செவ்வாய், 17 மே, 2016

வாழ்த்துகளுடன்,சில வேண்டுதல்கள்..

அன்பின் சக்திக்கு,

வெல்பவருக்கு நம் வாழ்த்துகளை முன்கூட்டியே அனுப்பிவிடுவோம்.

வெல்பவர்களே!
இந்த தேர்தல்கால உத்திகள் இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்.

மனசாட்சி இல்லாத வாக்குறுதிகள்,கூட்டணிக்காய் காத்துக்கிடந்தது,வாக்கு கேட்கப்போன இடங்களில் கிடைத்த மரியாதைகள்,விழுந்தெழுந்த கால்கள்,இணையவெளிகளில் நீங்கள் விமர்சிக்கப்பட்ட விதம்.

எல்லாவற்றிலும் மேலாக இந்த வெயிலில் வாகனங்களில் நின்றுகொண்டு வாக்குகள் கேட்ட கொடூரம்.
உங்கள் எதிரிகளுக்கும் இனி வரவேண்டாம்.

நாளுக்குநாள் கிளம்பிய வதந்திகள்,காணொளிகள் யாவும் கற்காலத்திற்கு திரும்புகிறோமோ என்ற அச்சத்தை கொடுத்துவிட்டது.

ஒன்றை உணருங்கள்.
மக்கள் நீங்கள் நினைப்பதுபோல் முட்டாள்களில்லை.
மகச்சரியாக முடிவெடுப்பார்கள்.
"அன்பார்ந்த வாக்காளப்
பெருமக்களே" இனியும் எடுபடாது.

*உங்கள் வென்ற வேட்பாளர்களில் துறை தெரிந்தவர்களை அமைச்சராக்குங்கள்.

*மிக அன்புடன் அவர்களின் ஆலாசனைகளுக்கு செவிமடுங்கள்.

*தமிழ்நாடு என்றால் கேவலமாக நினைக்கும் மற்ற மாநில,வெளிநாட்டு நண்பர்களுக்கும் உங்கள் செய்கைகள் மூலம் பதில் கொடுங்கள்.

*அரசின் எல்லாச் செயல்பாடுகளையும் வெளிப்படையாக்குங்கள்.

*கல்வி சம்பந்தப்பட்ட முடிவுகளை தெளிவாகவும்,விரைவாகவும் எடுங்கள்.

*லஞ்சம் என்ற வார்த்தைக்கு முழுக்குப் போடுங்கள்.

*மீண்டுமொருமுறை பெருமழை வந்தால், என்ற பயத்துடன் தயாராகுங்கள்.

*ஊழலற்ற செயல்பாடுகளை ஆதரியுங்கள்.

*மேசை தட்டும் கலாச்சாரம் தவிர்த்து கலந்துரையாடுங்கள்.

*எதிர்க்கட்சிகள் ஒன்றும் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை,சட்டமன்றம் தாண்டியும் கைகுலுக்கிக்கொள்ளுங்கள்.

*அரசியல் என்பது புனிதமான மக்கள் பணி என்பதை மக்கள் உணரும் அளவில் இருக்கட்டும் உங்கள் சேவை.

*இலவசங்களைத் த்கவிர்க்கப்பாருங்கள்.

*விளக்குவைத்த கார்களில் ஏறிவிடுவதாலேயே உங்கள் தலையைச்சுற்றி கற்பனை செய்யும் ஒளிவட்டத்திலிருந்து மீளுங்கள்.

இதுவரை என்ன நடந்திருந்தாலும் பரவாயில்லை.
தமிழகம் எல்லாவற்றையும் தாங்கும்.

இனியேனும் வாக்களிக்கும் மக்களை மனதில் வையுங்கள்.

உங்கள் திட்டங்கள் யாவும் மக்களுக்காக மட்டும் இருக்கட்டும்.

ஊழலற்ற நிர்வாகத்தை உங்களால் தரமுடியும்.

இந்த ஆட்சிகாலத்தை மக்களுக்காகவே நடத்திவிட்டு.நெஞ்சை நிமிர்த்தி உட்கார்ந்தபடியே வாக்கு கேட்கலாம்..

மக்கள் இன்னொரு முறை காமராஜரை தோற்கடிக்க மாட்டார்கள்.

நீயென்ன சொல்வது? நாங்களென்ன கேட்பது எனில்...
நல்லது..

அடுத்தமுறை இன்னும் வெயில் அதிகமாய் இருக்கும்.விலைவாசியும் உயர்ந்திருக்கும்.

வாழ்த்துகள்.

அன்புடன்.
செல்வக்குமார்.

11 கருத்துகள்:

  1. மாற்றம் ஆட்சியில் மட்டும் இல்லை ஆட்சி முறையிலும் வேண்டும் என்ற உங்களின் எண்ணம் பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு

  2. ஆட்சியாளர்களே இந்த மதுரைத்தமிழன் நையாண்டி செய்யா வண்ணம் ஆட்சி இருக்க வேண்டும் என்ற ஒரு வரி மிஸ்ஸிங்க் ஹீஹீஹீ

    பதிலளிநீக்கு
  3. மக்கள் இன்னொரு முறை காமராஜரை தோற்கடிக்க மாட்டார்கள்...என்ற சொற்றொடர் முத்தாய்ப்பானது.

    பதிலளிநீக்கு
  4. மாற்றம் அரசியல்வாதிகளின் மனதிலும் வேண்டும் என்பதைச் சிறப்பாகச் சொன்ன கவிதை. பாராட்டுகள் செல்வகுமார்.

    பதிலளிநீக்கு
  5. அற்புதமாக சொல்லிவிட்டீர்கள். கேட்க வேண்டியவர்கள் கேட்டால் நல்லது.
    த ம 4

    பதிலளிநீக்கு
  6. இது கடைபிடிக்கப்பட்டால் நிச்சயம் உறுப்பட்டுவிடும்... அருமை

    பதிலளிநீக்கு
  7. தமிழகத்தில் ஆட்சி என்பது காமெடி மேடை ஆயிற்றே....
    வறவனும் காமெடி பண்றான்
    இருப்பவனும் காமெடி பண்றான்...
    மக்கள் மட்டும் சிரித்துக்கொண்டே
    உள்ளுக்குள் அழுகிறார்கள்...

    பதிலளிநீக்கு
  8. தாமதமாக அதுவும் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு உங்களது இந்தப் பதிவை வாசிக்க நேர்ந்தது. முடிவுகள் மாற்றம் என்று நாம் விரும்பியது அல்லாமல் ஏமாற்றத்தைத்தான் தந்திருக்கிறது என்றாலும், நானும் விசுவும் அதைப் பற்றிப் பேசினோம் அவரிடமும் கூட நான் எனது ஆதங்கத்தைத் தெரிவித்தேன். அப்புறம் பேசிய பிறகு சரி, ஆட்சியில் மாற்றம் வரவில்லை என்றாலும் வந்தவர்கள் இனியேனும் புத்தி தெளிந்து நல்லதாக ஆட்சி புரிந்தால் நல்லது நாம் விரும்பும் நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தால் நல்லது என்று நினைத்து பதிவுகளைப் பார்வையிட்ட போது உங்கள் இந்தப் பதிவு. அருமை....பார்ப்போம்...

    பி கு. குறிப்பாக மதுரைத் தமிழனிடம் மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் சரி ஹஹ்ஹஹ்ஹ...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இந்த முறை ஆட்சியில் மாற்றத்தை கொண்டு வருவார்களா என்று பார்ப்போம் ஐயா..நன்றி

    பதிலளிநீக்கு