புதன், 27 ஜூன், 2018

சாதித்த சங்கம்

இந்த பாண்டிச்சேரிக்கு அடிக்கடி வந்துபோயிருக்கிறேன்..
ஆங்கில ஆட்சியில் மட்டுமல்லாது இந்த காலத்திலும் பலருக்கு அடைக்கலம் கொடுக்கும் பூமியாகத்தான் இருக்கிறது.
கடற்கரையின் நடைபாதையில் அலைகொஞ்சும் கடல் ஒருபுறமெனில் மற்றொரு புறம் கட்டடங்களை ரசித்துக்கொண்டிருக்கும் பலரது முகங்களில் என்னைப்போலவே அடைக்கலமாய் வந்திருக்கும் உணர்வுகளை கண்டிருக்கிறேன்.

தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தை கடந்து வளவனூர் தாண்டும் போதே ஒரு தனி உற்சாகம் மனசுக்குள் பூத்துவிடும்.
புதுச்சேரி வரவேற்கும் வளைவுக்குள் நுழைந்துவிட்டால் நீண்ட நாளுக்குப்பின் தாய்ப்பசுவை கண்ட கன்றுக்குட்டியாய் வண்டி பறக்கும்.

இடையில் கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்ட பின் த.மு.எ.க.ச வின் 14ஆம் மாநில மாநாட்டுக்காய் தோழர்களோடு ஒரு பார்வையாளனாய் போய் வந்தேன்.

மாநாடு 21 ஆம் தேதியே தொடங்கி இருந்தாலும் நாங்கள் 22 தான் செல்ல முடிந்தது..

நாராயண சாமியின் முகத்தை பல்வேறு வடிவங்களில் வண்ணங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைத்தாண்டி மாநில மாநாட்டின் வித்தியாசமான பதாகைகள் பளிச்சென இருந்தது.

இந்திராவின் சிலையை தாண்டி ராஜிவ் சிலையை கடந்ததும் பாலாஜி தியேட்டரின் பின்புறமுள்ள ஒரு மண்டபத்தில் நடந்துகொண்டிருந்தது மாநாடு.

இந்த மாநாட்டின் எந்த ஒரு அங்கமாகவும் நானில்லை.
முழுக்க முழுக்க ஒரு பார்வையாளனாய் நான் அடைந்த பேறுகள் பல.

அரங்கின் வாசலில் அப்படி ஒரு வாய்ப்பூட்டின் படம்..
இன்னொரு புறம் படுகொலை செய்யப்பட்ட தபோல்கர்,கல்புர்க்கி,கௌரி லங்கேஷ் ..இவர்களை குறிபார்த்து நிற்கும் ஒரு துப்பாக்கியுடன் புடைப்புப்பதாகை.

அரங்கின் உள்ளே மேலாண்மை நினைவு அரங்கில் தூய வெள்ளைநிறப் பிண்ணனியில் அகன்ற மேடை..

உட்கார்ந்திருக்கும் தலைகளோ ஆகப்பெரியவர்கள்...
வாமனனாய் தெரியும் பேராசிரியர் அருணன் விஸ்வரூபம் எடுக்க அமர்ந்திருக்கிறார்.

வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதவியல் ஆராய்ச்சியாளரும் நான் மிகவும் ஆராதிக்கும் அமைதியான மனிதர் பக்தவக்சலபாரதி சாதியற்ற தமிழகத்தின் நிலையை அத்தனை வரலாற்று ஆதாரங்களுடன் சொல்லிமுடிக்கிறார்.

கூட்டம் பேசும் மனிதரின் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் தொடர்கிறது.
பட்பட்டென பேசும் வார்த்தைகளை உடையவர்கள் பேசும்போது சிரிக்கிறது,சத்தமிடுகிறது,

ஆனால் பேசுபவர் மிக அமைதியாக கருத்துகளை சொல்லும் போது காதுகளை கூர்மையாக்கி வாங்கிமட்டும்
வைத்துக்கொள்கிறது.

அடுத்ததாய் அற்புத படைப்பாளி சுகுமாறனின் கவிதையில் தொடங்கிய உரை கட்டிப்போடுகிறது சபையை..
மெல்லிய சாரல் நம் ஜன்னலோரம் அடிக்கும் போது எப்படி அதை தவிர்க்காமல் ஈரம் நம் முகத்தை மோத கொடுத்துக்கொண்டிருப்போமோ அப்படி இதயம் அவர் வார்த்தைகளில் இளகிக்கொண்டிருக்கிறது.

இடை இடையே அறிவிப்புகளை அளிக்கும் தோழர் மதுக்கூர் ராமலிங்கம்,
ச.தமிழ்ச்செல்வன்,
சு.வெங்கடேசன் ஆகியோரின் குறுஞ்செய்தி போன்ற தகவல்கள் பாயாசத்தின் முந்திரிப்பருப்புகள்.

வாசலை ஒட்டி அமர்ந்திருக்கிறேன்.
கடந்து போகும் மனிதர்களின் முகங்கள் என்னை பரவசப்படுத்துகின்றன.
இத்தனை நாள் வாழ்வில் யாரையெல்லாம் நான் பார்க்காமல் இருந்திருக்கின்றேனோ அல்லது யாரை பார்க்க விரும்பியிருந்திருக்கின்றேனோ அத்தனை படைப்பாளிகளையும் பார்க்கிறேன்.
எத்தனை அபாரமான படைப்பாளிகளின் கூட்டம்..
ஆனால் அத்தனை எளிமையான கைகுலுக்கல்கள்.
எந்த தயக்கமும் இல்லாமல் அவர்களின் கரங்களை நோக்கி நீளும் என் கரங்களை கனிவுடன் வாங்கி பொத்திவைத்துக்கொள்கின்றன அவர்களின் கைகள்.

மேடையிலிருந்து இறங்கும் சுகுமாறனுடன் ஒரு புகைப்படமெடுக்க விழைகிறேன்...
ஒட்டிக்கொண்டிருக்கும் அவரின் புன்னகை இன்னும் கொஞ்சம் விரிகிறது பூவைப்போல..

குறுந்தாடியுடன் வலம்வரும் ஆதவன் தீட்சண்யா,சிரிப்பும் கேலியுமாய் நண்பர்களுடன் பூபாளம் பிரகதீஸ்வரன்,
ஒரு யானையாய் அசைந்து வரும் எஸ்.ஏ.பி,
இதோ என்னை கடந்து போகும் பெண் ஆவணப்பட இயக்குனர் திவ்யா, நடக்கிறாரா பறக்கிறாரா வெண்புறா, பிரமாண்டமான ஒரு திருமண வீட்டைப்போல் எந்நேரமும் பந்தி நடந்து கொண்டிருக்கும் உணவுக்கூடம்.
கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் அடையாள அட்டைகளை சுமந்து கொண்டிருப்பதில் எத்தனை கர்வம் இந்த தோழர்களுக்கு.

ஆயிரம் தலைகள் கண்ணுக்குத்தெரிந்தால் அதில் 99விழுக்காடு படைப்பாளிகள் ...
மேடையின் விவாதங்களுக்கிடையே பாடத்தொடங்கிவிடும் பாடகர்களின் குரல் அத்தனை வலிமையாய் இருக்கிறது.

"அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
அத்தனை சொற்களும் வெறும் பசப்பு"

புதுச்சேரியின் தோழியர் உமா பாடுகையில் அத்தனை பாந்தமாயிருக்கிறது.

கரிசல் கருணாநிதி அவ்வப்போது பாடுகிறார்.
கருப்பு கருணா கண்ணாடி போட்டிருக்கும் ரகசியம் தெரிகிறது,
தெறிக்கவிடும் வெடிச்சொற்களில் மின்னும் மன்றத்தின் புன்னகையில் கூசாதா அவர் கண்கள்?

மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரல். ஒவ்வொருவருக்கும் ஒரு பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது..
மேடையின் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கிறது.
அத்தனை நிகழ்வுகளிலும் கூட்டம் மனப்பூர்வமாய் கலந்துகொள்கிறது.

எழுத மறந்தாலும் மறந்துவிடுவேன் என்பதால் இடையில் இந்த வார்த்தைகளை இப்போதே சொல்லிவிடுகிறேன்.

முன்னொரு நாளில் நான் புதுவை சென்றிருந்த போது ஒரு கட்சியின் மாநாடு நடந்துகொண்டிருந்தது.
நகரின் அத்தனை மதுக்கடைகளிலும் அந்த கட்சியின் தொண்டர்களைக்கண்டிருக்கிறேன்.
ஆனால்.
நண்பர்களே இந்த முறை மண்டபத்தின் எதிரிலேயே மதுக்கடை இருந்தாலும் ஒற்றைத்தோழர் கூட அதில் நுழைவதை நான் காணவில்லை.
அடையாள அட்டை தொங்கும் ஒரு தோழரைக்கூட நகரின் சுற்றுலாத்தளங்களில் நான் காணவில்லை.
மாநாட்டின் வெற்றியை அளக்க பல அளவுகோல்கள் இருந்தாலும் இது தலையாய அளவென்பேன்.

மண்டபத்தின் நிகழ்ச்சி முடிந்து கம்பன் அரங்கில் ஏற்பாடாகியிருக்கும் பொதுமக்களுக்கான கருந்தரங்குக்காய் நடக்க ஆரம்பிக்கிறார்கள் தோழர்கள்..

ஆயிரக்கணக்கான பேர்கள் அமரக்கூடிய அரங்கம்..
அணிந்து கொள்கிறது மனிதர்களை.

கருத்தரங்கம் பேராசிரியர் அருணனின் உரையில் ஆரம்பிக்கிறது..
தொகுத்துவழங்க குமரேசன் தோழர்.
மேடையில் கவிஞர் வைரமுத்து,
பெருமாள்முருகன்.
கருத்தரங்கின் மையப்பொருளாம் கருத்துரிமை பாதுகாப்புக்கு இவர்களை விடவா பொருத்தமானவர்கள் கிடைத்துவிடப்போகிறார்கள்.

அரங்கம் ஆர்ப்பரிக்க புதுவையின் முதல்வர் நுழைகிறார்...
மேடையில் ஏறாமல் மக்கள் சமுத்திரத்தின் ஊடே மோசேயாய் கரங்கள் கூப்பி வலம் வருகிறார்.
இருக்கைகள் நிரம்பி காலியிடங்களிலெல்லாம் கால்கள் நின்றுகொண்டிருக்கிறது.
பேச்சாளர்கள் பேசும் முன்னே முதலவரை நண்பர் நாராயணசாமி என விளித்து பேச அழைக்கிறார்.
ஒரு மாநிலத்தின் முதல்வரையும் நண்பராய் பார்க்கும் பக்குவத்தை என்ன சொல்வது?

மாதொருபாகனுக்காய் குரல்கொடுத்த நன்றிக்கடனை பெருமாள் முருகன் நெஞ்சார அடைக்கிறார்.
மார்க்சியம்,அம்பேத்காரியம்,பெரியாரியம் இணைய வேண்டிய கட்டாயத்தை எடுத்துவைத்து இருக்கை திரும்ப...
வைரமுத்து வசம் மேடை. வாசமடிக்க ஆரம்பிக்கிறது தமிழால்.
நாடோள்வோர் ஏடாள்வோரை கொண்டாட வேண்டியதில் தொடங்கி வந்து நிறைகிறது வார்த்தை நதி அணைகளின்றியும் மேலாண்மை வாரியமின்றியும்.

அரங்கம் காதுகளை திறந்து வைத்து வைரமுத்துவின் வார்த்தைகளை இதயத்தில் சேமிக்கிறது.
நன்றியுடன் முடியும் நாள்.

அடுத்த முழுநாளும் அவர்களின் விவாதங்கள் ஆலோசனைகள்..எதிர்கால முன்னெடுப்பின் யோசனைகள்.
நான் மண்டபத்தின் இறகுகளாய் முளைத்திருந்த புத்தகக்கடைகளில் மேய்கிறேன்.
கடைகள் சிறிதெனினும் கடல்களை அடைத்துவைத்திருக்கும் புத்தகங்கள்.

இன்னொரு அரங்கில் கீழடி குறித்த ஆவணங்கள்,மற்றொன்றில் புகைப்படக்கண்காட்சி..
நைநா கி.ரா வின் எதார்த்தமான புகைப்படங்கள்..
சுந்தரராமசாமி,
பேரழகன் பிரபஞ்சன்...
பார்ப்பது புகைப்படமா அல்லது ஹாரிபாட்டர் கதையில் வருவதுபோல் படங்களுக்குள்ளே இருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றார்களோ என சந்தேகம் வருகிறது.

அவர்களின் ஏதோ ஒரு பொறுப்புக்காய் தேர்தல் நடக்கிறது..
தேர்தல்.ஆணையர் இருக்கிறார்..
வாக்கெண்ணிக்கை முடிந்து அறிவிக்கிறார்கள்..
வென்றவர் கொஞ்சமாய் சிரிக்கிறார்.
தவறவிட்டவர் இன்னும் அதிகமாய் சிரித்து வென்றவரை தழுவிக்கொள்கிறார்.

மண்டபத்து ஒட்டியிருக்கும் மேடையின் பின் திரையாய் மூன்று புடைப்புச்சிலைகள் முளைத்திருக்கிறது.

அம்பேத்கார்,லெனின்,பெரியார் இவர்களின் முகங்களின் பிண்ணனியில் மாலை நிகழ்ச்சி தொடங்குகிறது.
இதனிடையில் படைப்பாளர்களின் நாற்பத்து இரண்டு படைப்புகள் வெளியிடப்படுகிறது.

மாலை நிகழ்ச்சியாய் கவியரங்கம்.
கவியரங்கின் ஊடே பின்புறமுள்ள சிலைகள் முழுமை பெற ஆரம்பிக்கிறது.


சமீபத்தில் தூத்துக்குடியில் துப்பாக்கிக்குண்டில் மாண்ட ஸ்னோலினின் எழுத்துகள் புத்தகமாக்கி வெளியிட வரும் ச.தமிழ்ச்செல்வன்..
ஒரு அமைப்பின் மாநிலத்தலைவர்...அந்த புத்தகத்தின் அட்டையை பார்த்து அழுகிறார்..
வார்த்தைகள் வராத நிலையில் ஸ்தம்பிக்கிறது கூட்டம்..
பெற்றுக்கொண்ட பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜனாகட்டும்,
வெளியிட்ட பத்திரிக்கையாளர் திருமாவேலனாகட்டும் உணர்ச்சிகளின் குவியலுக்குள் இருந்தனர்.

யவனிகா ஸ்ரீராம் ஆரம்பிக்கும் கவியரங்கை தொடரும் வல்லம் தாஜ்பால்,வெயில்,ஜீவி,
தனிக்கொடி,ஸ்டாலின் சரவணன் என கவிதை மழையில் நனைகிறது வெளி..

அறம் பட இயக்குனர் தோழர் கோபி நைனாரின் உரை அப்படி ஒரு எளிமை...

இரவு என்னும் பொழுது உச்சிக்கு வந்ததால் கலையும் அரங்கம்.
அடுத்த காலை மீண்டும் கூடுகிறது..

முக்கியப்பொருப்புகளுக்கான தேர்தல்,ஆலோசனை என அரங்கத்தை மூடி நடக்கும் சடங்குகள் முடிய,
மதியம் பேராசிரியர் அருணனின் தொகுப்புரை..

இறுதியாய் அறிவிக்கிறார்கள்..
புதிய கௌரவதலைவராகிறார் ச.தமிழ்ச்செல்வன்,
தலைவர் சு.வெங்கடேசன்,
பொதுச்செயலாளராக ஆதவன் தீட்சண்யா,
பொருளராக ராமச்சந்திரன்..மற்றும் துணைத்தலைவர்கள்,
துணைச்செயலர்கள்...
த.மு.எ.ச.க.வின் பொறுப்புகள் இவர்களின் தோள்களுக்கு மாறியிருந்தாலும் சேர்ந்து கடக்க ஆயிரமாயிரமாய் தோழர்கள் இருக்கையில் எல்லாம் சாதிக்கலாம்.

ஒரு அமைப்பின் கொள்கைகளை தீர்மானிக்கும் முன் அமைப்பின் சட்டதிட்டங்களை வரைவதோடு இல்லாமல் அதனை ராணுவக்கட்டுப்பாட்டுடன் செயல்படுத்தும் பாங்கு ..
இயங்கும் எல்லா அமைப்புகளும் படிக்கவேண்டிய பாடம்.

மாநாடு முடிந்த நள்ளிரவில் அந்த மண்டபத்தை கடக்கிறேன்..
ஒரு அஸ்வமேத யாகம் முடிந்த இடமென தெரிகிறது.

பேருந்து நிலையத்து உள்ளே நின்று கொண்டிருக்கும் தோழர்களின் முகத்தில் அத்தனை முதிர்வு...

யாரின் முகத்திலும் சோர்வென்பதே தெரியவில்லை..
எப்படி இருக்கும்..

அவர்கள் சுமந்து கொண்டிருப்பது
சாதியற்ற தமிழகம்,காவியற்ற தமிழகம் என்ற சமூகம் பற்றிய உயரிய நோக்கமல்லவா?

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் என் வாழ்த்துகள் தோழர்களே.





























5 கருத்துகள்:

  1. தமுஎசக மாநில மாநாட்டிற்கு வர இயலாதவர்களுக்கு இக்கட்டுரை ஒரு ஆவணப்படம்

    பதிலளிநீக்கு
  2. மாநாட்டிற்கு நேரில் சென்று வந்த உணர்வு
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  3. நிகழ்வினை விடுபாடின்றி பகிர்ந்தவிதம் அருமையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் தோழமை உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி செல்வா!
    இன்னும் எத்தனை நாள் நீங்கள் “வெளியிலேயே” நிற்கிறீர்கள் என்று பார்க்கிறேன்… “உள்ளே“ வந்து செய்ய வேண்டியவை நிறைய இருக்கிறது செல்வா! முக்கியமாக “ஜென்னி காவியம்” உலகளாவிய அளவில் சென்று சேரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். விரைவில் இரண்டையும் செயல்படுத்துங்கள்.. நாம் வென்றாக வேண்டிய அவசரமுள்ளது! Under stand com.?

    பதிலளிநீக்கு