புதன், 9 மார்ச், 2016

செய்திகளின் நெரிசலில்...

அன்பின் சக்திக்கு,

கொஞ்சநாட்களாய் நமக்கான கடிதங்களில்
சிறு தொய்வு..

செய்திகளின் நெரிசலில் சிக்கிக்கொண்டேன்.
எதை எடுக்க ..எதை தொடுக்க..

மைதாஸின் விரலென என் பேனாவிற்கு வருமுன் செய்தி செத்துப்போய்விடுகிறது.

அவசர உலகம் தான்..
நாளின் தொடக்கத்திலிருந்து ஆரம்பித்துவிடுகிறது செய்திகளின் துரத்தல்கள்.

மூளைக்கான எல்லாவேலையையும் விரல்களுக்கு கொடுத்துவிட்டோம்.

என் அலைபேசி தொலைந்தால் எனக்கு யார் எண்ணும் தெரியாது.

செய்திகளின் ஆயுளுக்கு வருவோம்.

இங்கே எத்தனை செய்திகள் வரலாறு ஆகின்றன?

வாட்ஸ் அப் அல்லது குறுஞ்செய்திகளின் அழிப்பில் தொலைந்துபோகின்றன.

பெருமழை தொடங்கிய இந்த குறுகிய காலங்களில் எத்தனை செய்திகள்.?

துப்பல்
பீப் பாடல்
கோவன் கைது
ஸ்டிக்கர்
ரோஹித் மரணம்
மருத்துவ படிப்பு பிள்ளைகள் சாவு.
கன்னையா குமார் கைது..

அப்பா..இன்னும் எத்தனை செய்திகள்..

இவை ஊடகங்களின் துணையுடன் ஒரு கூட்டம் செய்யும் கெட்டிக்காரத்தனம்..

செய்திகள் செய்திகளென திணித்து  மழுங்கடித்துவைக்கிறார்கள் மக்களை..

மழைக்கு பின்னான முன்னேற்பாடுகள் என்ன?
நிவாரணப்பணிகளின் நிலை என்ன?
பீப் பாடிய சிம்பு வழக்கு என்ன ஆனது?
துப்பிய தலைவருக்கு பின்னே இன்னும் மைக் பிடித்து அலையும் அதே கும்பல்..
அறிவு இருக்கிறதா என இன்னும் தெரியவில்லை.
ரோஹித் மரணம் அவனைப்புதைத்ததோடு முடிந்ததா?

யார் கேட்பது இவ்வளவும்..
யாரும் கிடையாது..

அமைச்சராய் இருந்த ஒருவர் சிறைப்படுகிறார்..
குற்றமில்லை என விடுவிக்கப்படுகிறார்..
குற்றமற்ற என்னை ஏன் சிறைவைத்தீர்கள் என கேட்க மாட்டார்..

ஷேக்ஸ்பியர் சொன்னது தான்..எல்லாம் நாடகம்.

அரசியல் என்பது என்ன என தெரிந்தே இருக்கிறது..
லஞ்சங்கள் இந்த தேசத்தில் மறைமுகமாய் இல்லை.

செய்திகளுக்கு தகுந்த படம் போட்டு லைக்ஸ் கேட்பதும்,அடுத்த செய்திக்கு தாவுவதுமாய் நகர்கிறது நாடு..

எங்கள் காலங்களில் மாற்றம் சாத்தியமில்லாதது போல்தான் இருக்கிறது..

உங்கள் காலத்தில் செய்யுங்கள் சக்தி..

உங்கள் நாட்களில் எங்களை காறித்துப்புவீர்கள்..
துடைத்துக்கொள்கிறோம்

எங்கள் செய்திகளை தூக்கிப்போட்டுவிட்டு உண்மையுடன் வாழுங்கள்

நீங்கள் புரட்டிப்போடுங்கள்..
அமைதியான,நேர்மையான வாழ்க்கை உங்களுக்கு அமையட்டும்..

18 கருத்துகள்:

  1. “உங்கள் நாட்களில் எங்களை காறித்துப்புவீர்கள்..
    துடைத்துக்கொள்கிறோம்” ஏன் இப்படி ஒரேயடியாக செல்வா? எங்கள் ப்ளாக் நண்பர்களைப் பாருங்கள் பாசிடிவ் செய்திகள் என்று தேடி எடுத்துப் போடுகிறார்கள்..நீங்கள் ஏன் இப்படி? அப்படி என்ன உங்களுக்கு 75வயதா ஆகிறது? 40 -45இருக்குமா? நான் 60 இருந்தும் இன்னும் நம்பிக்கொண்டே இருக்கிறேன்.. சிலவற்றைப் பெரிதாக்கி உண்மையை மறைக்கும் ஊடகத்திற்கு நீங்களுமா இரை? எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் என்று சக்திக்கு சொல்லிக் கொடுங்கள்.. இல்லன்னா துப்பத்தான் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  2. குற்றங்கள் மட்டுமே ஊடகங்களில் காட்டப்படுகின்றது...மறைந்து நிற்கும் நன்மைகள் நமக்கு தெரிவதில்லை...

    பதிலளிநீக்கு
  3. ஊடகங்கள் வணிக நோக்கில் பயணப் படுகின்றன
    நாம்தான் விலகி நிற்க வேண்டும்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  4. செய்திகள் செய்திகள் மட்டுமே. அடுத்து புதியவை வரும்போது பழையவை மறக்கப்படும். பாடங்கள் போன்று என்றும் நினைவில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஆகவே செய்திகளை செய்திகளாக மறந்து அவை தரும் பாடங்களை மனதில் நிறுத்துங்கள். உதாரணமாக ரோஹித் மரணம் ஒரு செய்தி. சமூகம் தலித்துகளை இன்னும் தாழ்த்தி வைத்திருக்கிறது மற்றும் தலித்துகளும் தாழ்வு மனப்பான்மையைக் கை விடவில்லை என்பது பாடம்.

