செவ்வாய், 31 அக்டோபர், 2017

பெய்யெனப் பெய்யும் மழை!!!

இதோ மின்சாரத்தை
தொலைத்திருக்கிறோம்..

எத்தனை நேரம்
மின்னூட்டினாலும்
இணைப்பிருக்குமா
தெரியாது
அலைபேசி..

மதிப்பிழப்புச் சுனாமிக்கு
பின்னே
இல்லாத
கணக்கில்
எத்தனை சுரண்டி எடுக்க..

பால்வாங்கி
வைக்கவேண்டும்
சாகவும்
வாழவும்..

தண்ணீரோடு
பாம்புவருமா
படகுக்கு
காத்திருக்கவேண்டும்..

முகநூலில்
சொல்லி அழ
படங்களோடு
வார்த்தைகள்
பொறுக்கி சேர்த்துவைக்கவேண்டும்..

சொந்த ஊர்
போகலாமா
தீபாவளிக்கடனே
தீரவில்லை
என்றாலும்
தாம்பரம்
தாண்டுவதே
தள்ளாட்டமென 
செய்திகள்..

நடிகன்
எவனும்
வேட்டிகட்டி
சோற்றுப்பொட்டலம்
தர இன்னுமேன்
வரவில்லைக்
கவலை...

நதிகளைக்
கற்பழித்து
கட்டடப்பிள்ளைகள்
யார்
பெற்றதென
பேசத்தொடங்கிவிட்டார்கள்
தொலைகாட்சி
வல்லுனர்கள்..

நகரின்
சிறப்பை
வடிகால்
அமைப்பை
சிலாகிக்கிறார்கள்
வல்லுநர்கள்.

அண்ணாச்சிகள்
கடைகளில்
யானைவிலையில்
ஜி.எஸ்.டி
சேர்த்து
காய்கறி
கிடைத்தால்
ஊர்க்கோயிலில்
தேங்காய்
சூறைவிடவேண்டும்...

சின்னம்
கிடைச்சிருந்தா
இந்நேரம்
சிங்காரம்
அடைஞ்சிருக்கும்.
பாவம்
அவங்களத்தான்
என்ன
குத்தம் சொல்லித்திட்ட..

இப்ப என்ன
ஸ்டிக்கர் ஒட்ட?
இருக்குமில்ல
போராட்டம்..

நாதியத்த
சென்னையில
காலமெல்லாம்
நடப்பதுதான்.

கவலையெல்லாம்
போன மழை போல
கிடைக்குமா
கருணைத்தொகை..

எந்தக்கவலையும்
உனக்கில்லை
மாமழையே..
பெய்யெனப்பெய்யும்
மழை..


















திங்கள், 30 அக்டோபர், 2017

பெண்ணே..பெண்ணே..


யாரும் ஊரென்றோம்..
எல்லாரும்
நம் ஊர் வந்தார்..
யாவரும்
கேளிர்
என்றோம்.
அனுதினமும்
போராட்டம்..

தாலி இழந்த
பெண்கள்..
காலியாய்ப்
போன வீடு..
வெகுண்டெழுந்து
போராட்டம்..
தண்ணீர் வேண்டியல்ல..
கண்ணீர்
போதுமென..

பூமிப்
பந்து
பொதுவில்
தான்
சுற்றுகிறது..
அதிகார
விலங்குகள்
தான்..
அடிமை
செய்கிறது..

வானத்து
ஓர் துளியும்
வர்க்கங்கள்
பார்ப்பதில்லை..
நீளப்படுக்கும்
மண்
நீ வேண்டாம்
என்றதில்லை..

காற்றெப்போதும்
கவனமின்றியும்
சில
நாசிகள்
வெறுப்பதில்லை..

பெருவன
விலங்கு
யாவும்
அடையாள
அட்டைகள்
அணிவதில்லை..

அடித்துக்கொல்லும்
இனமானாலும்
ஆணவக்கொலைகள்
இல்லை..

வீணுக்கு
மனிதன் தான்
வீணானான்
வேலையின்றி..

வீதிக்கொரு
கல்லூரி
வீட்டுக்கொரு
பொறியாளன்..

நாட்டுக்குள்
மாற்றமில்லை
அரசியலின்
நாற்றமின்னும்
குறையவில்லை..

பிணிபோல
அணிகளிங்கு...
பிரேக்கிங்
செய்திகளால்
பீதியுற்றாய்..
இதுவா நன்று...

கடுங்கிழவி..
கன்னிப்பெண்..
கால் முளைத்த
சின்னப்பெண்..
எல்லாம்
முடித்துவிட்டு
கருவிலும்
தேடுவானோ
கவனமாய்
பெண்ணுருப்பு...
நெருப்பாற்றில்
நீந்தும்
வாழ்க்கை
கேளிரெல்லாம்
கேலி வார்த்தை...

அக்கினிக்
குஞ்சுகள்
தான்..
அமிழ்த்துமொரு
துயரச் சேற்றில்
நமத்துப்
போயிருப்பாய்..
ஊருக்குள்
சாக்கடைகள்
சரிதான் என்றால்..
ஊரே
சாக்கடையாய்...
எத்தனை நாள் மூச்சடைக்க?

அடுப்படிக்குள்
மீட்சியில்லை...
தெருவில்
ஒரு நீதியில்லை
சமமெல்லாம்
வார்த்தையில் தான்..
அமிலங்கள்
தீண்டிய ஓர்
ஆணிங்கு
யாருமில்லை..

வாசல் கோலங்கள்
வண்ணத்தில்
போட்டுவிட்டு
வகையாய்
மாட்டிக்கொண்டாய்..
பூசணிப்பூவும்
புன்னகைக்கும்..

தொல்காப்பியம்
முதலாய்...
தொன்றுதொட்ட
வரலாறு...

விளக்கமாறு
இன்னும்
உங்களிடமேயிருக்க
விளக்கமென்ன
வேறு வேண்டும்
கேளீர் வாழ்க!!!

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

செஞ்சாத்து ரேகைகள்...

பண்டைக் கானாடான இன்றைய புதுக்கோட்டை பெயரில் மட்டுமே புதுமையை வைத்துக்கொண்டிருந்தாலும்
தனக்குள்ளே  முதுமக்கள் தாழி போலவே வரலாற்றுச்சான்றுகளையும் வைத்திருப்பதை ஆராய்ச்சி வல்லுநர்கள் அவ்வப்போது அகிலத்துக்கு அறிவித்துக்கொண்டே இருக்கின்றார்கள்...

இந்த மாவட்டத்தின் பிள்ளையாக கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகள் வாழ்ந்து திரிந்தாலும்..
குளத்தின் துணி துவைக்கும் ஒரு கல்லாய்த்தான் தெரிந்திருக்கும் கரடுமுரடான கல் ஒரு  அறிஞரின் முயற்சியால் திருப்பப்படுகையில் ஒரு அழகிய சிலையாக பூக்கும் போது பிரமிப்பாய் இருந்தது தான்...எனக்கும் வரலாற்றுக்கல்லுக்குமான ஞானமும்..அனுபவமும்...

வருடமொருமுறை நார்த்தாமலை திருவிழாவிற்காக நடந்து போகும் போது தலை இல்லாத சில சிலைகளை அடையாளங்களாய் கூறிக்கொள்வதுமுண்டு...

மிக எளிதாக சமாளிப்பதெனில் எப்பவும் நமக்கு அருகில் இருக்கும் பெருமைகளை எப்பவும் நாம் அறிந்துகொள்வதில்லை..

அரசின் உயர்பொறுப்புகளில் இம்மாவட்டத்திற்கு வரும் பலர் தம் பதவிக்காலங்களில்
கடமைக்காக ஊரை உயர்த்திப் பேசிவிட்டு பறந்துவிடும் அற்றகுளத்துப்
பறவைகளாகவே இருப்பது வாடிக்கை.,.
தத்தம் பொறுப்புகளின் சுமைகளால் அவர்களுக்கு அழுத்தம் மிகுந்திருப்பது காரணமாயிருந்தாலும்...

எல்லா விடியலும் புல்லினக் கூவலில் விடிந்தாலும் சில புலரல் விடிவெள்ளிகளாலும் நிகழ்ந்துவிடுவதுண்டு.

அப்படி ஒரு புதுக்காலையாய் விடிந்தது தான் இந்நூலாசிரியரின் புதுகை வரவும்..

ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் தலைவராய் முதன்மைக்கல்வி அலுவலராய் பொறுப்பேற்றாலும் ஆசிரியர்களையே நண்பர்களாய் மாற்றியது இவரின் புதுமை என்றால்...
புதுக்கோட்டையின் கல்வித்துறை வரலாற்றில் முதன்முறையாக ஐ.எஸ்.ஓ. என்னும் தரச்சான்றை முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு பெற்றுத்தந்து கணினி மயமாக்கியது மறக்கவும் மறுக்கவும் முடியாதது..

எண்ணில்லா தமிழ் மற்றும் சமூக அமைப்புகள் விரவிக்கிடந்த மாவட்டத்தில் மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் எந்த பெயரும் இல்லாமல் சந்தித்து தமிழ் குறித்தும் சமூகம் குறித்தும் பேசுவதை தொடங்கி வைத்ததும்..பின்னர் அது வீதி என்ற பெயருடன் தொடர்ந்து இயங்கிவருவதும் நாம் அறிந்ததே...

தலைமையும்,
பணப்பரிமாற்றங்களும் அல்லாமல்,படைப்புகள் மட்டுமே புழங்கும் ஒரு இடமாக அது இயங்குவது இன்னும் புதுமை...

பதவி உயர்வுகள் என்னும் படிக்கட்டில்  மாவட்டங்கள் மாறிப்போனாலும்...
அவரின் திண்ணிய படைப்பொன்று மாவட்ட மண் உள்ள அளவும் மறையாமல் இருக்கப்போவது பற்றித்தான் இந்த கட்டுரை..

"புதுக்கோட்டை மாவட்ட பாறை
ஓவியங்கள்.."

ஒரு கலைஞனின் பார்வையில் பூமியின் பரப்பில் பாறைகளே இயற்கையின் ஓவியங்கள் தான்..
சஞ்சீவி மலையை தூக்கிப்போன போது விழுந்த கதையாகத்தான் இருக்கிறது தமிழகத்தின் எல்லாப்பாறைகளும்.

இவரின் புதுக்கோட்டை நாள்கள்.. அவர் படித்த பண்டைத்தமிழ் நூல்களின் வழியே பெற்ற அறிவால், காணும் எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்ய வைத்திருக்கிறது..

சமண ஆராய்ச்சிக்கான சான்றுகளில் அதிகப்படியானது நம் மாவட்டத்தில் காணக்கிடைத்திருப்பது நம் பெருமையே...

காலங்களின் வகைகளை,பண்டைய மனிதனின் இனக்குழு காலத்தை மிகத்தெளிவான விளக்கங்களுடன் எழுதியிருப்பதும் தெளிவு..

திருமயம் கோட்டையும்,
சித்தன்னவாசலும் நாமறிந்த சிற்றுலாத்தளங்கள் தான் இந்த நூலை வாசிக்கும் வரை..

திருமயம் என்ற ஊரின் பெயர் எப்படியெல்லாம் வந்திருக்கலாம் என்ற ஊகங்களில் ஒரு தேர்ந்த வரலாற்றாசிரியரும் தமிழறிஞரும் பின்னிப்பிணைந்திருக்கிறார்கள்.

நாலுபுறமும் கல்கோட்டையாக ஒரு திருத்தலமாய் இருக்கும் பாறைகளின் மத்தியில் நூலாசிரியர் கண்டிருக்கும் ஓவியப்படிமங்கள் எத்தனை வெளிச்சங்களை பாய்ச்சியிருக்கிறது வரலாற்றுப் பக்கங்களில்..

சூரிய வெளிச்சம் பட்டுப் பட்டு மங்கலாகிப் போன தலைவியின் நடையும்..ஆயுதமேந்திய ஆணொருவன் பின் வர கடந்து முடிந்த தாய்வழிச்சமூகம் நமக்குள்ளும் நடக்கிறது..

ராகுல சாங்கித்தியன் வரைந்த நிஷா என்னும் உப கதையை இழுத்துவந்து ஒப்பிட்டுப்பார்த்து மகிழ்கையில் நமக்குள்ளும் ஒரு உண்டாட்டு நிகழ்வதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்..

மெய்யுறு புணர்ச்சிக்கான ஒரு ஓவியத்தை துணைகொண்டு பெண் தலைவியாய் இருந்திருக்கும் கால வயதை ஆராய்வதும் ஆச்சர்யமும் விந்தையும்..

ஓவியங்களின் வகைகள்..ஓவியத்துக்கான வண்ணங்களின் வகைகளில் இத்தனை நுணுக்கங்கள் இந்த நூலை வாசிக்கும் போது வியப்பாய் இருக்கிறது.

நூலாசிரியர் நானறிந்தவரை
பேசுவதைக்காட்டிலும் எழுத்தில் சேர்த்திருக்கும் நகைச்சுவை மேலும் ஆச்சர்யம்..
திருமய பெயராராய்ச்சியில் சொல்வதை நீங்களே கேளுங்கள்.  சிவமயம் ,ஒளிமயம்,தனியார்மயம்....

திருமயம்தான் இப்படி என்றால் சித்தன்ன வாசல் இன்னொரு படி மேலாய் இருக்கிறது.
சிலபடிகள் மேலேறிச்சென்றால் விதானத்தில் சற்றே தெளிவற்று இருக்கும் ஓவியங்களோடு திரும்பிவிடும் நமக்கு ஏழடிப்பாட்டத்தை காட்டுகிறார்...

சமணப்படுக்கைகளாகவே இருந்த அவைகளின் விதானத்துள் இருக்கும் ஓவியங்கள் ஒரு வேளை ஆராய்ச்சிக்கண்களுக்குதான் அகப்படும் போல..

கல்லெழுத்துகளை வாசித்தவர்கள் சொன்னதும்,
இவரின் கருத்தும் யோசிக்கவைப்பவை..

மாவட்டத்தின் மண்ணின் நிறம் எங்கெல்லாம் மாறியிருந்தாலும் ஓடோடிப்போய் வரலாற்றுக்கண்ணாடி வைத்துப்பார்த்த இவருக்கு எப்படி நன்றி சொல்ல..

சில வரலாறுகள் போலவே தொலைந்துபோயிருக்கும் ராங்கியத்தில் டாட்டன்ஹாம் கண்டுபிடித்த கல்லாயுதம் குறித்த இவரின் ஆவலும் சோகமும் நம்மையும் பற்றிக்கொள்கிறது..

குடுமியான்மலை ஓவியங்களின் காலத்தையும் ஓவியங்களின் நிறம் கொண்டு தெளிவாக்க முயல்வது நம்பக்கூடியதாய் இருக்கிறது..
உருவமென சிலருக்கு தெரிந்த ஓவியங்கள் இவருக்கு தாவரமாய் இருப்பதும் சரியாகத்தான் இருக்கும்..

மிகச்சிறிய புத்தகம் தான்..
ஆனால் இது அத்தனை வரலாற்றை பொதிந்து வைத்திருக்கிறது.

விலைமட்டுமே சற்று அதிகமாக தெரியும் இந்நூலில்...

இடங்கள் பற்றிய சரியான அடையாளம்...
கல்மரமாகும் கோலம், கைச்சாத்து வைத்திருக்கும் சகாப்தங்களின் ரேகையை வண்ணப் புகைப்படங்களில் வழவழப்பான காகிதத்தில் வாசிக்கையில்,
கண்கள் வாசித்துக்கொண்டிருக்கும் போது, மூளை நம்மை நியாண்டர்தால் மனிதனாக்கி விளையாட்டு செய்தாலும் தன்னையறியாமல் விரல்கள் பக்கங்களை தடவிக்கொண்டிருப்பதை மனசாட்சியுடன் ஒத்துக்கொள்கிறேன்..

நன்றியும் வாழ்த்துகளும் இணைந்த வணக்கங்கள்
முனைவர்.நா.அருள்முருகன் அய்யா...








வியாழன், 26 அக்டோபர், 2017

ஆஷ்....சாம்பலில் புதைந்த சரித்திர உண்மைகள்...

இந்த சமூகம் எதை வீரமாகவும் தியாகமாகவும் போற்றி துதித்துக்கொண்டிருக்கிறதோ...
எவரை கடவுளுக்கொப்பானவராய் வணங்கிக்கொண்டிருக்கிறதோ அதை அல்லது அவரை மாறுபட்ட ஒரு கோணத்தில் கிட்டத்தட்ட சரியான பார்வையில் கண்டு இந்த உலகத்தின் மஞ்சள் கண்ணாடி அணிந்த பார்வையை மாற்றுவதென்பது நீண்ட ஆரய்ச்சி அறிவும் ..
நிமிர்ந்த தைரியமும்,
எல்லாம் தவிர்த்து உண்மையும் வேண்டும்.
இந்த இலக்கணக்குறிப்புகளுக்கு(?) மிகச்சரியான உதாரணமாக சமீபத்தில் வெளியீடு கண்ட மருத்துவர்.நா.ஜெயராமன் எழுதிய "ஆஷ் படுகொலை புனைவும் வரலாறும்" என்ற நூல் இருக்கிறது...

விடியல் வெளியீடாக ஆதவன் தீட்சண்யாவின் அணிந்துரையோடு ராசி.பன்னீர்செல்வனின் உதவியோடும் வந்திருக்கும் இந்த நூல்...

இதுவரை வரலாற்றை பார்த்துவந்த கண்களுக்கு புதிய பல சாளரங்களை திறந்திருக்கிறது..

லட்சக்கணக்கான இன்னுயிர்களை ஈந்து எவர்பெயரும் வெளிவாராது புதைந்துபோன இந்திய சுதந்திர வரலாற்றில் .(நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது போன்ற பல சதிவழக்குகள் போல)
குறிப்பிட்ட சிலரின் பெயர்கள் மட்டும் தூக்கிவைத்துக் கொண்டாடுவது ஏன்?என்ற ஒற்றைக்கேள்விக்கான விடை தேடும் ஆசிரியரின் பயணத்தின் தொடக்கப்புள்ளி யுகங்களின் கரடுமுரடான பாதைகளெங்கும் பயணித்துத்திரிந்திருக்கிறது.
பயணத்தின் ஊடாக மனுவின் தர்ம விளக்கமென்னும் அசிங்கங்கள் அப்பிக்கிடந்த குப்பைமேடுகளை காட்சிப்படுத்துவதாகட்டும்...

ஆரிய வீர பூமியின் நாயகர்களாக வரிந்திருக்கும்
ஸ்ரீராமன்,கண்ணன்,அர்ஜுனன் என்னும் பாத்திரங்களின் நீதி(?)தவறாத மேலாண்மையை குத்திக்கிழித்து

கட்டியிருக்கும் சலத்தை ஆணிவேறோடு பிடுங்கிக் காட்டுவதாகட்டும்...
சம்பூகப்படுகொலை,தன் மனைவியை பலமுறை தீயிலிறக்கிய காவிய நாயகன்...

கோபியர் குளிக்கையில் குதூகலித்த குழல்காரனின் ஆட்சியில் நடந்த நல்லவைகள்...
வீர சிவாஜியின் பின்னிருந்த கோரப்பின்னணிகள் என வரலாறு வண்டி வண்டியாய் நிரம்பி வழிகிறது..
மிக துணிச்சலாக எழுதத்தலைப்பட்டிருக்கும் ஆசிரியர் அதற்கான தேடலையும்,முன்னோர்களின் வழிகாட்டுதலையும் எடுத்தாண்டிருப்பதற்கு தமிழ்ச்சமூகம் நன்றி சொல்லவேண்டும்.

ஆரிய மிலேச்சர்கள் என்ற அயோத்திதாசரின் பார்வையை மங்கலாக்கிவிட்டு ஆரியக் கும்பல் கோமாமிச மிலேச்சர்களை கருவறுக்கப்புறப்பட்ட நயவஞ்சத்தின் வெளிப்பாடுகளை வெளிச்சமிட்டிருக்கும் தீரம்..வீரம்...

சரித்திரத்தை தனக்கு சாதகமாக அலங்கரித்து பொட்டுவைத்து பூச்சூடும் பொல்லாதவர்களின் போக்கை சொற்சிலம்பமெடுத்து வீசும் வேகம் அபாரம் தான்..

இந்த நூல் முழுவதையும் வாசித்துமுடிக்கும் போது நாம் படித்திருக்கும் சிலரின் வரலாறுகளை மீண்டும் தீவிர மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பதும் ஆராய்ச்சிக்கான கண்ணாடியை நாம் அனைவரும் அணிய வேண்டும் என்ற ஆவலும் ஏற்படுகிறது..
நூலாசிரியரின் அளவிற்கு ஆராய்ச்சி அறிவும்,கல்வித்தகுதியும் இல்லை என்றாலும் சில கேள்விகள் தவிர்க்கமுடியாததாகிவிடுவதையும் சொல்லியாக வேண்டும்..

வாஞ்சியின் செயலை மிக தீர்க்கமாக சனாததர்மத்தை காப்பதற்காகவே நிகழ்ந்திருப்பதை நிரூபிக்கும் முயற்சி உங்கள் ஆய்வினால் மிக நேர்த்தியாக நிறைவேறியிருக்கிறது..

நீலகண்டப்பிரம்மச்சாரியின் மாறுபட்ட வாக்குமூலங்களை கிழித்திருக்கும் உங்கள் பார்வை சரியாய் இருக்கிறது..

ஆங்கிலேய ஆட்சியின் கோரத்தை ஒழிக்க...வாஞ்சி எந்தவிதமான பிண்ணனியில் இயங்கி இருந்தாலும் அற்றை விடுதலை வேட்கைக்கு ஒருதுளியேனும் ஊக்கமாய் இருந்திருப்பதை மறக்கலாமா?

ஒப்பீடென்னும் பார்வையில் ஆரியக்கும்பலை விட ஆங்கிலக்கும்பலை சற்று மேலேற்றியே பார்த்திருக்கும் பார்வை சற்று கனக்கிறது...

ஆங்கிலேய ஆட்சியில் நிர்வாகமும்.தொழிலும் நல்ல முன்னேற்றத்துடனும் நியாயமாகவும் நடந்திருப்பதாய் நிறுவுதல் முறையா? வங்கத்தின் லட்சக்கணக்கான நெசவாளர்களின் கட்டைவிரல்களை வெட்டியதும் வரலாறுதானே..
அடங்கிக்கிடந்த அல்லது அடக்கிவைப்பட்டிருந்த ஒரு பேரினத்தின் கோபம் அணை உடைந்த வெள்ளமாய் பீறிட்டுக்கிளம்பும் வேகத்தில் அரித்தும்..பொங்கியும்.. அவலங்களை நினைத்து நினைத்து ஆற்றாமையால் துடிக்கும் நூலாசிரியரின் பேனா வார்த்தைக்கு வார்த்தை சீறியிருக்கிறது..

நூல் முழுவதும் பரவிக்கிடக்கும் தகவல்களும் ,வரலாற்று உண்மைகளும்  மீண்டும் மீண்டும் நூலாசிரியரின் உழைப்பை சாற்றினாலும்..

தற்கூற்றாக நூலின் முக்கால்வாசி இடங்களை
எழுதியிருக்கும் ஆசிரியர் வார்த்தைகளின் கடுமையை குறைக்க முயன்றிருப்பதும் புரிகிறது..

தான் எடுத்துக்கொண்ட ஒரு ஆய்வின் நோக்கிற்காக பல விசயங்களை எழுதும் ஆசிரியர் ....

வ.உ.சி தன் மகனுக்கு பெயர் வைத்த காரணத்தை போற்றுகிறாரா....தூற்றுகிறாரா என்பது புரியவில்லை..

திருப்பூர் குமரன் காத்த கொடி தேசியக்கொடி அல்ல ..ஒரு கட்சியின் கொடிதான் என்கின்றீர்கள்.. கொடி என்பது எதுவாக இருப்பினும் அது குமரனின் தேசப்பற்றை விடுதலை உணர்வை குறைத்து சொல்வதாகிவிடாதா?

மிக நீண்ட நூலாய் வந்திருக்கும் இதில் திரிக்கப்பட்ட உண்மை வாஞ்சியின் சிலவரிக்கடித்தோடே நிரூபிக்கப்பட்டு விடுகிறதே..
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்ன?

நூல் முழுதும் வசவு வாங்கும் வாஞ்சி செய்தது இந்து சனாதனத்தை காக்கவும்,மீண்டும் ஆரியவர்த்தத்தை ஏற்படுத்துவதே எனவும் எழுதிவைத்துவிட்டு கோழைத்தனமாக பெண்கள் கழிவறைக்குள் சுட்டுக்கொண்டு இறந்த போதே அவனின் இழிவு தெரிந்துவிடுகிறது..

ஆஷின் முடிவுக்குப்பிறகு அவனின் கூற்றாக கடிதம் மட்டுமே இருக்கும் போது,
ஆஷின் பேரன்களாக உருவெடுக்கும் பலபேர் செய்யும் வரலாற்றுப்புரட்டிற்கும்,தூக்கிவைத்துக் கொண்டாடும் சுயநலக்காரர்களின் போக்கிற்கும் வாஞ்சியையே நிந்திப்பது தும்பை விட்டு வாலைப்பிடிப்பது ஆகாதா?

உண்மையிலேயே கொல்லப்படவேண்டியது விஞ்ச் என்னும் பாதகந்தான் என்பதில் அன்றைக்கு இருந்த கட்டத்தில் ஒருவேளை வாஞ்சி விஞ்ச் அவர்களை சுட்டிருந்தால் நிலைப்பாடு என்னவாகி இருந்திருக்கும்.

இந்த தேசம் ஜாதி இன பிரிவினைகளால் சிதைந்து போனது ஆரிய சூழ்ச்சியால் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்றாலும்..
தன் சாதியை இனத்தை தூக்கிவைத்து சுமந்துகொண்டிருக்கும் அவர்களைப்போலவே..இன்னும் எத்தனை நாட்கள் தாழ்த்தப்பட்ட ,வஞ்சிக்கப்பட்ட சாதியும் இனமும் நாங்களென சொல்லிக்கொண்டிருப்பது?
மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளைக்காட்டிலும் இனி வளர்த்தெடுக்கப்படவேண்டிய அவர்களின் சுய முன்னேற்றம் மற்றும் சமூகத்தில் ஒன்றெனக்கலந்து போவதற்கு வேண்டியதை செய்யவேண்டாமா?


சமூகம் இதுவரை தூக்கிவைத்து கொண்டாடிய சில பொய்யர்களை துகிலுரிந்து காட்டிய விதத்திலும்,உண்மைகளை அதன் ஆணிவேர்தொட்டு ஆராய்ந்து வெளிக்கொண்டுவந்த பாங்கிலும்.ஆரிய மிலேச்சர்களால் இந்த மண்ணின் ஆதி குடிகள் பட்ட அவலங்களையும், பொற்காலமாய் பூத்திருந்த சமண,பவுத்த இசங்களை இந்து சனாதன வன்முறைகள் சூறையாடிய வன்கதைகளை ..இப்படி ஒரு சமூகத்தின் ...யுகங்களின்
வரலாற்றை துல்லியமாக படம்பிடித்திருக்கும் நூலாசிரியருக்கும் அவருக்கு துணை நின்ற அத்தனை பெருமக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும்..

வரலாற்றுப் புத்தகங்களை வகுப்பறையோடு மூடிவிட்டு புத்திசாலிகளாய் நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கும்,சுதந்திரப்போராட்டத்தின் கொடிய வரலாற்றில் இப்படியும் ஒரு களை முளைத்தது என்ற பெரு உண்மையையும் அறிந்துகொள்ள விரும்புவோர்க்கு இந்த நூல் மிக அவசியமான ஆவணம் என்பதில் சந்தேகமில்லை...










புதன், 18 அக்டோபர், 2017

அனுப்புனாத் தான் விருதுன்னா?

விண்ணப்பித்து வாங்குவதா விருது என நிலவன் அய்யா ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்..

வியாழன், 12 அக்டோபர், 2017

புதன், 11 அக்டோபர், 2017

கையில் வந்த சொர்க்கம்...


அதெப்படி கையில் வந்து விழிகளில் நுழைந்த சொர்க்கத்திற்கு "கை நழுவும் சொர்க்கம்" என பெயர் வைத்தார்கள் என்பதே

செவ்வாய், 10 அக்டோபர், 2017

கடலளவும் மனசும்- கையளவு கடலும்..

விமர்சன மனோநிலையிலிருந்து கொஞ்சம் விலகி படைப்புகளுக்குபோகலாம் என்ற உறுதி..
பிரசவ வைக்கிராயம் போல ஆகிவிடுவதை எப்படி சொல்வது?

ஐநூறிலிருந்து ஆயிரம் பக்கங்களுக்கும் மிகுந்திருக்கும் புத்தகங்களைப் பார்த்தால்..
மனசு என்னவோ ஒரு பேரழகி என்னை இருகரம் நீட்டி அழைப்பதுபோலவே உணர்ந்து வாசிக்க ஆரம்பித்துவிடுவதுண்டு..

பெரிய படிப்பாளி என்ற அறிமுகம் வேண்டுமெனில் இப்படி புத்தகங்களை பின்னாலும்,
படிப்பது. போலவும் படமெடுத்துப் போடுவதும் தற்பெருமைதான்...

சின்ன அளவிலான..
குறைந்த பக்கங்களைக் கொண்ட புத்தகங்களை மிகவும் அலட்சியமாக எடுத்து படபடவென படித்துவிட்டு நகர்ந்து விடுவேன்...

ஆயிரமாயிரம் பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகம் செய்யமுடியாத வசீகரத்தை அளவில் சிறிய புத்தகங்கள் கொடுத்துவிடுவதென்பது..
அக்கினி நடத்திர நாளில் பெய்யும் மழை போல அதிர்ஷ்டமானது...

அப்படியாக மிகச்சமீபத்தில் படித்த இரண்டு புத்தகங்களை சொல்லவேண்டும்...
முதலில் மறுவாசிப்புக்கு எடுத்த சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்..
மிகச்சிறிய நூலெனினும் ஜல்லிக்கட்டு பற்றிய அந்த குறுநாவல்...புரட்டிப்புரட்டி எடுத்துவிட்டது.

அந்த மயக்கமே தீருமுன்னே மற்றொரு புத்தகம் என்னை கையை பிடித்ததோடு இல்லாமல் அலேக்காக தூக்கிக்கொண்டு பால்யத்திற்கு பறந்து போய்விட்டது...

அருமைத்தோழர்..
மதுக்கூர்.ராமலிங்கம் அவர்களின் கையளவு கடல் என்னும் பாரதி புத்தகாலய பதிப்பு, என்னை இந்த அளவுக்கு பேச வைக்கிறது...

பிறப்பு தொட்டு சமகாலம் வரை எண்ணங்களை மிக எளிமையான வரிகளில் வன்முறை இல்லாத நகைச்சுவைகளில் அவ்வப்போது தீக்கதிர் இதழில் எழுதிய பதிவுகளை தொகுத்து வந்திருக்கும் அமைப்பு.

நாற்பத்து ஏழு தலைப்புகளில்  எத்தனையோ சாகரங்களின் அடர்த்தி நிரம்பிக்கிடக்கிறது...கையளவுக்கடல்.

தலைப்புகளில் மின்னிக்கொண்டிருக்கிறது முத்துகளென அலங்காரம்..

கரையின் அலைகளாய் எந்த பரபரப்பும் இல்லாமல் நடுக்கடலின் அமையாய்க் கிடக்கிறது இந்த கையளவுக் கடல்..

தந்தையை பால்குடி மறக்கும் முன்னே இழந்த ஒரு கிராமத்துச் சிறுவன்...தாய் மற்றும் சகோதரர்களோடு விளையாடித்திரிந்த ஊரின் நினைவுகளை குழைத்து...நகரத்து அண்மைய அவலங்கள் என்னும் கசப்பை தரும் லாவகத்தில் இவர் ஒரு சமூக மருத்துவராய் பரிணமிக்கும் பாங்கு...   அழகு..

சீனி டப்பா தேடி..புள்ளியாய் உதடு ஒட்டிக்கிடந்த வாய்...பல் வலிக்கென டாக்டரிடம் திறக்கும் போது...
உலகம் விரிகிறது.

காயில்லாத சாம்பார் பானையில் எழுத்துகள் எழுந்து வந்திருக்கிறது..

மணல் குவித்து வைத்திருந்த உள்ளூர் திரையரங்கத்தை,
நாலுமுறை இடைவேளை விடும் வாய்ப்பை..சட்டை கசங்க...அடுத்தவர் தோள்களில் நடந்து சீட்டுவாங்கி பார்த்த அனுபவம் நமக்கும் இருக்கும்..
ஆனால் அவைகள் காலக்கொடுமையில் குடான்களாகும் கட்டுரைக்கு அப்படி ஒரு தலைப்புதான் கொடுக்கமுடியும்.

நகைச்சுவைகள்,,கிராமத்து பாயாசத்தின் ஊடே கிடக்கும் உடைத்துப்போட்ட முந்திரியாய் அதிகம் கிடந்தாலும் அவலச்சுவை என்பது தட்டுப்படத்தான் செய்கிறது.

சமர்ப்பணத்தில் தெரியும் படைப்பாளரின் நன்றியுணர்ச்சி...அழுத அவரின் விழிகளின் கண்ணீர் துடைத்தற்கு நிகழும் போது மனசு பார்வையை மறைக்கிறது...

காலத்தின் அசுர வேகத்தில் கடந்து வந்த வருடங்களை நினைக்கவுமா வாய்த்துவிடுகிறது எல்லா மனிதர்க்கும்...
அது காட்டாற்று வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடுவதாய் அல்லவா அமைந்துவிடும்..
அசராமல் மனிதர் நீச்சல் அடித்திருக்கிறார்.

பட்டிமன்றங்களில்,மக்கள் மேடைகளில்,தனது அமைப்புக்கான இதழ்களில் ,தொலைகாட்சி ஊடக விவாதங்களில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துவைத்திருக்கும் தோழர்.மதுக்கூர் ராமலிங்கம்.. 
புத்தக உலகத்தில்  அசைக்கமுடியாத
இடமும் பிடித்திருப்பது சாதனைதான்.

மனோரமா ஆச்சியின் சிரிப்புக்குப் பின் இருக்கும் சோகத்தை இவர் இறக்கிவைத்திருக்கும் ஒவ்வொரு வரிக்கும் ரத்தமும் சதையுமாய் உயிர் இருக்கிறது.

சொல்லிக்கொண்டே போக நூல் முழுவதும் மின்னும் பொற்துகள்கள்    இருக்கும் போது எதை விட்டுவிட்டு நகர..புரண்டு புரண்டு கண்கள் பூசிக்கொள்கிறது.

இவ்வளவெல்லாம் சொல்லிவிட்டு..ஏதேனும் குறைகளை சொல்லாமல் விட்டால் விமர்சனப்பார்வைக்கு ஏதேனும் விக்கினம் வந்துவிட்டதென பதறப்போகும் நண்பர்களுக்காக ஒன்று மட்டும்.

கனமான எழுத்துகள் தாங்கிவந்திருக்கும் நூலின்
அட்டையை இன்னும் கொஞ்சம் கனமாக்கி இருக்கலாம்.

படைப்பாளர் ஒரு அமைப்பில் இருக்கிறார் என்பதற்காகவே இவர் என்ன எழுதியிருக்கப்போகிறார் என எளிதில் கடந்து போகாமல்
தமிழகத்தின் எல்லா திசைகளிலும் எடுத்து போய் வாசிக்கலாம்...நம் கடந்தகாலங்களையும்...இன்றைய பொழுதுகளையும் நாமும் யோசிக்கலாம்.

படைப்பாளரின் கையளவு கடல்...நெஞ்சுக்குள் கடலாய் புகுந்துகொண்டு தளும்பும் மாயம் என்னைப்போலவே வாசிக்கப்போகும் உங்களுக்கும் நேரலாம்..

நடக்க ஆரம்பித்திருக்கும் சில அறிமுக விழாக்கள் அதற்கான நம்பிக்கையை விதைக்கின்றன...



























திங்கள், 9 அக்டோபர், 2017

கவரிமான்கள்.....

கூடைப்பூவை
புதைக்கலாம்
அவள் கூந்தலில்...

முகத்தினை
முழுவதாய்
பார்க்கவிடாது
கூந்தல்...

இடுப்புக்குக்கீழ்
இறங்கிகிடக்கும்
ஜடையை
இழுத்துப்பார்த்து
ஒட்டில்லை
என்பதால்
நொடித்துக்கொள்ளும்
கழுத்துகளதிகம்..

அள்ளிச்சொருகிய
கொண்டையும்
மடித்துக்கட்டிய
சீட்டிப்பாவாடையுமாய்
மரத்து உச்சிவரை
செல்லும் அக்கா
செங்காய்களை
ஒளித்துவைப்பதும்
கொண்டைக்குள் தான்..

தலைகுளிக்கும்
நாட்களில்
முகமெல்லாம்
மஞ்சள்பூசி
சாந்துபொட்டும்
சாம்பல் திருநீறுமாய்
கல்லாங்காய்
விளையாட
அக்கா உட்காரும் போது
காய்களை விட்டு
அக்காவை
மேய ஆரம்பிக்கும்
சக கண்கள்...

ஐஸ் விற்கப்போன
அக்காவின் அப்பா..
அடிபட்டு
ஐஸ் பாரிலேயே
படுக்கவைத்து
அனுப்பிய பின்னாளில்..
அவள் அம்மா
சத்துணவுக்கு
அடுப்பெரிக்கப்
போனாள்...

குலதெய்வ
கோயிலுக்குப் போனது
மொட்டையடிக்கவென
அக்காவுக்கு
அதுவரை
தெரியாது..

வைராக்கியமாய்
அக்கா
அடுத்து
முடிவளர்க்கவேயில்லை..

பத்தாப்பு பெயிலான
அக்காவை
கிழட்டு மாமனுக்கு
கட்டிவைத்தபோது
இழுத்துவச்சு
அடிக்க மசுரில்லைன்னு
சொன்னதுதான்
அந்த கல்யாணத்தின்
ஒரே சிரிப்பு..

எண்ணெய்
இல்லாக்கொடுமைக்கு
முடி இறக்கிய
சாமியை
சபித்துக்கொண்டே
இருக்கும்
அவள் அம்மாவுக்கும்
அடுப்புச்சூட்டில்
முடிகுறைய..

மயிர் நீத்தாலும்
பெயராகிப்போனது..

குட்டைமுடிக் குடும்பம்..