திங்கள், 26 செப்டம்பர், 2016

பிளாஸ்டிக் வாய்க்கரிசி...

அன்பின் சக்திக்கு,



இனக்கலவரங்கள்,
அலைபேசிக்கடையை உடைத்தும்,பிரியாணிச்சட்டிகளை காலிசெய்தும் நடந்த ஒரு இறுதி ஊர்வலக்காட்சிகள் இன்னும் கண்களில் உறுத்தலாக.

அகண்ட பாரதக்கனவுகளில் இருக்க வேண்டிய நாம் அண்டாக்கள் காணாமல்போகும் கவலைகளில்.

எனது இந்தியா,சுதேசி என்பதெல்லாம் பேசவும் கோஷங்கள் இடவும் இனிப்பாக இருக்கும் வேளை இது.

நான் சொல்ல வந்தது மற்றொன்று சக்தி...

இந்தியச் சந்தை இப்போது சுதேசியாய் இல்லை என்பதே நிலை.

சில காலங்களுக்கு முன்னால் சீனப் பொருட்கள் மிக எளிதாக அடையாளம் காணப்படும் அளவில் இருந்தது.

இன்று சீனப்பொருட்களின் இடையே தான் இந்தியப்பொருட்களை தேடவேண்டியிருக்கிறது.

சீனப்பொருட்கள் இல்லாத இந்திய பெட்டிக்கடை கூட இல்லை.

மிகச்சாதாரணமாக சீனப்பொருட்கள் இந்தியச்சந்தையில் 7800க்கும் மேற்பட்ட வகைகளில் கிடைப்பதாய் சொல்கிறார்கள்.

குண்டூசியிலிருந்து,
கொய்யாக்காய் மிட்டாய் வரை, கொண்டை ஊசி,கொசுமட்டை,இன்னும் பலவாக.

இந்திய பர்னிச்சர் கடைகளில் சீனச்சாமான்கள் இல்லாத கடை இல்லை.
மிக மோசமாக தரமும் சிறந்ததாய் இல்லை.
பிளாஸ்டிக் அரிசி என்கிறார்கள்..பதறுகிறது மனம்.

சீன வெடிகள் இறக்குமதியால் சிவகாசித்தீபாவளிகள் சிறப்பின்றிப்போயின.
இந்திய சிறுதொழில் கூடங்கள் சீந்துவாரின்றிப்போய் விட்டன.

இந்த அளவிற்கு சந்தையை திறந்தது யார்?
நட்பு நாடென்றாலும் பரவாயில்லை..
நம் அருணாசலப்பிரதேசத்தை அவர்களின் வரைபடத்தில் இணைத்துக்கொண்டிருக்கும்,
எப்போதும் எல்லைகளில் பதட்டம் தந்துகொண்டிருக்கும் ஒரு நாட்டின் தரமில்லாத பொருட்களை எவர் அனுமதிக்கிறார்கள் இந்தியாவுக்குள்?

சீனாவிலிருந்து வரும் எல்லாப்பொருட்களுக்கும் தரக்கட்டுப்பாடு செய்யப்படுகிறதா?

சாதியாலும்,மதத்தாலும் கலவரங்களைத்தூண்டி விட்டுவிட்டு அடிவயிற்றில் கத்தி பாய்ச்சிக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் ரத்தம் வருவதை அறியாமல் ஒற்றுமைச்சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறோம்.

மிகக்கேவலமாக சீனப்பொருட்கள் தவிர்க்கமுடியாததாகிவிட்ட அவலத்தை மறைப்பதற்கில்லை.

எனது இந்தியா வல்லரசாகும் என்ற கனவுக்கான மூலம் கூட சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது அவமானம்.

இந்தியச் செல்வங்கள் இப்படி சீரழிய விட்டுவிட்டு இந்திய இறையாண்மை பேசுவது கேவலம் கூட.

ஆட்சிக்கட்டிலின் அடிவருடி அதிகாரிகள் அனுமதித்துவிட்டுப்போகட்டும்.
எல்லாப்பிரச்சனைகளிலும் போட்டி போட்டு கருத்துசொல்லும் வணிகர் சங்கத்தலைவர்கள் செயல்பட வேண்டிய நேரமிது.

இந்தியக்கடைகளில் இந்திய தயாரிப்புகளை மட்டுமே விற்போம் என சபதம் எடுக்கச்சொல்லுங்கள் உங்கள் வியாபாரப் பெருமக்களை.

சீனப்பொருட்களின் அதிக லாபத்திற்காக இந்திய மக்களின் சுகாதாரத்தில்,பொருளாதாரத்தில் அடிக்காதீர்கள்.

இந்தியச்சந்தையில் நீங்கள் விற்கவில்லை என்றால் ..அது தன்னால் வெளியேறிவிடும்.
அப்படி ஒன்றும் சீனத்தயாரிப்புகள் உயிர் காக்கும் அத்தியாவசியப்பொருட்களும் இல்லை.

இந்திய சிறுதொழில் தயாரிப்பாளர்களும் தங்கள் தயாரிப்புகளின் பால் கொஞ்சம் மூளையும்,விலைகளில் கவனமாகவும் இருந்து சந்தையை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டிய அவசர காலம் இதுவே..

வெள்ளையன் மிக நேர்மையாக வியாபாரத்திற்கு வந்து ஆட்சியைப்பிடித்தான்...
சீனர்கள் கொல்லைப்புறம் வழியாக வந்துவிட்டார்கள்..
சமூக வலைத்தளங்களில்,மக்கள் மன்றங்களில் பேசு பொருளாக இது மாற வேண்டும்.
தும்பை விட்டு விட்டோம். வாலையேனும் கெட்டியாக பிடித்து தூக்கி எறிவோம்.

நிலைமை தொடருமெனில் நினைக்கவும் கடினமாக இருக்கிறது..
நம் வாய்க்கரிசி பிளாஸ்டிக்காகவும் இருக்கலாம்.

அன்புடன்.
செல்வக்குமார்.










9 கருத்துகள்:

  1. நல்ல பதிவு செல்வா....தங்களின் ஒவ்வொரு கடிதமும் மகள்களுக்குச் சொல்வது போல சமூகத்தில் நடக்கும் இழிவுகளைச் சொல்லிச் சொல்லும் விதம் அருமையாக இருக்கிறது. நம்மூர் தயாரிப்புகளுமே கலப்படம் ஆகிவிட்டதே!!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் !

    சக்திக்கு எழிதிய மடலில் சந்தைப் பொருளாதாரம் ம்ம் நல்லது
    இருப்பவனைச் சோம்பேறியாக்கி இல்லாதவானாக்கி ஏமாளியாக்கி விடுவதிலே கண்ணும் கருத்துமாய் இருக்கிறது இந்த அரசியல்

    மாறட்டும் மக்கள் மனம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சக்திக்கு எழுதிய மடலில் என்று வாசிக்கவும் நன்றி !

      நீக்கு
  3. மிக நன்றாக சந்தை பொருளாதாரத்தையும்
    நமக்கே தெரியாமல் நமக்குள்ளே புதைந்து
    கிடக்கும் நுகர்வு கலாச்சார மோகத்தையும்
    தோலுரித்து காட்டிய பதிவு அருமை

    பதிலளிநீக்கு
  4. நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதையும் விலை போவதையும் வேதனையோடு பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  5. மிக வேதனைதான். விற்பதைத்தானே வாங்கித்தின்ன வேண்டியிருக்கு ஹ்ம்ம்

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு அண்ணா...
    பிளாஸ்டிக் அரிசி நமக்கு வாய்க்கரிசியாகவும் இருக்கலாம் என்பது வேதனைதான் என்றாலும் அதுவே உண்மையாகலாம்.

    பதிலளிநீக்கு