    ஜெயகுமார்

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீ ஸ்ரீ வாழும் கலை வகுப்புக்கு இராணுவமே பாலம் போடுகிறது ,இது செய்தி ...இதை மறந்து தியானத்தில் லயிப்போம் ,வர்றீங்களா ,யமுனை ஆற்றங்கரைக்கு :)

    பதிலளிநீக்கு
  6. துப்பல்
    பீப் பாடல்
    கோவன் கைது
    ஸ்டிக்கர்
    ரோஹித் மரணம்
    மருத்துவ படிப்பு பிள்ளைகள் சாவு.
    கன்னையா குமார் கைது..

    இத்தனையும் மறந்து விட்டதே இந்த குருட்டு சமூகம் ?

    பதிலளிநீக்கு
  7. எங்கள் காலங்களில் மாற்றம் சாத்தியமில்லாதது போல் இருந்தாலும் அதற்கு உரமிடுகிறோம் சக்தி.. உங்கள் காலத்தில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்.சக்தி..

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. ஊடகத்தில் நல்லவன் என வேடமிட்ட
    கெட்டவனையே வெளிச்சமிட்டு காட்டப்படும்...

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. ஊடகங்கள் செய்திகளை பரபரப்புக்கும், தங்கள் டி ஆர் பி ரேட்டிங் ஏறுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகின்றன. பிழைப்பு. சமூக அக்கறை என்பது காணாமல் போய்விடுவதாலேயே பல செய்திகளின் ஃபாலோ அப் அவர்கள் வெளியிடுவதே இல்லை. செய்திகளையே சமூகப் பொறுப்புணர்வுடன் வெளியிடுவதும் இல்லை!

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. செல்வா இதுதான் யதார்த்தம்....

    நீங்கள் சொல்லுவது அனைத்தையும் ஏற்றுக் கொள்கின்றோம். எங்களுக்கும் இந்த ஊடகங்களின் மீது கோபம் இருக்கிறதுதான். நல்ல செய்திகளைச் சொல்லாமல் ஊதிப் பெருக்கிச் செய்திகளை வெளியிடுகின்றன என்று. வியாபார ரீதியில் இயங்குகின்றன என்று.

    ஆனால் பாருங்கள் செல்வா இவர்கள் எல்லாரும் இனி எத்தனை நாளைக்கு? இந்த அரசியல் எத்தனை நாளைக்கு? எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு வரத்தான் செய்யும் இல்லையா? மாற்றம் வராது என்ற சிந்தனை வந்துவிட்டால் நாம் எந்த முயற்சியும் செய்ய மாட்டோம் இல்லையா? செய்து என்ன பயன் என்று நினைக்க ஆரம்பித்துவிடுவோம் இல்லையா? எனவே நம்புவோம் வரும் என்று. அப்போதுதான் நாமும் நம்மால் முடிந்த அளவு நல்லது செய்ய முடியும்.

    இளைஞர்கள் வருவார்கள். நாம் அவர்களை உற்சாகப்படுத்துவோம். எதிர்மறை தெரிந்தால்தான் அதைச் சமாளித்து நேர்மறையாக என்ன செய்ய முடியும் என்று யோசிக்கலாம். ஆனால் எதிர்மறையில் மூழ்கிடக் கூடாது எனவே நாம் அதனை எடுத்துரைப்போம். வழி காட்டுவோம். நல்லது நடக்கும், மாற்றம் வரும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஐயா.இந்த சமூகத்தில் நம்மால் எதையும் மாற்ற இயலாது என்பது உண்மை.ஆனால் ஒன்றே ஒன்றை மாற்ற இயலும் தங்களை தாங்களே மாற்ற இயலும்.இதுப் போன்று தான் ஒவ்வொருவரும் தன்னை மாற்றிக்கொண்டு விழிகளை விழித்து பார்த்தாலே எது உண்மை எது பொய் என்று உணர முடியும் ஐயா.நாளைய சமூகம் இளைஞர்கள் தான் என்று சொல்லும் அரசியல் வாதிகள் அதை வாய் பேச்சாக இருக்காமல் செயல்படுத்தலாமே..!!

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  15. எனவே சக்தி வலைத்தளங்களில், ஊடகங்களில் சமநிலையில் பேசப்படும் கருத்துகளை வாசித்து உங்கள் தலைமுறையினரின் சிந்தனைகளை நல்ல விதமாக வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியும் சக்தி. நாங்கள் எங்களால் முடிந்தவரை அடித்தளம் அமைக்க முயற்சி செய்கின்றோம். நீங்கள் அதனை மேம்படுத்தி வலிதாக்குங்கள். இன்று விதைத்த விதைகள் நாளை மரங்களாய் வளர்ந்து உங்களுக்கு நிழல் தரும்தானே. அவற்றை நீங்கள் அனுபவித்து அடுத்த தலைமுறையினரும் அனுபவிக்க நீங்கள் அவற்றை நல்ல முறையில் பேணுங்கள். அப்படியேனும் தலைமுறை தலைமுறையாய் நல்லது நடக்கட்டும்...சக்தி

    பதிலளிநீக்கு
  16. எங்கள் காலங்களில் மாற்றம் வரப்போவதில்லை...
    உங்கள் நாட்களில் எங்களை காறித் துப்புவீர்கள்...

    அருமை அண்ணா...

    செய்திகள் ஒன்றை மழுங்கடித்து மற்றதை சொல்லிச் சொல்லியே களைந்து செல்கின்றன... எதற்கும் தீர்வு இல்லாமல்.

    பதிலளிநீக்கு