சனி, 13 பிப்ரவரி, 2016

நீர் அரசியல்.....

அன்பின் சக்திக்கு,

எனக்கிது மறுவாசிப்பு தான். ஆனால் உனக்கு இன்னும் சில தகவல்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக மீண்டும் படித்தேன்.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதெல்லாம் நான் உறைந்து போய் விடுகிறேன்.

நாம் நமக்கான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா?

எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சமேனும் சிந்திக்கிறோமா
இந்த விரைவு வாழ்க்கையில்?

தண்ணீர் சக்தி ... தண்ணீர் ..

தண்ணீரின் விஷயத்தில் நாம் மிக அலட்சியமாக இருக்கிறோம் .

நாளைய உலகில் நம் சந்ததிக்கு எப்படி ஒரு அவலமான, கேவலமான உலகை விட்டு விட்டுப் போகிறோம் தெரியுமா?
உன் பிள்ளைகள் உன்னை , நம்மை காறித் துப்புவார்கள்

இந்தத் தண்ணீர் எத்தனை அரசியலை , வியாபாரத்தை தன்னுள் அடக்கிவைத்திருக்கிறது  தெரியுமா?

தண்ணீர் பற்றிய அரசியலை பல ஆண்டுகள் ஆராய்ந்து "மாட் விக்டோரியா பார்லோ எழுதிய BLUE  Covenant என்னும் தகவல் பெட்டகம்.
தமிழில் சா .சுரேஷ் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பக்கமும் ஒரு வெடிகுண்டை புதைத்து வைத்திருக்கிறது.

வளர்ந்த நாடுகள் மற்றும் தனியார் கார்ப்பரேட் முதலாளிகள் இந்த தண்ணீரில் செய்யும் அரசியல் பதைக்க வைக்கிறது .
முழுக்க முழுக்க  ஆதாரப்பூர்வமான தகவல்கள்.
248 பக்கங்களும் செய்திகளின அடர்த்தியால் நிரம்பித் தளும்புகிறது.
* உலகில் 8 நொடிகளுக்கு ஒரு குழந்தை நல்ல நீரின்றி இறக்கிறது.

* உலகின்  2 பில்லியன் மக்கள் நல்ல தண்ணீரின்றி இருக்கிறார்கள்.

* உலக நோய்களில் 80 சதவீதம் சுகாதாரமற்ற தண்ணீரால் விளை பனல்.

*தண்ணீரின்றி வாடும் ஆப்ரிக்கர் ஒரு நாளில் 6 லிட்டர் தண்ணீர்  பாவிக்கிறார்.  ஒரு அமெரிக்கர் 600 லிட்டர் பாவிக்கிறார்

*தென் ஆப்பிரிக்கப் பெண்கள் தண்ணீருக்கு அலையும் தூரம் தினம் நிலவிற்கு 16 முறை  சென்று வந்து விடலாமாம்.

தண்ணீர் இன்னும் உலகால் வியாபாரப் பொருளாக அறுதியிடப்படவில்லை.
ஆனால் நாளை உலகம் தண்ணீரால் தான் சிரமப்படும்.
மும்பையின் ஒரு கழிப்பறை சராசரியாக 5440  பேரால் உபயோகிக்கப்படுகிறதாம்.

இயற்கை சரியாய்த்தான் செய்கிறது.
மனிதன் தான் பேராசையால்  எல்லாவற்றையும்  கெடுத்து விடுகிறான்.

ஆற்றின் மணலெல்லாம் எடுத்துச் செல்லும் லாரிகளை பார்க்கும் போது வயிறு எரிகிறது.

அடிப்படை அறிவும் மனிதாபிமானமும் அற்ற ஆளும் வர்க்கம் இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ ?

பயப்பட வேண்டாம்  சக்தி..
நிலத்தடி நீரைக் காத்தலும், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றலுமே போதும்..
நாம் யாரையும் நம்ப வேண்டாம்.

தண்ணீரை சிக்கனப்படுத்தலாம் .
சேமிக்கும்  ஒரு துளி நீரும் நம் சந்ததிக்கான சொத்து .
ஏராளமான  செய்திகள் கொட்டிக் கிடக்கிறது.
சக்தி ..
படித்துப் பார்.
இனி குடிநீர் பாட்டில்களை வெறுப்பாய்.
அதில் அடைத்திருப்பது தண்ணீரல்ல,  பண முதலைகளின் வியாபார விஷம்..
படிக்க வேண்டியது மட்டுமல்ல..

உணர வேண்டியதும் கூட.

படி சக்தி..

அன்புடன், செல்வக்குமார்.

நீராதிபத்தியம்
மாட் விக்டோரியா  பார்லோ

தமிழில் : சா.சுரேஷ்
எதிர் வெளியீடு
விலை: 200 .

11 கருத்துகள்:

  1. மூன்றாம் உலகப்போர் நீருக்காக மட்டுமே நடைபெறும் என்ற கருத்து உண்மையாகிவிடும் போலிருக்கிறதே..
    அழுத்தமான பதிவுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. சீரியஸாக சிந்திக்கின்றீர்கள்? நிரமப படிக்கிறீர்கள்? நல்லது!படித்தவைகளை விமர்சனமாக்கும் விதம் அருமை,
    நீரினால் சூழப்பட்டிருந்தாலும் நீருக்காக அலைவது தான் கொடுமை!

    பதிலளிநீக்கு
  3. மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயங்களில் இதுவும் ஈ வேஸ்ட்டும் அடங்கும். மனிதனின் பேராசையால் இயற்கை அழிகிறது.

    படிக்க வேண்டிய புத்தகங்களின் லிஸ்ட்டில் ஒன்று கூடுகிறது.

    பதிலளிநீக்கு
  4. அமெரிக்கர்கள் அதிக அளவு தண்ணிர் செலவழிக்கும் அதே நேரத்தில் அதிக அளவு தண்ணிரை வீணாகமல் சேகரிக்கிறார்கள் என்பது நான் கண்ட உண்மை

    பதிலளிநீக்கு
  5. புத்தகங்களை விமர்சனம் செய்யும் முறை முற்றிலும் மாறுபட்ட முறையில் இருக்கிறது அருமை

    பதிலளிநீக்கு
  6. அவசியம் வாங்கிப் படிப்பேன் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  7. அருமை ஐயா..நான் இது போன்று கவிஞர் வைரமுத்து எழுதின தண்ணீர் தேசம் நூல் சில நாட்களுக்கு முன்பு படித்தேன் அதில் ஆறு கதாபாத்திரங்கள் உள்ளன சுற்றிலும் தண்ணீர் இருக்கும் ஆனால் குடிக்க இயலாது அவர்கள் அந்த தேசத்தில் இருந்து தப்பினாரார்களா என்று தான் மீதி கதை..தாங்கள் படித்திருக்கலாம் என்று நினைக்கிறேன் இல்லை என்றால் படித்து பாருங்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
  8. அருமையான தகவல்கள் கவிஞரே ஒரு மாற்று சிந்தனையாக பார்த்தால் நாளைய சந்ததிகளை உருவாக்கி விட்டு அவர்களை இன்னலுக்கு ஆளாக்காமல் சந்ததிகள் உருவாக்குவதை படிப்படியாக குறைக்கலாமோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  9. இது சம்பந்தமாக ஒரு தொடர் ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். மிக நல்ல தகவல்!
    த ம 3

    பதிலளிநீக்கு
  10. மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்றும் அவ்வப்போது செய்திகள் சொல்லப்படுகின்றதுதான். அமெரிக்காவில் தண்ணீரைச் சேமிக்கவும் செய்கின்றார்கள் செல்வா. தண்ணீர் தண்ணீர் பாலசந்தரின் படமும் அருமையான கதை...உண்மையை உரைக்கும் கதை..நாம் இன்னும் தண்ணீர் சேமிப்பில் ஒரு துளி கூட ஆரம்பிக்கவில்லை என்பதே யதார்த்தமான வேதனை..நல்ல தகவல்.

    பதிலளிநீக்கு