திங்கள், 29 பிப்ரவரி, 2016

எனக்குப் பிடித்தவை...


1 )அற்புதமான எழுத்தாளுமை...

                     http://netkoluvan.blogspot.in/2016/02/blog-post_21.html
                    நெற்கொழுவன்




2 )இயல்பான தமிழ்...

         http://alpsnisha.blogspot.in/2016/02/blog-post_27.html
        நிஷா 
 

3 )  நம்ம கில்லர்ஜி தான்   ..ஆனால்...


        http://killergee.blogspot.in/2016/02/blog-post_17.html

            killergee

4 )   உத்திகளின் பத்திகள்...இது நெகிழ்வு...

       
      http://rajamelaiyur.blogspot.com/2015/12/blog-post.html


5 )   படியுங்கள் வாசம் வரும் ..

         http://ulaipali.blogspot.in/2016/02/blog-post_29.html


6 )   இவர் நம் தோழர் 

                      http://ramaniecuvellore.blogspot.in/2016/02/blog-post_28.html


  7 )  எல்லாம் எழுதுவார்              
          
                        https://vimarisanam.wordpress.com/

8 )   இவரை கொஞ்சம் கவனியுங்கள் 


                  http://www.islamiyapenmani.com/2016/02/blog-post_13.html

9 )   என் அபிமானத்துக்குறிய ....
               

              http://thillaiakathuchronicles.blogspot.com/2016/02/Auto-Drivers-Tourism-Dr-V-Iraianbu.html


10 ) இயற்கையின் காதலி 
                   

               http://kaagidhapookal.blogspot.com/2016/02/loud-speaker-37.html






இவர்களே ..தொடர வேண்டுகிறேன் ...








சனி, 27 பிப்ரவரி, 2016

பாதுஷா கான்..காந்தியின் காந்திகள் 3

அன்பின் சக்திக்கு,

ஒரு மனிதன் நாட்டின் விடுதலைக்காய் துடிப்புடன் போராடுகிறான்.
அவன் நினைத்த விடுதலை வருகிறது.
ஆனால் அவன் நினைக்காத பிரிவினையும் வருகிறது.

உணர்ச்சியற்ற மனிதனாய் பிரிந்த பகுதிக்கு சென்றேயாக
வேண்டியவனாய் இருக்கிறான்.

சுதந்திரத்திற்காய் போராடிய மாவீரன் விடுதலைபெற்ற பின் சிறையிருந்த நாள்கள்...
பதினைந்து வருடங்கள்....

பெஷாவரின் உத்மான்ஜாய் கிராமத்தில் பிறந்து குரானை முற்றும் படித்து முடித்த மிகச்சிறந்த கல்வியாளர்.

மென்பஞ்சென மனது.

கல்வி மட்டுமே கரைசேர்க்கும் கருவி என்ற வித்தை தெரிந்த மனிதர்.

1912 களில் பள்ளிகளை நிறுவி கல்விக்கண் திறந்தவர்.

தியாகங்களாலும்,தொண்டினாலும் மக்களால் முடிசூடா மன்னன் என அழைக்கப்பெற்றவர்.

சிறைகளின் காதலன்.
சிறைக்கூடங்கள் இவரை வாசிக்கவைத்தன..
கீதை,கிரந்தம்,பைபிளென...

"இறைவனின் தொண்டர்கள்" என தனி மக்கள் இயக்கம் நடத்தியவர்.

இன்றைய நாட்களில் தான் எத்தனை தளபதிகளை பார்க்கிறோம்..

1934 கொல்கத்தாவில் "எல்லை காந்தி" என இவரை அழைத்தபோது..படையின் ஒரே தளபதி காந்தி என ஏற்க மறுத்தவர்.

வடமேற்கு எல்லை மாகாணம் முழுவதும் சுதந்திரத்தீயை மூட்டிய வர்.

ஒருமுறையல்ல..
மூன்றுமுறை காங்கிரஸ் தலைமைப்பதவியை ஏற்க மறுத்தவர்.

காய்ச்சல் தனக்கிருந்த போதும் காந்தியின் கால்கள் பிடித்துவிடுவதே மருந்தென கண்ட மகான்.

சுதந்திர பாகிஸ்தானில் நரிகளிடம் சிக்கிய தனியாளாய் சிறைக்கொட்டடிகளில் வாழ்வின் முக்கால் வாசி வசித்தவர்...

கிகிச்சைக்காக பலத்த போராட்டங்களிடையில் ஆப்கானில் அனுமதிக்கப்படுகிறார்.

இந்தியா என்ன செய்தது?

எல்லைகாந்தி என புகழ்ந்தது..

கடிதங்களின் வழி கவலைப்பட்டுக்கொண்டது..

இது விளம்பரங்களின் தேசம் சக்தி!.

மதவெறியற்ற முஸ்லீம் சமயத்தவராகவும்,கொடூரமற்ற போர்வீரராகவும்,
காழ்ப்புணர்ச்சியற்ற பகைவராகவும்,
அணுவளவேனும் நம்பிக்கை துரோகமற்ற நண்பராகவும் விளங்கக்கூடிய ஒருவரை கற்பனை செய்தால் அவர் "கான் அப்துல் கபார் கான்" ஆக இருப்பார்.

காந்தி என்னும் ஒற்றைமனிதனின் மீது கொண்ட பக்தியால் தன்னை இழந்த பலர் இருக்கிறார்கள் வெளியில் தெரியாமல்...

ஒரு கோரிக்கைக்காக போராடி,வென்ற பின்னும் அந்த சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாமல் போன அந்த மனிதரை நாமும் சரியாக கவனிக்கவில்லை என்ற வருத்தம் எனக்கும் உண்டுதான்...

விநோபா பாவே சொல்வது போலவே

"நம்முடைய சுதந்திரப்போராட்டத்தில் உங்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுவிட்டது.
நம்முடைய நண்பர்களால் நீங்கள் கை இடப்பட்டுவிட்டீர்கள் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்"

நாமென்ன ஒப்புக்கொள்வது சக்தி..

வடமேற்கு எல்லை மாகாணத்தை தழுவும்  காற்றும்,
காலமும் ,என்றென்றும் எல்லைகாந்தியின் தியாகத்தை சொல்லிக்கொண்டேதான் இருக்கும்.

அன்புடன்.
செல்வக்குமார்.

புதன், 24 பிப்ரவரி, 2016

மீரா பென்.. காந்தியின் காந்திகள் 2

அன்பின் சக்தி,

இதுவும் ஒரு அன்பின் சக்திதான்.

பருவம் மிளிரும் பாரிஸ் நகரத்துப்பெண் மெடலின்.
1892- பிறந்த யுவதி.

முத்தங்களின் பூமியில் கடற்படையில் பணிபுரியும் தந்தை,நிலச்சுவாந்தாராய் தாத்தா..

இயற்கையின் காதலியாய்,இசையின் ரசிகையாய் இறக்கையடித்துப்பறக்கும் நாட்களில்,இசை பற்றி மேலுமறிய ரோமென் ரோலண்ட்டை சந்திக்கிறார்.

ரோலண்ட் தானே எழுதிய "மகாத்மா காந்தி" என்னும் சிறுநூலை அளிக்கிறார்.
வாசிக்கிறாள்.
இன்னொரு ஏசுவாய் காந்தியை வரிக்கிறாள்.

இலக்கின்றி பறந்த பறவை இந்தியாவை நேசிக்க ஆரம்பித்துவிடுகிறாள்.

இந்த பறவை வருடமொருமுறை வந்துபோகவில்லை.
34 ஆண்டுகள் இந்தியாவிலேயே தவம் செய்த சாதகப்பறவை.

காந்தியின் உண்ணாவிரதங்களுக்கு அவள் மெலிகிறாள்.

ராட்டைகற்கிறாள்.
சைவத்துக்கு மாறுகிறாள்.
மதுபானம் மறுக்கிறாள்.
மொழி கற்கிறாள்.
சம்மணம் இட்டு அமர்ந்து பழகுகிறாள்.
வெறுந்தரை துயில் கொள்கிறாள்.

இசையின் ரசிகை தன் பியானோ விற்கிறாள்.

தாத்தா பரிசளித்த வைர ஊசி விலை செய்து காந்திக்கு காணிக்கை அனுப்புகிறாள்.

யங் இந்தியாவை சந்தா கட்டி படிக்கிறாள்.

காந்தியின் ஆணைக்காய் கப்பலேறக்காத்திருக்கிறாள்.

அந்த நாளும் வருகிறது.

பாரீஸிலிருந்து லண்டனுக்கு.

லண்டனிலிருந்து அவள் தேவதையாய் 1925 நவம்பர் 7  ஆசிரமத்தில் அடிவைக்கிறாள்.

மகாத்மாவின் மகளாகிறாள்.

நூற்றல்,சமைத்தல்,சுத்தம் செய்தல் என அந்த தேவதை தெய்வமாகிறாள்.

காந்தியின் கனவுகள் ஆசிரமத்திலிருந்து ஆரம்பமாவதை அறிகிறாள்.

அவளுக்கும் ஒரு காதல் வருகிறது..சர்தார் பிருத்வி சிங்கிடம்...

காலம் வெல்லும் கருணை தேவதையை காதலா வெல்லும்?

வெள்ளையாடை பூணுகிறாள்.
தலைமுடி குறைக்கிறாள்.
கன்னியாகவே வாழ்கிறாள்.

தந்தை இறந்ததாய் தந்தி வருகிறது..
தமக்கை மரிக்கிறாள்.
தாய் காலமாகிறாள்.
இவள் இந்தியத்தாயின் மடியில் காந்தியென்னும் ஞானத்தகப்பன் அரவணைப்பில் இருந்துகொள்கிறாள் போகாமலே.

மொழிகற்று மக்களோடு மக்களாய் வாழப்பழகுகிறாள்..

அண்ணலின் அத்தனை போராட்டங்களையும் காணும் கண்கள் பெறுகிறாள்.

சைமன் கமிஷன் எதிர்ப்பு,
தண்டி யாத்திரை,
காந்தி-இர்வின் ஒப்பந்தம்

1931 வட்டமேசை மாநாட்டுக்காய் அண்ணலுடன் லண்டன் செல்கிறாள்.
கார் இவள் இளமைக்கால வீட்டின் வழி செல்கிறது.
கண்களின் வழிமட்டும் நடந்துபோகிறாள் இறங்கவே இல்லை..

நூற்றல் மட்டுமல்ல.
நூற்றுக்கணக்கான கட்டுரைகள்.

ஆர்தர்ரோடு சிறை,
சபர்மதி சிறை என சட்டம் இவளை சிறை வைக்கிறது.
பீனிக்ஸ் பறவையாய் இவள் காந்தி நோக்கியே பறக்கிறாள்.

ஒரு தாயாய்,தாதியாய் காந்திக்கு மாறிப்போகிறாள்.

காந்தியின் சாந்தியை சுமந்துகொண்டு சமதானப்புறாவாய் பறக்கிறாள் பல இடங்களுக்கு.

தபஸ்வியாகிறாள்,
ஓராண்டு மவுனதவம் செய்கிறாள்.
ரிஷிகேஷில் இவள் இருந்த போது காந்தி கொல்லப்படுகிறார்.

இவள் காந்திக்கு மரணமில்லை என போகவில்லை அவர் உடல் பார்க்க.

கூடிழந்த பறவையாய்
மீண்டும் படிக்கிறாள்.

உள்ளம் விரும்பும் இசைக்கு இசைவாய்1959இந்தியாவை விட்டு வியன்னா செல்கிறாள்.

இசை மட்டும் அருந்தி அமைதியாய் வாழ்கிறாள்.

1968 இங்கிலாந்தில் நடந்த அண்ணலின் நூற்றாண்டு விழாவில் அரங்கம் நிறைந்த மேடையில் பேசுகிறாள்...கண்ணீர் நிறைகிறது..

பக்தமீரா கொண்ட காதல் இறைக்காதல் என்றால்..
மீரா பென் கொண்டது தந்தையாய் வரித்து தன்னையும் கரைத்த தனிக்காதல்..

தம் நாட்டிற்காக போராடுதல்,சிறைப்படல்,
சாகுதல் இயற்கை..

எங்கோ பிறந்து இங்கே வந்து தன்னை உருக்கி மெழுகாய் எரிந்துவிட்டுப்போன மீராவை எப்படி மறப்பது?

அன்புக்கும்,
தியாகத்துக்கும்மொழி,இன,இட பேதம் கிடையாது.

1982 ஜூலை 20 இல் அவள் மரணித்திருக்கலாம்..
காலம் அவளை மறக்காது.

அன்புடன்,
செல்வக்குமார்.

திங்கள், 22 பிப்ரவரி, 2016

காந்தியின் காந்திகள்...1


அன்பின் சக்திக்கு, 

காந்தி என்னும் ஒற்றை மனிதன் இந்த தேசத்தின் அடையாளமாய் காணப்படுகிறார். 

அந்த அரையாடை மனிதரின் கொள்கைகளில் 

நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் அவரின் கொள்கைகளின்பால் அவர் கொண்ட உறுதி போற்றப்படவேண்டியது.. 

நான் காந்தியைப்பற்றி உனக்கு சொல்லப்போவதில்லை. 

அவரின் சாதனைத்தேருக்கு ஆரங்களாக. 

சரித்திர வெளிச்சம் சரிவர பாய்ச்சப்படாமல்.. 

தியாக வேள்விக்குள் மறைந்தே போன பலரும் குறிப்புகளாகவே வரலாற்றுக்குள் தங்கிப்போனார்கள் 

அபூர்வமாய் ஒரு நூல் 12 சீடர்களை சொல்கிறது... 

ஏசுவின் சீடர்களை விடவும் குறைந்தவர்களல்ல இவர்கள். 

சின்ன சின்ன செய்திகள்.. 

தேவைப்படுமாயின் சில தேதிகள். 

இந்த கடிதம் உன்னை இன்றைய பலரோடு ஒப்பிடவைத்து.உனக்குள் சிறு அதிர்வை ஏற்படுத்தினாலும் எனக்கு மகிழ்வே.. 

ஜே.சி.குமரப்பா 

1892 ஜனவரி 4 இல் தஞ்சையில் ஒரு கிருஸ்தவ குடும்பத்தில் பிறப்பு.. 

1913- லண்டனில் நிறுவனத்தணிக்கை படிப்பு. 

1924-மும்பையில் தனி நிறுவனம். 

பின் அமெரிக்காவில் வணிக நிர்வாகப்பட்டம். 

பிறந்தது முதலே நகர்மய வாழ்க்கை. 

தாய் எஸ்தர் தந்த அறம் சார்ந்த வாழ்க்கை. 

எந்தப்பணியை ஒருவன் செய்தாலும் தன்னுடைய செயலால் ஏற்படக்கூடிய சமூக விளைவை எண்ணிப்பார்க்க வேண்டும். 

இந்திய மண்ணில் ஆங்கிலேயச்சுரண்டலில் பதறும் மனம். 

நண்பர் ஒருவரின் தூண்டுதலால் காந்தியை சபர்மதி ஆசிரமத்தில் சந்திக்கிறார். 

ஒரு மரத்தின் கீழ் நூற்றுக்கொண்டிருந்த ஞான ஒளியில் தன்னை இழக்கிறார். 

காந்தியும் சாதாரண ஆளில்லை..மனிதனின் திறன் அறிவதில் வல்லவர்.. 

பின்னொரு நாளில் எழுதுகிறார்"குமரப்பா பண்படுவதற்காக என்னிடம் வரவில்லை...பக்குவப்பட்ட பின் தான் என்னிடம் வந்திருக்கிறார்" 

யங் இந்தியாவில் பல கட்டுரைகளாய் விரிகிறது குமரப்பாவின் கனவுகள்.. 

1931- முதல் சிறைவாசம்.. 

கிராமங்களின் முன்னேற்றத்திற்காய் பல முன்னெடுப்புகள். 

தேவைப்படும் பல இடங்களுக்கும் செல்லும் உதவி.. 

கணக்குகளில் காட்டும் கண்டிப்பு..

1934-பீகார் பூகம்ப துயர்துடைப்புப்பணி. 

ஒரு பணியாளருக்கு நாளொன்றுக்கு மூன்று அணாக்கள். 

காந்தி பரிவாரத்துடன் வருகிறார்... 

அனுமதிக்கப்பட்ட தொகைக்குமேல் முடியாது. 

காந்தி அவர்களே  அவர்களின் காருக்கான பெட்ரோல் செலவை ஏற்க வேண்டும்.. 

ஏன் என்கிறார் காந்தி.. 

"இது துயர் துடைப்புக்கான மக்கள் பணம்" 

காந்தி சிரித்தபடி ஒத்துக்கொள்கிறார். 

மற்றொருநாள்.. 

கணக்கில் சில அணாக்கள் வித்தி்யாசம் வர அறையை சாத்திக்கொண்டு அலசிக்கொண்டிருக்கிறார். 

காந்தி வெளியே காத்துக்கொண்டிருக்கிறார். 

ராஜேந்திர பிரசாத் சொல்கிறார் 

" காந்திஜீ! குமரப்பா பணியி இருக்கும் போது சிங்கம் போலிருப்பார்..பார்க்கமாட்டார் யாரையும்.." 

இரவு தங்கி காலையில் காந்தி குமரப்பாவிடம் பேச வருகிறார். 

"ஆண்டுக்கூட்டதின் பணியில் இருப்பதால் பேசமுடியாது" 

"நான் வாரணாசியிலிருந்து வருகிறேன் ..இன்றிரவு சபர்மதி செல்ல வேண்டும்" 

"இப்போது முடியாது.." 

காந்திக்கு கோபம் வரவில்லை..காகிதங்களை மகாதேவதேசாய் மூலம் குமரப்பாவிடம் கொடுத்துவிட்டு கிளம்புகிறார் 

என்ன துணிவு சக்தி.. 

எப்படிப்பட்ட நேர்மை.. 

எத்தனை பொறுமையான தலைமை.. 

கிராம சேவைக்காக மந்திரிபதவியை வேண்டாம் என்றிருக்கிறார் 

தனக்கென வாழாமல் நாட்டுக்கென வாழ்ந்த தியாகம். 

1948-காந்தி சுடப்பட்ட செய்தி கிடைத்த அதிர்ச்சியில் இரண்டுநாள்கள் பார்வை இழந்து மீண்டிருக்கிறார்.. 

காந்தி நிதி சேர்ப்புக்கு அவர் சொல்லியிருக்கும் வரிகள்.. 

அற்புதமானவை. 

நிதி என்பது பணமல்ல..ஆன்மாக்களை சேருங்களென. 

அந்திச்சூரியன் மதுரை காந்தி நிகேதனில் ஓய்வெடுக்கிறது.. 

குன்றிய உடல் நலம். 

1960 ஜனவரி 30 

காலையில் ஒரு பெண்.இன்று காந்தியின் நினைவுக்கூட்டம் என்கிறார்.. 

கட்டாயம் கலந்துகொள்வேன் என்கிறார். 

நடக்கமுடியாத இவரால் எப்படி? 

குழப்பத்தில் போகிறார் அந்தப்பெண்மணி.. 

ஆனால்.. 

இவர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டார் 

காற்றோடும்..காந்தியோடும்.. 

இன்றைய தலைவர்கள் யாரோடேனும் ஒப்பிட முடிகிறதா சக்தி... 

இன்னும் சிலரை இனி பார்க்கலாம்.. 

அன்புடன் 

செல்வக்குமார். 

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

அவர் தனித்து நிற்கட்டும்..

மக்களே....
உங்கள் தலைகளில் நீங்களே அடித்துக்கொள்ளுங்கள்.

யாரெல்லாம் கிங்காக வாய்ப்புக்கொடுத்திருப்பதாய் நினைக்கவைத்திருக்கிறோம்.

என்ன சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்..

அரசியல் எத்தனை கேவலமாக..

அய்யா...சமூக நலக்கூட்டணிகளே.

இனியும்..இவரின் பின்னே அலையாதீர்கள்..
இந்த தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை..அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்..

அவர் தனித்தே நிற்கட்டும்.தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவராகவும்,
கிங்மேக்கராகக்கூட இல்லாமல் கிங்காகவே நினைத்துக்கொண்டிருக்கும் இவர்கள் போன்றவர்கள் தான் முதலில் களையெடுக்கப்
படவேண்டியவர்கள்.

அரசியலில் அரைநூற்றாண்டுக்கும் மேலே அனுபவம் பெற்றவர்களே இனியும் நீங்கள் இவர்வீட்டில் காத்துக்கிடப்பது உங்கள் வரலாற்றின் கருப்பான பக்கங்களாய்தான் இருக்கும்.

தவளை தன் வாயாலே கெட்டிருக்கிறது...அப்படியே விட்டுவிடுங்கள்..
அரசியல் பேரங்களுக்காக ,பல வசதிக்காக சொல்லியிருக்கலாம்..எப்படியிருந்தாலும் விட்டுவிடுங்கள்...

ஒருவேளை அப்படி கிங் ஆனால்.
விடுங்கள்
தமிழகத்தின் தலைவிதி..

தலைவிதி அப்படியிருக்குமானால் மக்களே உங்களுக்கு என் ஆழ்ந்த நன்றிகள்..

வியாழன், 18 பிப்ரவரி, 2016

மக்களுக்காகவும் போராடுங்க ..ஆபீஸர்ஸ்...

அன்பின் சக்திக்கு,

கடந்த சில நாட்களாக நகரமெங்கும் போராட்டங்களின் அணிவகுப்பைப்பார்க்கிறோம்.

15 அம்ச கோரிக்கை என்று ஆசிரிய சங்கங்கள் போராட்டம் ஒன்றை நடத்தி ஒரு நாள் பள்ளிகளையும் அடைத்தார்கள்.

இப்போது அரசு ஊழியர்களின் சங்கங்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது..

சரி சக்தி...
ஏனிந்த போராட்டங்கள்?
தகவல் தொடர்பு சரிவர இல்லாத காலங்களில் நடந்த போராட்டங்களின் வடிவத்திற்கும் இந்த காலப்போராட்டத்திற்கும் எத்தனை வித்தியாசங்கள்?

1980 களில் நடந்த ஆசிரியப்போராட்டங்களின் எழுச்சியும் உணர்ச்சியும் ஏன் இந்த போராட்ட காலத்தில் காணப்படவில்லை.

மிகச்சரியான காரணமாக நான் கருதுவது..
மக்களிடம் தங்கள் கோரிக்கைகளைப்பற்றி விளக்காமல் போனதுதான் என்பேன்.

இந்த நாட்டின் ஆசிரியர்களும், அரசு உழியர்களும் மக்களுக்கான பணி செய்பவர்கள் என்பதை ஏன் மறந்து போனார்கள்?

மக்களின் ஆதரவே இல்லாமல் ஜெயித்துவிடலாம் என்பது அதீத நம்பிக்கையின் விளைவு..

சரி!
உங்கள் போராட்டங்களுக்கான காலம் இதுதான் என்பதை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?

ஆட்சி முடியும் நேரம்..புதிய ஆட்சி வரப்போகும் நேரம்..
உங்கள் போராட்டங்களை அரசு கவனித்தே தீரும்  என்ற கணக்கு தான்,
 நீங்கள் அறிவாளிகள் என்பதை உணர்த்துகிறது.

தினம்தோறும் உயரும், கைதாகி விடுதலையாவோரின் கணக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது.

தனக்கெனப்போராடும் ஆசிரிய, அரசு ஊழியர்களே உங்கள் ஒற்றுமை உணர்வுக்கு சபாஷ்.

ஆனால்.
எத்தனை பொதுப்பிரச்சனைகளுக்காக கூடியிருக்கிறீர்கள்?

மீத்தேன் பிரச்சனைக்கு உங்கள் சங்கங்களின் கருத்து என்ன?

கெயில் குழாய் பதிக்கப்போகிறதே..தெரியுமா உங்களுக்கு?

இதே ஒற்றுமையுடன் போராடியிருந்தீர்கள் என்றால் தனியார் பள்ளிகள் வளர்ந்திருக்காதே...

இந்திய தேசத்தின் மாணவர்களின் கல்வித்தகுதியில் தமிழ் மாணவர்களின் கல்வித்தகுதி தரைமட்டத்திற்கு போனதே ..தெரியுமா உங்களுக்கு...

லஞ்சமில்லா ஒரு அரசு அலுவலகம் காட்டமுடியுமா உங்களால்?

ஆர்ப்பாட்டமென்று கூறி கோஷமிட்டு போலிஸ்வண்டியிலேறி புன்னகைத்துப்பயணித்து மாலையில் விடுதலையாகும் உங்கள் போராட்டங்களால் அரசாங்கங்கள் வேண்டுமானால் கொஞ்சம் அசையலாம்..

மக்கள் மனதில் எதுவுமில்லை..

உங்கள் கோரிக்கைகள் மீது நமக்கு எந்த சந்தேகமும் இல்லை..அவை பெறப்படவேண்டியவை...
ஆயினும் உங்களின் கோரிக்கைகளை பொதுமக்களின் பார்வைக்கு சரிவர வைக்காமல்,
மக்களின் ஆதரவு சிறிதுமின்றி எப்படி வெல்வீர்கள்?
உங்கள் சங்கங்களுமா கார்ப்பரேட் கம்பெனிகளாய் மாறிப்போனது?

மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்லுங்கள்...

உங்கள் போராட்டங்கள் முடிந்ததும்  மக்களுக்காகவும் போராடுங்கள்..

மக்களும் உங்களுக்காக போராடுவார்கள்.

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள்....

ஆசிரியர்கள் தனியே...அரசு ஊழியர்கள் தனியே...

வேண்டாமே...
ஒற்றுமையுடன் போராடுங்கள்..

வாழ்த்தலாம் சக்தி.

அன்புடன்

செல்வக்குமார்.


திங்கள், 15 பிப்ரவரி, 2016

வில்லன் வரவே இல்லை...

அன்பின் சக்திக்கு,

இறுக்கமான வாசிப்பின் அடர்த்தியை கொஞ்சம் குழைவாக்க ஒரு நாவலில் மூழ்கிப்போனேன்.

அது கொடுமை கொடுமை என கோவிலுக்கு போன கதையாகிப்போனது.

பொதுவாய் நம் கேரள சகோதரர்களின் படைப்புகள் இயற்கையோடு ஒன்றி கலைநேர்த்தியுடன் இருக்கும்.

எந்த விஷயத்திலும் சமரசம் செய்துகொள்ளாத பல எழுத்து அச்சன்கள்  ஜீவித்த சேரமான் நாட்டில் "தோப்பில் முகமது மீரான்" என்னும் படைப்பாளி காலத்தை வெல்லும் தன் படைப்புகளில் கதாப்பாத்திரங்களின் வழியே வாழ்ந்துகொண்டேயிருப்பார்.

சுதந்திரத்திற்கு முந்தைய அரபிக்கடலோரம் ஒரு இஸ்லாமியமக்கள் நிறைந்த கடற்கரை கிராமத்தின் கதையைச் சொல்கிறது.
"துறைமுகம்" என்னும் நாவல்.

சித்திரையில் வரப்போகும் வல்லிய மீன்பாட்டிற்காக தயாராகும் மீனவர்கள்,ஏலமெடுத்து சம்பைக்கட்டு ஏற்றி
பணம் செய்ய நினைக்கும் சில கதாப்பாத்திரங்கள்.

