வெள்ளி, 22 டிசம்பர், 2017

கோடிகள்...

அப்பாவுக்கு   அடையாளமே
சலவை வெள்ளைச்சட்டையும்
கோபுரமென சீவிய தலைமுடியும்தான்..

நரைக்கத்தொடங்கிய வயதில்
தரைப்பலகை மட்டும்
வைத்திருந்த  நடேசனுக்கு
தினமும். சவர வேலை
வந்துவிட்டது.

மின்சார  தடைப்படும்
முன்னிரவுகளின் வாசலில்
கதை சொல்ல ஆரம்பிப்பார்..

"ஒரு ஊர்ல ஒரு ராசா" கதை
அப்பா எப்போதும்
சொன்னதில்லை..

வெள்ளைமட்டுமே
போடும்
அப்பாவின் கதையில்
நாயகன்
பிஸ்கட் நிறத்திலொரு
சட்டை போடுவான்..
அவன் வாங்கும்
லாட்டரிச்சீட்டொன்று
பரிசுபெறும்
சம்பவத்தில் தான்
கதை விரியும்..

அவரின் கனவுகள் மட்டுமே
கதைகளாய் இருக்கும்..

நாயகன்
செவர்லெட் காரில்
வருவான்...

அரிச்சந்திர
மயான காண்டத்தில்
சுடுகாட்டில் பாடுவான்...
"சாதியிலும்
அடிமையில்லை
ஆதியிலும்
அடிமையில்லை
பாதியிலே
அடிமையானேனே"

மக்களும் அவரோடு
அழுவார்கள்..

முருகன் வேடத்தில்
வந்தால்
அவருக்கு
உயிருள்ள மயிலிருக்கும்..
வள்ளி வாதிடாமல்
மாலையிடுவாள்..

அவரின் நாயகன்
தினமும்
அயிரைமீன்
உண்ணுவான்..

மாம்பழத்துண்டொன்று
இல்லாமல்
அவன்
உண்பதில்லை.

அவரின்
முழுக்கதையையும்
ஒருநாளும்
நாங்கள்
கேட்டதேயில்லை....

***

அப்பா மரணமடைந்த
நாளில்
போர்த்திய
துணிகளின்  மூட்டையில்
பிஸ்கட் நிறத்தொரு
துணியும்
பல வேட்டிகளுமிருந்தன..

வேட்டியணிவது
விலக்கப்பட்ட
நாள்களில்..

உடுத்தலும்
கொடுத்தலுமின்றி
உறுத்தலுடன்

பதுக்கி வைத்திருக்கிறேன்..

அலமாரியின்
கீழடுக்கில்
அப்பாவின்
கோடிகள்..




















3 கருத்துகள்: