செவ்வாய், 28 நவம்பர், 2017

கண்களின் வார்த்தைகள்...

காற்றின்வழி
முன்பொருநாள்
பிரியத்தை சொல்லியிருக்கிறேன்
அவளிடம்..

மறுக்கவுமில்லாமல் சிரிக்கவுமில்லாமல்
மத்தியில் முடிந்த
உரையாடல் மட்டுமே
அந்த பிரியத்தின் சாட்சி..

அவரவர் உலகில்
எழுத்துக்களோடு
இயங்கினாலும்
வரிகளிலேதேனும் வாசமடிக்கிறதா
என மோப்பத்தை
அவளும் பிடிக்கக்கூடும்.

இருப்பதாய் சிலமுறையும்
இல்லை அதுவென
உள்ளம் பலமுறையும் செய்யும்
சம்பாஷனைகள் வாடிக்கை...

நொடிகளின் மங்கிய
ஒளியில் கடந்து போனவள்..
இப்போது என் முன்னிருக்கையில்
அமர்ந்திருக்கிறாள்..

அவளைத்தாண்டிய கணங்களில்
என்னை பார்த்திருக்கக்கூடும்..

பன்னாட்டு கருத்தரங்கம்
என்கிறார்கள் மேடையில்....

என் மௌனத்தின்
இரைச்சலில்
எதுவும் கேட்கவில்லை...

3 கருத்துகள்: