சனி, 15 ஆகஸ்ட், 2015

சுதந்திர தின வாழ்த்துகள்....எனக்கு.

லொட லொட பேருந்தில் இ்ந்தமுறை போகக்கூடாது.பயணம் முழுவதும் தூங்கவேண்டும்.
அப்பத்தான் நாளை முகம் கொஞ்சமேனும்(?)பார்க்கும்படி இருக்கும்.மூத்திரசந்தில் மூன்றாகவதாக நின்ற பேருந்து வாய்த்தது.இருக்கை அளவுக்குமீறி சாய்ந்து கொடுத்தது.சிவகார்த்திகேயன் மிகத்தீவிரமாய் போலிஸ்வேலை பார்த்த படம் ஓடிக்கொண்டிருந்தது.
மூச்சை அவ்வப்போது நிறுத்தி நிறுத்தி பயிற்சி எடுத்த முக்கால் மணி நேரத்திற்கு பிறகு முணங்கத்தொடங்கியது பேருந்து.
வழக்கமாய் ஊர் எல்லை தாண்டி ,அருவாள் வைத்திருக்கும் கருப்பருக்கு ஒரு காற்று முத்தம் கொடுத்து, பிறந்த ஊர் தாண்டும் போது எங்கோ ஒரு இடத்தில் தெரியும் ஒற்றை வெளிச்சம் கிளறிவிட்டுப்போகும் பால்யத்தை ,வலிய அணைத்து உறங்கத்தொடங்கும் நேரம் அடுத்த ஊர் வந்துவிடும்.
இந்தமுறை காற்றுமுத்தம் கருப்பருக்கு வாய்க்கவில்லை.
கண்களை இறுக்க மூடி உறங்கிவிட்டேன். ஐந்து மனிக்கெல்லாம் போய்விடலாம் என்று பயணத்தை தொடங்கும் போது சொன்னவன் ,ஒரு தேர்ந்த அரசியல்வாதி ஆவதற்கு அனைத்துத்தகுதிகளும் உடையவன்.
காலை எட்டுமணிக்கு நகர எல்லையை தொடும்போது,சில இடங்களில் "ஜனகன மன" கேட்கத்தொடங்கியது.
இரண்டு நாட்களாய் தொடர்ந்த வேலைகள்..
அநேகமாய் உலகின் எல்லா சிறை பற்றிய குறிப்புகளும் தேடிவிட்டேன்.
இருபது சுகி.சிவம் ஒலி நாடாக்கள்.
கோப்மேயர் தொடங்கி கோபிநாத் வரை புத்த்கங்கள்.
என் வீட்டு கண்ணாடிக்குமட்டும் வாய்ப்புயிருக்குமாயின் பலமுறை தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு அதன் முன்னே உரை நிகழ்த்தியிருக்கிறேன்.
எப்படித்தொடங்குவது?பாரதியா...பாரதி தாசனா...?
ஒரு இரவு முழுவதும் தொடர்ந்த வழக்காடுமன்றத்தின் தீர்ப்புக்கு மேல் நீதிமன்றம் போகுமளவுக்கு காதறு நிலை.
கண்ணன் சிறையில் பிறந்த கதை,வ.உ.சி. செக்கிழுத்த கொடுமை,கொஞ்சமாய் நெப்போலியன் ஹில்லின் தன்னம்பிக்கை மற்றும் தேவையான அளவு உப்பு,புளி,காரம்,.மன்னிக்கவும் ....வரலாறு,வெள்ளையர் கொடுமை,சிறையின் சிறப்புகள் சேர்த்து ஒரு காகித்தில் இரண்டுற,மூன்றுற,...பலமுற அரைத்து ,கடந்த நாளில் காலை வெறும் வயிற்றில் மனப்பாலாய் பலமுறை அருந்தி,பீதியாகும் கோட்டுக்கு கொஞ்சம் கீழே திரும்பினேன்.
அடுத்த கவலை உடை என்னும் கொடுமையாய் வந்து நின்றது.
எப்போதோ ஒருமுறை அவள் நல்லாயிருக்கு(உண்மையென்று இன்னும் நம்புறேனே)
என்ற ஜிப்பாவை உதறியெடுத்து,அதற்கான பேண்ட்டை பெரும்பாடுபட்டு துணிப்பொருள் ஆராய்ச்சி செய்து அயர்ன் பண்ணி...மடித்து...ஷ்ஷ்..அப்பா...
உண்மையில் கொலைசெய்துவிட்டு சிறைக்குப் போனவன்கூட இப்படி ஒரு ஏற்பாடுகள் செய்திருக்கமாட்டான்.
ஷேவிங் செய்யவேண்டும்...
முடி பறக்காத அளவிலும்,முகத்தில் வழியாத அளவிலும் எண்ணெய் பூச வேண்டும்.
செருப்புக்கும் கொஞ்சம் பாலிஸ் போட வேண்டும்..
வீட்டுக்குப்போனதும் இத்தனை வேலைகள் இருக்கு....
வீட்டுக்கு வந்துவிட்டேன்.
எத்தனை மணிக்கு தயாராகனும்?
வேற யார் யார் பேசுறாங்க?அழைப்பிதழ் பார்க்கலாமா?...
பார்க்கிறேன்.....
என் பெயர் இல்லை....
நேரம் அதிகம் இல்லை என்பதால் என் பெயரைக்குறைத்திருக்கிறார்கள்.
என் முன்னோர்கள் ஒரு பாவமும் செய்திருக்க மாட்டார்கள்.
மாயாண்டி சாமியும்,ஆத்தா உடையநாச்சியும் அவுங்க புள்ளய சிறைக்குள்ள விடுவாங்களா?..
இந்த முறை குலசாமி கும்பிட போயே ஆகணும்.காசு முடிந்து போடுகிறேன்.
பள்ளியில் சுதந்திரதின விழா முடிந்து சின்னவள் வந்துவிட்டாள்.
இப்போதுதான் தொடங்குகிறது சுதந்திரதினம் ....
எனக்கு....

3 கருத்துகள்:

  1. அடுத்த வாய்ப்பு கிடைக்காமலா போகும். பேசியே ஆகணும். விட மாட்டேன்....

    பதிலளிநீக்கு
  2. அங்கே இருக்குற அலுவலர்கள், காவலர்கள் எல்லாம் பாவம் செய்தவர்களா?......இந்த பிளாக்கைப் படிக்கச் சொல்லி அந்த உயர் அதிகாரிக்கு போன் பண்ணிச் சொல்லிட்டேன். அப்புறம் உங்க தாய் மாமாவுக்குக் கூட

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நேரம் அடித்து பதிவெற்றும் முன் அழிந்துவிட்டது
    அதனால்
    Super

    பதிலளிநீக்கு