புதன், 2 டிசம்பர், 2015

அடிமையின் மோகம்...

அன்பின் சக்திக்கு,
                                    கண்டிப்பாய் மழைபற்றி எழுதப்போவதில்லை என்றிருந்தேன். மழையின் தாக்கத்தில் நீயும் சென்னையின் தீவுக்கூட்டம் ஒன்றில் இருப்பதை எண்ணி நானும் கவலை கொள்கிறேன் தான்...
என்ன செய்ய ?
சராசரி இந்தியனாய் வாக்குகளில் தான் காட்டமுடிகிறது...

இந்த முறை வாக்களிக்கும் போது நிறைய யோசிக்கவேண்டியிருக்கிறது..

நீரின் தேக்கத்திலிருந்து நீயும் சென்னையும் சீக்கிரம் மீண்டுவிடுவீர்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது..
உதவிக்கான கரங்கள் நீள்வதைப் பார்ப்பதில்.

உணவாய்,பொருளாய்,படகாய்,அலைபேசியின் மதிப்புக்கூட்டலால்,பிரார்த்தனைகளால் என விரிகிறது உதவும் கரங்கள்...

கேலிகள் தாண்டி ,மத,இன,வேறுபாடெனும் வேலியையும் உடைத்திருக்கிறது மழை.

மசூதிகளில்,தேவாலயங்களில்,கோவில்களில் மக்கள் நிறைந்திருப்பதை பார்க்கும் போது மனம் மகிழத்தான் செய்கிறது...
இது மழையின் மறுபக்கம்....

எல்லாம் ஒருபக்கம் வைத்துவிட்டு வா...இன்னொன்று பேசுவோம்.

மழைக்காக விடப்பட்ட விடுப்புகளில் எவ்வளவு உற்சாகம் இளைய சமுதாயத்திற்கு...இனி வரும் சனிக்கிழமைகளிலும்,கூடுதல் வகுப்புகளிலும் தான். தெரியும் அந்த சந்தோசத்தின் விலை.

சக்தி,

ஆங்கில வருட துவக்கம் ஜனவரி என்பதே உலகம் முழுமையும் கிட்டத்தட்ட ஒத்துக்கொண்ட ஒன்று...
ஆனால் கல்விக்கூடங்கள்,நிறுவனங்கள் ,இன்னும் சில மட்டும் ஏப்ரலில் தொடங்கி மார்ச்சில் ஒரு வருடத்தை முடிக்கிறார்கள்..

அதற்கென பல காரணங்களைச் சொன்னாலும் ,எல்லாக்காரணங்களிலும் அவர்கள் மாற்றத்தை விரும்பாததே தெரிகிறது. ஒரு மரபு என்பதே மாறக்கூடாதது என்னும் மாயை...

யார் இதனைக்கொண்டுவந்தது?
ஆங்கிலேயர் காலத்தில் வெய்யில் தாங்காத பரங்கிமேனி அந்த காலத்தில் விடுப்பைத்தொடக்கியிருக்கிறான்...

அவன் தொலைந்து பலவருடங்கள் ஆகியும் இன்னும் வைத்துக்கொண்டிருப்பதில் இதுவும் ஒன்று..

பள்ளிக்கல்வியில் மெக்காலே வகுத்த முறை.
நீதி மன்றங்களிலே மைலார்ட் என்னும் வாசகம்,
இப்படி இன்னும் ஆங்கிலேயன் நம்மிடம் அரூபமாக இருந்துகொண்டுதான் இருக்கிறான்.

மற்றதை அப்புறம் எழுதுகிறேன்..

உன் கல்விக்கு வருகிறேன்.
ஆண்டில் சில நாட்களேனும் மழைக்கென விடுப்பு தந்துவிட்டு சனிக்கிழமைகளையும் பள்ளியில் உங்களைப்படுத்தும் நிலைமை வருடம் தோறும் வருகிறது...

கல்வி வருடத்தின் ஆரம்பம் ஆண்டின் ஆரம்பம் போலவே ஜனவரியில் இருந்துவிட்டால் மழைக்காலம் வரும் நாட்களில் இறுதித்தேர்வு விடுப்பில் இருப்பாய்..
ரமணனைக்கொண்டாட வேண்டிய அவசியம் இருக்காது உன் போன்றோர்க்கு.

இப்போதும் என்னைப்போல் சிலருக்கு
படித்த கல்வி ஆண்டுகளில் குழப்பம் வரத்தான் செய்கிறது..

இதை மாற்றுவதில் என்ன சிரமம் இருக்கிறது..அரசும் ஆர்வலர்களும் இந்த நேரத்திலாவது இதனை யோசிக்கவேண்டும்..
மரபு மட்டும் தான் இதுவெனில், மாற்றுவதில் தயங்கவேண்டியதில்லை.

கல்வியாகட்டும்,கலாச்சாரமாகட்டும்,அது நம் நாட்டின் சூழ்நிலைகளைப்பொறுத்தே அமைவதில் என்ன சிரமம்..?
மாற்றுவதில் யாருக்கு என்ன நட்டம்?

கல்விமுறைகளையே மாற்றவேண்டித்தான் இருக்கிறது...

முதலில் இதனில் ஆரம்பிக்கட்டும்..

அத்தனை சிரமங்கள் தந்தாலும்,
நிறையவே யோசிக்க வைத்திருக்கிறது மழை..
அடடா...
மழையை தவிர்க்க முடியவில்லையம்மா...

அன்புடன்,
செல்வக்குமார்


22 கருத்துகள்:

  1. மசூதிகளில்,தேவாலயங்களில்,கோவில்களில் மக்கள் நிறைந்திருப்பதை பார்க்கும் போது மனம் மகிழத்தான் செய்கிறது...
    இது மழையின் மறுபக்கம்....

    மக்கள் மதங்களைப் பார்ப்பதில்லை,
    மனங்களைத்தான் பார்க்கிறார்கள்
    அரசியலோ ஓட்டை மட்டுமே பார்க்கிறது

    கல்வியாகட்டும்,கலாச்சாரமாகட்டும்,அது நம் நாட்டின் சூழ்நிலைகளைப்பொறுத்தே அமைவதில் என்ன சிரமம்..?
    மாற்றுவதில் யாருக்கு என்ன நட்டம்?

    நண்பரே, திபாவளித் திருநாளுக்கு முதல் நாள்
    பள்ளிகளை நடத்தியே ஆக வேண்டும் என்று
    மாவட்ட ஆட்சியர்உத்தரவிட்டதாக
    முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்தசெயல் தங்கையில்
    அரங்கேறியது
    ஆனாலும் நண்பரே
    டிசம்பர் 24 ஆம் தேதியிலிருந்து சனவரி 2 வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை
    கிறிஸ்தமஸ் கொண்டாடவும்.,புத்தாண்டை வரவேற்கவும்
    இதை எங்கே போய் முறையிடுவது என்று தெரியவில்லை
    எத்துனையே அமைப்புகள் இயங்குகின்றன
    யாருமே இது குறித்து வாய் திறந்தும் பேச மறுக்கிறார்கள்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பின்னுட்டம் நண்பரிடமிருந்து இத்தனை ஆதங்கமாய்...மகிழ்ச்சியாய் இருக்கிறது நண்பரே...

      நீக்கு
  2. தங்கையில்

    எழுத்துப் பிழை நேர்ந்து விட்டது
    தஞ்சையில் என்று மாற்றி வாசிக்கவும் நண்பரே

    பதிலளிநீக்கு
  3. உங்கள் குமுறல் அறிகிறேன் நண்பரே...
    நாம் தான் முன்னெடுக்கவேண்டும்...இதனை ...வேதனையாயிருக்கிறது...பின் வரும் சமுதாயம் நம் கோழைத்தனத்தை கேலிசெய்யும்....

    நன்றிகள் பல....

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது... ஆனால் மாற்றம் ஏற்பட சாத்தியமில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டி டி... என்ன இன்னும் ஒரு பதிவையும் காணவில்லை...உங்களிடமிருந்து...

      நீக்கு
  5. நிறையவே யோசிக்க வைத்திருக்கிறது மழை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான் தோழர்...இன்னுமிருக்கிறது...நீங்கள் முன்னெடுங்கள்...

      நீக்கு
  6. நண்பரே கோடை நேரத்தில் பள்ளிகள் இல்லாதது வெள்ளையன் செய்த நன்மை தானே. நம் பள்ளிகளில் உள்ள வசதிகளை பார்த்தால் கோடை நேரத்தில் இங்கே சென்றால் நம் இளம்பிஞ்சுகள் சிதறிவிடும் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெயில் தாங்கும் நாம் மழைக்குத்தானே...சாகிறோம்..
      ஒரு யோசனைதான் நண்பரே....விழிக்கட்டும்..

      நீக்கு
  7. உண்மைதான்..மழை நேரத்தில் விடுமுறை விடுவது யோசிக்க வேண்டிய ஒன்று தான்..

    பதிலளிநீக்கு
  8. எனக்கும் இதில் உடன்பாடு இருக்கிறது நண்பரே, வெள்ளையர்கள் விட்டுச் சென்றதைத்தான் நாம் இன்னும் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறோம். இன்னமும் ரிப்பன் பிரபு, கர்சன் பிரபு என்று அடிமைத்தனத்தை தானே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். முதலில் வெள்ளையனுக்கு சாதகமாக இருக்கும் இந்த கல்வியையும் அவன் எழுதிய வரலாறையும் மாற்ற வேண்டும். நீதி மன்றங்களுக்கு விடும் கோடை விடுமுறையை ஒழிக்க வேண்டும். இப்படி எளிதாக செய்ய முடியக்கூடிய செயல்களைக் கூட செய்யாமல் கிட்டத்தட்ட 70 வருடங்களை நெருங்கி விட்டோம்.

    இதையெல்லாம் செய்யாமல் வாய்கிழிய பேசுகிறார்கள் திராணியற்ற அரசியல்வாதிகள்.!

    பதிலளிநீக்கு
  9. சின்னவளுடன் சக்தியையும் மனம் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டது கவிஞரே..!

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா ..உண்மையில் உங்கள் பின்னூட்டங்கள் என்னை உற்சாகப்படுத்துகின்றன...நன்றி...

      நீக்கு
  10. பல விஷயங்களில் இப்படித்தான் - நம்மை ஆட்சி செய்தவர்கள் விட்டு விலகினாலும், அவர்கள் வகுத்த வழிகளையே பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்....

    பதிலளிநீக்கு
  11. “கேலிகள் தாண்டி ,மத,இன,வேறுபாடெனும் வேலியையும் உடைத்திருக்கிறது மழை“ உண்மைதான் செல்வா. அது ஒருபுறமிருக்க,
    இந்த “கல்வியாண்டு” மட்டுமல்ல, ஏப்ரல் துவங்கி மார்ச்சில் முடியும் “நிதி ஆண்டு“முறையையும் மாற்ற வேண்டும். இது ஒரு சர்வதேச வழக்கம் என்பதால் இந்த முறை தொடர்கிறது.என்று நினைக்கிறேன். ஆங்கிலேயன் போனபின்னும் ஆங்கிலத்தையே விடாத நாம் இந்த ஆங்கிலநடைமுறைப் பாசத்தை விடவேண்டுமானால், பலபல, பற்பல, பல்பல, பலப்பல மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். அது, இந்தியப் பொருள்களையே வாங்குவதில் போய் முடியும் அப்பறம் தானே நம் கல்வி, நம்தொழில், நம் வாழ்ககை, நம் அரசு வரும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் இதைப்பற்றி கொஞ்சம் விரிவாக செய்யக்கூடாதா ஐயா?

      நீக்கு
  12. செல்வா நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் அனைத்தும் சரியே. ஆனால், கோடைகால விடுமுறை ஆங்கிலேயன் கொண்டு வந்தது என்பதை விடுங்கள். நமக்கே அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லையே. அப்புறம் எப்படிக் குழந்தைகள் தாங்குவார்கள். வெயிலின் கடுமை சும்மாவா சொல்லுங்கள். அனல் பற்றிக் கொள்ளும். அதுவும் பள்ளிகள் அதற்கேற்ற வசதிகள் இல்லாதவை.

    மேலை நாடுகளைப் போல நம் நாட்டிலும் மழைக்காலத்திலும் பள்ளிகள் செல்லுவது போல தண்ணீர் தேங்காமல் செய்ய வேண்டும்.கோடையில் பள்ளிகள் குளிரூட்டப்பட வேண்டும். எத்தனைப் பெண் குழந்தைகள் கோடையில் அவதிப்பட்டு அவர்களது மாதாந்திரப் பிரச்சனைகளால் தொற்று வருகின்றது தெரியுமா? பள்ளியில் நல்ல கழிவறைகள் இருக்கின்றதா? எல்லாம் ஆவன செய்தால் நீங்கள் சொல்லுவதும் சாத்தியமே. அரசு முதலில் நடைமுறைச் சிக்கல்களைக் களைவதில் முநைய வேண்டும்...

    உங்கள் கடிதங்களையும் மிக மிக ரசிக்கின்றோம் ...

    பதிலளிநீக்கு