வெள்ளி, 3 மார்ச், 2017

செம்புலப்பெயல் நீர்


ஒரு திட்டலில்
கருக்கொண்டது நம் பிரியம்.
கதகதப்புணர்ந்த 
கனவுகள் வழிந்த கொடுவாயென நிகழ் காலைகள் அமுலாயின.

கட்டைவிரலுயர்த்திய
குறியொன்றை நானும்
காதுவரைநீளும் சிரிப்புடை பொம்மையென நீயுமனுப்பிய இணையக்குறிப்புகளில் இரவுகள் சேமிக்க ஆரம்பித்தோம்..

இணையமறுந்து கிடைத்தோர் நாளில் என் தவிப்பும், 
உறவுசூழ் பொழுதொன்று கடந்திருந்த நீயும் ஆரம்ப வரிகளிலேயே அகப்பட்டுக்கொண்டோமென அறியபெற்றோம்..

அளவில்லா இணையக்கற்றை எனக்கும்,
விரைவுச்சுற்று உனக்கும் அறிமுகமானதும் அப்படித்தான்..

வியர்வைசிந்திய கடும்பகல்  ஒப்பனை கலைக்க
என் முகமனுப்பினேன்.
நண்பனொருவனின் சீண்டலிலிருந்த நீ மௌனமனுப்பினாய்.

சமூகத்தைப்பாடப்போவதாய் நானும்
சமையற்குறிப்பெழுதப்போவதாய் நீயும் ஒப்பந்தமிட்ட
இருபத்தெட்டாம் நாளின் வலையுலகு நீங்குமுன் இப்படித்தான் எழுதியிருந்தோம்..

வேலையிருக்கிறது
அப்புறம் பார்க்கலாம்
நன்றி..



5 கருத்துகள்: