சனி, 31 மார்ச், 2018

நந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்?

மிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்..
சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு உண்மையான பிரச்சனைகளைப்பற்றிய பிரக்கினையை காலிசெய்துவிடுவதை உணர்கிறேன்...

அதிகார அமைப்பும் அப்படி ஒரு மனோநிலையிலேயே நம்மை வைத்திருக்க விரும்பிகிறது போலும்..

ஜல்லிக்கட்டுப்பிரச்சனையை கூட,அதிகாரம் அமைப்பானது போனால் போகிறது என கொடுத்துவிட்டு ரொம்பவும் எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை அந்த போராட்டத்தை முடித்துவைத்த விதத்தில் அறிகிறோம்...

மற்றபடி எந்த போராட்டங்களும் அதிகாரத்திற்கெதிராய் வென்றிருப்பதை காணமுடியவில்லை..
1500 நாட்களுக்கு மேலாய் போராடிய கூடங்குளமாகட்டும்,கெயில் ,நெடுவாசல்,கதிராமங்களம்,காவேரி...இப்படி அத்தனை பிரச்சனைகளிலும் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை நோக்கியே பயணிக்கிறார்கள்..
நியூட்ரினோ போகும் பாதையும் அப்படியாகத்தான் இருக்கிறது...

போராட்ட விசயத்தில் எந்த கட்சியின் மீதும் நம்பிக்கை என்னைப்பொறுத்தவரை வரவே இல்லை...

ஊடகங்களைப் பற்றி நானொன்றும் புதிதாய் பேசப்போவதில்லை...

ஆனால், எதிர்க்கட்சிகளாய் செய்யும் போராட்டங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காய்த் தெரியவில்லை.மாறாக அதன் கூரை மழுக்குவதாகவே தெரிகிறது..
வரலாறு காணாத அளவில் பேருந்து கட்டணம் உயர்ந்த போது ஆ...ஊ எனக்குதித்தார்கள்..சிறை நிறைப்புவோம் என்றார்கள்...
அதெல்லாம் சரி ..அவர்களின் போராட்டம் எத்தகைய வெற்றியை சமூகத்திற்கு கொடுத்தது..?

காவேரி பிரச்சனைக்கு இன்னும் பதினைந்து நாட்களுக்குப்பின் கருப்புக்கொடி காட்டி ...ம்ம்ம்.

கழுவத்தண்ணீர் இல்லை.. நூற்றுக்கு மேலான ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்து சாதனை..?

செத்து விழும் மனிதர்களின் போராட்டம் பெரிதாய் இருக்க 1500 மாடுகளுடன் ஜல்லிக்கட்டு..

ஆட்சியும் அதிகாரமும் செய்யும் காட்சிகள் பரமார்த்த குரு கதைகளின் அப்டேட் வெர்சன் தான்..

300 கிலோமீட்டர் நெடுஞ்சாலையில் செல்ல எத்தனை சுங்கச் சாவடிகள்?
எந்தப்பள்ளத்தில் நிறைகிறது இந்தப்பணங்கள்?
எத்தனை எதிர்க்கட்சிகள் எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்...
எந்த அரசியல்வாதியிடமும் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில்லை அவர்கள்...

வரிசையில் காத்திருந்து காசை அழுதுவிட்டுவரும் நம்மில் எத்தனைபேர் அதைப்பற்றி எழுதியிருக்கிறோம்..

1960/70 களில் கம்யூனிய இயக்கத்தலைவர்களின் போராட்ட வரலாறு அனல் பறப்பதாய் இருக்கும்..கூலி உயர்வுக்கும் அதிகாரத்திமிருக்கும் எதிராய் நெஞ்சை நிமிர்த்திய தோழர்கள் எங்கோ மறைந்து போனார்கள்...இப்போதெல்லாம் நெஞ்சை துண்டு வைத்து மூடிக்கொண்டிருக்கின்றார்கள்..
(அதெல்லாம் சரி...இந்த துண்டு போடும் சமாச்சாரத்தை எவன் கண்டுபிடித்தான்?)
இணைய ஊடகங்களில் நாளுக்கொரு பிரச்சனையை ஊதிப்பெருக்கி விளையாடிவிட்டு அடுத்த பிரச்சனைக்கு அலைகிறார்கள்...
ஊரே தீப்பற்றி எரியும் போது பிடில் வாசித்த நீரோவைப்பற்றி பேச  இனி எந்த அருகதையும் இருப்பதாய்த்தெரியவில்லை..பத்தாண்டு ,இருபதாண்டுக்கு முன் எடுத்த படம் போடும் நமக்கு...

நல்ல தலைவர்களை இனி நாமே தான் கண்டுபிடிக்கவேண்டும்..
காலைவணக்கம்,
மாலைவணக்கம்,என வணக்கங்களைப்போட்டு விட்டு விருப்பக்குறிகளுக்கு ஏங்குவதும்,சுயமிகளை பதிவேற்றிவிட்டு கருத்துக்களுக்கு பிச்சை எடுப்பதும்,தமிழனின் பெருமையென பிதற்றிக்கொண்டிருப்பதும் இன்னும் எத்தனை நாள்களுக்கு?

நேற்றைய, தோழர் ஒருவரின் ஆதங்கம்  அழிந்து வரும் தாய்மண்ணில் கொஞ்சம் சொகுசாய் வாழ்ந்த மனிதர்களாய் நாம் மட்டுமே கடைசியாய் இருக்குமோ என்று சொல்லும் போது நெஞ்சு முட்டுகிறது..
நம்மின் அடுத்தடுத்த சமூகம் தண்ணீருக்கும் காற்றுக்கும் வழியின்றி மருந்துகளில் வாழும் போது நமக்கு விடப்போகும் சாபங்களை நினைத்துப்பார்க்கவும் அச்சமாய் இருக்கிறது..
பஞ்சாங்கம் மட்டுமே இருந்த காலங்களில் நம் முன்னோர்கள் செய்த சில முயற்சிகளைக்கூட விஞ்ஞான காலத்தில் செய்யாமல் இருப்பது என்ன சாபக்கேடு?
நொடிக்குள் பரவும் இணைய வேகத்தில் ஐந்துதலைப்பாம்பின் படத்தையா பகிர்வது?

வாழ்ந்து கொண்டிருக்கும் நான் உள்பட்ட இந்த  சமுதாயத்தின் மீது மிகுந்த கவலையும் அருவருப்புமாய் இருக்கிறது...
மூச்சு முட்ட பதிந்துகொண்டிருக்கும் தகவல் மற்றும் பதிவுகளில் ஆயிரத்தில் ஒன்றாய் காணக்கிடைக்கும் அந்த ஒற்றை நம்பிக்கை வெளிச்சங்களையே விடிவெள்ளியாய் மனசு நம்பித்தொலைக்கிறது..

காலம் இன்னும் நம்மைக்கடந்து போய்விடவில்லை..
நல்ல தலைவர்களைத்தான் தேர்ந்தெடுக்க மறந்துவிட்டோம்...இப்போதேனும் நமக்கு அவசியமான நல்ல தகவல்களால் பிரச்சனைகளின் வேரறுக்க ஆராய்வோம்...
சமூகம், பண்பாடு பற்றிய செய்திகளை மட்டுமே இணைய ஊடகங்களில் பரப்புவோம்...
இடையில் சில புல்லுருவிகள் நம் பொறுமையை சோதிக்கத்தான் செய்வார்கள்..
கண்டும் காணாமல் கடந்துபோவோம்...
உங்களுக்குத்தெரியுமா? அவர்களும் அந்தப்பதிவுகளை போட்டுவிட்டு அடுத்தபதிவுக்கு போய்விடுகிறார்கள்...
அவர்களின் பதிவுகளுக்கு வந்து குவியும் ஆபாச பின்னூட்டங்களையும் ஒரு மனிதன் அநாயசமாக கடக்கிறான் எனில் ..புரிந்து கொள்ளுங்கள் எதிரி அவன் குறிக்கோளில் எவ்வளவு கவனமாய் இருக்கிறான்..?  நாம்???











சனி, 17 மார்ச், 2018

முன்றிலாடும் பூக்கள்

தமிழைத்தாண்டியும் எனக்கொரு மொழி பிடிக்குமெனில் அது மலையாளமாய் இருக்கும்..
தட்டுத்தடுமாறி மலையாள மொழிபெயர்ப்புக்கதைகளை வாசிப்பதும்,கவிதைகளை தடவிக்கொண்டிருப்பதும் வாடிக்கை...

ஆனால், நாகர்கோவில் சுபா ரவீந்திரன் அக்கா மிகச்சிறந்த பல்கலை வித்தகி. சமையலாகட்டும்.
சமஸ்கிருதம்,பூ வேலை,சித்திரங்கள் என எது செய்தாலும் அற்புதமாய் அமைந்துவிடும் அவர்களின் இல்லமே கோவிலைப்போல் இருக்கும்...
அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை 50℅ மலையாளமும் 50℅ தமிழும் கலந்து சொன்னபோதே எனக்கும் அப்படியொன்று நடந்திருப்பதும்,படைப்புகளுக்கு மொழியும் இடமும் ஒரு பொருட்டல்ல என்பதும் தெரிந்தது..
எழுதி முடித்து வாசிக்கும் போது.. வரிகளில் பெரிய கவித்துவமோ,நாம் இதுவரை காணாத எந்த காட்சியும் புதிதாகவோ சொல்லிவிடவில்லை..
ஆனால் மெல்லிய பாரிஜாத வாசமும்,அதையும் தாண்டி மனசுக்குள் ஒருவிதமான உணர்வு அலைமோதியதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது...
இனி அந்த கவிதை...

வியாழன், 15 மார்ச், 2018

இடைத்தேர்தலில் மோடிக்கு வெற்றி...

அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில்

மனக்குரங்கு பல சந்தேகங்களை கீறுகிறது...

நம்ப மறுத்தாலும் ஆளும் கட்சி இன்றைய இந்தியாவின் மற்ற கட்சிகளை விட கட்டமைப்பும்,
சரியோ தவறோ ஒரு இலக்கை நோக்கி சீரான செயல்களை செய்வதில் வல்லமை மிக்கது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்...

ஒருமுறை ஆளூர் ஷாநவாஸ் சொன்னதுபோல் நாம் நமக்குள் விவாதங்கள் செய்துகொண்டிருந்த போது அவர்கள் சமூகத்துள் ஊடோடி விட்டார்கள்...
மக்களோடு மிக இயல்பாக கலந்துவிட முடிவு செய்துவிட்டார்கள்.

எடுத்துக்கொண்ட லட்சியத்துக்காக எந்தவித சமரசமும் செய்யாமல் எல்லாவித முயற்சிகளையும் செய்வதை நாம் பலமுறை பார்த்தும் இருக்கிறோம்.
மூன்றாமிடத்தில் இருக்கும் மாநிலங்களில் கூட ஆட்சி அமைப்பதை விடவா சாதுர்யம் இருக்கப்போகிறது?

பலவருடங்களில் வாக்கு சதவீதம் புள்ளிகளின் அளவே இல்லாத திரிபுராவையும் வென்றெடுக்க வெறும் அமைதியான ஜனநாயக முறையிலான தேர்தல் என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்கள் எனில் இந்த பதிவை இந்த இடத்திலேயே நீங்கள் மூடிவிடலாம்..

வாக்காளர்களின் மூளை நரம்புகளைக்கூட கணிக்கும் அளவிற்கு சாத்தியக்கூறுகள் அவர்களிடம் உண்டு.
எந்த பிரச்சனையை எதைக்கிளப்பி மறைக்கலாம் என்பதை நம்மிலும் அவர்கள் அறிவார்கள்...

ஒற்றை தேசம் ஒற்றை மதம் என்ற நெ(கொ)டுங்கனவில் இருக்கும் அவர்கள் மிக எளிதாக தோற்றுவிட மாட்டார்கள்.
மாநிலத்தேர்தல்களில் எப்படியேனும் வென்றுவிடும் அவர்கள் இடைத்தேர்தல்களில் தோற்பதிலும்..
நம்புங்கள்.. திட்டங்கள் இருக்கும்.
சில நாள்களின் முன் பார்த்த மோடி அத்வானி சம்பத்தப்பட்ட காணொளி ஒன்று போதாதா அவர்களின் அரசியல் புரிய?
ராணா அய்யூப் எழுதிய குஜராத் பற்றிய நூலிலேயே தொடங்கிவிடுகிறது அவர்களின் திட்டங்கள்.
ஏகப்பட்ட செலவுகளாலும் கனவுகளாலும் கட்டப்பட்டது அவரின் தலைமைத்திட்டங்கள்.
ஏற்றிய ஏணியை மறக்கும் அவர் எதிர்காலப்போட்டி என கருதும் அல்லது முன்னெடுக்கப்படும் இன்னொருவரை எப்படி வளரவிடுவார்.?
ராணா அய்யூப்பில் படித்த நினைவு..
என்றோ ஒருநாள் அவரிடம் நாட்டின் தலைமை வேண்டுமா அல்லது உங்கள் கொள்கை வேண்டுமா என்றால் மிக நேர்மையாக அவர் தலைமையை தேர்ந்தெடுப்பார்..

ஆக...இந்த தோல்வி பா.ஜ.க வின் தோல்வி என நாம் மகிழ்ந்தாலும் அது மோடியின் வெற்றி தான்..
சாதாரண இந்த இடைத்தேர்தலின் தோல்வி யோகிக்குதான் பாவம்..மாநிலம் தாண்டி முயற்சிக்க முடியாத அயற்சியை கொடுத்திருக்கும்..

என்னடா..இவன் நமது மகிழ்ச்சியை கெடுக்கின்றானே..
இவனுக்கு இதில் ஒரு சந்தோஷமும் இல்லையா எனக் கேட்டால் ..எனக்கும் இருக்கிறது..
எதிரும் புதிருமான மாநிலக்கட்சிகளை கொஞ்சமேனும் இணக்கமாய்ப் போக வைத்திருக்கிறது..
இங்கேயே பாருங்களேன் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது...
தொலைபேசியில் பேசிக்கொள்கிறார்கள்..
சந்தித்துக்கொள்கிறார்கள்..
பேருந்துக்கட்டண உயர்வுபற்றிய போராட்டத்தை மறந்திருக்கிறார்கள்..
இதற்காகவேணும் மகிழ்ச்சி அடையத்தான் வேண்டும்..ம்ம்ம்



வெள்ளி, 9 மார்ச், 2018

ரசம்...


ஒற்றைத்தக்காளி
ஒரு சட்டி நிரம்பும்
ஆதி நாள்களில்
ரசமென்ற
பெயரில்..

குன்னிய
சேவலொன்று
கொதிக்கையில்
ரசமே
சூப்பென
உருக்கொள்ளும்..

சட்டியோ
பானையோ
நிரம்பாத
சமையல்
அம்மாவுக்கு
தெரியாது..

புழு நீக்கிய
கூறுகளின் காயோ...
பூச்சியடித்து ஒடித்த
மரத்தின் கீரையோ
எண்மரின்
வயிறுகள்
நிரம்பியாக கட்டாயம்.

அகப்பைகளில்
அமைந்த கண்கள்
கரண்டிகளில்
காணக்கிடைப்பதில்லை..

மேசைக்கரண்டிகள்..
சோற்றுக்கும்
கறிக்கும்
குடிமாறிய
குக்கர் யுகத்தில்,

சூடுசெய்த
சிறுகுவளை ரசத்தின்
ஆழத்தில்
தெரிகிறது...

வாழ்க்கைச் சக்கைகள்..













வியாழன், 8 மார்ச், 2018

நீ நதிபோல ஓடிக்கொண்டிரு...

விண்மீன்களின்
பள்ளிக்கூடத்தில்
இப்படித்தான்
சொல்லிக்கொடுப்பார்கள்..
பூமியின்
பரப்பில்
பகலிலும்
மின்னுவது
பெண்கள் ..

நதிகளின்
மாநாட்டில்
நன்றித்தீர்மானம்..
அவைகளுக்கு
பெண்களின்
பெயர்
சூட்டியமைக்கு..

கடவுள்கள்
கவலைப்படுவார்கள்
அம்மாக்களை
படைத்த
பின்னே
மனிதன்
கண்டுகொள்வதில்லை..

பூக்களின்
சபையில்
பெருத்த
சந்தேகம்...
வாசம்
வந்தது
பூவையர்
தொட்டதாலா..
பூஜையில்
வைப்பதாலா?

உலகின்
உன்னதம்
என்னென்ன
இருப்பினும்
பெண்ணுக்குப்
பின் தான்
வரிசையில்
நிற்கும்...

பெண்களின்
தினத்தில்
நான்
சொல்லும்
வாழ்த்துகள்
முன்னிலை
வகிக்கும்..




























திங்கள், 5 மார்ச், 2018

கவிஞன் யானோர்...

இலக்கிய
அமைப்பொன்று
நடாத்தும்
கவிதைப்போட்டியின்
முதல்பரிசு
ஆயிரம்
உரூபாயாம்.

முகநூல்
குழுமமொன்று
முடிவுசொல்லுமுன்
போடக்கூடாதென
இறுபத்து ஐந்து
வரிகளில்
மரபோ
புதுசோ
கவிதையை
நள்ளிரவுக்குள்
அனுப்பி
தேர்வானால்...
போட்டோஷாப்பில்
புகைப்படத்துடன்
வாழ்த்துமாம்..

செத்துப்போன
படைப்பாளியின்
சீமையிலிருக்கும்
பிள்ளைகள்
கருமாதிச் செலவை
கவிதைப்போட்டி
நடத்தி
கழிப்பதுமுண்டு..

சித்திரை
தொடங்கி
பங்குனி
வரைக்கும்
தமிழாய்ந்த
அமைப்புகளின்
பெயர்கள்
இரண்டு
படிகளோடு
மார்பளவு
புகைப்படமும்
அனுப்பச்சொல்கிறது..

பி.டி.எப்
அமைப்பில்
எழுத்துருப்
பெயரோடு
போட்டிக்கழைப்பார்கள்
இணையம்
சார்ந்த
பாரிவள்ளல்கள்...

பணமும்
பதிவும்
போடும்
பத்திரிக்கைகளில்
எடிட்டரின்
சொந்த
மின்னஞ்சல்
முகவரி
எல்லோருக்கும்
கிடைப்பதில்லை..

சிற்றிதழ்
தொடங்கி
சிங்கை,
இலங்கை
மலேய
நாடுவரை
அறிவிக்கும்..
போட்டிகளை
அவதானிக்க
வேண்டும்..

தொகுப்பென்று
ஒன்றுபோட
கவிதையைக்காட்டிலும்
தலைப்பிற்குத்தான்
தகறாறுகள்.

செருப்புகள்
தேய்ந்தாலும்
தேறாது,
வாழ்த்துரைக்கென
வல்லிய
கவிஞனுக்கு
வைத்திட்ட
வந்தனங்கள்..

கண்ணீர் அஞ்சலி
மட்டும் போடும்
பத்திரிக்கை முதலாய்..
கையெழுத்தில் வரும்
ஈறாய்
இரண்டிரண்டு
அனுப்பினாலும்..
இதழின்
கடைசி
மூலையில்
வந்து சேர்ந்தது
என்ற
வார்த்தையும்
வருடம் தாண்டி
வந்தால் நிச்சயம்..

சிறப்புப்பரிசென்ற
பரிசு
வாங்க
சீக்கிரமே
கிளம்பிப்போனால்
கிடைப்பதெல்லாம்
முனை நீட்டிய
ஷீல்டொன்றும்
மினுமினுவென
சால்வையொன்றும்..

அச்சச்சோ
கவிஞனென
அச்சத்தால்
கடப்பார்கள்...

கவிதை எழுதி
தகுதியேதும்
உயரவில்லை
வீட்டுக்குள்..
வீதியன்றி
என்ன வழி...
விழி பிதுங்கித்
திரிகின்றோம்..
தெரியுமோ

எங்கள் வலி??