சனி, 17 மார்ச், 2018

முன்றிலாடும் பூக்கள்

தமிழைத்தாண்டியும் எனக்கொரு மொழி பிடிக்குமெனில் அது மலையாளமாய் இருக்கும்..
தட்டுத்தடுமாறி மலையாள மொழிபெயர்ப்புக்கதைகளை வாசிப்பதும்,கவிதைகளை தடவிக்கொண்டிருப்பதும் வாடிக்கை...

ஆனால், நாகர்கோவில் சுபா ரவீந்திரன் அக்கா மிகச்சிறந்த பல்கலை வித்தகி. சமையலாகட்டும்.
சமஸ்கிருதம்,பூ வேலை,சித்திரங்கள் என எது செய்தாலும் அற்புதமாய் அமைந்துவிடும் அவர்களின் இல்லமே கோவிலைப்போல் இருக்கும்...
அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை 50℅ மலையாளமும் 50℅ தமிழும் கலந்து சொன்னபோதே எனக்கும் அப்படியொன்று நடந்திருப்பதும்,படைப்புகளுக்கு மொழியும் இடமும் ஒரு பொருட்டல்ல என்பதும் தெரிந்தது..
எழுதி முடித்து வாசிக்கும் போது.. வரிகளில் பெரிய கவித்துவமோ,நாம் இதுவரை காணாத எந்த காட்சியும் புதிதாகவோ சொல்லிவிடவில்லை..
ஆனால் மெல்லிய பாரிஜாத வாசமும்,அதையும் தாண்டி மனசுக்குள் ஒருவிதமான உணர்வு அலைமோதியதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது...
இனி அந்த கவிதை...



முன்றிலாடும் பூக்கள்...

பால்யத்து
வீட்டின்
கிழக்குமூலையில்..

பயணத்தின்
போதெல்லாம்
செடிகளுடன்
திரும்பிய
தாத்தா
நட்டுவைத்த
மரமொன்று
பூக்களை
மேனிமுழுதுமாய்
குலுங்கிக்கொண்டிருக்கும்.

முன்னிரவில்
மலரத்தொடங்கும்
பூக்களின்
நறுமணம்
கிழக்குவாசல்வழியே
என்னை
அடையும்போது
மரத்தினடிக்கு
ஓடத்துடிக்கும்
பாதங்கள்...

பாட்டி
பயமுறுத்துவாள்..
கந்தர்வன்
வந்தென்னை
கவர்ந்து
போவானென...

விடிந்தும்
விடியாத
புலர் காலைகளில்
மரத்தைச்சுற்றி
மலர்கள்
மெத்தையாய்..
நானும்
தம்பியும்
உருண்டு
புரள்கையில்
ஒட்டிக்கொள்ளும்
அந்த
தேவ சுகந்தம்..
பயப்படும்
பாட்டி
பதறித்துடித்து
அடித்துவைப்பாள்.
கொள்ளைவாசமாய்
பூக்கும்
அந்தப் பூக்களை
பார்க்கலாம்
நுகரலாம்..
ஆயினும்
சூட்டுவதற்கு
முடியாத
சூட்சமப்பூக்கள்..

பதின்ம
வயதில்
வீடும் தோட்டமும்
பிரித்த
பொல்லாத
வேளையில்
என்
பாரிஜாதப்பூ மரம்
சித்திக்கும்
வாசம்
பொதுவுக்குமானது...

சித்தப்பாவுக்கு
சினம்
வந்த
ஒருநாளில்
என்
மரம்
மண்ணில்
விழுந்தது..

ஆயிரம் வகைகளில்
பூக்களைப்பார்த்தும்..
வாசங்கள்
தேடியும்
மறக்கவேயில்லை
என்
முன்றிலாடிய
பாரிஜாதப்பூவின்
உயிர் வாசம்...









5 கருத்துகள்:

  1. முன்னிரவில் மலரும் பூக்களில் வரும் வாசனைபோல இந்தக் கவிதையிலும் சுகந்தம் வீசுகிறது. நாகர்கோவில் சுபா ரவீந்திரன் அவர்கள் பற்றியும் முன்றிலாடும் பூக்கள் பற்றியும் பேசும் இந்தப்பதிவு மிகவும் பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு