வெள்ளி, 17 நவம்பர், 2017

ஆதியில் சொற்கள்...

ஆதியில்
சொற்கள்
வேதமாயிருந்தன.

பாடலென
காதலென
பரிவென
வர்ணங்களின்
பளபளப்பில்
மின்னித்திரிந்தன...
ஊடலின்
பொழுதுகளில்
பேசிய
வார்த்தைகளே
தூதுவர்களாய்
துணை நின்றன்..
கூடலின்
சாமங்களில்
தலையணைக்குள்
சிக்கி
தத்தளித்தன...
நீண்ட இரவின்
இருளில்
நட்சத்திரங்களாய்
இருந்தவை
அவைகள்..
இதயம்
வாயென
இரண்டு
பிறப்பிடங்கள்
இருந்தாலும்
கண்களுக்கும்
அதை
பிரசவிக்கும்
பேறிருந்தன..
கவிதைகளென
திரிந்த
காலங்கள்
சொற்களின்
பொற்காலம்..
வார்த்தைகள்
முகவரியாய்
இருந்ததும்
உண்டு...
சொல்லா வார்த்தைகள்
தொண்டைக்குழிக்குள்
சிக்கி
மண்டைப்பரப்பெங்கும்
வெடிப்பது
அதன்
வேடிக்கை..
கெஞ்சுதல்
மிஞ்சுதல்
எல்லாம்
வார்த்தைளால்
வடிப்பவை.
கிரகிக்க
யாருமின்றி
எதிரொலி
ஆகும்போது
வார்த்தைகள்
பிறழ்ந்து
போகின்றன.
செவிகளை
மூடும்போது
மொழி
மனமுடைகிறது...
வார்த்தைகளின்
அழுகை..
ஆகப்பெரிய
வருத்தம்..
அற்றநீர்க்
குளத்தினில்
அமிழும்
வார்த்தைகள்
செத்துப்போவதே
இல்லை...
ஒற்றைத்துளி
நீருக்கு
எப்போதும்
ஜனிக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக