சனி, 8 செப்டம்பர், 2018

பொன்னியின் செல்வன்...

உலகமே ஒரு நாடக மேடை..நாமெல்லாம் நடிகர்கள் தான்.ஆனாலும் அடுத்தவர் நடிப்பை காண்பதில் அத்தனை ஆவலாதி.
.

தமிழ் எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்து பாடப்புத்தகத்தை தவிர்த்து கதை என்று வாசித்து மிரண்டதும் இன்று வரை மீளமுடியாதிருப்பதும் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தான்.

செவ்வாய்க்கிரகத்தில் புத்தகக்கண்காட்சி நடந்தாலும் பொன்னியின் செல்வன் விற்பனையை யாராலும் தடை போட்டு விட முடியாது.

ராஜாஜியின் முன்னுரையுடன் ஆரம்பிக்கும் கதை..வீர நாராயண ஏரிக்கரையில் குதிரையின் குளம்போசையோடு பறக்கும் வந்தியத்தேவன்..
கடம்பூர் மாளிகையின் மந்திர ஆலோசனை,பெரிய பழுவேட்டரையர்,வானதி,நந்தினி,குந்தவை,அருண்மொழி,சேந்தன் அமுதன்,பூங்குழலி, எத்தனை தமிழ்ப்பெயர்கள்.

தமிழின் ஆகச்சிறந்த பொன்னியின் செல்வன் தமிழ்பேசும் எல்லார் இதயங்களிலும் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜீவ  நூல்.

நாடகமேடையில் ஒரு அதிசயம்..வரலாறு காணாத பிரமாண்டம்.நாளிதழில் தொடர்ந்து வந்த வண்ண விளம்பரங்கள்.
ஏற்கனவே இது நடந்தபோது தவறவிட்டுவிட்ட குற்ற உணர்ச்சியை இந்தமுறை சரிசெய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் ..இருக்கின்ற நிலமையில் 500 ரூபாய் டிக்கெட்டில்
உறுதி செய்துவிட்டேன்...

இரண்டு மணிக்கு காட்சி என்றார்கள்...
நுழைவுச்சீட்டே அத்தனை வண்ணமாக இருந்தது.அகலமாக அந்த கால ஆயிரம் ரூபாய் நோட்டு போல.

ஊரின் ஒரு அரங்கத்தில் நடக்கிறது..ஒரே நாளில் இரண்டே காட்சிகள்..

தெரியாத ஒரு புதிய கதையைக்காண்பதற்காக செல்லவில்லை..
உணர்வோடு கலந்துவிட்ட பாத்திரங்களை பார்த்தேயாகவேண்டுமென்ற உந்துதல்..

அரங்கம் நிரம்பி வழிகிறது..
மேலும் பிளாஸ்டிக் சேர்கள் கொண்டு அமரவைக்கிறார்கள்.

ஐந்து நிமிட தாமதத்தில் காட்சி தொடங்கியது.

சினிமா போலவே பெயர்கள் திரையில் ஓடுகிறது. பின்னணி இசை காதை பிளக்கிறது..இவர்களின் அடுத்த முயற்சி என வேலுநாச்சியாரின் படத்தையும் முன்னோட்டம் சொல்லிவிட்டு கதைக்குள் இழுத்துப்போகிறார்கள்.

தலையின் முடியை ஒரு துணியை கொண்டு மொட்டைமாதிரி மறைத்து நடுவில் கொஞ்சம் முடி வைத்தது போன்ற ஒப்பனையுடன் ஆழ்வார்க்கடியான் அறிமுகம்..

எத்தனை துள்ளலும் எள்ளலுமான பாத்திரம்..சமயோசிதமும் அறிவின் கூர்மையுமிக்க ஆழ்வார்க்கடியான் பாத்திரம் அத்தனை நெளிசல்...

அடுத்தடுத்த பாத்திரங்கள் அறிமுகமாகும் காட்சிகளில் இருக்கையில் இருந்தாலும் நான் நெட்டுயிர்த்துக்கிள்கிறேன்...

நீலக்கலரில் ஒரு மேலாடையுடன் இடுப்புக்குக்கீழே சிவப்பு கலர் லெக்கின்ஸ் அணிந்த வந்தியத்தேவன்.
சரித்திர நாயகர்களுக்கு ஆடை ஒப்பனை செய்யும் போது இனி எவனேனும் லெக்கின்ஸ் போட்டு வந்தால்  அரசு அந்த நாடகத்தையே தடை போட முயற்சிக்கலாம்.
எத்தனை தொழில் நுட்ப மண்ணாங்கட்டியெல்லாம் இருந்துமென்ன...ஒரு ஆடை விசயத்து அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

வந்தயத்தேவன் பரவாயில்லை என்றாகிவிட்டது ஆதித்த சோழன் அணிந்திருந்த டிராக் பேண்டின் வெள்ளை நீளக்கோடு.

பால்குடி மாறாத மதுராந்தக சோழன்
தலையில் வைத்திருக்கும் ஒட்டுமுடி தலைக்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது.அவரின் உருவமோ பாவம் என்பதாய்.

பாவம் வந்தியத்தேவனுக்கு இரண்டே மேலாடையும்...அந்த ஒற்றை லெக்கின்ஸ் மட்டும்தான் ஆடைகள்.

அத்தனை விழுப்புண் பெற்ற பழுவேட்டரையர் ஒல்லியாய் உயரமாய் இருக்கிறார்...ஒல்லியாய் இருந்தாலென்ன குரலில் பார்க்கலாமென்றால்..
ஆகா ..மொட்டை ராசேந்திரனின் குரல் அச்சு அசலாய் இருக்கிறது..
பழுவேட்டரையர் பேசப்பேச பொசு பொசுவென கோபம் வருகிறது..ஆனால் வரவேண்டியதென்னவோ அவருக்குத்தான்.

அருண்மொழி கதாப்பாத்திரம் அத்தனை அலாதியான தேர்வு.
ஒட்டவே கூடாதென்பதில் அத்தனை உறுதியாக இருந்து  செய்திருக்கிறார்கள்.
ஆயிரமாண்டுகள் நிமிர்ந்து நிற்கும் ஆலயம் கட்டியவன் கட்டிக்கொள்ள ஒற்றையாடை மட்டுமே கொடுத்திருப்பதற்கு...ராசராசனுக்காய் போராடும் இயக்கங்கள் இவர்களையும் கண்டித்து கோஷங்கள் போடலாம்..

ஆண்களின் கதாப்பாத்திரங்களில் சேந்தன் அமுதனுடன் சேர்த்து வாயில்காப்போர் இருவரின் தேர்வு அபாரம்..
அமைச்சராக வரும் பெரியவரும்,மா மன்னரும் பரவாயில்லை ரகமே.

ஆணுக்கே இத்தனை கொடுமையெனில் பெண்ணுக்கு முழு உரிமை கொடுத்து சோதித்திருக்கிறார்கள்.

பிறை போல் விழியுடை நந்தினியின் பாத்திர அழகை காக்க இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பெண்மணி நடிப்பில் சோடையில்லை என்றாலும்..நந்தினியின் உருவம் அவளின் பேசும் மொழியல்லவா...உருகி உருகி நடித்தாலும்..மன்னிக்கவும் நீங்கள் எங்கள் நந்தினியில்லை...

ஆடை மாற்றாத வானதி..பாவமாயிருக்கிறார்.

நாவலின் பாட்டுடைத்தலைவி அருண்மொழியின் அக்கா குந்தவை...பாவம் அவர் நடக்கும் போதே இந்த உடம்புடன் நடக்காமல் அங்கேயே குந்த வை அம்ம என கத்தத் தோன்றுகிறது.

ரவிதாசன் மற்றொரு மந்திரவாதி ஓராடை மனிதர்கள் தான்.
சேர்ந்தே நடப்பதும் சேர்ந்தே சிரிக்கும் அவர்கள் நம்மை சேர்ந்தே அழவைப்பதில் வெற்றி பெறுகிறார்கள்..
செம்பியன் மாதேவி பாத்திரப்படைப்பும் அவர் மொழியும் அழகு.

படைப்பின் கலைத்திறமையையும்,பாத்திரங்களின் தேர்வும் இப்படியென்றால்..

நாடக வசனங்களில் இவர்கள் புகுத்தியிருக்கும் சமகால நையாண்டிகளில் சபை சிரிக்கிறது..பாவம் கல்கி பார்த்தால் அழுதிருப்பார்.
உச்ச நட்சத்திரங்களை கேலி செய்வதும்,அம்மாவின் மரணத்தை காட்சிப்படுத்தும் வசனங்களும் பொன்னியின் செல்வன் நாடகத்துக்கு அழகல்ல..
சிரிக்க வைக்க பல மேடை நாடகக்குழுக்கள் இருக்கின்றன.

ஒரு ஆழக்கடலை சிமிழுக்குள் அடைக்கப்பார்த்திருக்கும் உங்கள் முயற்சி போற்றத்தக்கது தான்.ஆனால் அதற்காக நீங்கள் செய்திருக்கும் சமரசங்களை எப்படி ஏற்க முடியும்.

எண்ணற்ற கலைஞர்கள் விரவிக்கிடக்கும் தமிழகத்தில் பாத்திரங்களுக்கான தேர்வில் கொஞ்சமல்ல ..நிறையவே கவனமெடுத்திருக்கவேண்டும்.

பின்னணி இசையிலும்,மேடை அமைப்பிலும்,ஒலிவாங்கியிலும்  மிகத்தேர்ந்த வேலைப்பாடு காட்டத்தெரிந்த உங்களுக்கு கதை என்னும் ஜீவனை எப்படி அரையும் குறையுமாய் கொல்ல மனசு வந்தது.

பொதுமக்களுக்கான இலவச சேவையாக நீங்கள் இதை காட்டிவிட விரும்பவில்லை..300/ல் தொடங்கி 2000 வரை விலை வைத்து நீங்கள் விற்கும் கலைக்கேனும் நியாயமாய் இருங்கள்.

உங்கள் வியாபார மூளைக்கு எந்த இடத்தில் இடைவேளை விடவேண்டுமென தெரிந்திருக்கிறது..
எவையெல்லாம் அந்த நேரத்தில் விற்றுப்போகும் என்ற அறிவிருக்கிறது...
ஆனால்.பொன்னியின் செல்வனை படித்து லயித்திருக்கும் ஒற்றை வாசக்னேனும் கேள்வி கேட்பானே என்ற ஞானம் எப்படி இல்லாமல் போனது?

தலைமுறைகளை கடந்து வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு உயிர்ப்புள்ள நாவலை..எழுத்தை, தமிழை காப்பாற்ற வேண்டுமெனில் இந்த பொன்னியின் செல்வன் நாடகத்தை நிறுத்திக்கொள்ள செய்ய வேண்டும்..

வாசிப்பின் ருசியில் தெரியும் சதவீதத்தில் பத்து சதவீதம் கூட கொடுக்க முடியாத உங்களால் தான் தான் என் இன்னொரு தலைமுறை பொன்னியின் செல்வனை அறிந்து கொள்ள முடியும் என்றால்...
அய்யோ ..அவன் அதை அறியாமலே போகட்டும்..

அரங்கை விட்டு கிளம்பும் போது இனிய அறிவிப்பென்று சொன்னார்கள்...கல்கியின் மற்ற படைப்புகளையும் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றார்களாம்..

அய்யோ..பாவம்..கல்கி.






































8 கருத்துகள்:

  1. காசு கொடுத்து வேதனைப் பட்டிருக்கிறீர்கள் செல்வா. பொன்னியின் செல்வன் படித்த/ரசித்த அனைவருக்கும் இந்த நாடகம் பார்த்தால் வலி வரும்.

    பதிலளிநீக்கு
  2. பாவம் தான் நீங்கள்.. அப்புறம் இடைவேளையில் சூடா எதாவது சாப்பிட்டீர்களா?

    பதிலளிநீக்கு
  3. பொன்னியின் செல்வனைப் படித்துப் படித்து ரசித்தவர்கள் உங்களின் இப்பதிவிற்கு நன்றி கூறுவர். முதலில் நான் நன்றி கூறுகிறேன். கல்கியின் எழுத்தோடு எதனையும் ஒத்துநோக்கமுடியாது. பொன்னியின் செல்வன் என்ற பெயரை வைத்துக்கொண்டே பலவாறாக விளம்பர உத்திகளில் ஈடுபடுகின்றனர் என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  4. நம்ம மன கண்ணில் கண்டவைகளை காணும் ஆவலில் செல்லும் போது...

    பெருத்த ஏமாற்றம் அல்லவா...

    பதிலளிநீக்கு
  5. பொன்னியின் செல்வனை உணர்வோடுப் பிணைத்திருக்கும் எவருக்கும் பொறுக்காது இப்படிப்பட்ட நாடகமாக்கல்.

    பதிலளிநீக்கு