திங்கள், 30 ஏப்ரல், 2018

வரலாறு...சுற்றுமோர் தத்துவம்..

மத்திய ஆட்சிக்கான தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கும் சூழல்..

கடந்த நான்கு வருட காலங்களில் நாடு மக்களை தோசையாய் திருப்பி திருப்பி போட்டு சுட்டிருப்பது எல்லாரும் அனுபவித்த கதை தான்...

மானியங்களின் வெட்டில் ஆரம்பித்து வங்கிக்கணக்குகள் நிரம்பி வழிய...
ஒற்றை நொடியில் மக்கள் ரோட்டுக்கு வந்து நின்றதை அவ்வளவு எளிதில் மறக்க முடிந்தால் நீங்கள் என் வரிகளை வாசிக்காமல் வேறு வேலை பார்க்கலாம்..

பூமிப்பந்தின் எல்லா நாடுகளுக்கும் போய்வந்த ஒரு தலைமை..
லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஆடைகள்...அலட்சியமாய் பேசத்துணிந்த அமைச்சர்கள்..
இந்த ஆட்சி பற்றிய குறைகளை சொல்ல ஆரம்பித்தால் என் வலைப்பூ காய்த்து கனிந்துவிடும்..
நிற்க...

நான் எழுத வந்த விசயம் அதுவல்ல...
ஆட்சி என்னும் நாற்காலி கிடைத்தால் செருப்பு கூட கௌரவம் பெறும் தேசம் தான்..

இப்படி ஒரு ஆட்சி நடந்த ஆண்டுகளில் பொறுப்பான எதிர்கட்சிகள் உருப்படியாய் என்ன செய்தது என பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்தாலும் சிறுபுள்ளியும் எனக்கு தெரியவில்லை..

டிவிட்டரிலும்,முகப்புத்தகங்களிலும் வார்த்தைப்போர்கள் நடப்பது சாதாரண மக்களுக்கென்றால் மன்னிக்கலாம்...தலைமைகளே அப்படியெனில் தவறன்றி வேறில்லை..

பணமதிப்பிழப்பு நேரத்திலும்,
நாடே பதறிய மாட்டுக்கறி பிரச்சனையிலும் சொல்லிக்கொள்ளும்படி போராட்டங்கள் இல்லை..அல்லது இவர்கள் போராடி எதையும் மாற்றிவிடவில்லை..
இந்த காலங்களில் கம்யூனிசய இயக்கங்கள் சந்தித்த பகடிகள் சொல்லும்படி இல்லை..

எதிரி எடுத்த ஆயுதமே நம் போராட்டத்தின் வடிவத்தை
முடிவு செய்யும் என்ற தத்துவமெல்லாம் சரிதான் ஆனால் எதிரி என்ன ஆயுதம் எடுத்திருக்கிறான் என்பதேனும் தெரிந்தார்களா என்பதே கேள்வி?

அவர்களின் பொலிட்பீரோ மற்றும் தலைவர்களின் நிலைப்பாட்டிலெல்லாம் எங்களுக்கு கவலையில்லை..
மக்களின் கவலைகள் வெற்று கோஷங்களில் தீர்ந்துவிடும் என்ற அவர்களின் நம்பிக்கையின்பால் தான் எனக்கு நகைச்சுவை வரவில்லை...

ஆட்சியின் 90 சதவீத காலம் அனுபவித்துவிட்டு வெளியேறும் ஒரு மாநிலக்கட்சி..
புதிதாய் கிளம்பியிருக்கும் கூட்டணிக்கான ஆயத்தங்கள்..
அதை எடுத்துச்செல்லும் புதிய புதிய தலைவர்களென அவர்கள் எடுக்கும் முயற்சிகள் நல்லதாகக்கூட உங்களுக்கு தோன்றலாம்...ஆனால் எனக்கு பயமாய் இருக்கிறது..

தெரிந்தோ தெரியாமலோ இணையத்தின் வழியேயும்..இயங்குதலின் அடிப்படையிலும் எதிர்க்கவேண்டிய சக்தியின் பலம் தலைவர்களை விட மக்களுக்கு தெரிந்தே இருக்கிறது..
உதாரணமாய் காவிரி பிரச்சனையில் அவர்கள் செய்யும் சூழ்ச்சி கடைமடையின் எங்கள் படிப்பறிவில்லா ஒரு ஏழைப்பெண் அறிந்து கொண்டிருக்கிறாள்...

கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுகளாக திட்டமிட்டு அதன் இலக்கை நோக்கி நகர ஆரம்பித்தவர்கள்.
தன் ஆதரவாளர்களை அல்லது தங்கள் ஆட்களை உச்ச நீதிமன்றம் முதல் மிச்சமிருக்கும் எல்லா இடங்களிலும் நிரப்பியிருப்பதை உணர்கிறோம்.
நீங்கள் பேசிக்கொண்டிருந்த போது அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
இப்போதும் கூட அப்படித்தான்..

செல்லாத ஓட்டுகள் கூட பெற முடியாத பூமி என உணர்ந்தாலும் அவர்களின் பகீரத முயற்சிகளை... எதிர்த்தரப்பு என்றாலும் பாராட்டுவேன்..

பெரியார் சிலைகளை நம்மை பாதுகாக்க வைத்துவிட்டு அவர்கள் பெரிய சாகர்மாலாத்திட்டங்களை நிறைவேற்ற ஆரம்பித்திருப்பது வெளிச்சமாய் தெரிகிறது...

வெங்காயம் பூண்டு கடலைமிட்டாய்,ஊறுகாய்க்கெல்ல்லம் Gst வரும்போது பெட்ரோலுக்கு ஏனில்லை என்ற ரகசியம் ஒன்றும் பெரிதில்லை.

இப்படி ஆயிரம் சொல்லிக்கொண்டு போக சமாச்சாரங்கள் இருந்தாலும் இப்போது எதிர்த்தரப்பை வீழ்த்த யூகம் செய்திருப்பதாய் நான் உணர்வது சொல்லிக்கொள்ளும் படியாய் இல்லை..

அரை நூற்றாண்டுகள் ஆண்ட ஒரு கட்சி தேசமறிந்த அமைப்பாய் இருக்கும் போது அதை தவிர்த்து மற்றுமொரு கூட்டணிக்கு முயற்சி செய்வது கூட ஆளும் அமைப்பின் செயலாய் இருக்குமோ என்ற சந்தேகத்தை துளிர்க்க வைக்கிறது.

இந்த தேசத்தின் கட்சிகள் ஒன்றும் கற்புக்கரசிகள் இல்லை..ஒற்றைக்கட்சியுடன் மட்டும் கூட்டணி வைத்த கட்சிகள் எதுவுமிருப்பதாய் தெரிவதில்லை...
அதிலும் இத்தனை நாள் இல்லாமல் போராட்டங்களில் ஆர்ப்பாட்டங்களில் தேனீர்சந்திப்புகளில் மனிதச் சங்கிலிப்போராட்டங்களில் கைகள் கோர்த்தும் உயர்த்தியும் இருந்துவிட்டு .இப்போது விட்டுவிட்டுப்போவது உங்கள் கொள்கை சார்ந்த கோட்பாடெனில் முதலில் அதற்கு கொள்ளி வையுங்கள்..

ஊர் ரெண்டுபட்டால் மட்டுமல்ல...எதிர்ப்புகள் ரெண்டு பட்டாலும் அவர்களுக்கு கொண்டாட்டம் தான்...
அத்தகைய உங்களின் முயற்சி அவர்களை மிக எளிதாக இன்னொரு ஆட்சி காலத்தில் இந்தியா முழுமையும் பாலைவனமாக்க நீங்களை ஆரம்பித்து வைப்பதாய்த்தான் அமையும்..
மண்ணாங்கட்டி கொள்கைகளையும்,
சித்தாந்தங்களையும் எதிர்கட்சிகள் யாவும் ஒதுக்கிவிட்டு குறைந்த பட்ச ஒற்றை இலக்கான மதவாதத்தை ஒழிப்பதற்காகவேணும் ஒன்றுசேருங்கள்..
ஏனெனில் இந்த நாட்டின் ஆகப்பெரிய தீங்கு ஊழலில்லை,
ஒழுக்கக்கேடில்லை..
வறுமை கூட இல்லை...
எல்லாவற்றையும் மிஞ்சும் மதவாதமே முதல் கேடு...

இந்த நாட்டையும் அரசியலையும் கொஞ்சமேனும் கவனித்து வரும் ஒரு சாதாரணக்குடிமகனாய் நான் வேண்டுவதும் இதுதான்.
இந்த மாநிலத்தில் ஏற்கனவே மக்கள் நலக்கூட்டணி என்ற வரலாற்றுப்பிழை ஏற்கனவே கசப்பான அனுபவத்தை எங்களுக்கு வழங்கிவிட்டது..
தேசிய அளவில் மீண்டும் அப்படி ஒன்று நிகழுமெனில் அது பேராபத்து..

மாநிலங்களில் இருக்கும் அத்தனை கட்சிகளை ஒருங்கிணைக்க துடிக்கும் உங்களால் காங்கிரஸ் என்னும் கட்சியை ஒருங்கிணைப்பது முடியாததல்ல..
காங்கிரஸும் இன்றைய நிலையில் நிபந்தனைகள் அதிகம் விதிக்கும் நிலையில் இருப்பதாகவும் தெரியவில்லை..

மாண்பமை எதிர்க்கட்சிகளே..
முதலில் கண்ணுக்குத்தெரியும் பிரச்சனையை தீர்க்கப்பாருங்கள்...
அதற்காகவேணும் பிரியாமல் ஒன்று சேருங்கள்..
அது உங்களின் பக்கம் மக்களைத்திருப்பும்..

மக்கள் மனங்களை படிக்காத அவர்களின் கவலைகளை புரிந்து கொள்ளாமல் நீங்கள் எத்தனை கூட்டணி வைத்தாலும் வெல்லுமென தெரியவில்லை..

மீண்டுமொரு வரலாற்றுப்பிழையை செய்துவிடாமல்...காலம் கடக்கவில்லை கை கோருங்கள்...













7 கருத்துகள்:

  1. உங்கள் எழுத்து நடை என்னை மிகவும் நன்றாகவுள்ளது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் ஒரு வரலாற்றுப் பிழையை செய்துவிடாமல்... நச் பதிவு தோழர்.வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பகிரலாமே http://tamilblogs.in/

    பதிலளிநீக்கு
  4. எதிர்க்கட்சிகள் உணர்ந்தால் சரி...

    பதிலளிநீக்கு
  5. "மீண்டுமொரு வரலாற்றுப்பிழையை செய்துவிடாமல்...காலம் கடக்கவில்லை கை கோருங்கள்... " இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற பதிவுகள் தேவைதான்.

    பதிலளிநீக்கு
  6. சிவப்பு நிறத்தில்,அனைத்தும் அழுத்தம்மாக சொன்ன பதிற்வு...வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு