திங்கள், 19 செப்டம்பர், 2016

சக்தி......

அன்பின் சக்திக்கு,

பிறந்தநாள் வாழ்த்துகள்.




நீ கருவிருந்த நாட்களில் பெயர் வைக்கப்பட்ட என் மற்றொரு உயிர்.

அரசு மருத்துவமனையின் அத்தனை கிறீச் என்ற அலறல்களின் ஊடே நான்  உன் குரல் அறிந்தேன்..
அது ஜென்மங்களின் தொடர்ச்சி அல்லவா?
துணிப்பொதியில் சுற்றிய சிவப்பு ரோஜாவாய் தாதி உன்னை தூக்கிவந்து முகம் காட்டிய அதிகாலை..வாழ்வின் விடியல்.

மடக்கிக்கிடந்த விரல்கள் நீவி என் சுண்டுவிரலை உள்வைக்கிறேன்.
இறுகப்பற்றிக்கொண்டாய் என்னையே..

கட்டிலறை தொட்டிலாட கவிதைகளில் நீ மலர்ந்தாய்..
அன்பென்னும் ஆதார சுருதி நீ..
மீட்டியதெல்லாம் மழலைப்பண்கள்.

சிறுகை வீசிய காற்றின் ஓசைகள் இசையாய்ப்போயின.

குப்புறப்படுத்து...
தவழ்ந்து,நின்று, நடந்தென என் வாழ்வின் வசந்தங்கள் உன்னோடு..

நீ வறியவனுக்குக் கிடைத்த வரம்.
உன் பிள்ளைப்பருவ நாட்களே என் கவலை கொன்ற களி நாட்கள்.

வாசிக்கத்தெரிந்த நீ யோசிக்கவும் ஆரம்பித்த அமிர்த வேளைகளில் நான் பிறவி கடந்துவிட்டேன்.

தோளுக்கு மேல் வளர்ந்து தோழியாகிவிட்டாய்...
உன் சொல்லுக்கு பயப்படும் நான் வளர்ப்புக்கோழியாய் கால் சுற்றுகிறேன்.
வாழ்க்கையும்,சமூகமும் ஆயிரம் கற்றுத்தரலாம் சக்தி...
ஒரு மகள் சொல்லும் சொற்களை விட யாதொன்றும் பெரிதாயில்லை.

கட்டங்களும்,பின்னங்களுமென உன் பொறியியற் பாடங்கள் எனக்குப்புரியாதிருக்கலாம்.
ஆயினும் உன் உயரங்கள் ரசிக்கிறேன்..
அ என்ற ஒற்றை எழுத்தை நீ என்ன பாடு படுத்தியிருக்கிறாய்..

செப்புகளில் சிறுவீடு கட்டி, கொப்புகள் உடைத்து மரமாக்கிய மழலைப்பருவம் மறந்து போயிருக்கலாம் உன் கணினிப்படிப்புகளில்.
என் இரவுகளின் வரம் அந்த நினைவுகள்.

அப்பாக்கள் சொல்லாத அன்பு அதிகம் மகளே!
ஆனால் அது தாய்ப்பாலினும் கலப்படம் இல்லாதது.

கண்களின் வழி இறங்கும் ஒரு சொட்டு ஆனந்தக்கண்ணீர் அணைகளில் அடங்காது..

உன் இறக்கைகள் அற்புதமானது..
உன் புகழைச்சுமந்து அகிலமெங்கும் பறக்கும் வல்லமை உடையது..

அண்டரண்டபட்ஷி என ஆகாயம் மறைத்துப் பற..
அன்பென்னும் உளி கொண்டு செதுக்கு இவ்வுலகை. அப்பன்,அம்மையென்ற கருவிகள் நாங்கள்..
உனக்கான பாதை நீயறி...

நதிகளும், அருவிகளும் பிறக்குமிடத்தில் இருந்துவிடக்கூடாது...
நீ காட்டாறு..
அணைகளுக்குள் அடங்காதே..
பின்னர் உன் வரலாறு வாசிக்கப்படும்போது என் பெயரும் இருப்பதன்றி..வேறென்ன என் பேறு?

என் இரண்டாம் தாயே..
எப்போதும் மகிழ்ந்து வாழ்..

அன்புடன்,
உன் அப்பா...


18 கருத்துகள்:

  1. Wow...pirandha naal nalvazhthukkal Shakthi kuttima. Oru thandhaiyin unmaiyana negizhndha idhayam sollum ovvoru varthaiyum appapppa.

    "Appakkal solladha anbu aayiram magale" enne unmaiyana varthai!!! Vasikum podhu kaatchi pravaagamaay pongiyadhu ungal varigal. Azhagu kuttiyin anbu thagappan tharum anbu alappariyadhu. Unmaiyil pesa varthai illai. Negizhndhu poy viten. Vaazhthukkal ayya.

    பதிலளிநீக்கு
  2. வாவ்!!! மிகவும் அருமை சகோ.. அப்பாவிற்கும் பெண்ணிற்கும் வாழ்த்துகள்! தோழி சுவாதிக்கும் சூர்யாவிற்கும்!

    பதிலளிநீக்கு
  3. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் விரும்பிய அனைத்தும் பெற்று குடும்பத்துடன் வளமாக வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமை நண்பரே... மிகவும் டச்சீங்காக இருந்தது. இந்த கவிதையைவிட எந்த விதமான பரிசும் மிகப் பெரியது கிடையாது... உங்கள் மகள் மிகவும் அதிர்ஷ்டசாலி......... என் கண்ணே பட்டுவிடப் போகிறது....

    பதிலளிநீக்கு
  5. மருமகள் சக்திக்கு என் இனிய வாழ்த்துகள். நான் ஏதாவது சொல்ல நினைத்தாலும், உன் அப்பாவின் “இந்த கவிதையைவிட எந்த விதமான பரிசும் மிகப் பெரியது கிடையாது” எனும் மதுரைத்தமிழனின் வரிகளை வழிமொழிந்து வாழ்த்துகிறேன். (நேற்றுப் பூரா என்னுடன் பயணத்திலும் விழாவிலும் இருந்த உன் அப்பா, உன்னைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தார். உன் முதல் வெளிநாட்டுப் பயணம் உலகப்பயணங்களுக்கான முன்னோட்டமாகவும் சிறக்க வாழ்த்துகள் டா!) சூர்யா! Hv r u da? நாளை பேசுகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. தங்களின் அன்பு மகளுக்கு
    என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. என்னைப் போல மகள் இல்லாத அப்பாக்கள் இப்பதிவினைப் பார்த்ததும் அதிகம் ஏங்குவார்கள் என நினைக்கிறேன். ஏதோ மனதில் எனக்கு ஒரு தாக்கத்தை உணர்ந்தேன். உணர்வுபூர்வமாக அதிகம் நெகிழ்ச்சியடைந்தேன். உங்கள் மகளுக்கு வாழ்த்துகள். உணர்வுகளை சிறப்பாக கவிதையாக்கி பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள் இருக்கும் அப்பாக்களும் ஏங்கத்தான் செய்வார் காரணம் உள்ளத்தில் உள்ளதை இப்படி அழகாக எடுத்து சொல்ல எல்லா அப்பாக்களினாலும் முடியாதே.. அப்படி ஒரு அப்பா நாந்தான்

      நீக்கு
  8. ஜம்பு சார் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. தாயுமான தந்தை கிடைக்க சக்தி கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வரியும் உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து வெளிப்படுகிறது. ப்ரியம் ஒரு அமைதியான நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறது. மென்மையான இந்த அன்பும் பாசமும் வாழ்நாள் முழுதும் பரந்து வியாபித்து இருக்க வாழ்த்துகள். ( இப்படி பாசம் செலுத்துபவர்கள் திருமணமானதும் மகளின் பிரிவுக்கு முன்னே தயார் செய்துகொள்ள வேண்டும் என்பது என் தந்தையுடனான அனுபவமும் கூட :) !! வாழ்க வளமுடன் சக்தி !!

    பதிலளிநீக்கு
  9. சக்தி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று இன்பமாக வாழ எனது வாழ்த்துகள் அக்கா.தங்களின் தந்தையின் கவிதையே சிறந்த பரிசு அக்கா.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் !

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சக்தி என்றும் மகிழ்வான தருணங்கள் உமதாக நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளத்துடன் !

    அப்பாவின் கவியினிலே அன்பைக் கண்டேன்
    ......அனுதினமும் அடைந்தகளிப் பெங்கும் கண்டேன்
    முப்பாலில் மொழிந்தகுறள் ஏழ்பி றப்பும்
    ......மூச்சாகி நிற்பதுபோல் வாழ்த்தும் கண்டேன்
    எப்பாடு பட்டிருப்பார் இளமை பொங்கும்
    ......இனியமகள் சக்திபுகழ் உலகம் காணத்
    தப்பாமல் தந்தைகனா வென்றே வாழ்வின்
    ......தடையறுத்துத் தாரகையாய் வாழ்க வாழ்க !

    பதிலுறுக்க வார்த்தைகள் வரவில்லை உங்கள் வரிகளில் மெய்மறந்து போனதனால் ஒவ்வோர் வரியிலும் உயிரோட்டம்
    ஆன்மா தழுவி நிற்கிறது ! அப்பா மகள் அன்பு அகிலம் உள்ளவரை
    தொடர்ந்திருக்க நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க நூறாண்டு !

    தம +1

    பதிலளிநீக்கு
  11. படிக்க தவறவிடக் கூடாத இணையப்பதிவுகள் http://avargal-unmaigal.blogspot.com/2016/09/good-thoughts.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்வா போல எழுத வராது என்று சொல்லிக்கொண்டே இதை எடுத்துத் தனது பதிவில் போட்டு, தானும் ஒரு சிறந்த அப்பா தான் என்று செயலில் காட்டிய மதுரைத் தமிழனின் பிள்ளைகளுக்கு என் வாழ்த்துகள்!

      நீக்கு
  12. சக்திக்கு எனது வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க அண்ணா...
    ஒரு தந்தையின் உள்ள உற்றாய் அற்புதமான பதிவு அன்பு மகளின் பிறந்த நாளுக்கு....
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான பகிர்வு.

    சக்திக்கு எனது வாழ்த்துகளும்.....

    பதிலளிநீக்கு