சனி, 26 செப்டம்பர், 2015

கையளவு உலகம்

கையளவு உலகம்

கால்ச்சட்டை எந்நேரமும் கழன்றுவிழத்துடிக்கும் பருவத்தில் பக்கத்துவீட்டு அண்ணன் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அண்ணனிடம் ஒரு



 கால்குலேட்டர் இருந்தது. அதை வாங்கும் போதே அதனுடன் ஒரு உறை கொடுத்திருந்தார்கள்.
ஆனாலும் அண்ணன் அதற்கு மேல் மூன்று உறைகள் தைத்துப்போட்டிருப்பார்.
என்னால் அவருக்கு ஏதேனும் வேலைகள் ஆகவேண்டுமெனில் மெதுவாய் உறைகளை அவிழ்த்து 4*4=16 என அழுத்திக்காட்டிவிட்டு மூடி விடுவார்...நான் அந்த நாள் முழுவதும் அவர் இட்ட வேலைகளைச்செய்வேன்


ஊரில் யாருக்கேனும் உறவினர்கள் இறந்து போய்விட்டால் தபால்நிலையத்திற்கு போன் வரும்..
அது இரவு இரண்டு மணி என்றாலும் ஊரே தபால்நிலையத்தின் முன் கூடியிருக்கும்....உள்ளேயிருந்து அவர் போனில் பேசுவது அநேகமாய் எதிர் முனையில் இருப்பவர்க்கு ரிசீவர் இல்லாமலேயே கேட்டிருக்கக்கூடும்.

பின்னொரு நாளில் நகரின் பிரதான வீதியில் ஒரு கடையில் நான் வேலை பார்த்த பொழுது...முதலாளி ஒரு எண்ணைக்கொடுத்து கூப்பிடு எனச்சொல்லிவிட்டு  டீ குடிக்கப்போய்விட்டார்...அவர்வரும் வரை விரல்களை  அந்த சிறு துளைகளுக்குள் விட்டு தேய்த்துக்கொண்டிருந்தேன்..
பின் தலையில் யாரோ தட்டினார்கள்.. திரும்பினேன்... முதலாளிதான் தட்டியிருந்தார்.

சிரித்துக்கொண்டே  .. ரிசீவரை கையில் எடுத்துக்கொண்டு சுத்துடா என்றார்...

ஒரு முறை அத்தை பழனியப்பா தியேட்டருக்குப் படம் பார்க்க கூட்டிப்போனார்....அடுத்த நாள் நண்பர்கள் கதைகேட்ட வேளையில் நான் ஒரு கட்டத்துக்குள் இருந்து ஒளி பாய்ந்து வந்து டான்ஸ் ஆடியதென்றேன்..

இப்படியாக என்னுள் இன்னும் ஏராளம் இருக்கிறது...

ஒவ்வொரு சாதனத்துக்கும் ஒரு கட்டுரை எழுதலாம்..

 

காலமென்னும் பேராழி என்னை நகர்த்தி புரட்டி அமிழ்த்தி                       ஒருவழியாய் கரை கண்ணில் தட்டுப்பட்ட பொழுது,
வீட்டுக்குள் தம்பி ஒரு கணிணி கொண்டு வந்தான்.

வெள்ளையாய் பின் மண்டை நீண்டதாய் அட்டைப்பெட்டிக்குள் தெர்மாகோல் அரவணைப்பில் இருந்ததை வெளியில் வைக்கும் போதுஅப்படி ஒரு ஆனந்தக்கண்ணீர் அம்மாவுக்கு...சந்தனம், குங்குமம் எல்லாம் வைத்தே ஆகவேண்டும் என்றார்கள்..தம்பி திட்டி விட்டான்.
நீண்ட சமாதானத்திற்குப்பிறகு அது வந்த பெட்டிக்கு பூ வைத்து பொட்டுவைத்து தன் கவுரவத்தை அம்மா காப்பாற்றிக்கொண்டார்.

கொஞ்சநாள் வைத்திருந்து விட்டு அவன் அலுவலகத்துக்கு எடுத்துப்போய்விட்டான்..
அதுவரை அது ஒரு இத்துப்போன அலுவலகமாக இருந்தது. இந்த பெட்டி போனவுடன்..தற்போதைய சவப்பெட்டியிலும் கொஞ்சம் பெரிதாய் நிற்கவைக்கும் அளவில் கண்ணாடிப்பெட்டி ஒன்று முளைத்து விட்டது,அதற்கென ஏசி ஒன்றும்.

முன்னெல்லாம் தம்பியை நினைத்தால் பார்த்துவிடலாம்..இப்போது முடிவதில்லை.அவன் முதலாளி கூட அடிக்கடி அவன் அறைக்குள் வந்து போனார்.

தமிழ்,ஆங்கிலம் என டைப் அடிக்கப்போன பெண்களுக்கும் பையன்களுக்குமாய் ‘கணிணி பயிற்சி மையங்கள்’ முளைக்க ஆரம்பித்து விட்டன..அநேகமாய் அது ‘பீட்டர் இங்லீஸ்’ என்ற கலாச்சாரத்தின் தோற்றுவாயிலாக இருக்குமென நினைக்கிறேன்.

டாஸ்,லோட்டஸ், குளோபல்,, அப்படி, இப்படி என ஆங்கிலத்திலேயே மூச்சுவிட்டார்கள்.


சுஜாதா என்றொரு மனிதன்.

கணிணி பற்றிய அடிப்படைசொற்களை தமிழுக்கு தந்ததில்,சுஜாதாவின் பங்கை யாரும் மறக்கவும் மறுக்கவும் முடுயாது.

கணிணி பற்றிய அறிமுகம், அதன் பயன்பாடு,அது எப்படி சுனாமியாய் எல்லாவற்றையும் விழுங்கும்(இந்த இடத்தில் ஒரு செய்தி...தமிழில் சுனாமி என்றொரு வார்த்தையை அறிமுகப்படுத்தியதும் அவரே)
என கதைபோல அவரின் எழுத்து இருந்தது. அவரின் பல கதைகள் கொடுக்காத பயனை கணிணி பற்றிய கட்டுரைகள் கொடுக்க ஆரம்பித்தன.

ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த அதன் கூறுகளை தமிழுக்கும், தமிழாலும் முடியுமென்ற நம்பிக்கையும் வழங்கினார்.
சிங்கப்பூரின் கணிணித்தமிழ் மாநாடு அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு அழைத்துப்போனது...

கணிணி பின் மண்டை சுருங்கி, தட்டையாகி, வெறும் ஒளியாகி, கைபேசிக்குள் உட்கார்ந்து உலகைச்சுற்றிப்பார்க்கும் அளவுக்கு

உருவில் சுருங்கி(?) விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.


இது இன்று இயங்காமல் போனால்?

திருவிளையாடல் படத்தில் சிவன் ’நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே ’என பாடும் போது அலைகளும் மரங்களும் அசையாமல் இருக்குமே ,    அதற்கான வாய்ப்பு அதிகமாய் இருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம்?


                    உலகின் தலைசிறந்த கணிணி வல்லுனர்களில் இந்தியரின் பங்கு, அதிலும் தமிழனின் பங்கு அதிகமாய் இருக்கிறது.
எல்லா நாடுகளிலும் டீக்கடை வைத்திருக்கும் நாயர்களை விட அதிகமாய் தமிழர்கள்  இருக்கிறார்கள்.

ஒவ்வொரு தேசத்தின் கட்டுமானத்திற்கும்,இயக்குதலுக்கும் , பேணுதலுக்கும் தமிழன் உழைத்துக்கொண்டிருக்கிறான். ஏனோ இன்னும் வரவில்லை தாய் மன்ணின் நினைவு.

வேண்டும் தமிழுக்கென ஒரு சிலிக்கான் வேலி.

எட்டு திக்கும் சென்று செல்வங்கள் சேர்த்தது போதும்.. ஆகாசக்குருவிகளே அன்னை நிலம் வந்திறங்குங்கள்.
கணிணி என்னும் கட்டுப்பாடற்ற பிரபஞ்ச வெளியின் கருந்துளைகளாய் மாறிப்போன பொய்களை களை எடுங்கள்.

கண்டுபிடிப்புகளில் இன்னும் கூர்மை சேருங்கள்.
இன்னும் இங்கே வானிலை அறிக்கை என்பது நகைச்சுவையாகவே பார்க்கப்படுகிறது.

நம் பாட்டன் பாரதிப்புலவன் கனவுகள் நனவாகும் காலமிது. இன்னுமிருக்கிறது அவன் கனவின் மிச்சங்கள்...

கணிணியில் இணையம்’    

நாம் இரண்டாம் முறை பெற்ற சுதந்திரம்.

காமப்படங்களும் , கட்டற்ற கேலிகளும் , பொய்யான வேதங்களும், வெற்றுப்பொழுதுபோக்கென விவாதங்களும்,சாதிக்கூச்சல்களும்,மதங்களின் மடமைவாதங்களும்  என இப்படியே இருப்பின் இரண்டாம் விடுதலையும் விடியாது.



கருத்துகள், விவாதங்கள்,வேலைகள் யாவையும்,
தமிழில் செய்வோம்,
தமிழால் செய்வோம்

எல்லாவற்றையும் இணைக்க இணையமிருக்கிறது.
இணைவோம்.

இனியேனும் மெல்லத் தமிழ் வாழட்டும்.






12 கருத்துகள்:

  1. எழுதாமலே இருக்கும் அல்லது எப்போதாவது எழுதும் நல்ல படைப்பாளிகளை இழுத்துப் பிடித்து எழுதவைத்திருக்கும் த.இ.க.இலக்கியப் போட்டிக்கு நன்றி. இன்னும் வேறுதலைப்புகளிலும் படைப்புகளைத் தாருங்கள் நண்பா!

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. காலபெட்டகத்தை தூசி தட்டி எடுத்து நீங்கள் எழுதியிருக்கும் இந்த போட்டிப் பதிவு என்னையும் என் பள்ளி நாட்களுக்கு கடத்திசென்றுவிட்டது சார்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா....உண்மையில் உங்கள் படைப்புகளை பிரமித்து பார்க்கிறேன்...இது வான்கோழியின் முயற்சி தானம்மா............

      நீக்கு
  4. கன்னித் தமிழ் இன்று உலகளாவி வளர்கிறது
    கணித் தமிழாய் நவீன கணினிப் பயனால்.

    கடலளவாய்ப் பரந்திருந்த உலகம் இன்று
    கையளவில் திரண்டு விட்டது இணையப் பயனால் . நல்ல சிந்தனைக்குரிய கட்டுரை- வென்றிட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்! வெகு சிறப்பு அருமை! வாழ்த்துக்கள்! நன்றி

    பதிலளிநீக்கு
  6. //...காமப்படங்களும் , கட்டற்ற கேலிகளும் , பொய்யான வேதங்களும், வெற்றுப்பொழுதுபோக்கென விவாதங்களும்,சாதிக்கூச்சல்களும்,மதங்களின் மடமைவாதங்களும் என இப்படியே இருப்பின் இரண்டாம் விடுதலையும் விடியாது.
    ஓ முதலதை பெற்று விட்டோமா?!!! நல்லது.

    பதிலளிநீக்கு