வியாழன், 4 அக்டோபர், 2018

மழையே...மழையே..

மழைக்கு விடுமுறைகள் இல்லாத இளமைதான் எப்படி இருந்தது..பேண்ட் அணிந்து எப்போதும் வரும் ஜெ.ஆர் சார்
நெடுநெடுவென உயரம்..மழை காலங்களில் மட்டும் வேட்டி அணிந்து வருவார்.கூரைப்பள்ளியின் ஒரு ஓர மதில் உச்சியில் ஆவியாதலை செய்முறைப்படுத்திக்காட்ட கண்ணாடி டம்ளரில் ஊற்றி வைத்த தண்ணீர் ஆவியாதலை விடுத்து முழுக்க நிறைந்து வெளியிலும் வேர்த்திருக்கும்.
கொட்டும் மழையின் சாரலடித்தாலும் சோலைமுத்து சார் குச்சியுடன் பாடமெடுப்பதை நிறுத்துவதே இல்லை.
குடையுடனே பேருந்திலிருந்து இறங்கும் ஜெயலஷ்மி டீச்சர் வழக்கம் போல் சாப்பாட்டு வயர்கூடையை என்னிடம் தராமல் குடைக்குள்ளேயே வைத்துக்கொண்டு தூக்கிவரும்போதுதான் எத்தனை வருத்தமாயிருக்கும்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் இறைவணக்கக்கூட்டத்திடலில் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் தண்ணீர்க்குட்டைகளில் கொடிக்கம்பம் தலைகீழாய் கவிழ்ந்திருக்கும்...

முட்டிக்கொண்டிருக்கும் சிறுநீரை கழிக்க ஒற்றை விரலைக்காட்டினால்
பின்னாலேயே நிற்கிறார்கள் ...என்ன செய்ய டீச்சருக்கு குழப்பமாகி கூட்டமாகவே போகச்சொல்கையில் குதித்து ஓடிய ஓட்டம்....பின் எந்த நாய்க்கும் ஓடவில்லை.

மரத்தடியிலேயே பாடம் நடத்திப்பழகிய பாண்டியன் சார் வகுப்பறைக்குள் நடத்தவேண்டியதால் வாசலுக்கும் வகுப்புமாய் நடந்து வானம் வெறித்துவிடாதா என ஏங்குகிறார்.

தொடரும் மழையில் ..மூன்றாம் நாள் பெய்த மழையில் மரத்தடியில் முளைத்துக்கிடக்கும் சிறுகாளான்...விசமாயிருக்கும் என பயமுறுத்தும் நண்பன் ..நாங்கள் நகர்ந்ததும் அவசரமாய் பறித்து பைக்குள் வைத்துக்கொள்கிறான்...

பத்தக்கட்டையுடன் நடந்துகொண்டிருக்கிறார் ஒருவர்...பள்ளி முடிந்ததும் ஓடிப்போய் பார்க்கவேண்டும் தப்பிக்க நினைப்பதாய் தாவி அலுமினிய சட்டிக்குள் விழும் அயிரை மீன்களை...

இறையூர் குளத்தின் தண்ணீர் பரந்து விரிந்து விட்டது...அம்மாவுக்குத்தெரியாமல் குளித்துவிடவேண்டும்...
ரேசன் அரிசி வறுத்து சர்க்கரைத்தண்ணீர் விட்டு அம்மா தரும் பொரியரிசி உருண்டைக்குத் தொட்டுக்கொள்ள கைகளை நீட்டி மழைத்தண்ணீர் வேண்டும்.
புதுமழையில் நனையாதே என்னும் அப்பத்தாவிடம் கேட்கவே முடியவில்லை..மழை எப்போது பழசாய் இருந்திருக்கிறது.?

அப்பாவுக்குத்தெரியாமல் தூண்டில் ஒன்று கட்டி கிளியூர் குளத்தில் கெண்டை மீன் பிடித்துவிட வேண்டும் இந்தமுறை.

அத்தை செவிலியாய் இருந்த கடற்கரையோர ஊரொன்றின் பெயரை வானொலியில் சொல்லி மழை அளவு சொல்லும் போது அப்பத்தா குலசாமிக்கும் சொல்லி விடுகிறாள்..
வாரம் ஒரு முறை வந்த கடுதாசியில் அத்தை மழைத்தண்ணீர் முழங்கால் அளவென்று எழுதியிருந்த போது அப்பத்தா ஆத்தாத்துப்போகிறாள்.

ஈரம் பழகிய கால்ச்சட்டையும் வெளிறிப்போயிருக்கும் விரல்களும் தான் எத்தனை அழகாயிருக்கிறது.
கைகளை பரபரவென தேய்த்து கன்னத்தில் வைத்துக்கொண்ட சூட்டை எந்த கணப்பு அடுப்பும் ஈந்ததேயில்லை பின்னாளில்..

பணிக்கென அலைந்த மழைகள் அத்தனை சுவாரஸ்யமில்லை.
குடை பிடித்த மழைகள்...மழைக்கான அவமானமென கவிதை எழுதிய போது மழை அடிக்கடி வருவதில்லை.

சிங்கப்பூரின் மழை சிங்காரியின் சிணுங்கல் மாதிரி..அடித்துப்பெய்தாலும் அடுத்த நிமிடம் காணாமல் போய்விடும்...சிச்சீய் அந்த மழை என்ன பயன்...கால்கள் குளிர புதையப் புதைய நடந்த என் இளமையின் மழைதான் எத்தனை அழகு.
மழை என்பது நனைவதற்காகவே வானம் கொடுக்கும் வரம்.
அதிகாலை மழை பார்த்தலில் வியர்த்துக்கிடக்கும் வாசல் அத்தனை அழகு...

சத்தமின்றி டி வி பார்க்கும்  பிள்ளை கூச்சலிடுகிறாள்...ஐ இன்று லீவ்...

மழையை அணு அணுவாய் ரசித்த காலத்தை விட இவள் இடும் கூச்சல் அலாதி மகிழ்ச்சி...
எப்படியோ மழை எல்லாக்காலங்களிலும் எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்துவதில் வென்றே விடுகிறது..
வா..வா..மழையே..











3 கருத்துகள்:

  1. இனிய நினைவுகள் ..மழை மகிழ்ச்சிதான் எப்பொழுதும்

    பதிலளிநீக்கு
  2. மழைக்கு இத்தனை ஆதங்கமா. மிக அழகான நாட்களைச் சொல்லி இருக்கிறீர்கள்.
    அற்புத நடையில். பிறகு எழுதவில்லையா நண்பரே.

    பதிலளிநீக்கு