செவ்வாய், 19 ஜூன், 2018

எட்டு..ராசியில்லை அரசே!



இந்த பச்சை வயல்கள்
விளைந்து
கிடக்கிற
இடத்தில் தான்
உங்கள்
சாலைகள்
வரப்போகிறது.

யுகங்களின்
கதைகளை
சுமந்துகொண்டிருக்கும்
இந்த
மலைகளைத்தான்
உங்கள்
இயந்திரங்கள்
குடைந்து
வழி செய்யப்போகிறது..

இந்தக்குடிசைகளை
அகற்றிவிட்டுத்தான்
அவசியமான
பாதை
அவதரிக்கப்போகிறது.

நீரோடிய
இந்த
வரப்போரங்களில் தான்
உங்கள்
உணவகம்
அமையக்கூடும்.

இந்த
தென்னைகளை
சிதைத்துவிட்டுத்தான்
உங்கள்
உயர்கோபுர
விளக்குகள்
எரியப்போகிறது.

இந்த
மரங்களின்
தோப்பை
அழித்தால் தான்
உங்கள்
பசுமைத்திட்டத்தை
விளம்பரப்படுத்தலாம்.

நீளமாய் விரியும்
இந்த
தோட்டங்களில்
தான்
நீங்கள்
கருப்புக்கோடுகள்
வரையப்போகிறீர்கள்..

அப்பாவிகள்
அழுது
கொண்டிருக்கிறார்கள்..
சாலைகளென்பது
நாட்டின்
தேவையல்லவா..
நீங்கள்
மண்ணைக்கொட்டுங்கள்.

கார்கள் போய்வர வேண்டாமா..
கவனமாய் போடுங்கள்

இவர்கள்
போராடத்தான்
செய்வார்கள்...
பிழைப்பற்றவர்கள்
நீங்கள்
சாலை போடுங்கள்
அரசே!

இவர்கள் தானே
எட்டுவழிச்சாலையில்
விரைந்து 
பயணிப்பார்கள்.

சேலத்து
மாம்பலங்களை
சென்னையின்
மாம்பலத்தில்
கொண்டுபோய்
விற்பார்கள்.

சித்தாளும்
கொத்தனாரும்
சீக்கிரம்
வேலைக்கு
செல்லலாம் தானே!

மக்கள்
நலனுக்கே
அரசென்றறியாமல்
மறியலாம்
போராட்டமாம்.

எட்டு என்பது
ராசியில்லை
மகராசா!
இன்னும்
இரண்டு
சேர்த்தே
போடுங்கள்..

5 கருத்துகள்:

  1. எடப்பாடி அரசும் எட்டு வழிச் சாலையும்.வேதனையாக இருக்கிறது தோழர்.

    பதிலளிநீக்கு
  2. இன்னும் என்னென்ன கொடுமை நடக்கப் போகிறதோ...

    பதிலளிநீக்கு
  3. வேதனையின் உச்சம் எட்டு பத்தாகும் என்ற வெளிப்பாடு.

    பதிலளிநீக்கு

  4. இனிமேல் பேசி பயன் ஏதுமில்லை எல்லாம் தலைக்கு மேல் போய்விட்டது போல தோன்றுகிறது... மக்களும் சமுகத்திற்கு எது நல்லது கெட்டது என்று பார்க்காமல் தங்கள் கட்சிக்கு கட்சி தலைமிக்கு எது நல்லது என்று நினைத்து ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கிறார்கள் அவர்கள் சிந்திப்பது இல்லை இதனால் எதிரகாலத்தில் அவர்களின் வாரிசுகள் பாதிக்கப்படப் போகிறார்கள் என்று

    பதிலளிநீக்கு