வியாழன், 17 டிசம்பர், 2015

கடவுள் உள்ளமே....

அன்பின் சக்திக்கு,
                      உனக்கான கடிதங்களின் வீச்சு..நம்மைத் தாண்டியும் பல உள்ளங்களுக்குள் ஊடுருவுவதை பின்னூட்டங்களும்,பக்கப்பார்வைகளும் காட்டுவதில் மகிழ்வு.

வலைப்பதிவு உலகில் ஒரு சிறுவனின் கீற்றல்களுக்கு வரும் குரல் ஆதரவுகளும் குதூகலிக்க வைக்கிறது.

சிலரை அறிமுகப்படுத்தும் போது உள்ளம் எதையோ சாதித்ததாய் பீடு கொள்கிறது.

பீப் பாட்டுகளின் மத்தியில் பல மவுனராகங்களை கேட்காமலே போய்விடுகிறது காதுகளும்,காலமும்.

மனிதத்தன்மையும்,இரக்கமுமற்ற பல நிகழ்வுகளின் கோர்வையில் சமூகத்துக்காய் வியர்வை சிந்தும் பலர் அறியப்படாமலே போகின்றார்கள்.

எனக்கான சென்னையின் புனிதத்தலமாய் ஒரு இடம் இருந்தது..
நீர்மூலம் அது நிர்மூலமாகியிருக்கிறது.

ஆயிரம் அடித்துப்போன வெள்ளத்தின் மேல் சிறு அருவெறுப்பு தோன்றிய இடம்  அதுவே.

சைதாப்பேட்டையின் ஒரு சாலையில் உயிரோடு இருந்த இல்லம்...

ஆண் பெண்ணென நாற்பது குழந்தைகள்...

சாதாரணக்குழந்தைகள் அல்ல...

பெற்றோரும் கவனிக்க சிரமப்படும் "ஆட்டிஸம்" எனும் பாதிப்பில் வளர்ந்த குழந்தைகள்.

படிப்பறையும் கழிப்பறையாக்கும் கள்ளமில்லா சிரிப்புச்செல்வங்கள்..

தாயினும் மேலாய்,தாதியாய் போதிக்கும் சிறப்பு ஆசியர்கள்..

கேள் சக்தி..
எந்த தன்னலமும் இல்லை..
அரசின் ஒரு பைசாவும் கிடைப்பதில்லை.
முழுக்க முழுக்க உதவும் மனிதர்களின் சின்ன சின்ன உதவிகளால் உருண்ட பெருந்தேர்...

இருவேளையும் தரமான உணவுக்காய் அவர்கள் அலையும் அலைச்சல்கள்..
தரத்தயாராய் இருப்போரின் பட்டியல் பார்த்து அழைக்கும் பாங்கு..

உதவும் உள்ளங்கள் அள்ளித்தந்தாலும்,கிள்ளித்தந்தாலும் ஒரு புன்னகையில் சொல்லும் பிள்ளைகளின் நன்றிப்பாட்டு...
காணக்கண் கோடி வேண்டும்.

திறந்துவிட்ட வெள்ளம்
சூறையாடிப்போயிருக்கிறது...

வீதியிலிருந்த வி.ஜி.சந்தோசம் வெளியேறிப்போனார்...
இவர்கள்....?

சுய அறிவில்லாத பிள்ளைகளை இறுக்கிப்பிடித்துக்கொண்டு ...
அடித்துக்கொண்டு போகும் உணவுப்பொருட்களையும்,சான்றிதழ்களையும்,சில்லறை சேர்ந்திருந்த உண்டியல்களையும்,பிள்ளைகள் சுமந்த வாகனம் புரண்டு போவதையும் ,,கண்ட அவர்களின் கண்ணீர் இன்னும் நின்றபாடில்லை.

எத்தனை உன்னதமான பிறவிகள்?
பொல்லாப்பெருமழை இந்த நல்லோர்களுக்காகவும் பெய்து தொலைத்திருக்குமோ?

பிறந்தநாளுக்காய் கேக் வாங்கும் உன் தோழமைகளிடம் சொல்..அதில் 10 பிள்ளைகள் சாப்பிடலாமென..

அந்த அன்பின் ஊற்றுக்குள் கண்ணீர் சுரப்பது ஆகாது சக்தி..

உங்களில் யாரேனும் உதவுவீர்கள் சிதுதுளியெனினும்,
உங்கள் பாதங்களில் படர நான் தயாராய் இருக்கிறேன்.

ஒரு துளி உப்பிலிருந்தும்,கழிவறைக் கோபையிலிருந்தும் தொடங்க வேண்டியிருக்கிறார்கள்.

உதவிகளுக்கான வேண்டுதல்கள் கூட வைக்கமுடியாதவர்களாய்
சுருண்டிருக்கிறார்கள்.

நம் குடும்பமும்,காலமும் என்னை அனுமதிக்குமாயின் அவர்கள் கூடவே இருக்க ஆசைப்படுகிறேன்.

இயன்றதைச் செய்வோம் சக்தி...
இங்கு ஸ்டிக்கர்கள் ஒட்டமாட்டார்கள்..
சாப்பாடுக்கணக்கு எழுத மாட்டார்கள்..
உன் உதவிக்கான புண்ணியக்கணக்கின் வரவை அந்தப்பிள்ளைகளின் புன்னகையில் சொல்லவைப்பார்கள்...

நல்ல பாட்டுதான்...
கடவுள் உள்ளமே..
கருணை இல்லமே..

திரு.B.இராதாகிருஷ்ணன்.
கருணை டிரஸ்ட்.
7200012973,
9841359935.

அன்புடன்
செல்வக்குமார்.

17 கருத்துகள்:

  1. 46 குழந்தைகள்...ஒருவேளை எங்கள் ராதாவுக்காக நீங்கள் உழைத்தால், அதைவிட மகிழ்வும் பெருமையும் வேறு இல்லை..வெறும் சுவர் மட்டும் தான் இருந்தது. அதோடு..குப்பைகளாகவும் சகதிகளகவும்...எப்போதும் புன்சிரிப்புடன் இருக்கும் எங்கள் ராதா முதல் முறையாய் நான் சற்று வருத்தம் தோய்ந்த முகமாய்ப் பார்த்தேன்..அதன் பின் அவரைப் பார்ப்பதையே தவிர்த்து விட்டேன்..என்னால் அதனைத் தாங்க இயலவில்லை.. எங்களின் 20 ஆண்டுகால நட்புக்கு இந்தக் கட்டுரை ஒரு அங்கீகாரம்...பல பெண்களுக்கும் ஆண் நண்பர்கள் கிடைக்கலாம்...கடக்கலாம். மறந்தும் போகலாம். ஆனால் எங்களுக்கு ஆண் வடிவில் கிடைத்த அன்னை அவர்...என்னை விடவும், அவர் மனைவி பிள்ளைகளும், நமது குழந்தைகளும் எங்கல் அன்பை நேசிப்பது தான் நாங்கள் பெற்ற வரம்..குழந்தைகள் இப்போது உறவினர்கள் போல் பழகுவது..எந்த உறவுகளுமே இல்லாத எனக்குக் கிடைத்த பொக்கிஷம்...சென்னையில், எனக்கு எல்லாமும் அவர்தான்...அப்பா..அண்ணன்...என்று...இந்தக் கட்டுரைக்காக..என் அன்பும், பிரியமும் உரித்தாகுக. என் இதயத்தின் நன்றி....

    பதிலளிநீக்கு
  2. சொல்ல வார்த்தைகளே இல்லை டாடி..அந்தக் குழந்தைகளுக்காக நானும் ஏதேனும் செய்ய நினைக்கிறேன்..செய்வேன்.

    அப்புறம் டாடி உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி,,நீங்கள் அம்மாவின் நண்பரான நம் ராதா அங்கிளைப் பற்றி எழுதியதால், இன்னும் ஒரு வாராத்திற்கு திட்டிலிருந்து நீங்கள் தள்ளி வைக்கப்படுவீர்கள். அதனால் சின்ன சின்னத் தப்புகள் செய்து கொள்ளுங்கள்.அப்புறம் இந்த வாய்ப்பு எப்போதும் உங்களுக்குக் கிடைக்காது..இப்போ அம்மா...முழு நன்றி உணர்விலும், நட்பு உணர்விலும் உங்கள் மேல் பிரிய உணர்விலும்...டாடி ஜமாய்ங்க...ஹா..ஹா...ஹா..

    பதிலளிநீக்கு
  3. அநேகமாக அம்மா உங்களைத் திட்டவே மாட்டாங்க நினைக்கிறேன்..சொன்னது போல் அந்தப் பள்ளியில் போய் சேருங்கள்..வாழ்நாள் உத்திரவாதம்..நான் தரேன்...கலக்குங்க டாடி

    பதிலளிநீக்கு
  4. நண்பரே
    மனம் கனத்துத்தான் போய்விட்டது
    கருணை அறக்கட்டளைக்கு இயன்றதை அவசியம் அனுப்புவேன்
    தங்கள் இந்தப் பதிவிற்கு வந்தப் பின்னூட்டங்களைக்
    கண்டு நெகிழ்ந்து போய்விட்டேன் நண்பரே
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. கேட்கவும் படிக்கவும் கண்ணீர் மல்குகிறது..இன்று நான் கல்லூரி விட்டுக்கு வந்ததும் அம்மா படிக்கக் குடுத்து அப்புறம் தான் தண்ணீர், சாப்பாடே தந்தாங்க. அதான் நீங்கள் இன்று எழுதியதற்கு இன்றே கருத்து வெளியிட முடிகிறது..நான் இரண்டு நிறுவனங்களில் வேலை கேட்டிருந்தேன். ஞாயிறு மட்டும் பணி. ஆனால் வெள்ளத்தால் அந்த நிறுவனமும் ஊதியம் கொடுக்கக் கூட இயலாத நிலையில் இருக்கிறது. அதன் வருமானத்தை, இதெல்லாம் வருமுன்னரே நான் இவர்களுக்குத் தர நினைத்திருந்தேன். இப்போது இதுவும் இயலவில்லை. விரைவில் அடுத்த விடுமுறையில் அந்த ஆயத்தம் செய்ய இருக்கிறேன்..நிச்சயம் செய்வேன் டாடி..என் விடுமுறைகளில் அவர்களுக்கு பாடம் எடுக்கலாமா என்று கூட யோசித்தேன்..ஆனால் அடுத்து அடுத்து எனக்கு உள்ள கல்விக் கடமைகள்...??நன்று டாடி..இங்கு வந்து பணி புரிந்தால் எங்களோடு இருக்கலாமே, அதனாலேயே இங்கே வாங்க..உங்கள் வரவை எதிர்பார்த்து...உங்கள் சக்தி

    பதிலளிநீக்கு
  6. கேட்கவும் படிக்கவும்..மனம் கனக்கிறது நண்பரே......

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் நண்பரே !

    உங்கள் பதிவைப் படித்ததும் ஏதோ ஒன்றினை இன்னமும் செய்து முடிக்கவில்லை என்னும் உணர்வு பிறக்கிறது நெஞ்சில் காலம் எனக்கும் ஒரு கட்டளை தரும் அப்போது அனுப்புகிறேன் அன்பின் மறு உருவங்களை ................//நம் குடும்பமும்,காலமும் என்னை அனுமதிக்குமாயின் அவர்கள் கூடவே இருக்க ஆசைப்படுகிறேன்./// நாங்களும் அப்படியே !

    மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. ஸ்டிக்கர், படம், முகநூல் பதிவு இவற்றைத் தாண்டி, உதவிக்கான புண்ணியக் கணக்கின் வரவை அந்தப்பிள்ளைகளின் புன்னகையில் காணும்படித் தூண்டியிருக்கிறீர்கள்.. கண்ணீரைச் சுண்டிவிட்டுக் கைகொடுக்கத் தூண்டும் பதிவு. இணைந்து செல்வோம் செல்வா.

    பதிலளிநீக்கு
  9. கண்ணதாசன் இறந்தபோது வாலி,
    “எழுதப்படிக்கத் தெரியாத
    எத்தனையோ பேரில்
    எமனும் ஒருவன்-
    ஒரு கவிதைப் புத்தகத்தைக்
    கிழித்துப் போட்டு விட்டான்“ என்னும் வரிகளை -ஒரு மேல்நாட்டுக் கவிதையைத் தழுவி எழுதியதாகச் சொல்வார்கள்.
    இப்போது எனக்குத் தோன்றுவதும் அதுதான்-
    பரிதவித்த பிஞ்சுகளையும் படுத்திவிட்ட இயற்கைக்கு கண்ணில்லை என்பது உண்மைதானே?

    பதிலளிநீக்கு
  10. செல்வா மனம் கனத்துவிட்டது. உங்கள் பதிவு. நேற்றே கீதா சொன்னார் நீங்கள் அவரிடம் சொல்லியதைப் பற்றி. உதவுவோம் அவர்களுக்கு. எனது முகநூலிலும் பகிர்ந்து கொள்கின்றேன்.

    கீதா: நீங்கள் பேசும் போதே மனம் ரொம்ப வேதனைப்பட்டது. //பீப் பாட்டுகளின் மத்தியில் பல மவுனராகங்களை கேட்காமலே போய்விடுகிறது காதுகளும்,காலமும்.// இந்தக் கருத்தை நாங்கள் மிகவும் ஆதரிக்கின்றோம்.

    அதே போன்று கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும்பாலும் ஒரு பிறந்த நாளுக்கு 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை அதாவது ஒரு நபர் கலெக்ட் செய்து பரிசுகள் கேக்குகள் என்று கொண்டாடுகின்றார்கள். இந்தப் பணத்தில் ஒரு பாதியை அவர்கல் இது போன்ற நல்ல காரியங்களுக்கு ஒதுக்கினால் மிகவும் நல்லது. பள்ளியிலும் கூட இது போன்ற கொண்டாட்டங்கள் நண்பர்கள் மத்தியில் இருக்கின்றது. ஏன் வீடுகளில் கூட கொண்டாட்டங்கள் ஒரு பிறந்தநாள் நிகழ்வுக்கு 10000 முதல் 20000 வரை அதற்கும் மேலே செலவு செய்கின்றார்கள். அவர்கள் கொண்டாடட்டும் ஆனால் அதில் ஒரு சிறு தொகையை இது போன்ற குழந்தைகளுக்கு அர்ப்பணித்தால் நல்லது.

    மிக மிக அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  11. பிறந்தநாளுக்காய் கேக் வாங்கும் உன் தோழமைகளிடம் சொல்.. அதில் 10 பிள்ளைகள் சாப்பிடலாமென..
    உண்மையான வரிகள் நண்பரே மனம் கணத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  12. உருக்கமான பகிர்வு...
    இவர்களுக்காக நம்மாலான உதவியைச் செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  13. நல்லவா்களுக்கும், நல்லவா்களாக மாற நினைத்துக்கொண்டிருப்பவா்களுக்கும் இந்த பதிவு உபயோகமாயிருக்கும்...
    அவா்களுக்கும், கருணை இல்லத்திற்கும்...
    இறைவனை பிராா்த்திக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  14. இயற்கையே நீ அன்னை தானா? :(
    கனக்கும் பதிவு,ஆனாலும் பகிர்விற்கு நன்றி சகோ..உதவ வேண்டும். தகவல் குறித்துக் கொண்டேன்

    பதிலளிநீக்கு
  15. அலகான பதில்களின் தொகுப்பு அறுமை....

    பதிலளிநீக்கு
  16. நல்ல பணி.... நல்ல பாணி ....வாழ்க ...சிறக்க ...மிளிரக....

    பதிலளிநீக்கு