வியாழன், 22 செப்டம்பர், 2016

திண்ணைப்பேச்சு வீரர்கள்

அன்பின் சக்திக்கு,

வல்லுனர்கள் ஒவ்வொரு பத்துவருடங்களுக்கும் ஒவ்வொரு துறை அபரீத வளர்ச்சி அடைவதாகக் கூறுவார்கள்..




சுதந்திரமடைந்த நம் தேசத்தில் பசுமைப்புரட்சி,வெண்மைப்புரட்சி,தொழில் புரட்சி எல்லாம் அப்படித்தான்.

பங்கு வர்த்தகங்களில் அந்தத் துறைக்கான பங்குகளின் விலையும் கணிசமாக உயரும்.

இப்போது என்ன புரட்சி நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா?

மருத்துவப்புரட்சி...
நிற்க.

மனிதன் தன் உடல்நலத்தின் மேல் அபாரமான காதல் கொண்டிருக்கும் காலமிது.
மருத்துவர்களை விட மருந்துகளின் பெயரும்,நோய்களின் பெயரும் நாம் அதிகமாக அறிந்துகொண்டிருக்கிறோம்.
சர்க்கரையின் அளவுகளில் பெருமை கொள்கிறோம். அதிகபட்சமாய் நாமே ஊசிகுத்திக் கொள்கிறோம்.

அத்தனை இயந்திரங்கள் மனித உடலுக்காக..

ஆம் சக்தி..
இவையும் கார்ப்பரேட்களின் மற்றுமொரு வியாபார உத்தி..

பத்துவருடங்களுக்கு முன்னால் வந்த ஒரு மல்டிலெவல் மார்க்கெட் நிறுவனத்தின் பணப்பரிமாற்றம் ஆண்டுக்கு 25 கோடிகளில் இருந்தது..
இன்றைய காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளுக்குப்போய்விட்டது..
அதன் முக்கிய விற்பனைப்பொருள் ஒரு சத்துமாவு...சகல நோய்களுக்குமான சர்வரோக நிவாரணி என அதன் கூட்டு வியாபாரிகளால் கூட்டங்கள் போடப்பட்டும்,வீடுகளுக்கு வந்து செய்துகாட்டியும் ஏற்பட்ட வீக்கம் இது.

சர்க்கரை அளவையும் ,ரத்த அழுத்தத்தையும் இதுதான் அளவென யார் நிர்ணயிப்பது?
மருந்துகளின் விலை நிர்ணயம் யாரிடம் உள்ளது?
மருத்துவப் படிப்புகளின் விலை கோடிகளில்..
கொலை செய்யும் அளவு ஏன் போனது..

விளம்பரங்களின் மூலம் கெஞ்சியும்,மருத்துவர்களின் மூலம் மிரட்டியும் நம்மை அவர்களின் வழிக்கு கொண்டுவந்து விட்டார்கள்.

மனித உடல் என்பது மகத்தானது சக்தி
அது தனக்குத் தேவையானதை தூண்டி பெற்றுக்கொள்ளும் அற்புத சக்தி கொண்டது.
நாம் தான் அதனை புரிந்துகொள்ளத் தவறியிருக்கிறோம்.

சர்க்கரைகள் உணவால் வருவதல்ல..
உணர்வால் வருவதாய் உணர்கிறேன்.

மருத்துவ மோசடிகளின் உச்சகட்டம் குடிநீர் பாட்டில்கள்.
இரண்டு லிட்டர் குடிநீர் பாட்டில் ஒரு பிரபல அயல்நாட்டு நிறுவனம் 35 ரூபாய்க்கு விற்கிறது.
மிக மோசமான உண்மை..நாம் அதனை வாங்கி கவுரப்பட்டுக்கொள்கிறோம்.
பத்துரூபாய்க்கு அம்மா குடிநீர் வாங்கும் கனவான் மிக கவனமாக அதன் ஸ்டிக்கரைக் கிழித்துவிடுகிறார்..
35 ரூபாய்க்கு வாங்குவதை வெளியில் தெரியும்படி வைத்துக்கொள்கிறார்.
யார் கற்றுக்கொடுத்தது இந்த போலி கௌரவ வேடம்.?

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நாம் பொருத்தும் ஒவ்வொரு வீடும் அந்நிய நாட்டிற்கு ஒரு கப்பம் கட்டுகிறோம்.

நமது நதிகளின் தண்ணீர் உறிஞ்சி நம் தலையிலேயே கட்டுகிறார்கள்.
நாம் நக்கிக் குடிக்கிறோம்.

புரட்சி ,மண்ணாங்கட்டி எல்லாம் பொத்தென மேலிருந்து குதித்துவிடாது.
நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

குடிநீரை சுத்திகரிக்க நம்மிடம் ஆயிரம் முறைகள் உண்டு.
தேத்தாங்கொட்டை ருசி எவனாலும் கொடுக்கமுடியாது.
அதைக்குடித்த நம் முன்னோர்கள் சர்க்கரை வந்து சாகவில்லை.

முதலில் நம் கரங்களில் ஒட்டிக்கொண்டுள்ள தண்ணீர் பாட்டிகளை தூக்கி எறிவோம்.
அவை தண்ணீர் பாட்டிகள் அல்ல..
நம் நதிகளின் கண்ணீர்.

பயணங்களில் ,நம் வீட்டின் தண்ணீர் நிரப்பிய பாட்டில்கள் நம்மை மிகக்கேவலமாக காட்டிவிடாது.

மனித மனங்களைத்தான் எப்படி மாற்றியிருக்கிறார்கள்?
சுயபுத்தியும்,எதிர்காலத்தின் மேல் நம்பிக்கையும் நமக்கு இருக்குமானால் நாம் தான் மாறவேண்டும்.

தண்ணீர்ப் பொருளாதாரம் மிக வேகமான வளர்ச்சியை தருகிறது அவர்களுக்கு.

துப்பாக்கி ஏந்தியும்,கோஷங்கள் போட்டும், சிறைக்கு செல்வது மட்டும் தான் போராட்ட வழிகளல்ல.
சுய மறுப்பும்,ஆதரிக்காததும் கூட போராட்ட வடிவம் தான்.

ஒவ்வொரு பாட்டில் தண்ணீர் வாங்குவதன் மூலம் நாம் நம் நதிகளை,நாட்டின் பொருளாதாரத்தை,அந்நிய சக்திகளுக்கு கொட்டிக்கொடுக்கிறோம்.

பாட்டில் தண்ணீர்கள் தவிர்க்க முடியாததல்ல.
மனசையும்,நாக்கின் ருசி மொட்டுகளையும்
கட்டுப்படுத்த முடியாமல் நாட்டைப்பற்றியும்,
நோய்களைப்பற்றியும்,
உலகத்தின் பால் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொருவர் பற்றியும் ...
எனக்கு முன்னரே ஒருவர் பாடிவிட்டார்..
"திண்ணைப்பேச்சு வீரர்கள்"

அன்புடன்.
செல்வக்குமார்.



10 கருத்துகள்:

  1. உண்மைதான் நண்பரே
    பேச்சு பேச்சு
    வீண் பேச்சு

    பதிலளிநீக்கு
  2. பாட்டில்களைத் தூர எறிவோம் அவற்றிலிருப்பது தண்ணீர் அல்ல. கண்ணீர்..அருமை.ஆனால் முடியுமா.. ஒரு மண்பானை வாங்கி அதில் விளாமுச்சை வேர் கொஞ்சம் போட்டு க் குடித்துப் பாருங்கள்.எங்கள் வீட்டில் செய்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  3. பாட்டில்களைத் தூர எறிவோம் அவற்றிலிருப்பது தண்ணீர் அல்ல. கண்ணீர்..அருமை.ஆனால் முடியுமா.. ஒரு மண்பானை வாங்கி அதில் விளாமுச்சை வேர் கொஞ்சம் போட்டு க் குடித்துப் பாருங்கள்.எங்கள் வீட்டில் செய்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  4. Ahaha!! Ayya, Unmaiyile viyandhu parkiren ungalai. Dhinandhorum naan pazhagum, parkum vishayathil ithanai arasiyala endru piramippu yerpadugiradhu. Naam kudikkum Kudineerin madhippu velinattin urimaiyaga parkapadugiradhu. Ovvoru varthaiyum miga nutpamaana arasiyalai sumandhu, adhai solliya nerthi sabaash poda vaikiradhu. Num nadhigalaiye urinji namake tharugiraargal; naam nakki kudikkirom. Idhai Vida unmaiyai sureer endru epadi, yaral koora mudiyum?? Azhagu athanai varthaigalum.

    பதிலளிநீக்கு
  5. "துப்பாக்கி ஏந்தியும்,கோஷங்கள் போட்டும், சிறைக்கு செல்வது மட்டும் தான் போராட்ட வழிகளல்ல.
    சுய மறுப்பும்,ஆதரிக்காததும் கூட போராட்ட வடிவம் தான்"
    சத்திய ஆவேசம் உரைநடைச் சொல்லோவியமாய் உலுக்கி எடுக்கிறது.
    செல்வா... என்னால் முடிந்ததைச் செய்வேன்.. இப்ப த.ம.2.

    பதிலளிநீக்கு
  6. அருமையான திறனாய்வுப் பார்வை

    பதிலளிநீக்கு
  7. நல்ல கட்டுரை. எங்கும் பரவி விட்டது பாட்டில் அடைத்த தண்ணீர்!

    பதிலளிநீக்கு
  8. அருமையான வரிகள்...நாங்கள் 99% வீட்டில் காய்ச்சிய நீரைத்தான் எடுத்துச் செல்வதுண்டு. தண்ணீர் பாட்டில்களைப் புறக்கணித்து வருகின்றோம். வீட்டுத் தண்ணீரைச் சுமப்பதில் சுமையாய் நினைப்பதுமில்லை. முடிந்தவரைத் தவிர்க்கிறோம்..

    பதிலளிநீக்கு