சனி, 26 மே, 2018

அம்பின் அலறல்..

இன்றென்
மகளுக்குப்
பிறந்தநாள்..
நகரின்
நலனுக்கு நடந்த
போராட்டமொன்றை
அடக்கிவிட்டு
வந்திருக்கிறேன்..

நீளத்தடியை
சுழற்றும் போது
எங்கோ
தெறித்திருக்கிறது
சீருடையின் உலோகப்பொத்தானொன்று..
ஆண்டிறுதி
அறிக்கையில்
பதில் சொல்லவேண்டிய நினைவில்..
எவனோ எறிந்த
கல்லொன்றில்
கன்றியிருக்கிறது
தோள்கள்.

கேக்கின் துகளொன்று
ஒட்டிய வாயுடன் உறங்கிக்கொண்டிருக்கிறாள் மகள்..

தொலைகாட்சி
மௌனமாய் ஓடிக்கொண்டிருக்க மனைவி
உணவுக்கழைக்கிறாள்.
மீதமிருக்கும்
கேக்கின் துண்டொன்று...
இளவண்ண கேசரியென
இருக்கிறது
இரவுக்கான உணவு.

பசியை மீறி தின்கிறது
பகலின் இரைச்சல்கள்..

பத்தாம் வகுப்பு
முடிந்ததும்
ஆரம்பமான
தண்டால்களும்,
தாண்டுதல்களும்,
தேகப்பயிற்சிகளுமாய் கயிறேறிக்காட்டியும்,
வெயிலின் பொட்டலில்
வியர்க்க தேர்வெழுதியும்
கிடைத்த வேலை..

மீசைக்கனவும்
மிடுக்கான பார்வையும்
பயிற்சி காலங்களில்
புரட்டியெடுத்த மணலில்
பாதி தொலைந்தது.

பளபளக்கும்
காலணிகளணிந்து
பதவி கொண்டபோது
எண்கள் என் பெயரானது.

அய்யாக்களும்
அடிபணிதல்களும் அத்தியாவசியமென
பயிற்சியில்
ஏதும் சொல்லவில்லை.

கவாத்துகளும்,
அணிவகுப்பும்
வேடிக்கை பார்த்துப்போகும் உங்களுக்குத் தெரியாது உறக்கமில்லா இரவுகள்.

உயரத்துப்பாக்கி
கைகளில்
பிடித்து நின்று
வலிக்கும்
பாராவின் கால்கள்..

கடக்கும் கார்களில்
யாரிருப்பாரோ
கவனமாய்
வைக்கவேண்டும்
நேர்நின்று
வணக்கங்கள்.

நிலையங்கள் பணியில்
நித்தம் சோதனைகள்.

அடித்தவன்
அமர்ந்திருப்பான்
அய்யாவின் முன்..
வாங்கியவன்
அறைக்குள் இருப்பான்.

தேனீர் கொடுப்பவன் சுதந்திரமானவன்
தேவைகளின்றியும்
போகலாம் வரலாம்.

கடினமாய்த்தேடி
கூட்டிவருவோம் .
அவன்
காலையில்
கடைவீதி திரிவான்.

சட்டத்தின் எண்கள் ஏட்டுக்குத்தெரியும்..
அவர் உட்கார்ந்து
எழுதியே
உருவாகும் தொப்பை.

கோர்ட்டுக்கு பணியென்றால்
கோபம் கொல்லும் மனசு.
வக்கீல் வாதம் செய்வார்..
நீதிபதி கேள்வி எய்வார்.
குற்றவாளி நானில்லை
கூண்டேறி நிற்கவேண்டும்.

எத்தனையோ இடரெனினும் இறுக்கமாய் இருக்கவேண்டும்.

கம்பீரம் பார்த்தெம்மை கடக்கும் உலகோரே...
நான் கைகட்டி வாய்பொத்த கணக்கில்லா இடமுண்டு.

முன்னாள் ரவுடி
மந்திரியாவார்..
முன்னால்
நாங்கள் வழி சொல்ல
வேண்டும்.
இந்நாள் ரவுடிக்கும்
எதிர்காலம் உண்டு
எதிர்பார்ப்போடு
இயங்கவும் வேண்டும்.

கூட்டங்கள் நடந்தால்
குறிப்புகள் வேண்டும்.
ஆர்ப்பாட்டங்களில்
அமைதிக்கு வேண்டும்.

அனுமதி பெற்று
தோழர்கள் திட்டுவர்..
சிலர்
மாமாக்கள் என்றே
மட்டமும் தட்டுவர்.

உயரத்து தலைமையின்
ஓரங்கள் நாங்கள்.
உள்ளுக்குள் வேகும்
துயரங்கள் நாங்கள்.

குறைகள் ஆயிரம்
எமக்கும் இருந்தும்
வழிகளில்லா
துறை எங்கள் துறையே!

சமூகமென்பது
என் வீடும் சேர்ந்து தான்.
சட்டங்கள் சொல்வதும்
சமமென எம்மைத்தான்.
கடமையைச்செய்தும் கயவர்களானோம்.

வங்கிக்கடன்கள்
வாய்ப்பதே இல்லை.
ஓய்வுற்ற பொழுதும்
காப்பதே வேலை.

அடக்குதலென்பது
அவரிடும் பணிகள்.
எமக்கும் தெரியும்
சமுதாய பிணிகள்.

விரலிட்ட மைகளில்
விளைந்திட்ட சோகம்.
நீங்கள் குரலிட
அவருக்கோ
அடங்காத கோபம்.

கொடுக்கும்
வேலைதான்
யாம்
கொல்வதில்லை..
கொடுப்பவர் மீது
நீங்கள்
கோபம் கொள்வதே இல்லை.

எவர் வந்த போதும்
பாவம் எமை வந்து சேரும்.
திட்டுவதென்றால் அவர் திசை திட்டுங்கள்.
முட்டுவதென்றால்
அவர் வீடு முட்டுங்கள்.

விசையுறு அம்புகள் நாங்கள்..
வில்லை மாற்றுங்கள்..
வீடுண்டு,
பிள்ளையுண்டு
எங்களுக்கும்
வீணான
எண்ணங்கள்
மாற்றுங்கள்.































7 கருத்துகள்:

  1. உரக்கச் சொன்னீர்
    ஒருபக்க உண்மை
    மறுபக்கமும் உண்டு செல்வா!

    பதிலளிநீக்கு
  2. அம்பின் அலரல் - காவல்துறையினர் எதிர்கொள்ளும் துன்பங்கள் துயரங்கள் எல்லாம் கவிதை வரிகளாய் வடிவம் பெற்றுள்ளன.

    பதிலளிநீக்கு
  3. "அடக்குதலென்பது
    அவரிடும் பணிகள்.
    எமக்கும் தெரியும்
    சமுதாய பிணிகள்." என
    அழகாகச் சொல்லியுள்ளீர்கள்!

    பதிலளிநீக்கு