புதன், 12 ஆகஸ்ட், 2015

ஏய் பார்த்துக்கோ. பார்த்துக்கோ...


.
உங்களோட (எழுத்துலக மரியாதை என்னால் கேவலப்பட்டு விடக்கூடாதே என்ற சிறிய நல்லெண்ணத்தால் உங்கள்,நீங்கள் என எழுதுகிறேன்...இந்த மாதிரியான இடங்களில் நீங்கள் விரும்பும் எவ்வளவு மோசமான வார்த்தைகளையும் நினைத்துக்கொள்ளளாம்...)17 வருசமா வாழ்ந்ததுல வெட்டிப்பேச்சு தான்...(நல்ல வேளை அதற்கு முந்தைய வருடங்களை மறந்து விட்டாள்).என்கிட்டத்தான் பேச்செல்லாம் வெளியில ஒரு மண்ணும் இல்ல...நாலுபேருக்கு முன்னால ஊமையா நிக்கத்தான் தெரியும்...இவ்வளவு படிக்கிறீங்களே,எங்கயாவது பேசலாம்ல...(யார்யாரோ பேசுறாஙன்னு சிலபல பேரும் சொன்னாள்.அதை நான் சொன்னால் நான் வாழ்நாள் முழுவதும் பேசமுடியாமல் ஆகும் வாய்ப்பு இருக்கிறது)ஆனாலும் அது உண்மை தான்.
நமக்கு மேடைப்பேச்சில் அவ்வளவு பிரியம்..லேசா தொடை நடுங்கும்,கொஞ்சம் குரல் கம்மும் ...வேறொரு தொந்தரவும் இல்லை.மன்னிக்கனும் இந்த இடத்துல இன்னொரு அடைப்புக்குறி போட்டே ஆகணும்(வேற ஒன்னும் இல்லங்க இப்பவெல்லாம் வீட்ல பேசும் போதே அப்படி ஆகுதுங்க)
சின்ன வயசுல இருந்தே நமக்கு அது ஆகலங்க..அதனால் தான் கவிதைகள் பக்கம் திரும்பினேன்.கடவுளே எதிரில் இருந்தாலும் காகிதத்தை பார்த்தமா வாசித்துவிட்டு வந்தமான்னு வந்துவிடலாம்.வீம்புக்கு பேசப்போய் மாட்டிய (வீர) வரலாறு எனக்கும் உண்டு...எட்டாம் வகுப்பு படிக்கும் போது நடந்த மாற்றுடைப்போட்டியில் மரியாதையாக ராஜா வேடம் போட்டதோடு இருந்திருக்கலாம்..என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றும் ஆவலில் "அனார்..அனார்..என் மாசற்ற ஜோதிமலையே" என சலீமின் வசனம் பேச   ,,,ராஜாவேடத்திற்காய் போட்டிருந்த அத்தை பெண்ணின் பாவாடை கழன்று விழுந்தது..நல்ல வேளை அந்த நாட்களில் பேஸ்புக்கும் வாட்ஸப்பும் இல்ல.
ஆதலால் சுற்றி வளைத்து நான் சொல்ல வருவது யாதெனின் நமக்கும் மேடைக்கும் வெகு தூரம்.
மேடை போலவே பிடிக்காத இன்னொரு விசயம் காவல் நிலையங்களும்..சிறைச்சாலை வளாக முகப்புகளும்.....அத்தையை கட்டின (அல்லது )அத்தை கட்டிய மாமா எவ்வளவோ முயற்சி பண்ணிப்பார்த்தார் என்னை கன்னியமிக்க காவலர் ஆக்கலாமென..,..முயற்சி உடையாராய் இருந்தும் பாவம் இகழ்ச்சியடைந்தார்.இன்னொரு மாமா சிறைத்துறை...கொஞ்சநாள் அந்த வளாகத்திலேயே குடியிருந்தார்....எப்போது போனாலும் பயமாகவே இருக்கும்...ஆக இதுதான் நம்ம முன்னணி,பின்னணி எல்லாம்...
நேற்று திடீரென ஒரு குண்டு வீசியிருக்கிறாள்.நான் பேச வேண்டுமாம்...பாருங்கள் ஒரு மனிதனின் வெற்றிக்கு ஒரு பெண் எப்படிப் பின்னிருக்கிறாளென....?
சூப்பர்ம்மா....என்ன தலைப்பு?  சொன்னா ரெடி பண்ணுவனே. ..என்றைக்கு?  எங்கே?  யாரெல்லாம் வருவாங்க?   
ம்ம்ம்...யாரும் வரமாட்டாங்க...
அங்கதான் இருப்பாங்க...
ஓ எதோ கல்லூரி போல
(கவுன்சிலிங்ல ரொம்பாம ..கொஞ்சம் நொடிச்சிருக்கும் போல
..இல்லன்னா நம்மலப்போய்?,)
நம்ம கார்லயே போயிடலாமா? வேணாம் ..ஜீப் வரும்....
என்னவோ இடிக்குதே?
சொல்லும்மா ...
சிறையில போய் பேசணுமாம்.
எப்போ? 
சுதந்திர தினத்துல....
இப்ப தெரியுதா ஏன் வார்த்தைகள் அதிகமாய் அடைப்புக்குறிச்சிறைகளுக்குள் மாத்திய விதம்.
சரி எப்படி முடிக்கலாம்.
ஏய்.. பார்த்துக்கோ...பார்த்துக்கோ...
நானும்_________தான்.
நானும்__________தான்
இது நல்லா இல்லையே....
இப்படி முடிக்கலாம்.
"சுதந்திர தினம்
சிறையில் பேசுவேன்
சூழ்நிலைக்கைதி".

2 கருத்துகள்: