ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

வீட்டுச்சோறும் ஊர்க்குழம்பும்..

இப்படி ஓர் தலைப்பு என் வலைப்பூவில் ஆச்சர்யம் தான் எனக்கே.

அது  ஆலைத்தொழிலாளர்களின் காலனி வீடுகளின் காலம்...

406 வீடுகள்...
ஈச்சம்புதர்களும் நரிகளும் கண்களில் எளிதாய் தெரிந்த பூமி..தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து குடும்பம் குடும்பங்களாக நடந்துவந்து சேர்ந்திருக்கிறார்கள்..மற்றொரு மாவட்டத்தில் ஒட்டிக்கொண்டிருந்த நிலத்தில் ஒரு பஞ்சாலையின் இயந்திரச்சத்தங்களும்,சங்கின் ஓசைகளுக்காகவும் நிலத்தை சீர்செய்வதில் தொடங்கியது அவர்களின் நாள்கள்...
பனையோலைக்கூரையிட்ட குடிசைகளில் கவிழ்ந்திருந்தது பிள்ளைகளின் எதிர்காலக்கனவுகள்..

ஆலை ஓடத்தொடங்கிய நாளில் குடும்பங்கள் விரிந்துவிட்டன...
அடுத்த தலைமுறை வந்துவிட்டது..
நாகரீகமும் ,பழமையும் கலந்த விநோத நாள்கள்..


அரிசிகள் அரிதான காலத்தில் குழம்புகள் என்பது  குதிரையின் கொம்புதான்.

கீரைகள் என்பது ரொம்பநாளாகவே மரங்களில் ஒடிப்பதாகத்தான் எனக்குத்தெரியும்...
முருங்கை மரங்களை நான் தேவதரு என்பேன்..
வஞ்சனை இல்லாமல் வெள்ளந்தியாய் வளரும் அதன் கீழ்விழும் பூக்களைக்கூட பொறுக்கிவிட ஒரு கூட்டம் அலைந்து திரியும்...
முருங்கைக்காயின் மகத்துவம் முந்தானை முடிச்சுக்குப்பின் தான் தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்தது காலத்தின் மகா தவறு...
அது கொஞ்சம் முன்னே நடந்திருக்குமாயின் என் வீடுகூட கொஞ்சம் பிள்ளைகளை பார்த்திருக்காது தான்..
வயிற்றுப்பசிக்கு உண்டது தான் தவறு..

மற்றபடி குழம்பென்றால்..
அம்மா டக்கெனவும்
எப்போதும் செய்வது களனிபுளிச்சார்..
ரொம்ப தேவையில்லை ஜென்டில் மேன்..
கொஞ்சம்புளி,அரிசி களைந்த தண்ணீர் உப்பு ..அவ்ளோதான்.. நல்லவேளை அப்போது தண்ணீர் நிறையக்கிடைத்தது..

அம்மா எப்போவேனும் சமைக்க முடியாத காலத்தில் அப்பத்தா களத்தில் இறங்கிவிடும்..
முட்டைக்கோஸ் இலைகளை நறுக்கும்போதே பச்சையாக தின்னக்கொடுத்து தானும் தின்றுகாட்டும்.. சின்ன வயதில் கண்டித்தோட்டத்து வெளிகளில் பழகிய சில ருசிகளை மீட்டுவருவதில் முன்னொரு காலத்தில் தண்டட்டி ஆடி
இப்போது  
வெறுமெனத்தொங்கிக்கொ     ண்டிருக்கும்
காதுகள்
ஆட அடுப்பெரித்து இறக்கி எங்களை உணவிட்ட காட்சிகளுக்காக நான் இப்போதும் அழுவதுண்டு..
தீபாவளி அன்று கறிக்குழம்பு இருக்கும்..சுட சுட இட்லி செங்கருப்பாய் குழம்பு.. எலும்புகளின் இடஒதுக்கீடு அதிகமாய் இருக்கும் குழம்பிலிருந்து எலும்பை எடுத்து உறிஞ்சப்போய் ஆடைகள் அழுக்காகவில்லை எனில் அது என்ன தீபாவளி?

வெடிக்கும் ஓசைகேட்க அது எலும்புடன் திரிந்த நாள்கள்..

அப்பத்தாவோ அம்மாவோ...எங்களை விட அப்பாவின் உணவில் அதிகமாய் கவனம் செலுத்துவார்கள்..ஒற்றை மனிதனாய் பத்துபேருக்கு உணவிட்ட அவரை அவர்கள் பாதுகாத்ததில் ஒரு தவறும் இல்லை என்பது இப்போத்தான் உறைக்கிறது...
ஒரு முட்டை அப்பாவின் சோற்றுக்குள் ஒளிந்திருக்கும்..
அப்பாவை நாங்கள் முழுதாய் ஒரு முட்டையை சாப்பிடவிட்டதில்லை..
குழம்போ, ரசமோ, புளிச்சாறோ இல்லாத காலத்தில் அப்பாவுக்கென ஒரு கிண்ணம் குழம்புதேடிப் புறப்பட்டுவிடும்.

சின்ன அப்பத்தா வீட்டில் போய் அது நிற்கும் போது...அவர் தரும் குழம்பின் காய்கள் வீடு வருமுன் மாயமாகிவிடும் அபாயம் அடிக்கடி நிகழும்..

இந்த குழம்பு விசயத்தில் சின்ன அப்பத்தா அப்பவே இப்போதைய செப் எனப்படும் வல்லுனர்களை எல்லாம் இடுப்பில் தூக்கிவைத்துக்கொள்ளும் சின்னப்பையன்களாக்கி விடும்.
என் அப்பத்தா முட்டைக்கோஸ் என்றால்..சின்ன அப்பத்தா பச்சையாய் ஈரல்,கத்தரிக்காய் என 300 அடிகள் தாண்டும் வேகம்..
கத்தரிக்காயை காம்பைமட்டும் கிள்ளி இட்டு முழுசாய் வைக்கும் ஒரு புளிக்குழம்பை பார்க்கும்போதோ பசிக்கும்..
ஆக குழம்புகள் என்பது சேர்க்கும் பண்டங்களின் ருசியிலா அல்லது செய்யும் பக்குவத்திலா, மனசிலா என்ற என் நெடுநாளைய ஆராய்ச்சி இன்னும் முடிந்த பாடில்லை..
இரவுகளின் அன்றைய நாள்களில் சோற்றுத்தட்டுடன்  வீட்டுக்குவெளியே வந்து உண்பது காற்றுக்காக மட்டுமல்ல..பக்கத்துவீட்டில் மாலை வந்த குழம்பின் மணத்துக்காகவே...

பெரியவன் ஆனதும் தினம் தினம் குழம்பு வச்சு உருளைக்கிழங்கு வறுத்து..இன்னும் வகை வகையான பதார்த்தங்களுடன் கழிப்பதுதான் வாழ்க்கையின் வெற்றி என இருந்தது..

படித்து முடித்தவுடன் வேலைக்குப் போன வீட்டம்மாவிடம் கோழிக்குழம்பு வைக்கச்சொன்னால் என்னைக்கொன்று குழம்பு மட்டுமல்ல ரசமே வைக்கும் அளவுக்கு சைவப்பிள்ளை...
தனிக்குடித்தன நாள்களில் அவரின் சமையலை நான் ரசித்ததை விட எப்படி காதலுக்கு மரியாதை செய்துவிட முடியும்?

எங்கேனும் போய்க்கொண்டிருக்கும் போது ஒரு குழம்பு அல்லது நல்ல சமையலின் வாசங்கள் வரும்போது என்னை நிறுத்தி காலங்களின் பின்னே ஓடவைத்து விடுகிறது..
ஆனால் ரொம்ப நாளாகவே கருவாடு பொறிக்கும் அல்லது குழம்புவைக்கும் வாசங்களை ருசிக்கவே முடியவில்லை..
என்ன ஊர் இது..
நெத்திலி பொறிக்கும் வாசமில்லாத ஊரில் என்ன இருந்து என்ன..நெய்மீன் கருவாட்டின் வாசம் வராத தெருக்களில் தேனாறும் பாலாறும் ஓடியும் யாதொன்றுமில்லை..

பிள்ளைகளோடு வீட்டம்மா பெரும்பாலும் தங்கிவிட்ட இந்த நாளில் நான் ஊர்ப்பிள்ளை ஆகிவிட்டேன்... சமையலறைப் பக்கமே போகாமல் வருடங்களையே தாண்டிவிட்டேன்... குடிநீருக்கான இயந்திரம் மட்டும் அங்கே இல்லை எனில் எனக்கு அந்த அறையே மறந்துகூட போயிருக்கலாம்...
சோறென்பது குக்கரில் மூன்று விசில் தான் என்ற அளவில் சமையல் ஞானம் உள்ள என்னை  சமையல் அறைக்குள் தள்ளி இருக்கிறது தோழர் ஒருவரின் பகீரத முயற்சி..
குழம்பை மட்டும் விற்பனைப் பொருளாக்கி என்னைச்சோறாக்க வைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கலாம் என்றால்..அவர்கள் வைத்துத்தரும் கோழிக்குழம்பும்,கருவாட்டுக்குழம்பும்...வீட்டு ரசமும் இன்னமுமென என் உணர்வுகளுக்கு உணவிடுபவர்களை எப்படித்திட்ட...?

புதுகையின் என் உள்ளார்ந்த தோழர் செல்வா மற்றும் அவர் இணையர் ரேகா இவர்களோடு
சங்கமித்ரா,கௌதம் என ஒரு குடும்பமே குழம்பு கொடுக்கிறது...

அவர்கள் கவர்களில் கட்டித்தருவதைத் தவிர
எந்த வித்தியாசமும் தெரியவில்லை..என் இளமைக்கால குழம்புகள் போலவே...

அன்பின் தோழா...
அடுத்தமுறை எனக்கு கவரில் வேண்டாம்..நான் கிண்ணம் எடுத்து வருகிறேன்...அல்லது சோற்றுத்தட்டுடன் வருகிறேன்...

நீங்கள் தருவது குழம்பு மட்டுமல்ல...
என் மறந்த நாள்களை..

வாழ்த்துகள்..
தோழமைகளே...





















13 கருத்துகள்:

  1. இவையெல்லாம் என் வாழ்வில் நடந்திருந்தால் நான் உணவை ஆராதிக்கும் கலைஞனாயிருப்பேனோ?

    பதிலளிநீக்கு
  2. இவையெல்லாம் என் வாழ்வில் நடந்திருந்தால் நான் உணவை ஆராதிக்கும் கலைஞனாயிருப்பேனோ?

    பதிலளிநீக்கு
  3. ரசித்தேன்.. இல்லை இல்லை.. ருசித்தேன்..

    பதிலளிநீக்கு
  4. வீட்டுச்சோறும் ஊர்க்குழம்பும்..நாக்கில் எச்சில் ஊற வைத்துவிட்டது .... யாரங்கே எடுத்துவாருங்கள் என் தட்டை நானும் கிளம்புகிறேன் மீரா செல்வகுமாருடன் !!!
    எழுத்து நடை அழகு நண்பரே .

    பதிலளிநீக்கு
  5. ரசித்தேன் அண்ணா...
    உங்கள் எழுத்து கிராமத்தின் வாழ்வின் சுவையையும் சேர்த்து என்னுள்ளே கருவாட்டுக் குழம்பாக்கியது... அருமை.

    த.ம. முதல் வாக்கு.

    பதிலளிநீக்கு
  6. தங்களின் எழுத்திலேயே சுவை மூக்கைத் துளைக்கிறது நண்பரே,

    பதிலளிநீக்கு
  7. குழம்பின் ருசி எழுத்தில், வாயில் எச்சில் ஊரவைத்தது, உள்ளார்ந்த சோகமும் எழுத்தில்

    மிகவும் அருமை

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் !

    அந்தநாள் நினைவுகள்.....அருமை
    இன்றுவரை நமக்கு சமைத்து உண்பதில் தான் மகிழ்வு ,,,,,

    தொடர வாழ்த்துகிறேன் குழம்பின் சுவையூறக் கொடுத்த வரிகள்
    ஊர்மண் நினைவுகளை உரசிச் செல்கிறது

    பதிலளிநீக்கு
  9. முருங்கை மரம் ஏழைகளின் காம்தேனுவாய் இருந்த காலமுமதுவல்லவோ சார்? இலை, காய், துளிர், பூ என வாழையோடு சேர்த்து எம்மை வாழ வைத்த அமிர்தம் அவைகள். குழம்பு கொடுத்த நினைவுகள் அழகு தான். எழுத்தும் ருசிக்கத்தான் செய்கின்றது.

    பதிலளிநீக்கு
  10. சுவை எழுத்தில் மட்டுமல்ல, உணர்விலும், உணவிலும்.

    பதிலளிநீக்கு
  11. 👌👌
    ஐயா....தங்கச்சி வீட்டுக் குழம்பை ஒரு தாயுள்ளத்தோடு தோழனாய்ப் பரிமாறிய விதம் சுவை கூட்டுகிறது. தலைப்பே முத்தாய்ப்பாக இருக்கிறது. வார்த்தை தேடித்தேடிப் பாராட்டினாலும் அதையும் மிஞ்சி மணக்கிறது கருவாட்டுக் குழம்பு; அதைவிட சுவை, கவிதையை நீங்கள் சமைத்த பாங்கு!

    . செல்வாவுக்கு ஓர் செல்வா..அடடா!! இது தான் செம அல்வா!! கடைக்கான விளம்பர நோக்கில் ஒரு மாநில மாநாடு நடத்தியிருந்தால் கூட இந்த ஏக்கமும், ஏப்பமும் ஏற்படுமா என்பது சந்தேகமே! எடுத்துக்கொண்ட மூலப்பொருட்களில், யதார்த்த நடையில் செய்த கவிதையெனும் பதார்த்தம் சுவையோ...சுவை!! உங்கள் கவிதையின் ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் எங்கள் விரல்பிடித்துக் கூட்டிச்செல்லும் நீங்கள், ஒருமுறை நம்ம தங்கச்சி வீட்டுக்குக் கூட்டிச்செல்லக் கூடாதா??👼

    . சுவைக்கச் சுவைக்க விருந்தாகும் இப்பதிவு, நாம் தவறவிட்ட பால்யகாலத்து நினைவுகளைக் கண்ணீர் மல்க அசைபோடச் செய்கிறது. கவிதையில் எளிமை, அழகு, சுவை, குழந்தைத்தன்மை, ஏக்கம், சோகம், அழுகை...என எதைச் சொல்ல? எதை விட?? வாழ்த்துக்கள் ஐயா!!🙌

    🙆🙆இந்தப் பதிவு அடுத்த விருதுபெறுவதற்கான அத்துனை தகுதிகளையும் கொண்டுள்ளது என்றால் மிகையில்லை.👏

    பதிலளிநீக்கு