செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

கொய்யாவுல....

அன்பின் சக்திக்கு,

கலப்படம் பற்றி நிறைய எழுத நினைத்தேன்.
எதை தொடுவது..எதை விடுவது..திகைத்து நிற்கிறேன்.

எதைத்தேடி அலைந்ததில் இப்படி நாம் வீணாய் போனோம்?

அபரிதமான அறிவாற்றலை நாம் ஏனிப்படி போலிகளில் தொலைத்து நிற்கிறோம்?

விற்பனைக்கு என்றே வந்து கொள்ளையடித்துப்போன வெள்ளையன் கூட இந்த அளவு கொலை எண்ணம் கொண்டு அலைந்ததில்லை.

கலப்புகளின் சேர்க்கையில் தான் புதுப்புது பரிணாமங்கள் கிடைக்கின்றன எனினும் கலைகளின் கலப்புபோல் அல்லாமல் உணவுகளின் கலப்பு உயிரை அல்லவா காவு கேட்கிறது.

வியபாரம் என்பது கண்ணியமிக்க செயல் என்பது போய்விட்டது...
காசு மட்டும் போதுமென சுருங்கிக்கொண்டது.

இந்த நாட்டின் ஆசிரியர்கள் அறிவின் கடவுள் என்றால் ..வியபாரிகள் வயிற்றுப்பசி போக்கும் தெய்வங்கள் அல்லவா?

வெள்ளகாலங்களில் பால் 200 ரூபாய்க்கு விற்றபோதே கீழிறங்கி விட்டீர்கள்.

போதைப்பாக்கு விற்காத பெட்டிக்கடைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

கண்ணுக்குத்தெரியும் பல போலிகளை அவர்கள் தடுத்துவிட்டாலே...பாதி மருத்துவமனைகளை மூடிவிடலாம்.

போலிகள் எதுவென்று தெரியாமல் எதையும் விற்குமளவிற்கு முட்டாள்களல்ல அவர்கள்.

கொளுத்தினால் எரியும் "குர்குர்ரே" போன்ற பல சரங்களை தொங்கவிட்டு பிள்ளைகள் பிடிப்பதை அவர்கள் மனசுவைத்தால் மட்டுமே முடியும்.

காந்தியடிகள் சொன்னதுபோல் வாடிக்கையாளர்கள் இப்போது கடவுளல்ல..
விற்கும் அவர்கள் தான் கடவுளாக வேண்டியிருக்கிறது.

எத்தனை சீனப்பொருட்கள். ஈனப்பொருட்களாய் சந்தையில்?
வீதிக்கு ஏழு எஞ்சினீயர்கள் இருக்கும் இந்தியாவிற்கு கொசு மட்டை அங்கிருந்துதான் வருகிறது.

செருப்பிலிருந்து,பொம்மை, செல்போன் என சீனத்து டிராகன் நம் வீட்டுக்குள் வந்தே விட்டது.

உங்கள் வீட்டை ஒருமுறை சுற்றிப்பாருங்கள்..
அந்நிய தேசத்தில் தயாரான, குறைந்தபட்சம் பத்து பொருட்களை கண்டுபிடித்துவிடலாம்.

எந்தவித குற்றமனப்பாண்மையும் இல்லாமல் இந்த சந்தையை திறந்துவிட்டவர்களை என்ன சொல்லித்திட்டுவது?

இந்த வருடம் சிவகாசிக்கு வேட்டுவைத்துவிட்டார்கள்.

பாலில் "மெலமைன்" என்ற நச்சு கலந்ததற்காக மிகக்கடுமையான தண்டனை விதித்தார்கள் சில ஆண்டுகளுக்கு முன் சீனாவில்....

ஆனால் சக்தி..
இன்றைய இந்திய பெட்டிக்கடைகளில் "கொய்யா" என்னும் மிட்டாய் சீன எழுத்துக்களோடு குழந்தைகளும்,குடிகாரர்களும் விரும்பி வாங்கும் மிட்டாயாய் வந்திருக்கிறது.

இரண்டு தின்றால் நாக்கு மரத்துவிடும்..
ஒருநாள் முழுதும் திறந்துவைத்தாலும் எறும்பு சீண்டாது.

எப்படி வந்தது எங்கள் பெட்டிக்கடை ஜாடிகளுக்குள் இவை?

உணவுக்கட்டுப்பாடு,
தரக்கட்டுப்பாட்டு அலுவலகங்கள் இயங்குகின்றனவா?

அனுமதியுடன் தான் விற்கப்படுகிறதெனில் அதன் உள்ளிருக்கும் பொருட்களின் விவரமென்ன?

இந்தியாவின் வல்லரசுக்கனவு இளைஞர்களை பெரிதும் நம்பியிருக்கிறது..
உலகின் வேறெங்கும் இத்தனை இளைஞர் கூட்டமில்லை..

இந்த குழந்தைகளை குறிவைத்து குழிதோண்டத்
தொடங்கியிருப்பதாய் நான் சந்தேகிக்கிறேன்.

அத்தியாவசியங்களின் இறக்குமதி தவிர்க்க முடியாததுதான்..
அநாவசியங்கள் தவிர்க்கப்படவேண்டும்.
ஆபத்துகள் தடுக்கப்படவேண்டும்.

நீ பார்க்கும் கடைகளில் கொய்யாமிட்டாய் இருந்தால் எடுத்துச்சொல்..

கொய்யாமிட்டாய் யாரேனும் தின்றால்..

துப்பச்சொல்..

அன்புடன்.
செல்வக்குமார்.

20 கருத்துகள்:

  1. சின்ன மிட்டாய் தானே என்று அவ்வளவு சாதாரணமாய் நினைக்க முடியாது போலிருக்கிறதே.. வல்லரசு வல்லூறுகளுக்கு நம் குழந்தைகள் பலியாகவேண்டாம்.. எடுத்துச் சொல்வோம் எல்லோரிடமும். அக்கறை மிக்க பதிவுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி..அமிர்தா தமிழ்....சின்ன விஷயங்கள்தான் பெரிய விளைவுகளைத்தருகின்றன...
      உங்கள் கருத்துக்கு நன்றி..

      நீக்கு
  2. அருமையாக இருக்கு பதிவு, மிரட்டுகிறது எம்மை,, அந்த மிட்டாய் வாயில் வைக்க முடியாது அவ்வளவு ,,,, குமட்டல்,,,
    பகிர்வுக்கு நன்றிங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்...அது இருக்கும் ஜாடியைப்பார்த்தாலே...எரிகிறது..
      ஆனால் எந்த கடைக்காரரும் தன் பிள்ளைகளுக்கு அதை கொடுப்பதில்லை....
      நன்றி

      நீக்கு
  3. கொய்யா வாசம் வரும் இந்த மிட்டாய் என் தோழிகளின் பிரியமானது.ஆனால் இந்த விவரம் நான் சென்ற வருடமே அறிந்ததால் தடுத்திருக்கிறேன்..நம் வீட்டில் தான் மிட்டாய் பழக்கம் என்றால் கடலை மிட்டாய் மட்டும் தானே.இதையே அவர்களுக்கு எடுத்தும் சொல்லி இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..சூஜ்ஜு....வந்துட்டியா...சூப்பர்ம்மா....நீ ஏன் இப்பல்லாம் பிளாக் எழுத மாட்ற..? எழுது...

      நீக்கு
  4. ஐயா நான் கூட முதலில் கொய்யா மிட்டாய் விரும்பி சாப்பிக்கொண்டு இருந்தேன்.இப்பொழுது சாப்பிடுவது இல்லை .நான் யாரேனும் சாப்பிடுவதைக் கண்டால் கட்டாயம் சொல்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. கொய்யா மிட்டாய்
    வேதனையாக இருக்கிறது நண்பரே
    வகுப்பில் ஒவ்வொரு ஆசிரியரும்
    இதனை எடுத்துப் பேசவேண்டும்
    விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்..நண்பரே..மிகவும் ஆச்சர்யமாகவும்.வேதனையாகவும் இருக்கிறது...பதிவு எழுத வந்தால் இப்படித்தான் வருகிறது...நன்றி...நண்பரே

      நீக்கு
  6. கொய்யா என்று மிட்டாயா? புதுசா இருக்குதே! கேள்வியே பட்டதில்லையே..பார்த்தால் கண்டிப்பாகச் சொல்லித் தடுக்கின்றொம். தகவலுக்கு மிக்க நன்றி செல்வா. சரி கேரளாவிலும் வந்திருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். என்ன பெயரில் இங்கு சொல்கின்றார்கள் என்பதையும் அறிய வேண்டும்.

    கீதா: இப்படியொரு மிட்டாயா? ம்ம் இங்கு சிறுவர்கள் யாரும் இல்லாததால் தெரியவில்லை. எங்கள் இருவர் வீட்டிலும் மிட்டாய்கள் என்பதே கிடையாது. எள்ளு, கடலை மிட்டாய், பொரி உருண்டைகள் என்று அதுவும் எங்கள் வீட்டில்தான் செய்வோம் பெரும்பாலும். வாங்கினால் எள்ளுமிட்டாய், கடலைமிட்டாய், அதுவும் வெல்லம் போட்டது மட்டுமே.

    எத்தனை சீனப்பொருட்கள். ஈனப்பொருட்களாய் சந்தையில்?
    வீதிக்கு ஏழு எஞ்சினீயர்கள் இருக்கும் இந்தியாவிற்கு கொசு மட்டை அங்கிருந்துதான் வருகிறது.

    செருப்பிலிருந்து,பொம்மை, செல்போன் என சீனத்து டிராகன் நம் வீட்டுக்குள் வந்தே விட்டது.// என்ன செல்வா எப்படி வந்துச்சுனு கேள்வி!!!!?? தெரியாதா நம்ம நாட்டின் மகிமை!? நாம் முட்டாள்கள் கில்லர்ஜி 100 முட்டாள்கள் என்று சொல்லியிருந்தார் பதிவில் அந்த 100 இல்லை பல லட்சங்கள் அந்த முட்டாள்களில் நாமும் அடங்கிவிட்டோம்..அவர் சொன்ன செய்கைக்களுக்காக அல்ல. அவை எல்லாம் தெரிந்தும் நம்மால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் நாம் இருக்கின்றோமே என்பதுதான். நம் நாடு குப்பைக் கிடங்கு என்பது தெரியாதா? சாலையில் மட்டுமல்ல, உடல்நலம் கெடுகின்ற அளவிற்குத் தீங்கான பொருட்கள், மருந்துகள் வரை நம் பண முதலைகள் நம் நாட்டுச் சந்தையைக் குப்பைக் கிடங்காக்கி வைத்திருக்கின்றன. காலாவதியான மருந்துகளை புதிய அச்சுப் போட்டு விற்பது, உலகமே தடை செய்யும் மருந்துகளை விற்பது என்று பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொம்பு தூக்கும் நமது மருந்து நிறுவனங்கள். என்று நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். சொல்லி என்ன பயன்...

    பதிலளிநீக்கு
  7. இது என்ன மிட்டாய் என புரியவில்லை! ஆனால் சாப்பிடக்கூடாது என மட்டும் புரிகின்றது. அப்படி எனில் ஏன் விற்கின்றார்கள்?

    கலப்படம் குறித்தும் நம்மை வசமாக்கும் விசப்பொருட்கள் குறித்தும் அருமையான கடிதம்.

