ஞாயிறு, 27 டிசம்பர், 2015

பேருந்தில் வந்த கவிதை...


முக்கால்வாசி
இரவை விழுங்கும்
சொந்த ஊர்
பயணம்.

ஒவ்வொரு தடவையும்
ஏதேனும்
ஓரிடத்தில்
விசிறிப்போகிறது
மழை.

கனத்த ஒலிப்பான்களுக்கிடையே
80 களின் பாடல்கள்.

ஒரு பயணியிடம்
சத்தமிடும்
நடத்துனர்.

குறந்தபட்சம்
ஒரு
கெட்டவார்த்தையேனும்
உதிர்த்துவிடும்
ஓட்டுனர்.

சாலையைவிட்டு
கவிழ்ந்துகிடக்கும்
ஓர் வாகனம்.

சாலையிலேயே
அரைந்துகொண்டிருக்கும்
ஒரு நாயின்
கோர மரணம்.

ஊர்களின்
தொடக்கத்தில்
கண்ணீரஞ்சலிப்
பதாகைகள்.

சூலமும் வேலும்
மாறிமாறி
ஒளிக்கும்
சீரியல் விளக்கு
அம்மன்கள்.

திடீரென
முளைக்கும்
உணவகங்கள்.

சுங்கச்சாவடிகளின்
காத்திருப்பில்
கண்ணாடியூடே
நுழையும்
வளையல்
அணிந்தவர்களின்
வசூல்.

பேசிக்கொண்டேயிருக்கும்
இரண்டு பெண்கள்.

பெருநோய் விரல்களென
முன்னிருக்கை
பெண்ணின்
முதுகு சுரண்ட
மடங்கியிருக்கும்
மத்தியவயது 
மனிதனின்
பொய்த்தவம்.

சோர்ந்துபோனதாய்
மடியில்
படுத்துறங்கும்
புதுக்கணவன்.

விடிந்துவிடும்
விரைவிலென்றாலும்
வீடுவந்து
புரளும் வேளை..

வந்துவிடுகிறது..
கவிதை.

13 கருத்துகள்:

  1. ஆமாம் பொதுவாகப் பேருந்துப் பயணம் எல்லாம் இப்போது இப்படித்தான்...அப்படியே எழுதியிருக்கின்றீர்கள் ...அருமை.

    பதிலளிநீக்கு
  2. அருமை ஐயா..இந்த கவிதையை படிக்கும் போது காட்சிகள் கண்ணில் வண்ணமிட்டன வருனணையாக ஐயா..


    நன்றி..

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. கவிதை காட்சியாக விரிகிறது கண்களில்!
    உங்கள் கவிதைப் பயணம் தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள நண்பரே,
    வணக்கம்.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016
    நட்புடன்,
    புதுவைவேலு

    பதிலளிநீக்கு
  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பணி.... நல்ல பாணி ....வாழ்க ...சிறக்க ...மிளிரக....

    பதிலளிநீக்கு
  7. விடிந்துவிடும்
    விரைவிலென்றாலும்
    வீடுவந்து
    புரளும் வேளை..

    வந்துவிடுகிறது..
    கவிதை.

    அப்படியா? ம்ம்ம்ம் ஒக்கே!

    பதிலளிநீக்கு
  8. பேருந்துப்பயண கவிதை என் நினைவை எங்கே கொண்டு சென்றுள்ளது என சேனையில் பாருங்கள்.

    நீண்ட பயணத்தில் காண்பதை நினைவில் கொண்டு வர செய்யும் வரிகளோடு கவிதை! அருமை செல்வா! உங்களில் பதிவுகளை சேனையில் மீளபதிவாக்குங்கள். நாங்கள் படிக்க கருத்திட முடியும்.

    பதிலளிநீக்கு
  9. பேருந்துப் பயணத்தில் நடந்தவைகள் அனைத்தும் எங்கள் கண் முன்னும் கொண்டு வந்தீர்கள் அதற்கு அழகாய் வரிகளைக் கோர்த்தீர்கள் பாராட்டுக்கள் உங்கள் கவித்தகமை சிறப்பு
    நன்றியுடன் நண்பன்

    பதிலளிநீக்கு
  10. Adada!!!! Enna nijathai Kan munnal kondu Varum viththai ungal varigalil!!! Ungal karpanai engellam selgiradho angellam engalaiyum azhaithu sellum adheedha thiramai. Arumai . Vazhthukkal Selva sir.

    பதிலளிநீக்கு