சேரமான் இஸ்லாத்தை தழுவியபின் ஒரே நாளில் எழுந்த பல பள்ளிகளில் உயர்ந்ததாய் யானைகொண்டு கல்லடுக்கிக்கட்டிய பள்ளிவாசலும் ஒரு பாத்திரமாய் இருக்கிறது.

மதமெனச்சொல்லி சதிசெய்யும் நேரங்களில் எல்லாம் " தோப்பில்" பலமுறை சொல்கிறார்..
ஆனை கொண்டு கல்லடுக்கிய பள்ளி...

அடக்கொடுமையே..
என்ற சொல்லுக்கு ஈடாக தன்னிச்சையாக சொல்லிவிடுகிறார்..

முன்பின் பார்த்திராத ஒரு பிரதேசம் தான் கதைக்களம்.

நாவலின் சில பக்கங்கள் போனதும் நம்மைப்பிடித்து அந்த கடற்கரைப்பெருவெளியில் உட்காரவைத்து காட்சிகளை கண்களுக்குள் திணித்துவிடுகிறார்.

கீழேவிழும் தென்னை ஓலைக்காய் காத்துக்கிடந்து சேர்த்து.. மழைவரும் முன்னே வீடு வேய்ந்துவிடத்துடிக்கும் ஒரு குடும்பம்.

முடியிருப்பவன் முசல்மான் அல்ல என ஒரு பரிதாபமான வயசாளியை கட்டிப்போட்டு மொட்டையடிக்கும் மதக்கும்பல்.

படிப்பது பாவமென பள்ளியைவிட்டு நிறுத்தி ஒரு இளைஞனை சபிக்கும் ஊர்மக்கள்.

மரச்சீனிக்கிழங்கு விற்கும் நாடார் பெண்களிலிருந்து.

சவரக்கத்தியுடன் அலையும் வாய்நாறிய ஒரு சவரத்தொழிலாளி.

வலையில் சிதறும் மீன் பொறுக்கும் ஒரு சிறிய இறுமியின் முதுகில் விழும் அடி..ஈசன் முதுகில் பட்ட பிரம்படிக்கு சற்றும் குறைந்ததல்ல..

ஆஜ்மீரில் தவமியற்றியதாய் சொல்லும் பழைய தேங்காய்த்திருடன் ஒரு ஏழைப்பெண்ணை மணந்து இரவல் நகைகளுடன் தலைமறைவானதையும் நம்ப மறுக்கும் சமூகம் மீது அப்படி ஒரு கோபம்..

இடைடையே வந்து போகும் திவானின் இடிவண்டி என்னும் காவலர் வண்டி..

தகவல் தரும் தேவ தூதனாய் ஒரு தபால்காரர்.

ஊசிபோடவந்த அதிகாரிக்கு கிடைக்கும் அனுபவங்கள்..

நாவலின் அடிநாதமாய்..

கண்ணுக்கே தெரியாத பெயர்மட்டும் அறியும் ஒரு வில்லன்..
படிப்பறிவே இல்லாத மக்கள் அனுப்பும் சரக்கெல்லாம் நட்டமெனச்சொல்லி இருக்கும் இடத்தையும் உருவும் நயவஞ்சகம்..

இலங்கையின் ஒரு மூலையில் நரியின் மூளையுடன் இருந்துகொண்டு இங்கே குடிக்கும் மனித உயிர்கள் ..

பணக்காரர்களுக்கு துணைபோகும் மதமும்...ஊரும்..

ஒரு நாவலென்று நம்பமறுத்து..
தாண்டிவிடமுடியவில்லை.

வாசித்துமுடித்து வைக்கும்போது ஒவ்வொரு மனிதனும் மனசோடே இருந்துபோகிறார்கள்.

பு ரியாத பல இடங்கள்..
புரியாத பல வார்த்தைகள்..
புரியாத பல சம்பவங்கள்..

மேலாய்...

ஒரு நாவலுக்கு உயிர் இருக்கமுடியுமா?

இருக்கிறது..
புரிகிறது..

வாசிக்கலாம் சக்தி..

அன்புடன்,
செல்வக்குமார்.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

அது தானே?

நான்

அதுதான்
என்றேன்..

அவள்
இல்லையென்கிறாள்.

∆∆∆

பசிக்கவே
இல்லை..

அதுதான்
என்றேன்.

ருசித்துப்புசி
என்கிறாள்..

∆∆∆

கனவுகளில்
நீ
மட்டுமே.

அதுதான்
என்றேன்..

உழைத்துத்தூங்கு..
கனவுகளே
வாராதென்றாள்.

∆∆∆

உன்னோடே
இருக்கத்
தோன்றுகிறது

அது
தானென்றேன்..

உருப்படும்
வேறு
வழிபார்
என்கிறாள்.

∆∆∆

உனக்கொரு
புடவை
பார்க்கிறேன்.

அதுதான்
என்கிறேன்..

உன்
ஆடைகளை
தேய்த்துப்போடு
என்கிறாள்.

∆∆∆

இரவுமுழுவதும்
பேசு.

அதுதான்
என்கிறேன்...

பேசி
விடிந்ததும்
தூங்கு
என்கிறாள்..

∆∆∆
உன்னை
நினைத்தே
கவிதைகளெல்லாம்...

அதுதான்
என்றேன்.

பத்தாது
இன்னும்
என்கிறாள்..

∆∆∆

உணவாய்
இருக்கிறாய்.

அதுதான்
என்றேன்..

ஒவ்வொரு
முறையும்
உண்டாயா
என்கிறாள்.

∆∆∆

எங்கிருந்தோ
இயக்குகிறாய்..

அதுதான்
என்கிறேன்...

எனக்கொன்றும்
தெரியாதென
இறுகிக்கிடப்பாள்.

∆∆∆

எல்லாம்
சொல்லும்
சேதிகள்..

அதுதான்
என்றேன்..

சட்டென
மறைந்துவிட்டாள்..

∆∆∆

வருவாளென
காத்திருக்கிறேன்...

அட..
அதுவே தான்.














சனி, 13 பிப்ரவரி, 2016

நீர் அரசியல்.....

அன்பின் சக்திக்கு,

எனக்கிது மறுவாசிப்பு தான். ஆனால் உனக்கு இன்னும் சில தகவல்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக மீண்டும் படித்தேன்.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதெல்லாம் நான் உறைந்து போய் விடுகிறேன்.

நாம் நமக்கான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா?

எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சமேனும் சிந்திக்கிறோமா
இந்த விரைவு வாழ்க்கையில்?

தண்ணீர் சக்தி ... தண்ணீர் ..

தண்ணீரின் விஷயத்தில் நாம் மிக அலட்சியமாக இருக்கிறோம் .

நாளைய உலகில் நம் சந்ததிக்கு எப்படி ஒரு அவலமான, கேவலமான உலகை விட்டு விட்டுப் போகிறோம் தெரியுமா?
உன் பிள்ளைகள் உன்னை , நம்மை காறித் துப்புவார்கள்

இந்தத் தண்ணீர் எத்தனை அரசியலை , வியாபாரத்தை தன்னுள் அடக்கிவைத்திருக்கிறது  தெரியுமா?

தண்ணீர் பற்றிய அரசியலை பல ஆண்டுகள் ஆராய்ந்து "மாட் விக்டோரியா பார்லோ எழுதிய BLUE  Covenant என்னும் தகவல் பெட்டகம்.
தமிழில் சா .சுரேஷ் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பக்கமும் ஒரு வெடிகுண்டை புதைத்து வைத்திருக்கிறது.

வளர்ந்த நாடுகள் மற்றும் தனியார் கார்ப்பரேட் முதலாளிகள் இந்த தண்ணீரில் செய்யும் அரசியல் பதைக்க வைக்கிறது .
முழுக்க முழுக்க  ஆதாரப்பூர்வமான தகவல்கள்.
248 பக்கங்களும் செய்திகளின அடர்த்தியால் நிரம்பித் தளும்புகிறது.
* உலகில் 8 நொடிகளுக்கு ஒரு குழந்தை நல்ல நீரின்றி இறக்கிறது.

* உலகின்  2 பில்லியன் மக்கள் நல்ல தண்ணீரின்றி இருக்கிறார்கள்.

* உலக நோய்களில் 80 சதவீதம் சுகாதாரமற்ற தண்ணீரால் விளை பனல்.

*தண்ணீரின்றி வாடும் ஆப்ரிக்கர் ஒரு நாளில் 6 லிட்டர் தண்ணீர்  பாவிக்கிறார்.  ஒரு அமெரிக்கர் 600 லிட்டர் பாவிக்கிறார்

*தென் ஆப்பிரிக்கப் பெண்கள் தண்ணீருக்கு அலையும் தூரம் தினம் நிலவிற்கு 16 முறை  சென்று வந்து விடலாமாம்.

தண்ணீர் இன்னும் உலகால் வியாபாரப் பொருளாக அறுதியிடப்படவில்லை.
ஆனால் நாளை உலகம் தண்ணீரால் தான் சிரமப்படும்.
மும்பையின் ஒரு கழிப்பறை சராசரியாக 5440  பேரால் உபயோகிக்கப்படுகிறதாம்.

இயற்கை சரியாய்த்தான் செய்கிறது.
மனிதன் தான் பேராசையால்  எல்லாவற்றையும்  கெடுத்து விடுகிறான்.

ஆற்றின் மணலெல்லாம் எடுத்துச் செல்லும் லாரிகளை பார்க்கும் போது வயிறு எரிகிறது.

அடிப்படை அறிவும் மனிதாபிமானமும் அற்ற ஆளும் வர்க்கம் இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ ?

பயப்பட வேண்டாம்  சக்தி..
நிலத்தடி நீரைக் காத்தலும், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றலுமே போதும்..
நாம் யாரையும் நம்ப வேண்டாம்.

தண்ணீரை சிக்கனப்படுத்தலாம் .
சேமிக்கும்  ஒரு துளி நீரும் நம் சந்ததிக்கான சொத்து .
ஏராளமான  செய்திகள் கொட்டிக் கிடக்கிறது.
சக்தி ..
படித்துப் பார்.
இனி குடிநீர் பாட்டில்களை வெறுப்பாய்.
அதில் அடைத்திருப்பது தண்ணீரல்ல,  பண முதலைகளின் வியாபார விஷம்..
படிக்க வேண்டியது மட்டுமல்ல..

உணர வேண்டியதும் கூட.

படி சக்தி..

அன்புடன், செல்வக்குமார்.

நீராதிபத்தியம்
மாட் விக்டோரியா  பார்லோ

தமிழில் : சா.சுரேஷ்
எதிர் வெளியீடு
விலை: 200 .

வியாழன், 11 பிப்ரவரி, 2016

மறையாத சூரியன்..

அன்பின் சக்திக்கு .

நீண்ட காலத்துக்குப் பின் ஒரு புத்தகம் படித்தேன்..
படிப்பதற்கான புத்தகங்களின் அடுக்கைப் பார்த்து அலைபேசி தடவிய விரல்களுக்கும்  வெட்கம்  வந்துவிட்டது.

வாசிப்பு கொஞ்சம் குறைய ஆரம்பித்ததை ஒரு புத்தகம் மீட்டுத் தந்திருக்கிறது.

ஒரு சூரியனை உனக்கு அறிமுகப்படுத்த மெழுகுவர்த்தி ஏந்தி வந்துள்ளேன்.

உண்மை சக்தி..

அலைபேசியும் போதையாய்த் தான் மாறியிருக்கிறது. கிடைக்கும் சிறிய மணித்துளியிலும்  செல்போன் தலையில் பேன் பார்க்க ஆரம்பித்துவிடுறது குரங்கின்  விரல்களாய்..

வாசிப்பு இல்லாத எந்த வரியும் நேசிப்புக்கு  உகந்ததாய் இல்லை.

புத்தகத்தை அறிகப்படுத்துவதோடு உனக்கு அந்த மனிதனையும் சொல்ல வேண்டியிருக்கிறது .

ஜெர்மனி மற்றும் பிரான்ஸின் எல்லையான ட்ரியலில் 1818 மே 5 ஆம் தேதி பிறந்து உலகே பின்பற்ற வேண்டிய ஒப்பற்ற தத்துவத்தை தந்த கார்ல் மார்க்ஸ் என்னும் மனிதன் பற்றிய புத்தகம் .

1943ல் வெ.சாமிநாத
சர்மா  என்னும் அற்புத அறிஞரால் எழுதப்பட்டிருக்கும் புத்தகம் .

பொதுவாய் கம்யூனிஸம் மற்றும் அதன் தலைவர்கள் பற்றிய புத்தகங்கள்  வறட்டுத்தனமாகவும், வாசிப்பதற்கு  அலுப் பூட்டுவதுமாகவே இருப்பதாக சொல்வாய் .

ஆனால் இதன் ஆசிரியர் இந்த புத்தகத்தை வாசிப்புக்கு எடுத்த பின் கீழே வைக்க விடவில்லை

வரலாற்றோடு , தன் நெஞ்சில் தோன்றிய உணர்ச்சிகளையும், பச்சாதாபங்களையும், தகுந்த மற்றவர்களின் மேற்கோள்களோடு தந்திருக்கும் விதம் அலாதியானது .

காரல் மார்க்ஸ் என்னும் மாமேதையின் வாழ்வில் அவன் அடைந்த துன்பங்கள் எடுத்துக் கொண்ட பணிக்காக இழந்தவை .

எங்கிருந்தோ வந்தவனாய் வந்த ஏங்கல்ஸ் இறுதி வரை கட்டிக்காத்த தோழமை ...

காதல் ஒன்றை
மட்டுமே வைத்துக் கொண்டு விட்டு எல்லாவற்றையும் இழந்து நின்ற கோமான் வீட்டு செல்ல மகள் ஜென்னி .

வாசிக்க,வாசிக்க இன்றைய நம் அரசியல்வாதி எனும் கேவலமான பிறவிகள் மீது அப்படி ஒரு ஆதங்கம் வருகிறது.

1840 களில் அவன் தேடித் தேடி பெற்ற வாசிப்பு அனுபவங்கள் எல்லாவற்றையும் பின்தள்ளியிருக்கிறது.

24 வயதில் டாக்டர் பட்டம் பெற்றவன் ஒரு போதும் அதைப் பயன்படுத்தியதில்லை.
முப்பது வயதில்  நரைத்துப் போகும்  இளமையில் வறுமைக்குத் தின்னக் கொடுத்திருக்கிறார் குடும்பத்தை .

தன் விருப்பங்களை எழுத பத்திரிக்கை வேண்டுமென அழித்திருக்கிறார் அனைத்தையும் .
ஒரு அமெரிக்கப் பத்திரிக்கை தந்த இண்டு பவுனுக்காக காத்துக் கிடந்த்திருக்கிறார்.

தன் மேல் கோட்டை அடகுவைத்து விட்டு அடைந்து கிடந்திருக்கிறார் அந்த ஞானி வீட்டுக் கூட்டுக்குள் .

ஜென்னி மாதரசி எழுதுகிறாள்.. பாலில்லா மாரில்  பிள்ளை கடித்துத்  துளிர்த்த ரத்தமும்
பாலுமெனக் குடித்த கதை.

செத்துப் போன பிள்ளைக்காய் சவப்பெட்டி வாங்க முடியாமல் அழுதிருக்கிறது அந்த இரவு முழுதும் குடும்பம்.

எதையெல்லாம்  அடகு வைக்க .. பிள்ளைகளின் விளையாட்டு சாமான்கள், வீட்டின் பாத்திரங்கள். குழந்தையின்  காலணிகள் ..

முடியவில்லை சக்தி...

விஞ்ஞான வளர்ச்சி அவ்வளவாய் இல்லாத நாட்களில் படித்துத் தீர்த்திருக்கிறார் 40 ஆயிரம் புத்தகங்களுக்கும் அதிகமாய்.
தன் வீடு, தன் பெண்டு, தன் பிள்ளை எண்ணாமல்
உலகத் தொழிலாளர்களை ஒன்று கூடச் சொல்லி அறைகூவல் விடுத்திருக்கிறார்.

எவ்வளவு மோசமான தலைவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தத் தலைவர்கள் அவரின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும்.
அவர்கள்  மனிதர்களாய்ப்  பிறந்திருந்தால்  மாறுவார்கள்.

ஆனால் உன்  தலைமுறை வாசிக்க வேண்டும் சக்தி ..

அவரின் வாழ்க்கையில் சுவாரசியங்கள் கிடையாது. . நகைச்சுவைகள்  மிளிராது.
ஆனால்,  ரத்தமும், சதையுமாய் வாழ்ந்து விட்டுப் போன ஒரு சமூக ஞானியின் வரலாறு.

உன்னை நான் கம்யூனிஸ்ட்டாக மாறச் சொல்லவில்லை.

கொஞ்சமேனும்  சமூகத்தைப்  பற்றிய அக்கறை உங்களுக்கு வர வேண்டுமெனில் வாசித்துப் பாருங்கள்.

கொண்ட கொள்கைக்காய்  வாழ்ந்து போன  அந்தத்  தோழனின்  வரலாறு என்றென்றும் வாழும்.

வறுமையென்றும், பிரச்சனைகள் என்றும் ஒதுங்குவோர் ஒருமுறை  வாசியுங்கள். 
நான் ஆருடம்  செல்வதாகவே  இருக்கட்டும்... 

கொஞ்சம்  மாறுவீர்கள் ..

அன்புடன்,
செல்வக்குமார்.


புத்தகம் தந்த நா.முத்துநிலவன் ஐயாவிற்கு நன்றிகள்....

கார்ல் மார்க்ஸ்
வெ.சாமிநாத சர்மா
பாரதி புத்தகாலயம்
விலை:  80

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

பலூனை உடையுங்கள்...

ஒரு
பலூனென
வந்துசேர்கிறது
பொய்.

ஊதலில்
பெருக்கும்..

வண்ணங்களில்
வசீகரம்.

ஒன்றிரண்டோடு
விட்டுவிடல்
முடிவதில்லை
பலருக்கு..

உடைவன
வரங்கள்..
உடையாதன
சாபங்கள்.

எல்லாக்கரங்களும்
பிடித்துக்
கொண்டிருக்கின்றன.
அவரவர்
பொய்களின்
கணக்கில்
பலூன்கள்.

வகைக்கொரு
பொய்க்கு
வந்து
நிறைகிறது
வண்ணங்களில்
பலூன்கள்.

உண்மை
ஒற்றைச்சிறகென
மிதக்கிறது..

பொய்பலூன்கள்
நம்மையும்
தூக்கிப் பறக்கிறது.

அரக்கனின்
உயிரென
அடைத்துக்கிடக்கிறது
அவரவர்
பலூன்களில்
வாழ்வு.

ஊதத்தொடங்கும்
முன்
தெரிவதில்லை..
உயிர்மூச்சை
உள்வைக்கும்
ரகசியம்.

உலகே
கீழென
பறப்பவை
ஒருபோதும்
கீழிறங்கப்
போவதில்லை.

பொய்களின்
பலூன்கள்
எப்போதும்
வெடிக்கலாம்.

உயரப்பறத்தலின்
மறுபக்கம்
கடவுளைப்போல
காணக்கிடைக்காது.

பொய்களின்
பலூன்களை
உடனுக்குடன்
உடைத்து
விடுங்கள்.

இது
உங்களுக்கு
மட்டுமென
சொல்லும் போதே..

என்
கையில்
இன்னொரு
பலூன்.

சனி, 6 பிப்ரவரி, 2016

தோழர்களுக்கு...

தோழர்களுக்கு,
உங்கள் மீது மிகுந்த மரியாதையும்,அபிமானமும் கொண்ட ஒரு நண்பனின் மடல்.

உங்கள் கூட்டணி மற்றும் கூட்டாட்சிக்கனவுகளின் பரபரப்பில் இது ஒரு மெல்லிய அதிர்வைக்கூட தரப்போவதில்லை என எனக்கும் தெரியும்.ஆனால் எனக்குள் தடதடத்துக்கொண்டிருக்கும் உணர்ச்சிக்கொப்பளங்கள் கொஞ்சமேனும் அடங்கும்  என்ற ஆசையில் தான்...

இந்திய சுதந்திரப்போராட்டத்தில் மறக்கமுடியாத இடத்தில் இருந்தவர்கள் தாங்கள்.
நாங்கள் தோழர்கள் என சொல்லிக்கொள்ளும் போதே நெஞ்சை நிமிர்த்தும் கர்வம் வரச்செய்தவை தங்கள் போராட்டங்கள்.

இந்த நாட்டின் வரலாற்றில் கரைபடியாத நீண்ட பாரம்பரியம் தங்களைத்தவிர யாருக்கும் இருக்கமுடியாது.

எத்தனை தோழர்கள்!
குப்தாவிலிருந்து தற்போது மறைந்த பரதன் வரை இந்த தேசம் கண்ட தோழமைத்தலைவர்களின் தியாக வாழ்க்கை ஒப்பில்லாதது.

தமிழ அரசியலில் 1960 களில் ஆளும்கட்சியாகவே வந்திருக்கவேண்டிய அமைப்பு.
பாலதண்டாயுதபாணி,பேராசான் ஜீவா,தோழர் நல்லகண்ணு,சங்கரய்யா,என எத்தனை தோழர்கள்?

சாதித்த எத்தனை போராட்டங்கள்?
வெண்மணித்தீயில் சுடர்விட்டது தோழர்களின் போராட்டத்தீ தான்..

மற்ற அமைப்புகள் ஆள்தேடிக்கொண்டிருக்க...
ஆராய்ந்துபார்த்து அமைப்புக்குள் அனுமதிக்கும் கட்டுப்பாடு உங்களுடையது.

தவறென்று தெரியுமெனில் தூக்கியெறியும் தன்மை.எவ்வளவு பெரிய இடமாய் இருந்தாலும் எதிர்த்துப்போராடும் ஆண்மை..

என் இளமைக்காலக்கனவுகளில் நல்ல தோழனாக மாறவேண்டும் என்ற லட்சியத்தை விதைத்த பஞ்சாலைத்தோழர்கள்..
அந்தோன் செகாவும்,பரீஸ் வஷீலியேவும் வாசித்த நாட்களின் நினைவு அழியாமல் இருக்கிறது.

அன்பின் தோழர்களே,
ஊருக்கு பத்துப்பேர்,நகரச்சாலையில் தனித்துப்பேசிக்
கொண்டிருக்கும் சில தோழர்கள்,கூட்டத்தில் உண்டியல் ஏந்தும் அமைப்பு,எந்நேரமும் கத்திக்கொண்டிருப்போர் என தற்போது அறியப்படுவது சரியா?

எந்த அமைப்புக்கும் இல்லாத வரலாறு,மார்க்ஸ் என்னும் மாமேதை வகுத்துக்கொடுத்த மகாசாசனங்கள் எவருக்கு உண்டு?

தேர்தல் என்னும் மாய உலகில்,கிடைக்கப்போகிறது என நம்பும் சில தொகுதிகளுக்காக உங்கள் போராட்டவடிவங்களை ஏன் சிதைத்தீர்கள்?

மரியாதைக்குரிய தோழர்களே!

மக்களோடு மக்களாய் இறங்கி செய்யாத எதுவொன்றும் வெல்லப்போவதில்லை என்னும் வரலாற்றை உங்களுக்கு அர்ஜெண்டினாத்தோழன் எர்னஸ்டோ சே குவேரா சொல்லித்தரவில்லையா?

வெற்று அறிக்கைகளில் வீரம் விளைந்துவிடுமென யார் சொல்லித்தந்தது? யேங்கல்ஸா?

தலைமறைவுகால வாழ்க்கையில் பெயர்மாறி,உருவம் மாற்றி காடுமேடு சுற்றி அமைப்பை வளர்த்த உங்கள் முன்னத்தி ஏர்களுக்கு இதுதான் நீங்கள் செலுத்தும் வீரவணக்கமா?

வர்க்கபேதம் ஒழியும் என்று நம்பிக்கை வளர்க்கவேண்டிய நீங்கள் சாதிசார்ந்த அமைப்புகளுடன் கூட்டணி வைத்துத்தான் அதை சாதிக்கப்போகிறீர்களா?

மக்கள் உங்கள் மீது கொண்ட நம்பிக்கை கழுதை தேய்ந்து கட்டெரும்ப்பான கதையை உங்கள் பொலிட்பீரோ கூட்டங்களில் பேசமாட்டீர்களா?

அருமைத்தோழர்களே!
தெரிந்தோ தெரியாமலோ நல்ல தோழர்கள் சிந்திய உழைப்பின் வாடையிலும்,இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலராலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது அமைப்பு.

இது நல்லதல்ல..
கிடைக்கும் சில தொகுதிகளுக்காக அமைப்பை,கொள்கைகளை மறந்து போகாதீர்கள்.

தேர்தல் அடிக்கடி வரத்தான் செய்கிறது.

மக்களோடு மக்களாய் கலக்காத புரட்சி,மக்களின் ஆதர இல்லாத அமைப்பு வென்றாலும் அது வெற்றியல்ல.

அறிக்கைகளில்,மேடைகளில் கைகளை உயத்தி போடும் கோஷங்களில்,அனல்பறக்கும் வார்த்தைகளில் வெற்றிவந்துவிடும் என நினைத்தால்...

தோழர்களே நீங்களுமா?

என் ஆசைகளும்,கனவுகளும் வேண்டுகோள்களும் சிறுபிள்ளைத்தனமாகவும்,
உங்களால் மிக எளிதாக மறுத்துவிடக்கூடியதாகவும்,
ஏன் ..என்னை வெறுக்கக்கூடியதாகவும் இருக்கலாம்.
ஆனால் என் வேண்டுகோள் இதுதான்.

தேர்தல் அரசியலைவிட்டு வெளியே
வாருங்கள்.மக்களோடு மக்களாய் களத்தில் இறங்குங்கள்.

மண்சாலையிலிருந்து மண்ணெண்ணெய் வரை மக்களோடு இருங்கள்.

போராட்ட வடிவத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.

உண்மையுடனும்,
நேர்மையுடனும் ஆளும் அமைப்புகள் அசரும் அளவிற்கு ஆதாரங்களுடன் அறப்போராட்டம் நடத்துங்கள் வீதியில்.

ஈடற்ற இளைஞர் பட்டாளம் நடிகர்கள் பின்னே பாலூற்றப்போயிருக்கிறார்கள்.
எடுத்துக்கூறி இயக்கம்பால் திருப்புங்கள்.நாளை உலகம் அவர்கள் கைகளில்.

பத்துவருடங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.
அதுவரை தேர்தலின் பக்கம் திரும்பாதீர்கள்.

ஒரு ஒற்றைமனிதன் அரசுப்பணியில் நேர்மையாய் இருந்ததற்காக சமூகம் வரச்சொல்லி கொண்டாடுகிறது.

நீங்கள் ஒற்றைமனிதன் போல பலர்கொண்ட அமைப்பு..
உ க்கள் பணிகள்,போராட்டங்கள் மக்களுக்காய்,இந்த சமூகத்துக்காய் உண்மையில் இருக்குமெனில்..
எந்தக்கூட்டணிக்காகவும் அலையவேண்டியிருக்காது..
பதவிகள் உங்கள் சங்கக்கட்டடங்கள் தேடி வரும்.

உங்கள் கூட்டணிக்காக பல குழப்பங்களில் நீங்கள் இருக்கும்வேளையில்,இந்த கடிதம் உங்களுக்கு தேவையில்லாதது என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் நீங்களே தேவையில்லாமல் போய்விடுவீர்களோ என பயந்துகொண்டிருக்கும் என் போன்றோர்க்கு இது தேவைதான்..

அன்புடன்,
ஓர் நண்பன்.