    பதிலளிநீக்கு
  8. கொய்யா மிட்டாய்... கேள்விப்பட்டதில்லை. தேவையுமில்லை......

    எத்தனை கலப்படம் என்று யோசிக்கும்போதே பயமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. அருமையான தேவையான பதிவு ...நான் குழந்தைகளிடம் சொலி வைத்திருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  10. துளசி அண்ணா அன்ட் கீதா ..பின்னூட்டம் பார்த்ததும் உடனே அந்த கொய்யா மிட்டாய் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன் ..அது அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது 2012 ஆம் ஆண்டிலேயே ..காரணம் //
    5/2/12 Guava Candy – Unsafe Color, Adulteration//
    நம்ம நாட்டில்தான் எல்லாமே சுதந்திரமா கிடைக்குமே ..அமேசன் அலிபாபா போன்ற கம்பெனிகளின் வாயிலாக ஆன்லைன் ஆர்டர் கொடுத்தா வீட்டுக்கே வருது :(

    அந்த மிட்டாயில் அதிக அளவு artificial இனிப்பிருக்கு அதுதான் அந்த மயக்க நிலை வர காரணம் .
    மேலும் அதை சாப்பிடறவங்களுக்கு சுற்றிலும் ஒரு வினோதமான மணம் சுற்றிவர இருக்கும்னு சொல்றாங்க

    அமேசன் பாருங்க விற்கும்போது தனக்கு பிரச்சினை வர கூடாதின்னு கீழே ஒரு டிஸ்க்ளைமர் கொடுத்திருக்கு ..

    பதிலளிநீக்கு
  11. எறும்புக்கு அறிவிருக்குங்க அது தானே குழியில் விழாது அதுக்கு இனிப்புக்கும் aspartame விஷத்துக்கும் வித்தியாசம் தெரியும் ..செயற்கை இனிப்பு சேர்த்த ஒரு லாலிபாப்பை எறும்புகள் சட்டை பண்ணாம சுற்றி போகும் ஒரு செய்தி படிச்சேன் முன்பு ..கண நேர சந்தோஷத்துக்கு இந்த இனிப்பெல்லாம் விஷம்னு தெரியாம எத்தனை பிள்ளைங்க சாப்பிட்டு கொண்டிருக்காங்களோ பாவம் :(

    பதிலளிநீக்கு
  12. தோழி ஏஞ்சல் இந்த பதிவை பசுமைவிடியல் விழிப்புணர்வு பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததற்கு பிறகே இதை பற்றி அறிந்துக் கொள்ள முடிந்தது. அந்த தளத்தில் நண்பர்கள் அதிகளவில் இந்த பதிவை பகிர்ந்து வருவதை எண்ணி நிறைவாக இருக்கிறது.

    இதற்கு முன் இந்த மிட்டாயை பற்றி கேள்விப் பட்டதில்லை, இனி எந்த க்டைகளிலாவது இந்த மிட்டாய் விற்பதை பார்த்தால் இதன் தீமையை பற்றி எடுத்து சொல்கிறேன்... பதிவை படித்த நண்பர்களும் இதை செய்யலாம்... சிறு குழந்தைகளின் வாழ்வில் விளையாடும் இது போன்ற வஸ்துக்களை எண்ணி மிகவும் வேதனையாக இருக்கிறது.

    இது போன்ற விழிப்புணர்வு பதிவை எழுதிய உங்களுக்கு எனது நன்றிகள் !!

    பதிலளிநீக்கு
  13. பசுமைவிடியல் விழிப்புணர்வு பேஸ்புக் பக்கத்தினால் ... இங்கு வந்தேன் .....வேதனையான செய்தி...


    அனைவருக்கும் பகிர வேண்டிய செய்தி ...

    பதிலளிநீக்கு
  14. நம்ம தமிழ் பெயரைப் போட்டு எப்படியெல்லாம் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள்..அடேங்கொய்யா :)

    பதிலளிநீக்கு