ப்பும் கொடுத்தாத எழுத்தாளனின் தப்பிக்கும் மனோபாவம்
நினைத்ததை எல்லாம் எழுதிவிடத்துடிக்கும் வாய்ப்பை தந்திருக்கிறது..

மெல்லிய நகைச்சுவை உணர்வைத்தூண்டும் பல சொல்லாடல்கள்...

வரும் காலங்களில் ஸ்வைப்பிங் மிஷினாய் புழங்கப்போகிற இடம்,
நிந்தையூரின் டூரிங் திரையரங்கில் காட்டப்படும் பிட் காட்சிக்காய் அமைதியாய் இருக்கும் ரசிகர்கூட்டம்,
டாஸ்மாக் கடைகளின் சரக்கு வகைகள்,..இன்னபிறவென பல சொல்லாடல்கள் நேர்த்தியும்...இயல்புமாய்...

மொத்தத்தில் இந்த நூலை வாசித்து முடித்தவுடன் நான் பெருமூச்சுடன் இருக்கிறேன்...

இந்துக்கள் பொதுவாய் வாழ்வின் ஒருமுறை காசிக்குப்போவதை பெருமையும் கடைமையும் என்பார்கள்...
புலியூர் முருகேசன் தெரிந்தோ தெரியாமலோ நமக்குள்ளே இருக்கும் காசியே புனிதமும் ,மனிதமுமானதாய் நிறுவியிருக்கிற வகையில் வென்றிருக்கிறார்..
வாழ்த்துகள் தோழர்...









வியாழன், 15 பிப்ரவரி, 2018

ஐ லவ் யூ டா....

தலைப்பே ஒரு மாதிரி இருக்குல்ல...

நேற்று முகநூல்,வாட்ஸ் அப்,ஊடகம்னு எல்லா இடமும் காதல் காதல்ன்னு படிச்சு,பார்த்து,
கேட்டு "ங்கே" ந்னு ஆயிடுச்சு..
சமூகத்துல நாமளும் காதலைப்பற்றி ரெண்டு வரி எழுதலன்னா ஊர்கூடி விலக்கி எதும் வச்சுட்டா என்ன செய்றதுன்னு தான் யோசனையில ஒரு நாளே போயிடுச்சு..

எல்லாரும் அப்பால போனா ..நாம ஒரு வழில போவோம்..

என்ன பண்ணித்தொலைக்க.. என்னத்த எழுதனும்னாலும் பால்யம் வந்து மொத ஆளா நின்னுக்குது...
எழுதுடா என்னை எழுதுடான்னு..

பனிரெண்டாம் வகுப்பு முடிச்சுட்டு பஸ் ஸ்டாண்ட்ல லாட்டரி சீட்டு விற்க போய்ட்டேன்..
ஒவ்வொரு பஸ்ஸா ஏறி கூவி கூவி விற்கனும்...ஒரு நாளைக்கு பத்து ரூவா சம்பளம்..

திருச்சி பஸ்ல ஏறுனா கொஞ்சம் யாவாரம் நடக்கும்..
பழனி பஸ்ல எல்லாம் ஒன்னும் ஓடாது...
அதனால திருச்சி பஸ் நிற்கும் இடத்துலதான் சுத்தி சுத்தி வாறது..
அதாச்சு முப்பது வருஷம்..

அந்த காலத்துல பஸ்ஸ்டாண்ட் மூலைல ஒருத்தர் கட்டையா குட்டையா சுண்டல் வண்டி தள்ளிட்டு வருவாரு..
பதினோரு மணிக்கு வந்தா ரெண்டு இல்லன்னா மூனு மணிக்கு வித்துட்டு போயிடுவாரு...
வெள்ளைப்பட்டாணி சுண்டல்தான்...
தேவலோகத்துலயே மாங்காய் இல்லன்னாலும் மனுஷன் மாங்காய் இல்லாமல் சுண்டல் இருக்காது..தேங்காயை சின்ன சின்னதாய் கீறி தொன்னைல போட ஆரம்பிச்சுட்டா..
பஸ்ஸ்டாண்ட்ல வழக்கமா இருக்குற சாக்கடை வாடையெல்லாம் ஓடிடும்..
கட்டைக்குரலில் " சுண்டேல்" ந்னு ஒரு சத்தம் கொடுத்தாருன்னா கிடுகிடுன்னு இருக்கும்..
நடத்துனர்,ஓட்டுனர்ன்னு அவசர அவசரமா வாங்கிட்டு ஓடுவாங்க..
கொஞ்ச நெருக்கமா இருந்து கேட்டா..அவர் உலகத்துல இல்லாத கெட்டவார்த்தையும் சுண்டல விட வாசமா பேசுவாரு...
யாரையும் மரியாதன்னு கொடுத்து பேசுனதில்லை...
அவன் இவன் தான்...
அதிலயும் என்னைப் பார்த்தா
இன்னும் நாலுவார்த்தை கூடவரும்...
வாடா...இந்தா போய் திண்ணு...காச நீயே வச்சுக்கடா..நீ என்ன பெரிய ....த்தியா?  போடா போடான்னுவார்...

காலம் ஓடிக்கொண்டிருந்த சக்கர நாள்களில் எப்போது பஸ் ஸ்டாண்ட் போனாலும் போய் சுண்டலோட அவர்ட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு..மன்னிக்கவும் வாங்கிட்டு..வரலன்னா திருப்தி இருக்காது...

ஒருவருடத்தின் முன்னே அவரைப் பார்த்த பொழுது...அதே விபூதிப் பட்டை...விசாரிப்புக்குப் பின்..மகன் சிங்கப்பூரில் இருப்பதாகவும்...போனா போய் பாருடா..என்றார்.

பனை மட்டைக்குப் பதிலாய் சின்னதாய் பிளாஸ்டிக் கரண்டி கொடுத்த போது..
நான் எனக்கு மட்டையே போதுமென சொல்லிவிட்டேன்...

நேற்று காதலர் தின கொண்டாட்டத்தில் உலகமே இருக்க...
நான் பேருந்து நிலையம் சென்றிருந்தேன்..
வழக்கமான சுண்டல் வண்டி இருந்தது..சுண்டல் வாசமும் இருந்தது...
ஆள்மட்டும் வேறாய் ஒரு பையன் இருந்தான்...
அமைதியாய் சுண்டலை வாங்கிவிட்டு அவர் எங்கே என்றேன்...
அப்பா இறந்து ஒரு மாசம் ஆகிவிட்டது என்றான்...
தன்னிச்சையாய் நழுவிய சுண்டலை இறுக்கிப்பிடித்து..எப்படி என்றேன்...
திடீரென என்கிறான்..
"நீ சிங்கப்பூரில் என்ன செய்தாய்"
"ஹெவி டிரைவர்"
"திருப்பிப்போகலையாப்பா"
"இல்லண்ணே..
இது அப்பா தொழில்..
இதையே பார்த்துக்கலாம்ன்னு"
சொல்லிக்கொண்டிருக்கும் போதே பிச்சை கேட்டுவந்த ஒரு மனிதனுக்கு சுண்டலைக்கொடுத்துவிட்டு
பணம் வேண்டாம் என்கிறான்...

பேருந்து நிலையத்தில் சுண்டல் விற்கும் ஒரு வேலைக்காக தன் அயல்நாட்டு வேலையை விட்டு விட்டு வந்ததோடு அல்லாமல்...அப்பாவைப் போலவே இரங்கும்..
அவனிடம் தவிர யாருக்கு நான் சொல்லக்கூடும்?
தம்பி..
ஐ லவ் யூ டா...