திங்கள், 16 ஏப்ரல், 2018

ஆவிகள் புதைத்த மேடு...

ரங்கம்மா சத்திரத்து
மூலை
புளியமரமொன்றில்
ஏகப்பட்டஆவிகள்..

போலிஸ்கார மாமாவுக்கே
காய்ச்சல் வந்தது..
கிளியூர் முக்கத்தில்
பழனிச்செல்வம்
அடிபட்டு இறந்த
மரத்தினடியில்
நிஜாம் பாக்குப்பொட்டலம்
சிதறிக்கிடந்தது..

ஊரைச்சுற்றிப்போன
சாலையில்
விபத்தென்பது
எப்போதேனும் நிகழ்ந்த
இடைக்கால திருவிழாக்கள்...

வடசேரிப்பட்டி
கால்முளைத்து
வடசாரிப்பட்டியானது..
அண்ணாபட்டி
இடை சிறுத்து
அன்னுப்பட்டி...

அடைமழை இரவுகளில்
சாலைப் பெருமரம் தரைதொட்டால்
பேருந்துகளும் கார்களும்
ஊரினுள்
நுழைந்து வெளியேற
இரவுகள்
ஒளிபூசிக்கொள்ளும்..

பால்யத்தின் நினைவுகளில்
சாலைகள் பச்சையானவை..
ஓரங்களின் ஈச்சம்புதர்கள்
சூரைகள்,
இலந்தை மரங்கள்..
ஓணான்கள்
பொன்வண்டென
வாரிக்கொடுத்தவை..

ஊரின்னும்
அப்படியே இருக்க
சாலைகள் தங்களை
விலக்கிக்கொண்டன.

சரளைகளும் கரம்பும்
ஒய்யாரமாய் உட்கார..
மரங்கள் மாயமாகின..

மூலையில்
முனியிருந்த மரத்தடியில்
விளம்பரப் பதாகை...

ஆணியடித்து
பைகள் தொங்கிய
ஆலமரமிருந்த
சுவடேயில்லை..

நெடுஞ்சாலை கடக்குமிரவில்
அவசரமாய்
கடந்துபோகிறது
நினைவுகள்..

சுற்றிய ஆவிகள்
புதைந்து போயிருக்கலாம்
கருப்புக்கோடுகளான
பரந்த சாலையில்..

நெஞ்சப்பாதையில்
எழும்
அதன்
நினைவுகளைத்தான்
எதைக்கொண்டு
புதைப்பதென?














9 கருத்துகள்:

  1. ஆஹா! அறுபுதம் நண்பரே. இதை ஒரு கவிதை என பாவிப்பதைவிட ஒரு ஓவியம், சித்திரம் என கூறலாம். உங்களது கற்பனை வெள்ளம் என்றும் சக்தி குறையாமல் மேலும் நிறைய வார்த்தை வித்தைகளால் எங்களை மயக்கம் அடைய செய்யுங்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நால்வழிச் சாலைகள் வந்த பிறகு சாலையோர மரங்களே பார்க்க முடிவதில்லை. இது ஒரு பெரிய இழப்பு தான்.

    பதிலளிநீக்கு
  3. நாம் தொலைத்துவருவதை வேதனையுடன் பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  4. புளியமரத்தில் ஆவி குடிகொள்வது வா(வே)டிக்கை. ரங்கம்மா சத்திரத்துப் புளிய மரத்திலும் ஆவிகளின் சங்கமம் அன்று. எங்கே போயின இன்று?

    பதிலளிநீக்கு
  5. ஊரின்னும்
    அப்படியே இருக்க
    சாலைகள் தங்களை
    விலக்கிக்கொண்டன.

    அருமையான பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு