ஞாயிறு, 29 ஜனவரி, 2017

திறக்காமலே துளிக்கும் நுரை

கருப்பாயி அம்மாச்சி
சாராயம் குடிக்கும்...



ஆண்டுகளின் இடைவெளியில் மதுரையிலிருந்து வருமதற்கு
தூக்குவாளியில் வாங்கப்போகும் சித்தப்பாவுடன் செல்வதுண்டு..
ஆச்சர்யம் கூட்டும் முகங்கள் வாத்தியார்...
உள்ளூர்ப் பூசாரி...
கூடப்படிக்கும் ஒரு பெண்ணின் அப்பா என..
சீமைக்கருவை மண்டிய புதரொன்றில் சிதறி நிற்கும் மனிதர்கள் தாண்டி வாங்கிவருவார்.


ரகசியமாய் குடித்துமுடிக்கும் அம்மாச்சி வாரிவாரி முத்தங்கள் வழங்க ஆரமித்து விடுவார்..

அழுகிய பழவாடை வீசும் மணத்தையும் சகித்து சுருக்குப்பை அவிழ்த்து அளிக்கப்போகும் சில்லறைகளுக்காய்
பொறுத்துப்போவோம்..

அப்பா..
எனக்குத்தெரிந்து மூன்று முறை குடித்திருக்கிறார்..
அப்பா குடிப்பதை விடவும் அதை வர்ணிப்பது அலாதியாய் இருக்கும்.
எது கொண்டு கலக்குவது..
இடைச்சரக்காய் எது கொள்வதென
வாந்தி எடுப்பதுவரை தொடரும்..

மாமாக்கள்
சித்தப்பா..
எல்லாரும் ஒரு கட்டத்தில் படுக்கையில் சிறுநீர் போகுமளவு பழகிவிட்டார்கள்..

விமான நிலைய அங்காடிகளில் வரிநீக்கி வாங்கிவந்த புட்டிகள் சிலவற்றை
பல வருடம் வைத்திருந்தேன்..
அம்மாச்சியோ
அப்பாவோ
இருந்திருந்தால்
பக்கத்தில் அமர்ந்து
முந்திரி வறுத்து
அவர்கள்
முகம் கோணிக்குடிப்பதை
ரசித்திருக்கலாம்..

போன மாத
புதுவைப்பயணமொன்றின்
சீலிட்ட பீரொன்றின்
தகரக்குடுவையை
திறக்க நினைக்கும் வேளையெல்லாம்
பொங்கித்தொலைக்கிறது
ஞாபக நுரைகள்.






10 கருத்துகள்:

  1. நினைவே ஒரு போதை நுரைக்கும் நினைவுகள்.

    பதிலளிநீக்கு
  2. நினைவலைகள் அப்படியே... இருக்கட்டும்

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன சார். அன்றுதான், வீதி இலக்கிய கூட்டத்தின் முடிவில் உங்களிடம் பேசும்போது, உங்கள் கவிதைகளில் தமிழ்சொற்கள் கண்ணதாசனிடம் வந்து விழுவதைப் போல வந்து விழுகிறது என்று சொன்னேன். இந்த கவிதை வரிகளும் புதிதாய் வந்த நுரைபோல பொங்கி வழிகின்றது வார்த்தைகளில்.

      சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொல்வது போல “திறக்காமலே போகட்டும் :-)”

      நீக்கு
  4. திறக்காமலே போகட்டும்.... அதே தான்....

    பதிலளிநீக்கு
  5. நினைவுகளில் மட்டும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  6. சிறுவர்களின் தகரக்குடுவை நமக்கு எதற்கு? அதனால் தோழிகள் சொல்வது போல திறக்காமலே போகட்டும் ஹீஹீ

    பதிலளிநீக்கு